என் மலர்
கோயம்புத்தூர்
- இப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஏன் கைது செய்யவில்லை? இதற்கு தமிழக அரசு பதில் சொல்ல வேண்டும்.
- 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுக்கு பெரிய அடி கிடைக்கும்.
கோவை:
பா.ஜ.க மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேசிய கீதத்துக்கு மரியாதை கொடுக்க சொன்னால், கவர்னர் பிரிவினை வாதம் பேசுவதாக தி.மு.க.வினர் சொல்கிறார்கள். கவர்னர் தேசிய கீதம் பாட வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்தார்.
ஆனால் அதற்கு அனுமதிக்கவில்லை. மாறாக அவருக்கு எதிராக தி.மு.க.வினர் போராட்டம் நடத்தி கொண்டிருக்கின்றனர்.
ஆளுங்கட்சியான தி.மு.க. போராட்டம் செய்வதற்கு அனுமதி இருக்கிறது. ஆனால் நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்தால் மட்டும் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்போது இவர்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். இவர்களது ஆர்ப்பாட்டத்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படவில்லையா?
கடந்த 10 நாட்களாக தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர். அவர்களை எல்லாம் அப்போது கைது செய்தீர்கள்.
இப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஏன் கைது செய்யவில்லை? இதற்கு தமிழக அரசு பதில் சொல்ல வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழகம் விவகாரத்தை திசை திருப்பவும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை மறைக்கவே தி.மு.க. இந்த போராட்டத்தை நடத்துகிறது.
முதலமைச்சர், கவர்னர் குறித்து வரம்பு மீறி டுவிட் செய்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இதுகுறித்து எதிர்கட்சிகள் கேட்டாலோ அல்லது போராட்டம் நடத்தினாலோ நாங்கள் தான் ஏற்கனவே கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். நீங்கள் எதற்காக போராட்டம் நடத்துகிறீர்கள் என கேட்கின்றனர்.
தமிழக அரசு தவறான போக்கில் சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் எல்லா குரல்வலையும் நசுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது எமர்ஜென்சியே நடந்து கொண்டிருக்கிறது.
இவ்வளவு நாட்களாக காவியை பார்த்து பயந்த தி.மு.க. தற்போது கருப்பு நிறத்தை பார்த்தும் பயப்பட தொடங்கியது. உடை என்பது அவரவர் தனிப்பட்ட உரிமை. தி.மு.க.வுக்கு எதை பார்த்தாலுமே பயமாக உள்ளது.
தி.மு.க கூட்டணியில் தற்போது குழப்பம் வந்து வெடவெடுத்து போய் இருக்கிறது. அதை மறைக்கவே இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் நடத்துகிறார்கள். இதுவரை பொங்கல் பண்டிகைக்கு கொடுத்து வந்த ரூ.1000-த்தை இந்த ஆண்டு கொடுக்கவில்லை. தேர்தல் நெருங்கும் போது பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கி விடுவார்கள். இப்போது கொடுத்தால் தேர்தலுக்குள் சூரியனை மறந்து விடுவார்கள் என்பதால் இப்போது கொடுக்கவில்லை.
2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுக்கு பெரிய அடி கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சுமார் 10 மணி நேர போராட்டத்துக்கு பின் கியாஸ் டேங்கர் மாற்று வாகனத்தில் ஏற்றப்பட்டு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.
- விபத்து தொடர்பாக ராதாகிருஷ்ணன் மீது கோவை மேற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கோவை:
கொச்சியில் இருந்து கோவைக்கு சமையல் கியாஸ் ஏற்றி வந்த டேங்கர் லாரி நேற்று அதிகாலை அவினாசி சாலை ரெயில்வே மேம்பாலத்தில் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் டேங்கர் தனியாக விழுந்து அதில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக கோவை நகரில் பதட்டம் ஏற்பட்டது. அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக நேற்று அந்த பகுதிகளில் உள்ள 35-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது.
மேம்பாலத்தில் விழுந்த கியாஸ் டேங்கரை மீட்கும் பணி முழுவீச்சில் நடந்தது. சுமார் 10 மணி நேர போராட்டத்துக்கு பின் கியாஸ் டேங்கர் மாற்று வாகனத்தில் ஏற்றப்பட்டு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.
விபத்துக்குள்ளான கியாஸ் டேங்கர் லாரியை தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சிவராமபேட்டையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்திருந்தது தெரியவந்தது. லாரி கவிழ்ந்ததும் அவர் கீழே குதித்து தப்பினார். அவருக்கு சிறு காயம் ஏற்பட்டது.
விபத்து தொடர்பாக ராதாகிருஷ்ணன் மீது கோவை மேற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல், வேகமாக வாகனத்தை இயக்குதல், சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட 6 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து டிரைவர் ராதாகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.
வழக்கமாக கேரளாவில் இருந்து கியாஸ் ஏற்றி வரும் டேங்கர் லாரிகள் எல் அண்ட் டி புறவழிச்சாலை வழியாக அவினாசி சாலையை சென்றடைந்து, அங்கிருந்து சத்தி சாலையில் உள்ள கணபதிக்கு செல்லும். இந்த சாலை கனரக வாகனங்கள் செல்ல எளிதான பாதையாகும். ஆனால் எரிவாயு டேங்கர் லாரியை இயக்கி வந்த டிரைவர் உக்கடம், மரக்கடை வழியாக அவினாசி சாலையில் உள்ள மேம்பாலத்தை கடக்க முயன்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
- ஊட்டி, குன்னூர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தலங்களில் பனியின் தாக்கம் அதிகரித்து உள்ளதை உணர முடிகிறது.
- இரவு பணியில் இருக்கும் ஊழியர்கள் ஆங்காங்கே தீ மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர்.
கோவை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்ததை தொடர்ந்து பனிக்காலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
அந்த வகையில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தற்போது பனி கொட்டி தீர்த்து வருகிறது. நாள்தோறும் மாலை 5 மணி முதல் பனி கொட்ட தொடங்கி விடுகிறது. பின்னர் இது நள்ளிரவு நேரங்களில் மழை போல கொட்டி தீர்க்கிறது. காலையில் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது.
கோவை மாநகர போக்குவரத்து சாலைகளில் எதிரே வருபவர்கள் தெரியாத அளவுக்கு மூடுபனியின் தாக்கம் உள்ளது. இதன்காரணமாக ரோட்டில் செல்லும் வாகனங்கள் இரவு மட்டுமின்றி பகல் நேரங்களிலும் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்று வருகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்ததை தொடந்து அங்கு தற்போது உறைபனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதன்காரணமாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் பனி மூட்டம் கொட்டி தீர்த்து வருகிறது.
அதிலும் குறிப்பாக ஊட்டி தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா மற்றும் காட்டேரி பூங்காக்களில் உறைபனி கொட்டி வருவதால், அங்கு பூந்தொட்டிகளில் வளர்க்கப்படும் மலர்கள் தற்போது கருக தொடங்கி உள்ளன.
மேலும் பூங்காக்களின் புல்வெளி பகுதிகளில் வெள்ளை கம்பளம் விரித்தது போல உறைபனி படிந்து காணப்படுகிறது. இதனால் பூங்கா புல்வெளியில் படிந்து கிடக்கும் உறைபனியில் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ஊட்டி, குன்னூர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தலங்களில் பனியின் தாக்கம் அதிகரித்து உள்ளதை உணர முடிகிறது.இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. இருப்பினும் ஒருசில பயணிகள் வெம்மை ஆடைகளுடன் பூங்காக்களுக்கு வந்திருந்து அங்குள்ள பகுதிகளை சுற்றிப்பார்த்து செல்கின்றனர்.
நீலகிரியில் கொட்டி தீர்க்கும் உறைபனியால் அங்குள்ள பெரும்பாலான பகுதிகளில் அதிகாலை நேரத்தில் வேலைக்கு செல்வோர், பள்ளி-கல்லூரி மாணவிகள் ஆகியோர் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் பணி முடிந்து வீடு திரும்புவோரும் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடுகிறது.
மேலும்இரவு பணியில் இருக்கும் ஊழியர்கள் ஆங்காங்கே தீ மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர்.கோவை, நீலகிரி மாவட்டங்களில் பனிக்காலம் தொடங்கி நடைபெற்று வருவதால் வியாபார கடைகளில் கம்பளி, போர்வைகள் உள்ளிட்ட குளிர்கால ஆடை கடைகளில் விற்பனை அதிகரித்து காணப்படுகிறது. இதேபோல சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது.
- விபத்துக்குள்ளான டேங்கரில் கியாசை பத்திரமாக மீட்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
- விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:
கோவை அவினாசி சாலை உப்பிலிபாளையத்தில் உள்ள பழைய மேம்பாலம் நகரின் முக்கிய போக்குவரத்து மையமாக விளங்கி வருகிறது.
கோவை ரெயில் நிலையம் அருகே உள்ள இந்த மேம்பாலத்தின் கீழ் பகுதி வழியாக தான் ரெயில்கள் அனைத்தும் சென்று வரும். ரெயில்கள் எளிதில் சென்று வரும் வகையிலும், வாகனங்கள் அந்த இடத்தை கடந்து செல்லும் வகையிலேயே அந்த மேம்பாலம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.
மேம்பாலத்தை சுற்றி நாலா புறமும் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், பள்ளிகள், ஆலயங்கள் என ஏராளமான உள்ளன. இந்த மேம்பாலத்தை தினந்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் கடந்து சென்று வருகின்றன.
இந்தநிலையில் இன்று அதிகாலை 3.15 மணிக்கு கொச்சியில் இருந்து கோவைக்கு சமையல் கியாஸ் ஏற்றிக்கொண்டு ஒரு டேங்கர் லாரி வந்தது. 18 டன் சமையல் கியாசை ஏற்றிக்கொண்டு வந்த அந்த லாரி, பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள கியாஸ் சிலிண்டர் பிரித்தனுப்பும் நிலையத்தை நோக்கி சென்று கொண்டு இருந்தது.
உக்கடத்தில் இருந்து வந்த டேங்கர் லாரி அவினாசி சாலை மேம்பாலம் வழியாக வந்து மேம்பாலத்தை கடக்க முயன்றது. லாரி மேம்பாலத்தின் மத்தியில் உள்ள ரவுண்டானாவை சுற்றி வந்தது. அப்போது திடீரென லாரியில் ஆக்சில் துண்டாகி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. நிலைதடுமாறிய லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது.
லாரியில் கியாஸ் நிரப்பப்பட்ட சிலிண்டர் டேங்கர் கழன்று தனியாக விழுந்தது. விழுந்த வேகத்தில் சிலிண்டரின் கியாஸ் கசிவு ஏற்பட்டது. லாரியை ஓட்டிய டிரைவர் கீழே குதித்து தப்பினார். இதுபற்றி விவரம் போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கு தெரியவந்தது. உடனடியாக அவர்கள் அங்கு விரைந்து சென்றனர். கியாஸ் கசிந்து கொண்டே இருந்ததால் பதட்டம் ஏற்பட்டது. சிறு தீக்கங்கு அங்கு விழுந்ததாலோ, சூரிய ஒளி பட்டு விட்டாலோ டேங்கர் வெடித்து பெரும் சேதம் ஏற்படும் அபாயம் நிலவியது.
இதனால் முதற்கட்டமாக சிலிண்டரில் ஏற்பட்ட கியாஸ் கசிவை நிறுத்தும் பணி தொடங்கப்பட்டது. இதற்காக 5 தீயணைப்பு வாகனங்கள் அங்கு வரவழைக்கப்பட்டன. மாநகராட்சி சார்பில் தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டன. கியாஸ் டேங்கரில் தண்ணீரை பீய்ச்சி அடித்து அதனை குளிர்விக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் ஆகியோர் நேரில் வந்து பணிகளை துரிதப்படுத்தினர். 4 மணி நேர போராட்டத்துக்கு பின் டேங்கர் லாரியில் ஏற்பட்ட கசிவை ஊழியர்கள் நிறுத்தினர்.
மேலும் அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக மேம்பாலத்துக்குள் பொதுமக்கள் யாரும் வராமல் இருக்க நாலாபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டன. அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. பாலத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் உஷார்படுத்தப்பட்டனர். 500 மீட்டர் தூரத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி அந்த பகுதியில் உள்ள 37 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.
இதற்கிடையே விபத்துக்குள்ளான டேங்கரில் கியாசை பத்திரமாக மீட்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக திருச்சியில் இருந்து மீட்பு டேங்கர் லாரி வரவழைக்கப்பட்டு உள்ளது. அந்த லாரியில் விபத்துக்குள்ளான டேங்கரில் இருந்து கியாசை நிரப்பி அப்புறப்படுத்த ஏற்பாடுகள் நடந்தது.
இந்த சம்பவம் கோவையில் இன்று பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். டேங்கர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் தென்காசியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என தெரிய வந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்களால் வனவிலங்குகளுக்கு இடையூறு.
- வனவிலங்குகள் ஆத்திரமடைந்து வாகனஓட்டிகளை தாக்கும் அபாய நிலை உள்ளது.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் உள்ள யானைகள், மான், காட்டு மாடு, காட்டுப்பன்றி, சிறுத்தை, புலி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி ஊட்டி மற்றும் கோத்தகிரி சாலையை கடந்து வனப்பகுதியின் ஒருபுறத்தில் இருந்து மற்றொரு பகுதிக்கு இடம்பெயர்ந்து செல்கின்றன.
நீலகிரி மாவட்டத்தின் நுழைவு வாயிலாக உள்ள மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு குன்னூர், கோத்தகிரி சாலை வழியாக நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
இந்த நிலையில் அந்த சாலைகளில் இரவு நேரங்களில் கோத்தகிரி வியூ பாயிண்ட் செல்வதாக கூறி ஒருசில இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது.
மேலும் ரேஸ் செல்லும் மோட்டார் சைக்கிள்களில் அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்கள் பொருத்தப்பட்டு இருப்பதால் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.

இதன்காரணமாக வனவிலங்குகள் ஆத்திரமடைந்து வாகனஓட்டிகளை தாக்கும் அபாய நிலை உள்ளது. மேலும் வாகன ஓட்டிகளும் விபத்துக்களில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.
எனவே மேட்டுப்பாளை யம்-கோத்தகிரி சாலையில் வனத்துறையினரும், போலீ சாரும் இணைந்து வாகன சோதனை நடத்துவதுடன் ரோந்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டுமென வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான வனத்துறையினரும், மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னக்காமனன் தலைமையிலான போலீசாரும் இணைந்து மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் இரண்டு-நான்கு சக்கர வாகனங்களை தடுத்து நிறுத்தி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும் வாகனங்களில் அதிவேக மாக உலா வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை பிடித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் போலீசார் கூறுகையில், வனப்பகுதியை ஒட்டி அமைந்து உள்ள சாலைகளில் இரவு நேரங்களில் பாதுகாப்பு, கவனம் மற்றும் எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும்.
மேலும் வனவிலங்குகளை கண்டால் கூட்டாகவோ, தனியாகவோ சேர்ந்து விரட்ட முயற்சிக்கக் கூடாது. வன விலங்குகளை ஆத்திர மூட்டும் செயல்களிலும் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்தினர்.
மேலும் சாகச நோக்கத்துடன் ஊர்வலமாக வந்திருந்த பல்வேறு வாகனங்களும் திருப்பி அனுப்பப்பட்டன.
- டி.டி.எப்.வாசன் சமீபத்தில் மலைப்பாம்பை கையில் வைத்துக்கொண்டு வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
- சென்னையில் உள்ள வீட்டில் மட்டுமே பாம்பு உள்ளிட்டவற்றை வைத்து பராமரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் காரமடை அடுத்த வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் யூடியூபர் டி.டி.எப்.வாசன். இவர் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டுவது, காரை அஜாக்கிரதையாக இயக்குவது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
இந்த நிலையில் டி.டி.எப்.வாசன் சமீபத்தில் மலைப்பாம்பை கையில் வைத்துக்கொண்டு வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் அந்த வீடியோவில் தான் அந்த பாம்பை உரிமம் பெற்று வளர்த்து வருவதாகவும் தெரிவித்து இருந்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.
டி.டி.எப்.வாசன் உரிமம் பெற்றிருந்தாலும் பாம்பை துன்புறுத்தும் விதமாக வீடியோ வெளியிட்டது குறித்து சென்னை வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே டி.டி.எப்.வாசனின் வெள்ளியங்காடு இல்லத்துக்கு காரமடை வனத்துறை அதிகாரிகள் நேரில் சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர் வேறு ஏதாவது விலங்குகளை வளர்த்து வருகிறாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது சென்னையில் உள்ள வீட்டில் மட்டுமே பாம்பு உள்ளிட்டவற்றை வைத்து பராமரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து காரமடை வனத்துறையினர் கூறுகையில், இங்குள்ள வீட்டில் சோதனை நடத்தினோம். ஆனால் இங்கு விலங்குகள் எதுவும் இல்லை. இது தொடர்பான விவரங்களை சென்னை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து விட்டோம் என்றனர்.
- நீண்ட நாட்கள் ஆகியும் ஜாபர் அலி ஆன்மிக பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்யவில்லை.
கோவை:
கோவை தெற்கு உக்கடம் அமீன் காலனி 3-வது வீதியை சேர்ந்தவர் அப்துல் ஹமீது. இவரது மனைவி அமீதா(வயது62).
இவர் கோவை பெரிய கடைவீதி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
எனக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சென்னை புரசைவாக்கம், பெருமாள்பேட்டை பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபரான ஜாபர் அலி என்பவர் அறிமுகம் ஆனார்.
இவர் வெளிநாட்டிற்கு ஆன்மிக பயணம் அழைத்து சென்று வரும் பணி செய்து வருவதாக என்னிடம் தெரிவித்தார்.
மேலும் ஆன்மிக பயணம் செல்வதற்கான ஏற்பாடுகளை நான் செய்து வருகிறேன். யாராவது அங்கு செல்ல விரும்பினால் என்னிடம் தெரிவியுங்கள். நான் அவர்களை அழைத்து செல்கிறேன் என தெரிவித்தார்.
இதனை நம்பி நானும் எனக்கு தெரிந்தவர்களிடம் தெரிவித்தேன். அத்துடன் 66 பேர் பயணம் செல்ல விரும்புவதாக கூறி என்னிடம் ரூ.36 லட்சத்து 51 ஆயிரம் பணத்தை கொடுத்தனர். நானும் அந்த பணத்தை வாங்கி ஜாபர் அலியின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தேன்.
ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் ஜாபர் அலி ஆன்மிக பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்யவில்லை. இதனால் என்னிடம் பணம் கொடுத்தவர்கள், பயணம் என்ன ஆனது என கேள்வி கேட்க ஆரம்பித்தனர். மேலும் எங்களது பணத்தையும் திரும்ப பெற்று தருமாறு தெரிவித்தனர்.
இதையடுத்து நான், ஜாபர் அலியிடம் இதுகுறித்து கேட்டபோது அவர் சரியாக பதில் அளிக்கவில்லை.
நான் பணத்தை திருப்பி தருமாறு கேட்டேன். ஆனால் பணத்தையும் தர மறுத்து அவர் ஏமாற்றி விட்டார். எனவே வெளிநாட்டு ஆன்மிக பயணம் அழைத்து செல்வதாக கூறி, மோசடியில் ஈடுபட்ட ஜாபர் அலி மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
அவரது புகாரின் பேரில் போலீசார் சென்னையைச் சேர்ந்த ஜாபர்அலி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போராட்டத்தில் 64 ஆண்கள், 17 பெண்கள் பங்கேற்றனர்.
- அனுமதியில்லாமல் கூடி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை:
தமிழ்நாட்டில் பாலியல் சம்பவங்களை கண்டித்தும், மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்தும் த.வெ.க தலைவர் விஜய் எழுதிய நோட்டீசை அந்த கட்சியினர் மாணவ, மாணவிகளிடம் வினியோகம் செய்து வருகிறார்கள்.
சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் நோட்டீஸ் வினியோகம் செய்தபோது, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது செய்யப்பட்டார்.
இதனை கண்டித்து தமிழக வெற்றிக்கழகத்தினர் நேற்று மாலை கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். மாவட்ட நிர்வாகி சம்பத்குமார் தலைமையில் த.வெ.க கட்சியினர் 80க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 64 ஆண்கள், 17 பெண்கள் பங்கேற்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட த.வெ.க கட்சியினர் 81 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை அங்குள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அனைவரையும் விடுவித்தனர்.
இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய தமிழக வெற்றிக்கழகத்தின் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் சம்பத் குமார் மற்றும் நிர்வாகிகள் உள்பட 81 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அனுமதியில்லாமல் கூடி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தல் என்ற பிரிவின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
- மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
வால்பாறை:
கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரா எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
வனத்தை விட்டு வெளி யேறி ஊருக்குள் நுழையும் காட்டு யானைகள் இரவு நேரத்தில் குடியிருப்புக்குள் புகுந்து, வீடுகளையும், கடைகளையும் சேதப்படுத்தி வருகிறது. தொடர்ந்து யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
வால்பாறை அருகே உள்ள முடீஷ் பகுதியில் 2 தினங்களாக 13 காட்டு யானைகள் சுற்றி திரிந்தன. நேற்று நள்ளிரவு 2 மணியளவில் காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி முடீஸ் பகுதிக்குள் நுழைந்தது.
அங்கு வெகுநேரமாக சுற்றித்திரிந்த காட்டு யானைகள், மணிவண்ணன், கண்ணன் ஆகியோரின் மளிகை கடைகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியது. உள்ளே இருந்த பொருட்களையும் தூக்கி போட்டும், தின்றும் சூறையாடி சென்றது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம்.
ஊருக்குள் யானை நுழைந்தது குறித்து வனத்துறையினருக்கு மக்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மானாம்பள்ளி வன சரகர் கிரிதரன் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானைகளை அப்பகுதியில் இருந்து வனத்திற்குள் விரட்டினர். குடியிருப்பு பகுதிக்குள் யானை நுழைந்ததால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
- ஈஷா கிராமோத்சவத்தின் இறுதிப்போட்டிகள் கோவையில் இன்று நடைபெற்றன.
- ஐ.பி.எல்.லை விட பெரியது கிராமோத்சவம் என்றனர் சேவாக், வெங்கடேஷ் பிரசாத்
கோவை:
ஈஷா சார்பில் பாரதத்தின் மாபெரும் விளையாட்டு திருவிழாவான 16-வது ஈஷா கிராமோத்சவத்தின் இறுதிப்போட்டிகள் சத்குரு முன்னிலையில் இன்று கோவையில் கோலாகலமாக நடைபெற்றது.
கோவை ஆதியோகி முன் நடைபெற்ற இறுதிப்போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசுகளை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், வெங்கடேஷ் பிரசாத், பாரா ஒலிம்பிக் வீரர்கள் மாரியப்பன் தங்கவேலு, துளசிமதி மற்றும் பண்ணாரி அம்மன் குழுமத்தின் தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வழங்கினர்.
இந்த விழாவில் சத்குரு பேசியதாவது:
ஒரு காலத்தில் 100 சதவீத கல்வி பெற்றதாக இருந்த நாடு, விடுதலை பெறும்போது 93 சதவீதம் கல்வியறிவு இல்லாத நாடாக மாறி இருந்தது. இது வெறும் 300 ஆண்டுகளில் நடைபெற்றது.
ஆனால் கடந்த 75 வருடங்களில் நாம் மகத்தான பல விஷயங்களைச் செய்துள்ளோம். புத்திசாலித்தனம், உறுதி, திறமை போன்ற பல அம்சங்கள் நம் வாழ்க்கையில் இருக்கின்றன. ஆனால் அவை எல்லாம் நமக்காக செயல்பட வேண்டும் என்றால் நாம் புத்துணர்வாக, உற்சாகமாக இருக்க வேண்டும். நீங்கள் புத்துணர்வாக இல்லை என்றால் எவ்வளவு பணம், சொத்து, திறமை இருந்தாலும் உங்களால் எதையும் உருவாக்க முடியாது. அந்த வகையில் கிராமங்களில் புத்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கிராமோத்சவம் நடத்தப்படுகிறது.
எளிமையாக துவங்கப்பட்ட இந்த கிராமோத்சவம் 5 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பங்குபெறும் பெரிய விழாவாக இன்று மாறி உள்ளது. ஆனால் இது போதாது. ஈஷா கிராமோத்சவம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடைபெற வேண்டும் என தெரிவித்தார்.
இந்த விழாவில் கிரிக்கெட் வீரர் சேவாக் பேசியதாவது:
மனித நல்வாழ்விற்காக சத்குரு செய்து வரும் மகத்தான பணிக்கு என் வணக்கங்கள். கிராமோத்சவம் திருவிழாவின் நோக்கம், தீவிரம் அனைத்தையும் பார்க்க ஆனந்தமாக இருக்கிறது. ஆயிரக்கணக்கான கிராமங்களில் விளையாட்டுப் போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்தி மகத்தான விளையாட்டுத் திருவிழாவாக இது நடந்து இருக்கிறது. இதற்கு சத்குருவிற்கு என் நன்றிகள். நீங்கள் வாழ்வதற்காக எதை செய்தாலும், விளையாட்டிற்காக தினமும் 10 - 15 நிமிடங்கள் செலவிடுங்கள்.
விளையாட்டு என்பது மகத்தான ஆசிரியர், அது குழுவாக இணைந்து செயல்படுவதை, எதிர்த்துப் போராடுவதை, இக்கட்டான சூழலில் இருந்து வெளியேறுவதை, தோல்வியிலிருந்து மீண்டு எழுவதை என வாழ்வின் பல அம்சங்களை நமக்கு கற்றுத் தருகிறது என கூறினார்.
பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன் பேசுகையில், காஞ்சிபுரத்தில் இருந்து தினக்கூலிக்கு பிறந்த பெண்ணால் சாதிக்க முடியும் என்றால் உங்களாலும் சாதிக்க முடியும். பெண்கள் விளையாட்டில் சாதனை படைக்க சத்குரு ஊன்றுகோலாகத் திகழ்கிறார். நான் ஏராளமான சர்வதேச விளையாட்டுகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றிருக்கிறேன். அந்த நேரத்தில் எல்லாம் எனக்கு எழுந்த மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வர சத்குருவின் உத்வேக வார்த்தைகள் எனக்கு உதவியாக இருந்தது என்றார்.
கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் பேசுகையில், ஐ.பி.எல். போட்டிகளை ஒருங்கிணைப்பது கூட எளிதானது. இது போன்ற கிராமங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்துவதுதான் கடினமானது. இதனை செய்யும் ஈஷாவிற்கும் சத்குருவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

வாலிபால் இறுதிப்போட்டியில் கர்நாடக மாநிலம் பனகல் கிராமத்தைச் சேர்ந்த அலிப் ஸ்டார் அணி வென்று முதல் இடம் பிடித்தது. இரண்டாம் இடத்தை உடுப்பி மாவட்டம் பள்ளிகிராமத்தைச் சேர்ந்த பள்ளி பிரண்ட்ஸ் அணி பிடித்தது.
அதேபோல் பெண்களுக்கான த்ரோபால் இறுதிப்போட்டியில் கர்நாடக மாநிலம் மார்கோடு கிராமத்தைச் சேர்ந்த அணி வென்று முதல் இடத்தை பெற்றது. இரண்டாம் இடத்தை தமிழ்நாட்டில் இருந்து புள்ளாக்கவுண்டன் புதூர் கிராம அணி பிடித்தது
மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்பட்ட வாலிபால் போட்டிகளை பாரா பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன் துவங்கி வைத்தார். இதில் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர். இதில் முதல் இடத்தை கோவை அணியும், இரண்டாம் இடத்தை கிருஷ்ணகிரி அணியும் வென்றன.
16-வது ஈஷா கிராமோத்சவ இறுதிப்போட்டியில் முதல் இடத்தை பிடித்த அணிகளுக்கு 5 லட்சமும், 2-ம் இடத்தைப் பிடித்த அணிகளுக்கு 3 லட்சமும், 3 மற்றும் 4-ம் இடத்தை பிடித்த அணிகளுக்கு தலா 1 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
முன்னதாக, ஈஷாவுடன் இணைந்து யுவா கபடி லீக் நடத்திய கபடி போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்தப் போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது.
அதேபோல், ஈஷாவுடன் இணைந்து கோயம்புத்தூர் கிரிக்கெட் அசோசியேஷன் நடத்திய சூப்பர் ஓவர் கிரிக்கெட் சேலஞ்ச் போட்டியில் 150 அணிகள் பங்கேற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சேவாக் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட் வழங்கப்பட்டது. சிலம்பம் போட்டிகளில் 500-க்கும் மேற்பட்டோர் வயது அடிப்படையில் 6 பிரிவுகளில் கலந்துகொண்டனர்.
இதனுடன் தென்னிந்திய மாநிலங்களின் பாரம்பரிய கலைகளைப் பிரதிபலிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அந்த வகையில் தமிழ்நாடு சார்பில் பறையாட்டம் மற்றும் தவில், நாதஸ்வரம் இசை நிகழ்ச்சிகளும், கர்நாடகா சார்பில் பிலி வேசா எனும் புலி நடனமும், தெலுங்கானா சார்பில் கோண்டு பழங்குடிகளின் குசாடி நடனமும், கேரளா சார்பில் செண்ட மேளம் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் பஞ்சரி மேளம், 1000 பேர் கலந்துகொண்ட வள்ளி கும்மி, 500 பேர் பங்கேற்ற ஒயிலாட்டம், 1,500 பேர் பங்கேற்ற கோலப் போட்டி ஆகிய நிகழ்ச்சிகளும் பிரம்மாண்டமாக நடைபெற்றன.
- சாட்டையில் அடிப்பது என்பது தமிழர் மரபில் நடப்பது தான்.
- நான் லண்டன் சென்று வந்த பிறகு இன்னும் நல்லவனாகி இருக்கிறேன்.
கோவை:
சாட்டையடி போராட்டத்துக்கு பின்னர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைந்துள்ளார். முதலில் அவருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம். நாட்டின் புதிய பொருளாதார கொள்கைகளை கொண்டு வந்தவர் மன்மோகன் சிங். அவர் நாட்டிற்கு வகுத்து கொடுத்த பொருளாதார கொள்கைகளை வருகின்ற நாட்களில் நாங்கள் எப்போதும் நன்றியுடன் நினைவு கூர்வோம்.
இன்றைக்கு எடுத்துள்ள இந்த போராட்டம் வருகிற காலத்தில் தீவிரப்படுத்தப்படும்.
இது ஒரு தனி மனிதனை சார்ந்தோ, தனி மனிதனுக்கு ஆட்சியாளர்கள் மீது கோபத்தை காட்டவோ இந்த போராட்டம் கிடையாது. கண் முன்னால் அடுத்த தலைமுறை அழிந்து கொண்டிருக்கிறது. அதனை நாம் பார்த்து கொண்டிருக்கிறோம்.
தமிழ்நாட்டில் கல்வியின் தரம் குறைந்து கொண்டிருக்கிறது. பொருளாதாரம் பின்தங்கி செல்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மீது தொடுக்கப்படும் குற்றச்செயல்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துள்ளது.
இன்று தவ வேள்வியாக இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். எதற்காக சாட்டையடி. எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் இருக்கிறது. முருகப்பெருமானிடம் வேண்டுதலாக இந்த சாட்டையடியை நான் சமர்ப்பிக்கிறேன். விரதம் இருக்க போகிறோம். அரசியல் பணி மேற்கொள்ள போகிறோம். ஆண்டவனிடம் முறையிட போகிறோம்.
தி.மு.க.வின் 3 ஆண்டு கால ஆட்சியில் தமிழகம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. எனவே கிடைக்கிற அனைத்து மேடைகளிலும் தி.மு.க.வை தோலுரித்து காட்ட போகிறேன். சென்னையில் நடந்த சம்பவம் என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இது எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியது. எல்லாவற்றையும் யோசித்து முடிவுக்கு வந்துள்ளேன். தி.மு.க. ஆட்சியை அகற்றும் வரை நான் காலணி அணிய போவதில்லை. தமிழக மக்களுக்காக இதை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தால் செய்து கொண்டிருக்கிறேன்.
பா.ஜ.க தொண்டர்கள் களத்திற்கு சென்று தீவிர களப்பணியாற்ற வேண்டும். இன்று போராட்டம் நடைபெறும் என அறிவித்து இருந்தோம். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவை அடுத்து எங்களது போராட்டத்தை ஒத்திவைத்துள்ளோம். புதிய தேதியை பின்னர் அறிவிப்போம்.
நம்முடைய மண்ணில் உடலை வருத்தி செய்யும்போது, அதற்கான உரிய பலன் நமக்கு கிடைக்கும். சமுதாயத்தில் ஏற்படக்கூடிய எல்லாத்துக்கும் சேர்த்தே சாட்டையடி அடித்து கொண்டேன்.
தி.மு.க. ஆட்சியில் பல்வேறு தவறான சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. தி.மு.க ஆட்சியில் தமிழகத்தில் அறவழியில் கூட போராட முடியவில்லை. போலீசாரின் நடவடிக்கையால் பெண் திருப்தியாக இருப்பதாக போலீஸ் கமிஷனர் கூறியது மிகவும் தவறு. இன்னல்களை சந்தித்த பெண் எப்படி திருப்தியா இருக்க முடியும்?.
ஒரு விஷயத்தை சாதாரணமாக கடந்து போக போலீசார் முயற்சி செய்கிறார்கள். எப்.ஐ.ஆர். மூலம் இளம்பெண்ணின் வாழ்க்கையையே நாசம் செய்து விட்டனர். நான் போலீஸ் துறையை குறை சொல்பவன் அல்ல. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது. அவர்கள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. காக்கியின் மீது தான் என் கோபம். எங்களுக்கு வாய்ப்பு கொடுக்கும்போது காவல்துறையை சீர்படுத்துவோம்.
சாட்டையில் அடிப்பது என்பது தமிழர் மரபில் நடப்பது தான். அதனை தான் நானும் செய்தேன். ஆண்டவனுக்கு இந்த சாட்டையடியை சமர்ப்பித்துள்ளேன். பா.ஜ.க நிர்வாகிகள், தொண்டர்கள் இதனை செய்ய மாட்டார்கள். பா.ஜ.க.வினர் அறவழியில் போராட வேண்டும். எல்லா அரசியல் பதவிகளுமே வெங்காய பதவிகள் தான்.
வருகிற 2026 தேர்தலில் போட்டியிடுகிறேன். தோல்வியடைந்தாலும் அதனை ஏற்றுக்கொள்வேன். அதனை பற்றி நாங்கள் கவலைப்பட மாட்டோம். வெற்றி தோல்வி என்பது சகஜம். மக்களின் மீது மட்டுமே நம்பிக்கை வேறு யாரும் மீதும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.
நான் லண்டன் சென்று வந்த பிறகு இன்னும் நல்லவனாகி இருக்கிறேன். எனது அரசியல் தெளிவாக உள்ளது. லண்டனில் அரசியல் படிப்பு படித்த பிறகு எனக்கு அரசியல் சார்ந்த புரிதல் கிடைத்துள்ளது. நான் காலணியை கழற்றிய பின்பு முதலில் சென்றது தேவாலயம் தான்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- சம்பவத்தில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அரசு மீது குற்றம் சாட்டுவது ஏற்புடையது அல்ல.
- தன்னைத்தானே வருத்திக்கொள்ளும் அகிம்சா வழியை காந்தியடிகள் போல கையில் எடுக்கிறாரா என்பது தெரியவில்லை.
கோவை:
கோவை சுந்தராபுரத்தில் திராவிடர் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க கோவை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற சம்பவம் வேதனைக்கு உரியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை உடனடியாக கைது செய்து இருப்பது ஆறுதல் அளிக்கிறது.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பரபரப்பான அரசியல் செய்ய விரும்புகிறார். தமிழகத்தில் அ.தி.மு.க. எதிர்க்கட்சி அல்ல. பா.ஜ.க. தான் என்பதை காட்டிக்கொள்ள அவர் முயற்சி செய்கிறார்.
ஆளுங்கட்சி மீது அவ்வப்போது குற்றம் சாட்டினால் எதிர்க்கட்சி தலைவராகிவிட முடியும் என்று நம்புகிறார்.
இந்த சம்பவத்தில் கைதான ஞானசேகரன் அரசியல் கட்சி தலைவர்களுடன் புகைப்படம் எடுத்து இருக்கிறார் என்ற காரணத்தை காட்டி அதற்கு தி.மு.க. பொறுப்பேற்க வேண்டும் என்று கூறுவது அப்பட்டமான அரசியல் ஆதாய செயல்.
சம்பவத்தில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அரசு மீது குற்றம் சாட்டுவது ஏற்புடையது அல்ல. பாதிக்கப்பட்ட மாணவியின் விவரங்கள் வெளிவந்ததை ஏற்க முடியாது. இதற்கு காரணமாக இருந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செருப்பு போட மாட்டேன், சாட்டையால் தன்னை அடித்துக்கொள்வேன் என்று அண்ணாமலை அறிவித்து உள்ளார். இப்படிப்பட்ட முடிவை அவர் ஏன் எடுத்துக்கொள்கிறார் என்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது.
தன்னைத்தானே வருத்திக்கொள்ளும் அகிம்சா வழியை காந்தியடிகள் போல கையில் எடுக்கிறாரா என்பது தெரியவில்லை. எனவே அண்ணாமலையின் போராட்ட அறிவிப்பு நகைப்புக்குரியதாக உள்ளது.
சிறுபான்மையினருக்கான ஒரே தலைவர் பிரதமர் மோடி என்று அண்ணாமலை கூறியது 21-ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த நகைச்சுவை.
என்னை வைத்து அவர்கள் விரும்புகிற அரசியல் சூதாட்டத்தை நடத்த பார்க்கிறார்கள். அதற்கு நாங்கள் ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டோம்.
தேர்தல் காலத்தில் தொலைநோக்கு பார்வையுடன் லாப நட்ட கணக்கு இல்லாமல் இயங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். எனவே நாங்கள் யாரையும் மிரட்டவில்லை. எங்களை யாரும் மிரட்டும் நிலையிலும் நாங்கள் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அண்மையில் மரணம் அடைந்த அல்-உம்மா இயக்க தலைவர் பாஷாவின் வீட்டிற்கு சென்ற தொல்.திருமாவளவன், அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.






