என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பல மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
    • பா.ஜ.க. எல்லா மாநிலங்களையும் போதை பழக்கங்கள் உள்ள மாநிலமாக மாற்றுவதற்காக முயற்சிக்கிறார்கள்.

    தூத்துக்குடி:

    தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. நெல்லை, கன்னியாகுமரி, மதுரை மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு இன்று காலை வந்தார். அப்போது அவருக்கு மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பல மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மழை வெள்ளத்தை எதிர்கொள்வதற்காக தமிழக அரசு ரூ.27 ஆயிரம் கோடி நிவாரண உதவி கேட்டும், ஒரு பைசா கூட நிதி அளிக்காத பா.ஜ.க.வை தமிழக மக்கள் வரும் தேர்தலில் புறக்கணிப்பார்கள்.

    இன்று தமிழகம் வரக்கூடிய பிரதமர் மோடி இந்த மக்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார். தமிழகத்தில் தி.மு.க.வுடன், காங்கிரஸ் நம்பிக்கையான உறவு கொண்டுள்ளது. இந்த கூட்டணி தொடரும். நாடு முழுவதும் காங்கிரஸ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தியா கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிட வேண்டும் என அந்த மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    போதைப் பொருட்கள் மத்திய அரசின் உளவுத்துறை போன்ற துறைகளின் கட்டுப்பாடுகளை மீறி குஜராத், ஆந்திரா, தமிழகம் என அனைத்து பகுதிகளுக்கும் வருகிறது என்றால் இதற்கு காரணம் பா.ஜ.க. தான். பா.ஜ.க. எல்லா மாநிலங்களையும் போதை பழக்கங்கள் உள்ள மாநிலமாக மாற்றுவதற்காக முயற்சிக்கிறார்கள்.

    பாரதிய ஜனதா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்போம் என்று கூறியது. பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது. ஒவ்வொருவருக்கும் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் வரவு வைக்கப்படும் என்ற வாக்குறுதி அளித்தது. எந்த வாக்குறுதியும் செயல்படுத்தவில்லை. ஜி.எஸ்.டி. வரி வசூலில் தமிழகத்திற்கு உள்ள நிதியை ஒதுக்கீடு செய்யாதது ஏன்?.

    ஊழலில் திளைத்துள்ள பா.ஜ.க.வினர் ஊழலைப் பற்றி பேச அருகதை இல்லாத கட்சி. எனவே பா.ஜ.க. அரசு செயல்படுத்திய திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    நாங்கள் தி.மு.க. கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம். நாங்கள் சுமூகமாக இருக்கிறோம். அ.தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இருக்க வேண்டும் என்பது அவர்களுடைய விருப்பம். நாங்கள் 5 தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணியில் இருக்கிறோம். தி.மு.க.- காங்கிரஸ் உறவு நம்பிக்கையான உறவாக இருக்கிறது. எங்களை ஒருபோதும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குறைத்து மதிப்பிட மாட்டார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது விஜயதாரணி பா.ஜ.க.வில் சேர்ந்தது குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு பா.ஜ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டவரே தோல்வி பயத்தில் ஓட்டம் பிடிக்கிறார். இவர் போய் அங்கே என்ன பண்ணப் போகிறார். இதனால் காங்கிரஸ் கட்சிக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியாவுக்குள் போதைப்பொருள் கடத்தலை தடுக்க பிரதமர் மோடி கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
    • ஜாபர்சாதிக், டி.ஜி.பியிடம் விருது வாங்கியுள்ளார். சினிமா கம்பெனி நடத்துகிறார். தி.மு.க. குடும்பத்துடன் நட்பாக உள்ளார்.

    கோவை:

    பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    போதைப்பொருள் இந்தியாவின் எல்லையில் இருந்து ஊடுருவுகின்றன.

    இந்தியாவுக்குள் போதைப்பொருள் கடத்தலை தடுக்க பிரதமர் மோடி கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    கடந்த 2013-ம் ஆண்டு ஜாபர் சாதிக் உள்பட 4 பேர் சின்தடிக் போதைப்பொருள் கடத்தலுக்காக கைது செய்யப்பட்டனர்.

    அப்போது 20 கிலோவுக்காக கைது செய்யப்பட்ட அவர் 11 ஆண்டுகள் கழித்து 3 ஆயிரத்து 500 கிலோ போதைப்பொருளை கையாளும் வகையில் விஸ்வரூபமாக உயர்ந்துள்ளார்.

    ஒருமுறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுவிட்டால் போலீசார் கண்காணிக்க வேண்டும். ஆனால் அவரை போலீசாரும் தமிழக அரசும் கண்காணிக்கவில்லை. இதில் போலீசார் தோற்றுவிட்டனர்.

    ஜாபர்சாதிக், டி.ஜி.பியிடம் விருது வாங்கியுள்ளார். சினிமா கம்பெனி நடத்துகிறார். தி.மு.க. குடும்பத்துடன் நட்பாக உள்ளார்.

    ஜாபர் சாதிக் எல்லா இடத்திலும் ஊடுருவியுள்ளார். முதலமைச்சர், உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் என எல்லோருடனும் உள்துறை அமைச்சகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்-அமைச்சர் போதைப்பொருள் கடத்தல் விஷயத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து இதனை ஒரு சமுதாய இயக்கமாக ஒருங்கிணைக்க வேண்டும்.

    பா.ஜனதா இதற்காக ஒரு திட்டத்தை தொடங்கி உள்ளது. வருகிற 7 மற்றும் 8-ந் தேதிகளில் தென்காசியில் போதைப்பொருளுக்கு எதிரான நிகழ்ச்சியை நடத்த உள்ளோம்.

    நாம்தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தனது கட்சிக்கு சின்னம் வேண்டும் என்றால் முதலில் விண்ணப்பிக்க வேண்டும். அவர் விண்ணப்பிக்க தவறிவிட்டார்.

    அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருந்தால் அவருக்கு சின்னம் கிடைத்திருக்கும். ஆனால் அவர் அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால் சின்னம் கிடைக்கவில்லை. இதற்கும் எனக்கும், எந்த சம்பந்தமும் இல்லை. சீமான் முதலில் மோடியை திட்டினார். தற்போது அண்ணாமலையை திட்ட தொடங்கி உள்ளார்.

    புதுச்சேரியில் பா.ஜனதா சுவரொட்டிகளில் எம்.ஜி.ஆர் உள்ளிட்டோர் படங்கள் இடம்பெற்றது தொடர்பாக நான் கருத்து கூற முடியாது. தமிழகத்தில் பா.ஜனதா சுவரொட்டிகளில் மற்ற தலைவர்களின் படங்கள் இருக்காது.

    பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை 39 தொகுதிகளிலும் எனக்கு பணி உள்ளது. தேர்தலில் நான் போட்டியிடுவேன் என்று சொல்லவே இல்லை. பிரதமர் மோடி என்ன சொன்னாலும் அதற்கு கட்டுப்படுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

    • சுற்றுலா பயணிகளின் வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
    • பஸ்-ரெயில் மற்றும் விமான நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவை:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த ஓட்டல் குண்டுவெடிப்பு சம்பவத்தை முன்னிட்டு தமிழகத்தில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். அந்த வகையில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கோவை மாவட்டத்தில் வாளையாறு, ஆனைக்கட்டி உள்பட 10-க்கும் மேற்பட்ட சோதனைச்சாவடிகளில் தற்போது போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து அந்த வழியாக செல்லும் வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி அவற்றின் டிரைவர்களிடம் உரிய போக்குவரத்து ஆவணங்களை கேட்டு வாங்கி சோதனை செய்து வருகின்றனர். மேலும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

    கோவையில் பஸ்-ரெயில் மற்றும் விமான நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு வரும் பயணிகள் மெட்டல் டிடெக்டர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். மேலும் அவர்களது உடைமைகளையும் போலீசார் தீவிரமாக பரிசோதனை செய்து வருகின்றனர்.

    இதுதவிர இரவுநேரங்களில் போலீசார் நகரின் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக ரோந்துப்பணிகளில் ஈடுபடுகின்றனர். இதுதவிர கோவையில் உள்ள விடுதிகளில் சந்தேகப்படும்படி யாராவது தங்கி உள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் திரிபவர்களை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று அவர்களிடம் வீட்டு முகவரி மற்றும் செல்போன் எண்ணை சேகரித்து அனுப்பி வருகின்றனர். கோவை ஓட்டல்களில் தங்கியிருக்கும் வாடிக்கையாளர்கள் பற்றிய விவரங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

    நீலகிரி மாவட்டத்தில் இருந்து கேரளா, கர்நாடக மாநிலங்களுக்கு செல்வதற்காக பிரத்யேக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு தற்போது கூடுதலாக போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். மேலும் அந்த பகுதிகளில் விடிய-விடிய வாகன தணிக்கை சோதனைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

    குறிப்பாக முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி தமிழகம்-கர்நாடக மாநில எல்லைப்பகுதியில் அமைந்து உள்ள கக்கநல்லா சோதனைச்சாவடியில் கூடுதலாக போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். அங்கு கூடலூர் போலீஸ் டி.எஸ்.பி வசந்தகுமார் தலைமையில் போலீசார் அனைத்து வாகனங்களையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 

    • பிரதமர் மோடி பொதுமக்களுக்கு அறிவித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.
    • தி.மு.க.வினர் நடத்திய இந்த நூதன போராட்டம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி நகர தி.மு.க. சார்பில் செயலாளர் நவநீத கிருஷ்ணன் தலைமையில் புதிய பஸ்நிலையம் முன்பு மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

    பிரதமர் மோடி பொதுமக்களுக்கு அறிவித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை, பொதுமக்கள் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்ற அறிவிப்பு பொய்யானது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை இதுவரை கட்டப்படவில்லை என குற்றம்சாட்டி இந்த போராட்டம் நடந்தது.

    பிரதமர் மோடி திட்டங்களை நிறைவேற்றாமல் வாயால் வடை சுடுவதாக கூறியும், அதனை கண்டித்தும் போராட்டத்தில் பங்கேற்ற தி.மு.க. நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இலவசமாக வடை வழங்கினர். இதில் பங்கேற்றவர்கள் வெள்ளை சட்டை, வேட்டி அணிந்து மோடியின் முகம் பொறித்த முகமூடியை அணிந்திருந்தனர். தோளில் காவித்துண்டும் அணிந்திருந்தனர்.

    தி.மு.க.வினர் நடத்திய இந்த நூதன போராட்டம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஆற்றல் மிகுந்த பிரதமராக நரேந்திர மோடி திகழ்கிறார்.
    • இந்த தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை. 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிடுவோம்.

    கோவை:

    கொங்குநாடு முன்னேற்ற கழக மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவையில் நடந்தது. கூட்டத்துக்கு அந்த கட்சியின் நிறுவன தலைவர் பெஸ்ட் ராமசாமி தலைமை தாங்கினார்.

    இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு கொங்குநாடு முன்னேற்ற கழகம் நிபந்தனையற்ற ஆதரவு தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டது.

    இதுதொடர்பாக பெஸ்ட் ராமசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளில் நாடு வளர்ச்சி அடைந்துள்ளது. அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. ஆற்றல் மிகுந்த பிரதமராக நரேந்திர மோடி திகழ்கிறார். அவர் மீண்டும் பிரதமரானால் ஊழல் இன்றி விவசாயிகள், ஏழை-எளிய மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வார்.

    உலகில் ஒரு வலுவான நாடாக இந்தியா மாறியுள்ளது. பேச்சுத்திறனும், உலகம் போற்றும் தலைவராகவும் மோடி உள்ளார். இந்தியாவை உலக நாடுகள் வியப்புடன் பார்க்கின்றன. அதனால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு கொங்குநாடு முன்னேற்ற கழகம் நிபந்தனையற்ற ஆதரவு தெரிவிக்கிறது.

    இந்த தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை. 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிடுவோம். பாராளுமன்ற தேர்தல்களில் தமிழகத்தில் மாறி, மாறி வெற்றி பெற்ற அ.தி.மு.க., தி.மு.க. உறுப்பினர்கள் மாநில வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோவை விமான நிலையத்துக்கு தீரன் சின்னமலை பெயர் சூட்ட வேண்டும், மெட்ரோ ரெயில் திட்டத்தை திருப்பூர் வரை நீட்டிக்க வேண்டும், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெயை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகளவில் வாழை, தென்னை, கம்பு, சோளம் மற்றும் காய்கறிகள் அதிகளவில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.
    • சேதமடைந்த வாழைகளுக்கு உரிய இறப்பின் தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    மேட்டுப்பாளையம்:

    அன்னூர் அருகே குப்பனூர் ஊராட்சிக்குட்பட்ட ஆத்திக்குட்டை, வாக்கானாகொம்பு, புலியூர், ஒட்டகமண்டலம், ஆலாங்கொட்டை, அழகியபாளையம், சொலவம்பாளையம், அக்கறைசெங்கப்பள்ளி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.

    இப்பகுதிகளில் அதிகளவில் வாழை, தென்னை, கம்பு, சோளம் மற்றும் காய்கறிகள் அதிகளவில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த பகுதியில் காட்டுப்பன்றிகளின் தொல்லை அதிகளவு உள்ளது. காட்டு பன்றிகள் அவ்வப்போது விவசாய நிலங்களில் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளன. இதனால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்து வருகின்றனர்.

    இந்நிலையில், வாக்கனாங்கொம்பு கிராமத்தைச் சேர்ந்த மருதமுத்து என்பவர் தனது தோட்டத்தில் வாழைகளை பயிரிட்டிருந்தார்.

    நேற்று இரவு இந்த தோட்டத்திற்குள் காட்டு பன்றிகள் கூட்டமாக நுழைந்தன. பின்னர் அவை, அங்கிருந்த வாழைகளை தின்றும், காலால் மிதித்தும் சேதப்படுத்தியது.

    இதேபோல், அங்குள்ள துளசிராஜ் என்பவரின் தோட்டத்திற்குள் புகுந்து, அங்கு பயிரிடப்பட்டிருந்த 200 வாழைகள் என மொத்தமாக 1000த்திற்கும் மேற்பட்ட வாழைகளை காட்டு பன்றிகள் சேதப்படுத்திவிட்டு சென்றன.

    இதையடுத்து சேதமடைந்த வாழைகளுக்கு உரிய இறப்பின் தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    • சமூக வலைதளத்தில் மிகவும் புகழ் பெற்றிருப்பவர் ஜெர்மன் பாடகி கசாண்ட்ரா மே ஸ்பிட்மன்.
    • குறையைக் கூட நிறைவானதாக மாற்ற முடியும் என்பதற்கு நீங்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

    "பக்தியெனும் மொழியில் பாடுவதை கேட்க விருந்தாக இருந்தது" என சத்குரு பாராட்டு.

    ஜெர்மன் நாட்டை சேர்ந்த பிரபல பாடகி கசாண்ட்ரா மே ஸ்பிட்மன் கோவை ஈஷா யோக மையத்தில் சத்குரு அவர்களை சந்தித்தார். அப்போது அவரது விருப்ப பாடலான ஆதிசங்கரர் எழுதிய "நிர்வாண ஷடக"த்தை பாடிக்காட்டினார். இந்த காணொளியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த சத்குரு கசாண்ட்ராவிற்கு பாராட்டு தெரிவித்தார்.

    சமூக வலைதளத்தில் மிகவும் புகழ் பெற்றிருப்பவர் ஜெர்மன் பாடகி கசாண்ட்ரா மே ஸ்பிட்மன். பார்வையற்ற மாற்றுத் திறனாளியான இவர் இந்திய கர்நாடக பாடல்களை பாடி காணொளி வெளியிடுவதில் மிகவும் பிரபலமானவர். நம் பாரத நாட்டிற்கு முதன் முறையாக வருகை தந்திருக்கும் இவர் கோவை ஈஷா யோக மையத்திற்கு வந்திருந்து சத்குரு அவர்களை நேரில் சந்தித்து பேசினார்.


    அப்போது, ஆன்மீகத்தில் ஆழங்கால் பட்ட ஆதி சங்கராச்சாரியார் இயற்றிய சமஸ்கிருத பாடல் "நிர்வாண ஷடகத்தை" சத்குருவிற்கு பாடி அர்ப்பணித்தார். அவருடைய பக்திக்கு பெருமை சேர்க்கும் விதமாக சத்குரு அவர்கள் தனது மலர் மாலையை அணிவித்து ஆசி வழங்கினார்.

    இந்த காணொளியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த சத்குரு "நமஸ்காரம் கசாண்ட்ரா! ஈஷா யோக மையத்தில் நீங்கள் எங்களுடன் இருந்தது அற்புதமானது மற்றும் பக்தி என்ற தடைகள் ஏதும் அறியாத மொழியில் நீங்கள் பாடுவதை கேட்பது சிறந்த விருந்தாக இருந்தது. குறையைக் கூட நிறைவானதாக மாற்ற முடியும் என்பதற்கு நீங்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. உங்களுக்கு என் வாழ்த்துகளும் & ஆசியும்"என பாராட்டு தெரிவித்துள்ளார்.


    இதற்கு, "வாவ்! நான் கேட்டதிலேயே மிகவும் ஊக்கமளிக்கும் வார்த்தைகள் இவை. உங்களோடு இருந்த தருணங்களை எண்ணி மகிழ்கிறேன்" எனபதில் பதிவு இட்டுள்ளார் காசண்ட்ரா.

    அதுமட்டுமின்றி, ஈஷா யோக மையத்தில் அவர் தங்கியிருந்தபோது, சில யோகப் பயிற்சிகளை கற்றுக்கொண்டார். மேலும், இந்திய கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் கோவில்கள் குறித்தும் அறிந்து கொண்டார். அதோடு, சுற்றுச்சுழல் சார்ந்தும், சமூக செயல்பாடுகள் சார்ந்தும் ஈஷா அறக்கட்டளை செய்து வரும் பங்களிப்புகளை பற்றியும் தெரிந்து கொண்டார்.

    அதனை தொடர்ந்து, "நான் ஜெர்மனி திரும்பி செல்கையில், இந்தியாவின் அனைத்து நினைவு தடங்களையும் என்னுள் வைத்துக் கொள்வேன். அதை கொண்டு நிறைய பாடல்களை உருவாக்குவேன்" என்று கருத்து தெரிவித்துள்ளார்.




    • அன்னதானம் செய்வதற்கு எந்தவித சமய அடையாளங்களும் தேவையில்லை.
    • ஈஷாவில் அன்னதான திட்டம் தொடர்ந்து பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

    தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்பது பழமொழி. உபநிடதங்களில் கூட "அன்னம் பரப்பிரம்ம ஸ்வரூபம்" என குறிப்பிடப்பட்டுள்ளது. உணவை தானம் செய்வதென்பது ஒருவருக்கு வாழ்க்கையை, உயிரை தானம் செய்வதற்கு ஒப்பானது. உணவு என்பது ஒருவரின் வாழ்வை நீடித்து கொள்ளும் சக்தியை வழங்குகிறது. அதனால்தான் அன்னதானத்தை நம் மரபில் 'பிராண தானம்' என்றும் அழைக்கிறோம். இதை விளக்கும் விதமாக 'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்ற மற்றொரு பழமொழியும் புழக்கத்தில் உள்ளது.

    அன்னதானம் செய்வதற்கு எந்தவித சமய அடையாளங்களும் தேவையில்லை. மனிதத்தின் அடிப்படையில் யாரும் யாருக்கும் அன்னதானம் செய்யலாம். ஒரு மனிதன் உயிர் வாழ அடிப்படையான மூன்று விஷயங்களில் முதன்மையானது உணவு. உடை, இருப்பிடம் ஆகிய மற்ற இரு அம்சங்கள் இல்லாவிட்டால், வாழ்வின் தரம் தான் பாதிக்கப்படும். யாரொருவருக்கு உணவு இல்லையோ அவருக்கு வாழ்வாதாரமே, வாழ்க்கையே பாதிக்கப்படும்.

    அந்த காரணத்தினாலே பாரதியின் புகழ் பெற்ற பல வரிகளில், லட்சக்கணக்கானோர் நெஞ்சில் நிலைத்திருக்கும் வரியாக "தனியொருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்" எனும் வரி போற்றப்படுகிறது. எனவே கல்வி தானம், பொருள் தானம் உள்ளிட்ட ஏராளமான தானங்களில் வரிசையில் அன்னதானம் என்பது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

    குறிப்பாக ஆன்மீக பாதையில் இருப்பவர்களுக்கு வழங்கப்படும் அன்னதானம் குறித்து சத்குரு அவர்கள் கூறும்போது "நமது பாரம்பரியத்தில், துறவிகள் மற்றும் ஆன்மீக சாதகர்களுக்கு சேவை செய்வதென்பது மிகவும் முக்கியமாக இருந்து வந்துள்ளது. இதுவே ஒரு தனி ஆன்மீகப் பாதையாகவும் இருப்பதைப் பார்க்க முடிகிறது. இதில் மிகவும் அற்புத அம்சமாக இருப்பது, பிறருக்கு உணவை அர்ப்பணிக்கும் அன்னதானம்." என்கிறார்.

    மேலும் ஈஷாவில் அன்னதான திட்டம் தொடர்ந்து பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனால் மையத்திலுள்ள ஆசிரமவாசிகள், ஈஷாவின் பல்வேறு ஆன்மீக மற்றும் சமூக நலத்திட்டங்களில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து செயலாற்ற முடிகிறது. ஆயிரக்கணக்கான சாதகர்கள், தன்னார்வலர்களுக்கு தினசரி இரு வேளை அன்னதானம் வழங்கப்படுகிறது.

    இதுமட்டுமின்றி ஒவ்வொரு வருடமும் கோவை ஈஷா யோக மையத்தில் நிகழும் மகா சிவராத்திரி விழாவில் பங்கு கொள்ளும் லட்சக்கணக்கான மக்களுக்கு அன்றைய தினம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் ஆதியோகி முன்பு நிகழும் மகாசிவராத்திரியை முன்னிட்டு, ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாத மக்களுக்கு அருள் தரிசனம் வழங்கும் வகையில் கோவை ஈஷா யோக மையத்தில் இருந்து புறப்பட்ட ஆதியோகி ரதங்கள் தமிழகம் முழுவதும் வலம் வந்த வண்ணம் உள்ளன. தன்னை நாடி வந்தவர்களுக்கு அருள் தரிசனம் நல்கிய ஆதியோகி, தற்போது ரதம் வழியாக தன் பக்தர்களை தேடி சென்று அருள் பாலித்து வருகிறார். கிட்டத்தட்ட 35,000 கி.மீ தூரம் வலம் வரும் இந்த ரத யாத்திரையில் பல நூறு தன்னார்வலர்கள், சிவாங்கா சாதகர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    • தேர்தல் பாதுகாப்பு பணியில் துணை ராணுவ படையினர், போலீசார், ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வுபெற்ற போலீசார் ஈடுபட உள்ளனர்.
    • போலீசார், ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவ வீரர்களின் விவரங்களை சேகரிக்கப்பட்டு வருகிறது.

    கோவை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான தேதியையும் விரைவில் தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி தற்போது அரசியல் கட்சிகளும் தங்கள் தேர்தல் பணியை தொடங்கி மேற்கொண்டு வருகின்றனர்.

    கோவை மாவட்டத்தில் கோவை, பொள்ளாச்சி என 2 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவின் பேரில் தேர்தல் பணிகள் முடுக்கி விடப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    தேர்தல் பாதுகாப்பு பணியில் துணை ராணுவ படையினர், போலீசார், ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வுபெற்ற போலீசார் ஈடுபட உள்ளனர்.

    இதற்காக போலீசார், ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவ வீரர்களின் விவரங்களை சேகரிக்கப்பட்டு வருகிறது. விவரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு, விரைவில் போலீசார், ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர் என அனைவரும் பாதுகாப்பு பணியை தொடங்க உள்ளனர்.

    தமிழகம் முழுவதும் தேர்தல் பணியில் மத்திய ஆயுத பாதுகாப்பு படையினர்(துணை ராணுவம்) ஈடுபட உள்ளார்கள். துணை ராணுவத்தினர் இன்றும் வருகிற 7-ந்தேதியும் என 2 பிரிவாக பிரித்து தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

    அதன்படி இன்று தமிழகத்திற்கு துணை ராணுவத்தினர் வந்தனர். அந்த வகையில் கோவை மாவட்டத்திற்கு பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்புக்காக கேரள மாநிலம் கொச்சியில் இருந்து 500-க்கும் மேற்பட்டவர்கள் அடங்கிய 5 கம்பெனி துணை ராணுவ படையினர் ரெயில் மூலம் இன்று வந்தார்கள்.

    அவர்களை தேர்தல் பிரிவு அதிகாரி, போலீஸ் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். கோவையில் துணை ராணுவத்தினர் தங்குவதற்கான இடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    பின்னர் அவர்கள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு கோவை மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். தொடர்ந்து அவர்கள் பாதுகாப்பு பணியை மேற்கொள்வார்கள் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வனப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காட்டு யானைகள் சுற்றி திரிந்தன.
    • குட்டி யானையை பிடித்து சிகிச்சை அளிப்பதற்காக வனத்துறையினர் தேடினர்.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை தேயிலை தோட்டங்களும், வனப்பகுதியும் நிறைந்த பகுதியாகும். வனத்தையொட்டி இருப்பதால் வனவிலங்குகள் அடிக்கடி வெளியேறி ஊருக்குள் புகுந்து வருவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக காட்டு யானைகள் அவ்வப்போது வந்து செல்கின்றன.

    வால்பாறை அருகே உள்ள கேரள மாநிலம் அதிரப்பள்ளி வனப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காட்டு யானைகள் சுற்றி திரிந்தன.

    அப்போது அந்த யானைகளுடன் ஒரு குட்டி யானையும் இருந்தது. அந்த குட்டியானைக்கு தும்பிக்கை இல்லாமல் இருந்தது.

    இதை பார்த்த வனத்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். குட்டி யானை தண்ணீர் குடிக்க சென்ற போது, அங்கிருந்த முதலை, குட்டி யானையை தாக்கி இருக்கலாம் என்றும், அதில் தும்பிக்கையை இழந்திருக்கலாம் எனவும் வனத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதையடுத்து அந்த குட்டி யானையை பிடித்து சிகிச்சை அளிப்பதற்காக வனத்துறையினர் தேடினர். ஆனால் நீண்ட நாட்களாக அந்த குட்டி யானையை பார்க்க முடியவில்லை. தொடர்ந்து வனத்துறையினர் தேடும் பணியை தீவிரப்படுத்தினர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே உள்ள சாலையில் வழக்கம் போல சுற்றுலா வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.

    அந்த சமயம் அந்த சாலையை யானை கூட்டம் கடந்தது. அப்போது அதில் தும்பிக்கை இல்லாத குட்டி யானை ஒன்றும் நடந்து சென்றது.

    அதனை பார்த்ததும் சுற்றுலா பயணிகள் ஆச்சரியம் அடைந்தனர். தும்பிக்கை இல்லாமல் தன் தாயுடன் தன்னம்பிக்கையுடன் வாழும் குட்டி யானையை கண்டு சுற்றுலா பயணிகள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

    மேலும் அந்த யானையை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு முடிந்ததும் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ளவும் அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகிறது.
    • இதுவரை 400 இடங்களில் பிரதமர் மோடி படத்துடன் வாக்களிப்பீர் தாமரைக்கு என தாமரை சின்னம் வரையப்பட்டுள்ளது

    மேட்டுப்பாளையம்:

    பாராளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்க உள்ளது. தேர்தல் தேதியும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான பணியை தற்போதே அரசியல் கட்சிகள் தொடங்கி விட்டன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என தொடர்ந்து அனைத்து கட்சிகளும் பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.

    கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு முடிந்ததும் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ளவும் அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகிறது.

    தேர்தல் பிரசாரத்தின்போது சுவர் விளம்பரம், துண்டு பிரசுரம் என வினியோகித்து தேர்தல் பரப்புரை செய்வார்கள். இன்னும் சில மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி தற்போது பல இடங்களில் அரசியல் கட்சிகள் சுவர் விளம்பரங்கள் வரையும் பணியை தொடங்கி விட்டன.

    அதன்படி கோவை மாவட்டத்திலும் சுவர் விளம்பரங்கள் வரையும் பணி நடந்து வருகிறது. தி.மு.கவின் உதய சூரியன் சின்னம், அ.தி.மு.க.வின் இரட்டை இலை, பா.ஜ.கவின் தாமரை, காங்கிரசின் கை உள்பட அனைத்து கட்சிகளின் சின்னங்களும் வரையப்பட்டு வருகின்றன.

    சின்னத்துடன் அந்தந்த கட்சிகளின் தலைவர்களின் படங்களும் வரையப்படுகிறது. அத்துடன் தங்கள் அரசு செய்த சாதனைகளையும் வாசகங்களாக எழுதி பிரசாரம் செய்யும் பணியில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.

    அன்னூர் பேரூராட்சி, வடக்கு ஒன்றியம் மற்றும் தெற்கு ஒன்றியத்தில் கடந்த 19-ந் தேதி தாமரைக்கு வாக்கு சேகரிக்கும் வகையில், வாக்களிப்பீர் தாமரைக்கு என்னும் வாசகத்துடன் தாமரை சின்னம் வரையும் பணி தொடங்கியது.

    அன்னூர், குப்பனூர், அக்கரை செங்கப்பள்ளி, மூக்கனூர், கரியாம்பாளையம், கணேசபுரம், பொன்னே கவுண்டன்புதூர் பகுதிகளில் இதுவரை 400 இடங்களில் பிரதமர் மோடி படத்துடன் வாக்களிப்பீர் தாமரைக்கு என தாமரை சின்னம் வரையப்பட்டுள்ளது. அன்னூர் ஒன்றியத்தில் 1000 இடங்களில் தாமரை சின்னத்தை வரைய திட்டமிட்டுள்ளதாக பா.ஜ.கவினர் தெரிவித்துள்ளனர்.

    • யாரெல்லாம் கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு எல்லாம் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது.
    • நம்மை பற்றி தொண்டர்களுக்கு தெரியும். மக்களுக்கும் தெரியும்.

    கோவை:

    கோவை சிங்காநல்லூரில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது:-

    யாரெல்லாம் கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு எல்லாம் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது.

    அ.தி.மு.க என்பது தாய் வீடு. அனைவரும் தாய் வீட்டிற்குதான் வருவார்கள். இங்கிருந்து யாரும் வெளியே போக மாட்டார்கள்.

    சாதாரண தொண்டர்களுக்கும் எம்.எல்.ஏ., அமைச்சர் என மிகப்பெரிய பொறுப்புகளை கொடுத்து அழகு பார்த்தவர் ஜெயலலிதா.

    அந்த வகையில் ஒன்றிய செயலாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி முதல்வராக உயர்ந்து, கட்சியின் பொது செயலாளராகவும் திறம்பட செயலாற்றி வருகிறார்.

    சமூக வலைதளங்களில் அ.தி.மு.க உறுப்பினர்கள் பலர், பா.ஜ.கவுக்கு செல்வதாக தி.மு.கவும், பா.ஜ.கவும் கூட்டு சேர்ந்து கொண்டு வதந்தியை பரப்பி வருகின்றனர். அதனையெல்லாம் நான் பார்ப்பதும் இல்லை. கண்டு கொள்வதும் இல்லை. அதனை பற்றி பேசினால் நமக்கு தான் நேரம் விரயமாகும்.

    வெறும் 3 முதல் 4 சதவீதம் வாக்காளர்கள் வைத்துள்ள பா.ஜ.கவில் நாம் சேரப் போகிறோம் என்று கூறினால் அதற்கு நாம் பதில் கூற வேண்டுமா? தமிழகத்தில் 35 முதல் 40 சதவீத வாக்காளர்கள் உள்ள கட்சி அ.தி.மு.க.

    தி.மு.க.வும், அ.தி.மு.கவும் ஒன்று சேருமா? பா.ஜ.கவும், காங்கிரசும் ஒன்று சேருமா? அது போல தான் நம்மை பற்றி பரப்பப்படும் வதந்தியும். அதனால் அதனை பெரிய விஷயமாக எடுத்து கொள்ளாமல் அப்படியே விட்டு விடுங்கள்.

    நம்மை பற்றி தொண்டர்களுக்கு தெரியும். மக்களுக்கும் தெரியும். பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்துள்ள நமக்கு காலரை தூக்கி விட்டு பாராளுமன்ற தேர்தலில் ஓட்டு கேட்கும் தகுதி உள்ளது. அவர்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை. அனைத்து தொகுதிகளிலும் வெற்றியை தேடி தருவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், அம்மன் அர்ச்சுணன்,கே.ஆர்.ஜெயராமன், சூலூர் கந்தசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    ×