என் மலர்tooltip icon

    சென்னை

    • உச்சநீதிமன்றத்தின் இன்றையத் தீர்ப்பு மாநில அரசுகளுக்கு மிகப்பெரிய அதிகாரத்தை வழங்கியுள்ளது.
    • இந்தத் தீர்ப்பு பாட்டாளி மக்கள் கட்சிக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரை நியமிக்கலாம் என்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 சட்ட முன்வரைவுகளுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் 142-ஆம் பிரிவின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வரலாற்று சிறப்பு மிக்கத் தீர்ப்பு வரவேற்கத்தக்கதாகும்.

    அதுமட்டுமின்றி, சட்டப்பேரவையால் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்ட முன்வரைவுகளை ஆளுநர்கள் காலவரையின்றி நிலுவையில் வைத்திருக்க முடியாது; முதன்முதலில் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்ட முன்வரைவுகள் மீது மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்; ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டு, மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்படும் முன்வரைவுகள் மீது ஒரு மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறியிருக்கிறது. இதன் மூலம் மாநில அரசுகள் இயற்றும் சட்டங்களை ஆளுநர்கள் அவர்கள் விருப்பம் போல கிடப்பில் போட்டு வைக்கும் நடைமுறைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது; எந்த ஒரு சட்டமாக இருந்தாலும் அதிகபட்சமாக 4 மாதங்களில் ஒப்புதல் கிடைத்து விடும் என்ற நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது.

    உச்சநீதிமன்றத்தின் இன்றையத் தீர்ப்பு மாநில அரசுகளுக்கு மிகப்பெரிய அதிகாரத்தை வழங்கியுள்ளது. மிகவும் சிக்கலான, மாநில அரசுகளின் நலன் சார்ந்து நிறைவேற்றப்படும் சட்டங்களை ஆளுநர்கள் நிறுத்தி வைக்க முடியாது என்ற நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் மாநில அரசின் மாண்பு பாதுகாக்கப்பட்டிருக்கிறது.

    மாநில அரசுகள் சட்டம் இயற்றினால், அதன் மீது ஆளுநர்கள் முடிவெடுக்க காலவரையறை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று நீண்டகாலமாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் விவகாரத்தில் சிக்கல் ஏற்பட்டதால், லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதும், அதனடிப்படையில் இயற்றப்பட்ட சட்டங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காத நிலையில் அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும் என்று யோசனை வழங்கியதும் பாட்டாளி மக்கள் கட்சி தான். அந்த வகையில் இந்தத் தீர்ப்பு பாட்டாளி மக்கள் கட்சிக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

    உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தமிழ்நாட்டு அரசு பல்கலைக்கழகங்களின் வேந்தர் முதலமைச்சர் தான் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் காலியாக உள்ள 8 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவிகளை விரைந்து நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதன் மூலம் மாணவர்களின் நலன்களை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும்.

    • இதுபோன்ற விஷயம் இனி நடைபெறாது என்று துரைமுருகன் கூறினார்.
    • சபாநாயகர், அவை முன்னவரின் விளக்கத்தில் திருப்தியில்லை என்று கூறி அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.

    சட்டசபையில் சபாநாயகருடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், சட்டசபையில் அ.தி.மு.க.வினர் பேசுவதை திட்டமிட்டு நேரலை செய்ய மறுக்கிறார். சபாநாயகரே மரபை கடைபிடிக்கவில்லை என்றால் நாங்கள் யாரிடம் சென்று முறையிடுவது? சபாநாயகர் சொல்வது எதுவும் உண்மையில்லை. மரபை மீறுகிறார் சபாநாயகர் என்று கூறினார்.

    துரைமுருகன் - இதுபோன்ற விஷயம் இனி நடைபெறாது, எதிர்க்கட்சி தலைவர் இதனை இதோடு விட்டுவிடவும்.

    சபாநாயகர் அப்பாவு - எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ். பேசுவது உண்மைக்கு புறம்பானது. எந்த பாகுபாகும் இல்லாமல் அனைவரும் பேசுவதை நேரலையில் காட்டி வருகிறோம் என்று கூறினார்.

    சபாநாயகர், அவை முன்னவரின் விளக்கத்தில் திருப்தியில்லை என்று கூறி அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.

    • தேர்தல் வருவதற்கு முன்பு ஒரு பேச்சு... தேர்தல் முடிந்தவுடன் ஒரு பேச்சு... என தி.மு.க. இரட்டை வேடம்.
    • சபாநாயகர் சொல்வது எதுவும் உண்மையில்லை. மரபை மீறுகிறார் சபாநாயகர்.

    சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தேர்தல் வருவதற்கு முன்பு ஒரு பேச்சு... தேர்தல் முடிந்தவுடன் ஒரு பேச்சு... என தி.மு.க. இரட்டை வேடம்.

    * கேஸ் மானியமாக ரூ.100 தருவோம் என தேர்தல் வாக்குறுதி அளித்தனர், இதுவரை நிறைவேற்றவில்லை.

    * மக்கள் பிரச்சனை பற்றி பேச அனுமதி மறுக்கப்படுகிறது. நாங்கள் வெளியேறி பின்னர் முதல்வரை பேச வைத்து சிறுமைப்படுத்துகின்றனர்.

    * இன்னும் 9 மாதங்கள்தான் இருக்கிறது. தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் எதிர்க்கட்சியாக மாறப்போவது வெகு தொலைவில் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உச்சநீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பு தமிழகம் மட்டுமின்றி பிற மாநில அரசுகளுக்கும் கிடைத்த வெற்றி.
    • தமிழக அரசின் வாதத்தையும் நியாயத்தை ஏற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

    மசோதாக்களை கிடப்பில் போட்ட விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், தன்னிச்சையாக செயல்பட மாநில ஆளுநர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்கினர்.

    இதனால் ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பிய பல்கலைக்கழகங்கள் சட்டத்திருத்த மசோதா, டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்களும் சட்டமாக நடைமுறைக்கு வந்துவிட்டன.

    மேலும் மாநில அரசின் செயல்பாடுகளுக்கு கவர்னர் முட்டுக்கட்டையாக இருக்கக்கூடாது என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

    இந்த தீர்ப்பை அடுத்து சட்டசபையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

    * ஆளுநருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு வெற்றி கிடைத்துள்ளது.

    * வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை தமிழக அரசு பெற்றுள்ளது.

    * உச்சநீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பு தமிழகம் மட்டுமின்றி பிற மாநில அரசுகளுக்கும் கிடைத்த வெற்றி.

    * தமிழக அரசின் வாதத்தையும் நியாயத்தை ஏற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

    * மாநில சுயாட்சி, மத்திய கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்ட தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்று கூறினார்.

    • சாமானிய மக்களைப் பெரிதும் பாதிக்கும் சமையல் எரிவாயு விலையேற்றத்தை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
    • தேர்தல் அறிக்கையில் அறிவித்த சமையல் எரிவாயு மானிய வாக்குறுதியை உடனே நிறைவேற்ற வேண்டும்.

    சென்னை:

    தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    ஒன்றிய பாஜக அரசு அறிவித்துள்ள சமையல் எரிவாயு (Gas Cylinder) விலை உயர்வு, சாமானிய மக்கள் மீதான நேரடித் தாக்குதலாகும். மக்களின் அன்றாட வாழ்வே போராட்டமாக இருக்கின்ற சூழலில், ஒன்றிய அரசின் இந்த விலையேற்றம், மக்களை மேலும் வாட்டி வதைப்பதாகவே அமைந்துள்ளது.

    ஒவ்வொரு முறையும் சமையல் எரிவாயு வாங்கும் போது, அதற்கான மானியத் தொகை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற அறிவிப்பைக் காற்றில் பறக்கவிட்ட ஒன்றிய ஆட்சியாளர்கள், மக்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் என்ற நினைப்பில் உள்ளனர்.

    தற்போது அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்ந்து விட்ட நிலையில், மக்களுக்குப் பொருளாதாரச் சுமையை ஏற்றும் வகையில் சமையல் எரிவாயு விலையை ஒன்றிய அரசு அதிரடியாக உயர்த்தியிருப்பது ஏற்கத்தக்கது இல்லை.

    தேர்தல் நெருங்கும் நேரத்தில் சமையல் எரிவாயு விலையைக் குறைப்பதையும், தேர்தலுக்குப் பின்னர் விலையை ஏற்றுவதையும் வாடிக்கையாக வைத்துள்ள ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு மக்கள் பாடம் புகட்டக் காத்திருக்கிறார்கள்.

    உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை, முன்னெப்போதும் இல்லாத அளவிற்குச் சரிந்திருக்கிறது. அதன் பயனை 'ஒருசிலர்' மட்டுமே அனுபவிக்க அனைத்துச் சலுகைகளையும் வழங்கி வரும் ஒன்றிய அரசிற்கு, மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போது வரும்? தேர்தல் நேரத்தில் மட்டும்தான் மக்கள் மீது கரிசனம் வருமா?

    ஒன்றிய அரசு இவ்வாறிருக்க, கடந்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக, 'கேஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் கொடுப்போம்' என்று சொல்லி ஆட்சிக்கு வந்த திமுக அரசும், நான்கு ஆண்டுகளைக் கடந்தும் எதுவும் செய்யவில்லை. தேர்தல் வெற்றிக்காக, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து, பின்னர் மக்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் ஏமாற்றி வருகிறது. இந்தப் போக்கைத் திமுக அரசு எப்போது நிறுத்தும்? என்று மக்கள் கேட்கிறார்கள்.

    பொய் வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றி, வாட்டி வதைப்பதில் ஒன்றிய பாஜக அரசும் திமுக அரசும் இணைந்த கைகளாகவும், இரட்டைக் குழல் துப்பாக்கியாகவும் செயல்படுகின்றன.

    சாமானிய மக்களைப் பெரிதும் பாதிக்கும் சமையல் எரிவாயு விலையேற்றத்தை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இந்த விஷயத்தில் ஒன்றிய அரசு மீது பழிபோட்டுவிட்டுத் தப்பித்து விடலாம் என்ற நினைப்பில் இருக்கும் திமுக அரசு, இந்த நேரத்திலாவது மனசாட்சிப்படி, தேர்தல் அறிக்கையில் அறிவித்த சமையல் எரிவாயு மானிய வாக்குறுதியை உடனே நிறைவேற்ற வேண்டும்.

    மீண்டும் மீண்டும் பொய் சொல்லி, ஏமாற்றும் வழக்கத்துடன் செயல்படும் ஒன்றிய பாஜக அரசு மற்றும் திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக, மக்கள் போராட்டத்தின் எதிர்வினை மிகத் தீவிரமாக இருக்கும். மக்களோடு தமிழக வெற்றிக் கழகம் களத்தில் நிற்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.



    • சட்டசபையில் பேச அனுமதி மறுப்பதாக குற்றம்சாட்டி அ.தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளனர்.
    • முதலமைச்சரின் பேச்சை தொடர்ந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    தமிழக சட்டசபையில் நேற்று டாஸ்மாக் விவகாரம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச அனுமதி கேட்டார்.

    நீதிமன்றத்தில் உள்ள விவகாரம் குறித்து இங்கு விவாதிக்க அனுமதி கிடையாது என்று கூறி சபாநாயகர் அப்பாவு மறுப்பு தெரிவித்த நிலையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. உறுப்பினர்களை நேற்று ஒருநாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

    சட்டசபையில் பேச அனுமதி மறுப்பதாக குற்றம்சாட்டி அ.தி.மு.க.வினர் இன்று கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளனர்.

    இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பேரவைக்கு வருகை தந்ததை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து பேசினார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி காவி உடையில் பேரவைக்கு வராதது மகிழ்ச்சி என்று கூறினார்.

    முதலமைச்சரின் பேச்சை தொடர்ந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    சட்டசபையில் மக்கள் பிரச்சனை குறித்து பேச வாய்ப்பு வழங்கப்படுவதில்லை, அ.தி.மு.க.வினர் பேசுவது நேரலை செய்யப்படுவதில்லை என்று கூறி அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    • அண்ணாமலை மாற்றப்படலாம் என்று உறுதியாக பேச்சு அடிபடுகிறது.
    • ஓரிரு நாட்களுக்குள் புதிய தலைவர் அறிவிக்கப்படுவார் என தகவல்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் பதவிக்காலம் நிறைவடைந்ததால் புதிய தலைவரை தேர்வு செய்வதில் கட்சி மேலிடம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

    அண்ணாமலை மாற்றப்படுவாரா? அல்லது அவரே தலைவர் பதவியில் நீடிப்பாரா? என்ற பேச்சும் பலமாக அடிபடுகிறது. அதுக்கு காரணம் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்க முயற்சிப்பதுதான்.

    இதுதொடர்பாக டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி தமிழக பா.ஜ.க. தலைமையில் கூட்டணிக்கு பிரச்சனைகள் வர வாய்ப்பு இருப்பதாக கூறினார். இதையடுத்து அண்ணாமலையையும் அமித்ஷா அழைத்து ஆலோசனை நடத்தினார்.

    அதன்பிறகு அண்ணாமலை அளித்த பேட்டிகள் அவர் மாற்றப்படலாம் என்றும் நீட்டிக்கப்படலாம் என்றும் பல்வேறு யூகங்களுக்கு வழி வகுத்தது.

    அவர் மாற்றப்படலாம் என்ற கருத்து தொண்டர்களை விட தலைவர்கள் மத்தியில்தான் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர் மாற்றப்பட்டால் தலைவர் பதவியை பிடிப்பது எப்படி எனறு ஒவ்வொருவரும் காய் நகர்த்தத் தொடங்கினார்கள்.


    தலைவர் பதவிக்கான போட்டியில் மத்திய மந்திரி எல்.முருகன், முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மகளிரணி தேசிய தலைவி வானதி சீனிவாசன், மூத்த தலைவர் எச்.ராஜா, நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பேராசிரியர் ராம சீனிவாசன் ஆகியோர் இந்த போட்டியில் தீவிர ஆர்வம் காட்டுகிறார்கள்.

    இவர்கள் ஒவ்வொரு வரும் தனித்தனி வழிகளில் காய் நகர்த்துகிறார்கள். எச்.ராஜா மூத்த நிர்வாகி. அவர் இதுவரை மாநில தலைவர் ஆனதில்லை. அதுமட்டு மல்ல, அண்ணாமலையை போல் அதிரடி அரசியல் பண்ணுவார் என்று டெல்லி மேலிடத்துக்கு நெருக்கமான தமிழக பிரபலங்கள் சிலர் முயற்சிக்கிறார்கள்.

    அகில இந்திய மகளிர் அணி தலைவராக இருக்கும் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக மத்திய மந்திரி ஒருவர் களம் இறங்கி இருப்பதாகவும், அவர் அண்ணாமலையை எப்படியாவது மாற்ற வேண்டும் என்று கங்கணம் கட்டி செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.

    இப்படி பல தளங்களில் இருந்து பல்வேறு விதமாக தகவல்களை மேலிட தலைவர்கள் காதுகளில் போட்டாலும் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் யாரை தலைவராக நியமித்தால் கட்சிக்கும் கூட்டணிக்கும் பலம் சேர்க்கும் என்ற அடிப்படையில் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

    அதில் நயினார் நாகேந்திரன் முன்னிலை வகிப்பதாக தெரிகிறது. அ.தி.மு.க.வில் அமைச்சராக இருந்தவர் நயினார் நாகேந்திரன். எனவே கூட்டணி அமைப்பது, கூட்டணி பேச்சு வார்த்தையை சுமூகமாக கொண்டு செல்வது ஆகியவை சுலபமாக இருக்கும் என்று கருதுகிறார்கள்.

    அதேநேரம் கட்சி வளர்ச்சிக்கு எந்த பலனையும் தராது என்று கட்சியினர் சிலர் வெளிப்படையாகவே கூறுகிறார்கள்.

    இந்த நிலையில் நயினார் நாகேந்திரன் நேற்று இரவு திடீரென்று டெல்லி புறப்பட்டு சென்றது உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையில் நேற்று மாலையில் அண்ணாமலை கூறும்போது, 'நான் பிரதமர் மோடி என்ற ஒரே தலைவரை நம்பிதான் கட்சிக்கு வந்தேன். அவர் கைகாட்டும் பணி எதுவாக இருந்தாலும் செய்து முடிப்பேன். நான் முழு நேரமும் களப்பணியில் இருப்பேன்.

    மாநிலத்தில் தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக நான் என் காலணிகளை கழற்றி இருக்கிறேன். எனது முழுநேரத்தையும் இன்னும் தீவிரமாக களத்தில் செலவிடுவேன்.

    மக்களை சந்திக்க நிறைய பயணம் இருக்கும். மாநில தலைவரைப் போல் எனக்கு அதிக வேலை இருக்காது. அதனால் நான் மகிழ்ச்சி அடைகிறேன். மற்றவர்கள் நிறுவன பணிகளை செய்யட்டும். அதனால்தான் அடுத்த மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை என்றேன் என்றார்.

    இதனால்தான் அண்ணாமலை மாற்றப்படலாம் என்று உறுதியாக பேச்சு அடிபடுகிறது. அதனால் தான் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றிருப்பதாக கூறப்படுகிறது.

    டெல்லியில் இருக்கும் நயினார் நாகேந்திரன், நட்டா, அமித்ஷா ஆகியோருடன் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் சிலரையும் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த பரபரப்புக்கு இடையில் அண்ணாமலை சிருங்கேரி சென்றிருக்கிறார். இன்னும் ஓரிரு நாட்களுக்குள் புதிய தலைவர் அறிவிக்கப்படுவார் என்று கட்சியினர் கூறுகிறார்கள்.

    • ஆயிரக்கணக்கானவர்கள் அரசு பஸ்களில் முன்பதிவு செய்து வருகிறார்கள்.
    • போக்குவரத்துக் கழகங்கள் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்குகிறது.

    சென்னை:

    பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வும் 1-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வும் தற்போது நடைபெற்று வருகிறது.

    ஏப்ரல் 24-ந்தேதி பள்ளியின் கடைசி வேலை நாளாகும். அதன் பின்னர் கோடை விடுமுறை விடப்படுகிறது. கோடை விடுமுறை விடப்படுவதால் வெளியூர் பயணம் அதிகரிக்கிறது. சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயிரக்கணக்கானவர்கள் அரசு பஸ்களில் முன்பதிவு செய்து வருகிறார்கள்.

    ரெயில்களில் அனைத்து இடங்களும் நிரம்பியதால் சிறப்பு ரெயில்கள் அறிவிக் கப்பட்டு வருகிறது. தமிழ கத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பிற மாநிலங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ரெயில்கள் நிரம்பி வருகின்றன.

    சென்னையில் இருந்து தென் மாவட்ட பகுதிகள் மற்றும் கோவை, திருவனந்தபுரம் மார்க்கமாக செல்லும் எல்லா ரெயில்களும் நிரம்பி விட்டன. இந்த வாரம் முதல் மே, ஜூன் மாதம் வரை பெரும்பாலான ரெயில்களில் எல்லா இருக்கைகளும் நிரம்பிவிட்டன.

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, திருச்செந்தூர், திருச்சி, ராமேஸ்வரம், பெங்களூர், மைசூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்கள் வந்தே பாரத் ரெயில்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன.

    இந்த நிலையில் வருகிற 14-ந்தேதி (திங்கட்கிழமை) தமிழ் புத்தாண்டு தினம் அரசு விடுமுறையாகும். 12, 13-ந் தேதி (சனி, ஞாயிறு) விடுமுறையை தொடர்ந்து தமிழ் புத்தாண்டு தினம் வருவதால் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.

    இதனால் வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்பதால் அரசு போக்குவரத்துக் கழகங்கள் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்குகிறது. அரசு விரைவு போக் குவரத்துக் கழகம் 1000 பஸ்களை முழு அளவில் இயக்க திட்டமிட்டுள்ளன.

    இதே போல வருகிற 18-ந்தேதி புனிதவெள்ளி அரசு விடுமுறையாகும். அதனோடு சேர்ந்து 19, 20 ஆகிய நாட்களும் தொடர் விடுமுறையாக இருப்பதால் முன்பதிவு அதிகரித்துள்ளது.

    சென்னையில் இருந்து புறப்படும் அனைத்து ரெயில்களும் நிரம்பிவிட்டன. காத்திருப்போர் பட்டியல் அதிகரித்துள்ளதால் கூட்ட நெரிசலை குறைக்க கோடைகால சிறப்பு ரெயில் இன்னும் கூடுதலாக இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ஆம்னி பஸ்களிலும் முன் பதிவு விறுவிறுப்பாக உள்ளது. கோடை காலத்தில் குளிர்சாதன வசதியுள்ள பஸ், ரெயில்களில் மக்கள் செல்ல விரும்புவதால் துரந்தோ, வந்தே பாரத் ரெயில்கள் அனைத்தும் ஜூன் மாதம் வரை நிரம்பி உள்ளன.

    • தங்கம் விலை நான்கு நாட்களில் சவரனுக்கு ரூ.2,680 குறைந்துள்ளது.
    • வெள்ளி விலையும் குறைந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை தொடர்ந்து உச்சத்திலேயே இருக்கிறது. கடந்த மாதம் (மார்ச்) 25-ந்தேதியில் இருந்து தாறுமாறாக அதன் விலை எகிறி வருகிறது. கடந்த 25-ந்தேதி ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்து 480 ஆக இருந்த நிலையில், கடந்த மாதம் 28-ந்தேதி ஒரு சவரன் ரூ.66 ஆயிரத்தையும், 31-ந்தேதி ரூ.67 ஆயிரத்தையும் தாண்டியது.

    அதன் தொடர்ச்சியாக மேலும் விலை உயர்ந்து, கடந்த 1-ந்தேதி ஒரு சவரன் ரூ.68 ஆயிரம் என்ற புதிய உச்சத்தையும் கடந்தது. இதனை தொடர்ந்து கடந்த வாரம் 4-ந்தேதி தங்கம் சவரனுக்கு ரூ.1,280-க்கும் மறுநாளான 5-ந்தேதி சவரனுக்கு ரூ.720-க்கு குறைந்து ஒரு சவரன் ரூ.66,480-க்கு விற்பனையானது. இதனை தொடர்ந்து வார தொடக்கநாளான நேற்று தங்கம் சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.66,280-க்கு விற்பனையானது.

    இந்த நிலையில், தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,225-க்கும் சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.65,800-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை நான்கு நாட்களில் சவரனுக்கு ரூ.2,680 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.102-க்கும், கிலோவுக்கு ஆயிரம்  ரூபாய் குறைந்து பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    07-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,280

    06-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,480

    05-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,480

    04-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.67,200

    03-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.68,480

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    07-04-2025- ஒரு கிராம் ரூ.102

    06-04-2025- ஒரு கிராம் ரூ.103

    05-04-2025- ஒரு கிராம் ரூ.103

    04-04-2025- ஒரு கிராம் ரூ.108

    03-04-2025- ஒரு கிராம் ரூ.112

    • டாஸ்மாக் விவகாரம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச அனுமதி கேட்டார்.
    • எதிர்க்கட்சியினரை பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை என அ.தி.மு.க.வினர் குற்றம் சாட்டினர்.

    தமிழக சட்டசபையில் நேற்று மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டு மீனவர் நலன் குறித்து 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில அறிவிப்புகளை வெளியிட்டார்.

    அப்போது டாஸ்மாக் விவகாரம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச அனுமதி கேட்டார்.

    நீதிமன்றத்தில் உள்ள விவகாரம் குறித்து இங்கு விவாதிக்க அனுமதி கிடையாது என்று கூறி சபாநாயகர் அப்பாவு மறுப்பு தெரிவித்தார்.

    இதையடுத்து சட்டசபையில் கடும் அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க. உறுப்பினர்களை நேற்று ஒருநாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

    சட்டசபையில் இருந்து வெளியேறிய அ.தி.மு.க.வினர் எதிர்க்கட்சியினரை பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை என குற்றம் சாட்டினர்.

    இந்நிலையில் சபாநாயகரை கண்டிக்கும் வகையில் இன்று அ.தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்துள்ளனர். அ.தி.மு.க. பொதுச்செயலாளர், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வருகை தந்துள்ளனர்.

    • 2024-25-ம் நிதியாண்டில் மொத்தம் 9 ஆயிரத்து 106 சிறைவாசிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
    • 24 பேர் வணிக மேலாண்மை இளங்கலை பட்டப்படிப்பையும், 268 பேர் பட்டய படிப்பையும் படித்து வருகின்றனர்.

    சென்னை:

    சிறைவாசிகளுக்கு 100 சதவீத கல்வி அறிவை புகட்டும் விதமாக தமிழக அரசும், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும் ஒருங்கிணைந்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    அதன்படி, அனைத்து சிறைகளிலும் எழுதப்படிக்க தெரியாத சிறைவாசிகளுக்கு பள்ளி கல்வித்துறையின் சிறப்பு கல்வியறிவு திட்டத்தின் மூலமாக அடிப்படை கல்வி கற்றுக்கொடுக்கப்படுகிறது.

    இந்த திட்டத்தால் பயன் அடைந்து வரும் சிறை கைதிகள் குறித்து சிறைத்துறை உயர் அதிகாரி கூறியதாவது:-

    அனைத்து மத்திய சிறைகள், பெண்கள் தனி சிறைகள் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட சிறை ஆகியவற்றில் தகுதிவாய்ந்த ஆசிரியர்களை கொண்ட ஆரம்ப பள்ளிகள் மற்றும் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மகாத்மா காந்தி சமுதாய கல்லூரியும் செயல்பட்டு வருகின்றன.

    2024-25-ம் கல்வி ஆண்டில் சிறை கைதிகளில் 135 பேர் பிளஸ்-2 தேர்வும், 137 பேர் பிளஸ்-1 தேர்வும், 247 பேர் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வும், 232 பேர் 8-ம் வகுப்பு தேர்வும் எழுதி உள்ளனர்.

    2024-25-ம் நிதியாண்டில் மொத்தம் 9 ஆயிரத்து 106 சிறைவாசிகள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் 24 பேர் வணிக மேலாண்மை முதுகலை பட்டப்படிப்பும், 3 பேர் கலை அறிவியல் முதுகலை படிப்பும் படித்து வருகின்றனர். ஒருவர் கணினி முதுகலை பட்டப்படிப்பும் படித்து வருகிறார்.

    120 பேர் கலை, அறிவியல், வணிகவியல், இலக்கியம் ஆகியவற்றில் இளங்கலை பட்டப்படிப்பும், 24 பேர் வணிக மேலாண்மை இளங்கலை பட்டப்படிப்பையும், 268 பேர் பட்டய படிப்பையும் படித்து வருகின்றனர்.

    'கத்தியை தீட்டாதே...புத்தியை தீட்டு' என்ற அறிவுரையை ஏற்று சிறை கைதிகள் மனம்மாறி கல்வி கற்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஆர்.ஏ.புரத்தில் உள்ள அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனின் 2 இல்லங்களிலும் 2-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.
    • திருச்சி தில்லை நகரில் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் 10 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற அமலாக்கத்துறையினரின் சோதனை நிறைவுபெற்றுள்ளது.

    சென்னை:

    தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் மகனும் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி எம்.பி.யுமான அருண் நேரு மற்றும் அமைச்சரின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய 4 இடங்களில் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி, சென்னையில் அருண் நேரு தொடர்புடைய நிறுவனத்திலும், ஆர்.ஏ.புரத்தில் உள்ள அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனின் 2 இல்லங்களிலும் 2-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.

    முன்னதாக, திருச்சி தில்லை நகரில் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் 10 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற அமலாக்கத்துறையினரின் சோதனை நிறைவுபெற்றுள்ளது. அதேபோல் கோவை மசக்காளிபாளையத்தில் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் மணிவண்ணன் வீட்டில் நடைபெற்ற சோதனையும் நிறைவுபெற்றுள்ளது. 

    ×