என் மலர்
சென்னை
- உழைப்பாளர் சிலை அருகே முற்றுகை பேரணியில் ஈடுபட முயன்றவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.
- கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளையும் போலீசார் கைது செய்தனர்.
சென்னை:
உதவித் தொகையை உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, சென்னையில் கோட்டையை நோக்கி முற்றுகை பேரணியை அறிவித்த மாற்றுத்திறனாளிகளை முன்கூட்டியே போலீசார் கைது செய்தனர்.
உழைப்பாளர் சிலை அருகே முற்றுகை பேரணியில் ஈடுபட முயன்றவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். இருப்பினும் கலைந்து செல்ல மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அதேப்போல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளையும் போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே, மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறினார். மேலும் அவர் கூறுகையில், மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைக்கு செவி சாய்க்கும் அரசாக தி.மு.க. அரசு உள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் அதிக மாற்றுத்திறனாளிகளை சேர்த்தது தமிழ்நாடு தான் என்றார்.
- பாரதிதாசன் எழுத்துகளை மேற்கோள்காட்டி பேசாத தலைவர்களே இல்லை.
- அனைத்து மாவட்டங்களிலும் கவியரங்கங்கள், கருத்தரங்குகள் நடைபெறும்.
சென்னை:
சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதன் விவரம் வருமாறு:-
தமிழ் மொழிக்கு பாவேந்தர். திராவிட இயக்கத்தின் புரட்சிக் கவிஞர். தமிழினத்தின் மறு மலர்ச்சிக் கவிஞர் பாரதிதாசனைப் போற்றும் வகையிலான அறிவிப்பு ஒன்றை தங்களுடைய அனுமதியோடு இம்மாமன்றத்தில் அறிவிப்பதில் தமிழ்நாடு முதலமைச்சர் என்கிற வகையில் மிகுந்த பெருமை அடைகிறேன். மகிழ்ச்சியடைகிறேன்.
தமிழை வளர்த்தல் ஒன்று. சாதியை ஒழித்தல் மற்றொன்று என்று கொள்கைப் பாதை வகுத்துத் தந்தவர் புரட்சிக் கவிஞர். மொழி உணர்ச்சி, மொழி மானம், மொழி குறித்த பெருமிதம் ஆகியவற்றின் மொத்த வடிவம்தான் புரட்சிக் கவிஞர்.
1929-ம் ஆண்டே பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் எழுச்சிக்கு அடித்தளம் அமைத்தவை பாவேந்தரின் பாடல்கள் தான். அத்தகைய பாவேந்தரை தமிழ்நாட்டின் வால்ட் விட்மன் என்று புகழ்ந்து பேசினார் பேரறிஞர் அண்ணா.
முத்தமிழறிஞர் கலைஞர் எங்கே, எப்பொழுது பேசினாலும் அதிலே புரட்சிக் கவிஞரின் பொன்வரிகள் ஒலித்துக் கொண்டேயிருக்கும். 1990-ம் ஆண்டு பாவேந்தரின் படைப்புக்களை கலைஞர் நாட்டுடைமையாக்கினார். இன விடுதலை, மொழி விடுதலை, சமூக விடுதலை, பெண் விடுதலை, பழமை வாதம் ஒழிப்பு என்று பாவேந்தர் தன் எழுத்துகளை திராவிட இனத்திற்கு கொள்கைப் பட்டயமாக உருவாக்கித் தந்தவராவார்.
இன்றும் தனது எழுத்து வரிகளால் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது வரிகளை மேற்கோள் காட்டிப் பேசாத பேச்சாளர்களே இல்லை. அவரது வரிகளை எடுத்தாளாத எழுத்தாளர்களே இல்லை. அவரால் உணர்ச்சி பெறாத தமிழர்களே இல்லை என்று சொல்லத்தக்க வகையில் தமிழர் தம் உணர்விலும், குருதியிலும் கலந்தவர் புரட்சிக் கவிஞர். அவரை எந்நாளும் தமிழினம் வணங்கிப் போற்றும்.
பாவேந்தரின் கவிதைகளில் இனிய இசை நயம் உண்டு. அவை உணர்த்தும் கருத்துகளில் உணர்ச்சிப் புயல்வீசும். எளிமையான சொற்களின் மூலமாக வலிமையான கருத்துக்களைச் சொன்னார். எளிய சொற்கள் அவருடைய கவிதையில் அமையும்போது நிகரற்ற வேகம் கொண்டு நிற்கும் ஆற்றல் மிகுந்த கூரிய கருவிகளாகிவிடும். எனவேதான், அவரது கருத்துக்கள் கவிதைகளாக மட்டுமல்லாமல், கருத்துக் கருவிகளாக இன்றும் இருக்கின்றன. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தனது வாழ்நாளில் பல இளையவர்களை கவிஞர்களாகக் கண்டறிந்து ஊக்கப்படுத்தி தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்தார். நூற்றுக்கும் மேற்பட்ட அக்கவிஞர்களை பாரதிதாசன் பரம்பரை என்று அழைத்து மகிழ்கின்றோம்.
இத்தகைய பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்கள், தமிழை உயர்த்திய உயரம் அதிகம். இத்தனை சிறப்பிற்குரிய தமிழ்த்தாயின் தவப்புதல்வர்களில் ஒருவரான பாவேந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் ஏப்ரல் 29 முதல் மே 5 வரை ஒரு வார காலத்திற்கு தமிழ் வார விழா கொண்டாடப்படும் என்பதை இந்தப் பேரவையில் அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த ஒரு வார காலத்தில் தமிழ்நாடு முழுவதும் தமிழ்மொழியையும், பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பங்களிப்பைக் கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடை பெறும்.
1. கவியரங்கங்கள் மற்றும் இலக்கிய கருத்தரங்குகள்
"எல்லார்க்கும் எல்லாம் என்று இருப்பதான இடம் நோக்கி நடக்கின்றது இந்த வையம்" என்ற பாவேந்தரின் கவிதை வரிகளை மையப்படுத்தி அனைத்து மாவட்டங்க ளிலும் கவியரங்கங்கள் மற்றும் கருத்தரங்கங்கள் நடைபெறும். சிறந்த தமிழறிஞர்கள் மற்றும் இளங்கவிஞர்கள் இதில் பங்கேற்பார்கள்.
2. பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது:
தமிழ் மொழியில் சிறந்து விளங்கும் இளம்எழுத்தாளர், கவிஞர் ஒருவருக்கு பாரதிதாசன் இளம் படைப்பாளர் என்ற விருது வழங்கப்படும்.
3. தமிழ் இலக்கியம் போற்றுவோம்:
புகழ் பெற்ற தமிழிலக்கிய படைப்பாளிகளின் படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வரங்கங்கள் நடத்தப்படும்.
4. பள்ளிகளில் தமிழ் நிகழ்ச்சிகள்:
மாணவர்களிடையே தமிழ்மொழியின் பெருமையை எடுத்துரைக்க பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.
5. தமிழ் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள்:
தமிழ் இசை, நடனம், மற்றும் மரபுக்கலைகளை மையப்படுத்திய கலை நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் நடைபெறும். இது போன்ற தமிழ் நிகழ்ச்சிகள் மூலமாக பாவேந்தர் பிறந்தநாள் தமிழ் மணக்கும் வாரமாகக் கொண்டாடப்படும்.
தமிழ் வார விழா நமது மொழியின் பெருமையை உலகிற்கு எடுத்துரைப்பதற்கு ஒரு நல்வாய்ப்பாகும். பாவேந்தரின் கவிதைகளை நாளும் படிப்போம். நானிலம் முழுவதும் அவரின் சிந்தனைகளைப் பரப்புவோம். தமிழ்மொழியை அடுத்த தலைமுறைகளுக்கும் எடுத்துச் செல்வோம்.
"வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும்" என்றார் பாவேந்தர். அத்தகைய எழுச்சியை இந்த விழாக்கள் மூலம் உருவாக்க வேண்டும்.
"கடல் போலச் செந்தமிழைப் பரப்ப வேண்டும்" என்றார் பாவேந்தர். செந்தமிழைப் பரப்ப இந்த விழாக்கள் பயன்படும்.
"வையம் ஆண்ட வண்டமிழ் மரபே உன் கையிருப்பைக் காட்ட எழுந்திரு" என்றார் பாவேந்தர். தமிழர் தம் அறிவுச் செல்வத்தைக் காட்ட இந்த விழாக்கள் பயன்படும்.
"தமிழை இகழ்ந்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன்" என்றார் பாவேந்தர். அந்தத் தமிழ் உணர்ச்சியை மங்காமல், குன்றாமல் இந்த அரசு காத்திடும்.
பாவேந்தரை கொண்டாடும் விழாவில் அனைவரும் திரளாகப் பங்கேற்று, தமிழின் புகழை உயர்த்துவோம்! உயர்த்துவோம்! என்று கூறி தமிழ் வாழ்க! தமிழினம் ஓங்குக! என்று முழங்கி அமர்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
- குரூப் டி பணியாளர்களில் பெரும்பான்மையினர் குத்தகை முறையில் தான் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
- நிரந்தர பணியிடங்களை ஒப்பந்த பணியிடங்களாக மாற்றுவது போன்ற செயல்களில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இனி அலுவலக உதவியாளர் உள்ளிட்ட அனைத்து குரூப் டி பணியாளர்களையும் நிரந்தரமாக நியமிக்கக்கூடாது என்றும், ஒப்பந்தம் அல்லது அவுட்சோர்சிங் எனப்படும் குத்தகை முறையில் தான் நியமிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தற்காலிக நியமனங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், நிரந்தரப் பணியிடங்களையும் ஒப்பந்தப் பணியிடங்களாக தமிழக அரசு மாற்றி வருவது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்கள், அரசு கல்லூரிகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் குரூப் டி பணியாளர்களில் பெரும்பான்மையினர் குத்தகை முறையில் தான் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு மிகக் குறைந்த ஊதியமே வழங்கப்படுவதால் மிகப்பெரிய அளவில் மனிதவளச் சுரண்டல்கள் நடைபெறுகின்றன; இன்னொருபுறம் குத்தகை முறையில் பணியாளர்கள் நியமிக்கப்படுவதால் அவர்கள் இழைக்கும் தவறுகளுக்கு அவர்களை பொறுப்பேற்கச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு அலுவலகங்களில் பராமரிப்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவை இரண்டுமே தவிர்க்கப்பட வேண்டியவை ஆகும்.
உயர்கல்வி நிறுவனங்களிலும், சில பொதுத்துறை நிறுவனங்களிலும் மட்டும் நடைமுறையில் உள்ள குத்தகை முறை நியமனங்களை அனைத்துத் துறைகளுக்கும் நீட்டிக்கவும் தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டால் தமிழ்நாட்டில் ஒன்றரை லட்சம் பணியிடங்கள் ரத்து செய்யப்படும் நிலை உருவாகும். இது திமுக அளித்த வாக்குறுதிகளுக்கு எதிரானது ஆகும்.
திமுக ஆட்சிக்கு வந்தால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணி செய்த தற்காலிக பணியாளர்கள் அனைவரும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள்; மூன்றரை லட்சம் அரசு வேலைகள் வழங்கப்படும்; இரண்டு லட்சம் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது மட்டுமின்றி அதற்கு முற்றிலும் மாறாக, இருக்கும் பணியிடங்களை ஒழிப்பது, நிரந்தர பணியிடங்களை ஒப்பந்த பணியிடங்களாக மாற்றுவது போன்ற செயல்களில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, இத்தகைய நியமனங்களில் இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்படுவதில்லை என்பதால் இது சமூகநீதிக்கும் எதிரானது ஆகும்.
எனவே, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் குரூப் டி பணியிடங்களை ஒழித்து விட்டு, குத்தகை நியமனங்களுக்கு அனுமதி அளித்து உயர்கல்வித்துறை மூலம் கடந்த 3-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டுள்ள 66-ஆம் எண் கொண்ட அரசாணையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். அனைத்துத் துறைகளிலும் குரூப் டி பணியிடங்கள் நிரந்தர அடிப்படையிலேயே நியமிக்கப்படும் என்றும் அரசு அறிவிக்க வேண்டும்.
- எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்புக்கு பின் அ.தி.மு.க. மூத்த தலைவர்களை நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசியுள்ளார்.
- முக்கிய பிரச்சனைகளை ஒன்று சேர்ந்து எழுப்புவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:
தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உடன் பா.ஜ.க. மாநில தலைவரும் எம்.எல்.ஏ.வுமான நயினார் நாகேந்திரன் சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார். இவர்களது சந்திப்பானது எதிர்க்கட்சி தலைவர் அறையில் சுமார் 15 நிமிடங்களுக்கு மேல் நீடித்ததாக கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்புக்கு பின் அ.தி.மு.க. மூத்த தலைவர்களான எஸ்.பி.வேலுமணி, தளவாய் சுந்தரம், கடம்பூர் ராஜூ ஆகியோரை சந்தித்து நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்.
முக்கிய பிரச்சனைகளை ஒன்று சேர்ந்து எழுப்புவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி உறுதியான பின்பு எடப்பாடி பழனிசாமி- நயினார் நாகேந்திரன் முதன்முறையாக சந்தித்து பேசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- சென்னையில் வெயில் கொளுத்தி வரும் வேலையில் ஏ.சி. மின்சார ரெயிலுக்கு பயணிகள் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
- புறநகர் ஏ.சி. ரெயிலுக்கான கட்டணம் அதிகம் என்று பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை ஏ.சி. வசதியுள்ள மின்சார ரெயில் சேவை கடந்த 19-ந்தேதி தொடங்கியது.
சென்னையில் வெயில் கொளுத்தி வரும் வேலையில் ஏ.சி. மின்சார ரெயிலுக்கு பயணிகள் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
வழக்கமான மின்சார ரெயில் கட்டணத்தை விட ஏ.சி. மின்சார ரெயிலில் கட்டணம் பல மடங்கு அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது குறைந்தபட்ச கட்டணம் ரூ.35-ம், அதிகபட்ச கட்டணம் ரூ.105 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரெயில் பயணிகள் உடனான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் புறநகர் ஏ.சி. ரெயிலுக்கான கட்டணம் அதிகம் என்று பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதற்கு பதில் அளித்த தெற்கு ரெயில்வே நிர்வாகம், சென்னை புறநகர் ஏ.சி. ரெயிலுக்கான கட்டணம் குறைய வாய்ப்பு இல்லை என்று உறுதியாக தெரிவித்துள்ளது. கட்டண நிர்ணயம் என்பது தெற்கு ரெயில்வே முடிவு செய்ய முடியாது எனவும் விளக்கம் அளித்துள்ளது.
மேலும், புறநகர் ஏ.சி. ரெயில் இயக்கப்பட வேண்டிய நேரம் குறித்து பயணிகள் வாட்ஸ் அப் மூலம் கருத்து தெரிவிக்கலாம். பயணிகள் தங்கள் கருத்துகளை 63747 13251 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் அனுப்பவும் அறிவுறுத்தி உள்ளது.
பீக் அவர்ஸ் நேரங்களில் கூடுதல் ரெயில்களை இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
- புற்றுநோய் மருத்துவமனையில் டாக்டர் சாந்தாவின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- நினைவு அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பிரபல புற்றுநோய் நிபுணரும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் முன்னாள் தலைவருமான டாக்டர் சாந்தாவின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை அடையாறு பகுதியில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையில் டாக்டர் சாந்தாவின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து அவரது நினைவு அருங்காட்சியகத்தையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.
- போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி இன்றும், நாளையும் துக்கம் அனுசரிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
- சட்டசபையில் அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
சென்னை:
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் சுவாசக் கோளாறு காரணமாக நேற்று காலமானார். போப்பின் உடல் ரெடெம்ப்போரிஸ் தேவாலயத்தில் வைக்கப்பட உள்ளது. அவரது மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி, 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதைப்போல் போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி இன்றும், நாளையும் துக்கம் அனுசரிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும், போப் பிரான்சிஸின் இறுதிச்சடங்கு நடைபெறும் நாளன்றும் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், மறைந்த போப் பிரான்சிஸுக்கு தமிழக சட்டசபையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. முற்போக்கு கொள்கையோடு பெரும்மாற்றங்களை முன்னெடுத்த ஆளுமை போப் பிரான்சிஸ் என தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சட்டசபையில் அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
- பார் வெள்ளி 1 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை கடந்த 9-ந் தேதியில் இருந்து 'கிடுகிடு'வென உயர்ந்து வந்து, கடந்த 12-ந்தேதி ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்து 160-க்கு விற்பனை ஆனது. இது அப்போது இதுவரை இல்லாத உச்சமாக பார்க்கப்பட்டது.
அதனை தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்த வண்ணம் காணப்படுகிறது. தினந்தோறும் விலை உயர்ந்து இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு 275 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,290-க்கும் சவரனுக்கு 2,200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,320-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 111 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
21-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,120
20-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,560
19-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,560
18-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,560
17-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,360
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
21-04-2025- ஒரு கிராம் ரூ.111
20-04-2025- ஒரு கிராம் ரூ.110
19-04-2025- ஒரு கிராம் ரூ.110
18-04-2025- ஒரு கிராம் ரூ.110
17-04-2025- ஒரு கிராம் ரூ.110
- அண்ணாமலையை மாற்ற வேண்டும் பா.ஜ.க. தலைமைக்கு அ.தி.மு.க. அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
- சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அ.தி.மு.க.வுடனான கூட்டணியை உறுதி செய்தார்.
தமிழக பா.ஜ.க. மாநில தலைவராக கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் பொறுப்பு ஏற்று அண்ணாமலை பணியாற்றி வந்தார். இவரது தலைமையிலான பா.ஜ.க.வினர் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டதாகவே தலைமை கருதியது. இருப்பினும் இவர் மீது அ.தி.மு.க.வினர் அதிருப்தியில் இருந்தனர். கூட்டணி தொடர வேண்டும் என்றால் அண்ணாமலையை மாற்ற வேண்டும் பா.ஜ.க. தலைமைக்கு அ.தி.மு.க. அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அ.தி.மு.க.வுடனான கூட்டணியை உறுதி செய்தார். அப்போது செய்தியாளர்கள் அண்ணாமலை மாற்றம் குறித்து கேட்டதற்கு, பா.ஜ.க.வின் தேசிய கட்டமைப்பில் அண்ணாமலைக்கு பொறுப்பு வழங்கப்படும் என அமித்ஷா சூசகமாக தெரிவித்தார். இதற்கு மறுநாளே பா.ஜ.க. மாநில புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து, பா.ஜ.க. யுவமோர்ச்சா (BJYM) பிரிவு தேசிய தலைவராக அண்ணாமலை அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினருக்கு அண்ணாமலை தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் கட்சியுடன் பா.ஜ.க. மத்திய தலைமை பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.
- அரசு தரப்பில், வரி விதிப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
- குவாரி உரிமையாளர்கள், தங்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.
கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சமீபத்தில் விதிக்கப்பட்ட சிறு கனிம நிலவரி மற்றும் ராயல்டி உயர்வு உள்ளிட்ட 24 கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 16-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் இந்த சங்கத்தினருடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
தலைமைச் செயலகத்தில் அமைச்சர் துரைமுருகன், இயற்கை வளங்கள் துறை செயலர் பணீந்திர ரெட்டி, புவியியல் மற்றும் சுரங்கத்துறை கமிஷனர் சரவணவேல்ராஜ் ஆகியோர் முன்னிலையில், நேற்று குவாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது.
அப்போது அரசு தரப்பில், வரி விதிப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அதை ஏற்று குவாரி உரிமையாளர்கள், தங்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு கல் குவாரி, கிரஷர், லாரி உரிமையாளர்கள் கோரிக்கைகள் ஏற்கப்பட்ட நிலையில் இன்று முதல் விலை உயர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுமானப் பணிகளுக்கான எம்.சாண்ட் மற்றும் ஜல்லி போன்றவற்றின் விலை இன்று முதல் உயர்கிறது.
ஒரு யூனிட் ஜல்லி 4000-ல் இருந்து 5000-க்கும், எம்.சாண்ட் 5000-ல் இருந்து 6000-க்கும், பி.சாண்ட் 6000-ல் இருந்து 7000-க்கும் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- மகாராஷ்டிராவில் மராத்தி தவிர வேறு எந்த மொழியும் கட்டாயமல்ல என்பதை மத்திய அரசு ஏற்கிறதா?
- பாஜக ஆளும் மாநிலத்திலேயே இந்தி கட்டாயமில்லை என கூறியிருப்பதால் மத்திய அரசு தன் முடிவை மாற்றிக் கொள்ளுமா?
மகாராஷ்டிர மாநில பாஜக அரசின் முடிவை சுட்டிக்காட்டி மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து முதலமைசசர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இந்தியை 3வது மொழியாக திணிக்க முயன்ற மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸூக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கடுமையான எதிர்ப்பு எழுந்த பிறகு மகாராஷ்டிராவில் மராத்தி மொழி கட்டாயம் என பட்னாவிஸ் கூறுகிறார்.
இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தி திணிக்கப்படுவதற்கு எதிராக எழுந்த கண்டனத்தின் வெளிபாடு தான் இது.
மகாராஷ்டிராவில் மராத்தி தவிர வேறு எந்த மொழியும் கட்டாயமல்ல என்பதை மத்திய அரசு ஏற்கிறதா? பாஜக ஆளும் மாநிலத்திலேயே இந்தி கட்டாயமில்லை என கூறியிருப்பதால் மத்திய அரசு தன் முடிவை மாற்றிக் கொள்ளுமா?
தேசிய கல்விக்கொள்கையின்படி 3வது மொழியை கற்பது கட்டாயமல்ல என மத்திய அரசு தெளிவான உத்தரவு பிறப்பிக்குமா ?
தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழகத்திற்கு ரூ.2,152 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
அநீதியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கான ரூ.2,152 கோடியை மத்திய அரசு விடுவிக்குமா?
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பரந்தூரில் 1000 நாட்களை கடந்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த ஜனவரி மாதம் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
சென்னையின் 2-வது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சுமார் 5300 ஏக்கரில் அமைய உள்ளது. இதற்காக பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றி உள்ள 13 கிராமங்களில் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. புதிய விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 1000 நாட்களை கடந்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபடும் கிராம மக்களையும் போராட்ட குழுவினரை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த ஜனவரி மாதம் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
இந்நிலையில், 1000 நாட்களை கடந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களுக்கு மீண்டும் நம்பிக்கையூட்டும் வகையில், தமிழக வெற்றக் கழக தலைவர் விஜய் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
மண்ணுரிமைக்காக, வாழ்வுரிமைக்காக ஆயிரம் நாட்களைக் கடந்து அறப் போராட்டம் நடத்தி வரும் என் பாசத்துக்குரிய பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள், நாளை நமதே!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






