search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பெங்களூரு குண்டுவெடிப்பு எதிரொலி: கோவை-நீலகிரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு
    X

    கண்காணிப்பு கேமிரா மூலம் ஆய்வு மேற்கொள்ளும் போலீசார்.

    பெங்களூரு குண்டுவெடிப்பு எதிரொலி: கோவை-நீலகிரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு

    • சுற்றுலா பயணிகளின் வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
    • பஸ்-ரெயில் மற்றும் விமான நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவை:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த ஓட்டல் குண்டுவெடிப்பு சம்பவத்தை முன்னிட்டு தமிழகத்தில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். அந்த வகையில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கோவை மாவட்டத்தில் வாளையாறு, ஆனைக்கட்டி உள்பட 10-க்கும் மேற்பட்ட சோதனைச்சாவடிகளில் தற்போது போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து அந்த வழியாக செல்லும் வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி அவற்றின் டிரைவர்களிடம் உரிய போக்குவரத்து ஆவணங்களை கேட்டு வாங்கி சோதனை செய்து வருகின்றனர். மேலும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

    கோவையில் பஸ்-ரெயில் மற்றும் விமான நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு வரும் பயணிகள் மெட்டல் டிடெக்டர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். மேலும் அவர்களது உடைமைகளையும் போலீசார் தீவிரமாக பரிசோதனை செய்து வருகின்றனர்.

    இதுதவிர இரவுநேரங்களில் போலீசார் நகரின் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக ரோந்துப்பணிகளில் ஈடுபடுகின்றனர். இதுதவிர கோவையில் உள்ள விடுதிகளில் சந்தேகப்படும்படி யாராவது தங்கி உள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் திரிபவர்களை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று அவர்களிடம் வீட்டு முகவரி மற்றும் செல்போன் எண்ணை சேகரித்து அனுப்பி வருகின்றனர். கோவை ஓட்டல்களில் தங்கியிருக்கும் வாடிக்கையாளர்கள் பற்றிய விவரங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

    நீலகிரி மாவட்டத்தில் இருந்து கேரளா, கர்நாடக மாநிலங்களுக்கு செல்வதற்காக பிரத்யேக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு தற்போது கூடுதலாக போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். மேலும் அந்த பகுதிகளில் விடிய-விடிய வாகன தணிக்கை சோதனைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

    குறிப்பாக முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி தமிழகம்-கர்நாடக மாநில எல்லைப்பகுதியில் அமைந்து உள்ள கக்கநல்லா சோதனைச்சாவடியில் கூடுதலாக போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். அங்கு கூடலூர் போலீஸ் டி.எஸ்.பி வசந்தகுமார் தலைமையில் போலீசார் அனைத்து வாகனங்களையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    Next Story
    ×