என் மலர்
சென்னை
- கழகப் பேச்சாளர்கள் அவரவருக்குரிய பாணியில் நல்ல முறையில் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும்.
- கழக நிர்வாகிகளையும் வாக்காளர்களையும் இணைக்கக்கூடிய வாட்ஸ்அப் குழுக்களில் ஒவ்வொருவரும் நிச்சயம் இடம்பெற்றிருக்க வேண்டும்.
சென்னை:
'தமிழ்நாடெங்கும் முழங்கட்டும் திராவிட மாடல் சாதனைகள்!' என்ற தலைப்பில் தி.மு.க. தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்,
'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' எனப் பதவியேற்பு உறுதிமொழி ஏற்று, இந்த மே மாதம் 7-ஆம் நாளுடன் நான்காண்டுகள் நிறைவடைந்து, ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது உங்களில் ஒருவனான என் தலைமையிலான நமது திராவிட மாடல் அரசு. நம்பிக்கை வைத்து ஆட்சியை ஒப்படைத்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்குமான திட்டங்களை வழங்கிடும் நல்லாட்சியை வழங்கி வருகிறோம்.
2021-ஆம் ஆண்டு தேர்தல் வெற்றிச்சான்றிதழை நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தன் அண்ணன் அருகே நிரந்தர ஓய்வெடுக்கும் இடத்தில் காணிக்கையாக்கிவிட்டுச் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "வாக்களித்த மக்களுக்கு மட்டுமின்றி, வாக்களிக்காத மக்களும் இவர்களுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே! என்று நினைக்கக்கூடிய அளவிலான ஆட்சியை வழங்கிடுவோம்" என்று அளித்த உறுதிமொழியைக் காப்பாற்றும் வகையில் திராவிட மாடல் அரசு, 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற இலட்சியத்துடனான அனைவருக்குமான அரசாகத் திகழ்கிறது.
இந்தியாவின் பிற மாநிலங்களும் - கொள்கைரீதியாக நமக்கு என்றும் எதிரானவர்கள் ஆள்கின்ற மாநிலங்களும்கூட திராவிட மாடல் அரசின் திட்டங்களைப் பின்பற்றும் வகையில் முன்னோடியான அரசாக - முதன்மையான அரசாகத் தமிழ்நாட்டை இந்த நான்காண்டுகளில் உயர்த்தியிருக்கிறோம். நலன் தரும் திட்டங்கள் -நாடு போற்றும் சாதனைகளுடன் ஐந்தாவது ஆண்டில் திராவிட மாடல் அரசு பெருமிதத்துடன் அடியெடுத்து வைக்கிறது. அடுத்த ஐந்தாண்டுகளும் இந்த நல்லாட்சி தொடரும் என்பதைத் தமிழ்நாட்டு மக்களின் மனநிலை காட்டுகிறது.
திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் மக்களுக்காகப் பணியாற்றுகிற இயக்கம். தேர்தல் அரசியலுக்கு வருவதற்கு முன்பே பேரறிஞர் அண்ணா தலைமையில் நெசவாளர்களின் துயர் துடைத்த இயக்கம் இது. முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையில் புயல் - வெள்ள நிவாரண உதவிகளைச் செய்தது நம் கழகம். உங்களில் ஒருவனான என் தலைமையில் கழகம் எதிர்க்கட்சியாக இருந்தபோது, கொரோனா பேரிடர் காலத்தில், 'ஒன்றிணைவோம் வா' என உடன்பிறப்புகள் ஒருங்கிணைந்து மக்களுக்கு உதவிகள் செய்தோம். 6 முறை ஆட்சி செய்யக் கிடைத்த வாய்ப்புகளில் தமிழ்நாட்டின் சமூக - பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்து, ஒவ்வொரு குடும்பமும் பயன் பெறும் வகையிலான திட்டங்களை நிறைவேற்றி, நவீனத் தமிழ்நாட்டைக் கட்டமைத்தது கழக அரசு. ஏழாவது முறையாக 2026 சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியமைக்கப் போவதும் திராவிட முன்னேற்றக் கழகம்தான்.
மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை உறுதி செய்திடக் களத்தில் கடுமையாக உழைத்திட வேண்டும். அரசியல் எதிரிகளால் நமது ஆட்சியைக் குறை சொல்ல முடியாத காரணத்தால் அவதூறு சேற்றை வீசுகிறார்கள். ஈரைப் பேனாக்கி, பேனைப் பேயாகக் காட்ட நினைக்கிறார்கள். அதிகார அமைப்புகளை ஏவி அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். இந்தப் பூச்சாண்டிகளுக்கு மிரள்வதற்கு அடிமைக் கட்சியல்ல, நம் தி.மு.க. இது சுயமரியாதை இயக்கம். தன்மானமும் தைரியமும் கொண்ட இயக்கம். தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கும் இயக்கம். இந்தியாவுக்கு வழிகாட்டும் இயக்கம்.
மே 3-ஆம் நாள் நடைபெற்ற மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, ''நாடு போற்றும் நான்காண்டு - தொடரட்டும் பல்லாண்டு' என்ற தலைப்பில் திராவிட மாடல் அரசின் சாதனைகளை 868 ஒன்றியங்கள், 224 பகுதிகள், 152 நகரங்கள் என 1244 இடங்களில் 186 இளம் பேச்சாளர்கள் உள்ளிட்ட 443 கழகப் பேச்சாளர்கள் பங்கேற்கும் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இந்தப் பேச்சாளர்களுக்குக் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா எம்.பி., அவர்கள் இன்று மாலை ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்குகிறார். சொல்லித் தீராத அளவுக்குச் சாதனைகள் நிறைந்திருப்பதால்தான் இத்தனை இடங்களில் பெருமிதத்துடன் நம்மால் பொதுக்கூட்டங்களை நடத்திட முடிகிறது.
2021 சட்டமன்றத் தேர்தலின் போது திராவிட முன்னேற்றக் கழகம் அளித்த 505 வாக்குறுதிகளில் பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படாத சாதனைத் திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு, மக்களுக்குப் பயனளித்து வருகின்றன. இன்னும் நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகளும் இருப்பதை நான் மறக்கவுமில்லை, மறுக்கவுமில்லை. அவற்றையும் நிறைவேற்றிட வேண்டும் என்பதில் உறுதியாகவே இருக்கிறேன். அதற்கு உடன்பிறப்புகளான நீங்கள் அனைவரும், உங்களில் ஒருவனான எனக்கு உறுதுணையாக இருந்திட வேண்டும்.
இனி ஓராண்டு காலம் நமக்குத் தேர்தல் பணிகளே முதன்மையானதாக இருக்கும். அதற்கான செயல்திட்டங்கள் என் தலைமையில் தலைமைக் கழகத்தால் வகுக்கப்பட்டு, மாவட்டக் கழகச் செயலாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நம் செயல்பாடுகள் அமைந்திட வேண்டும். கழகத்தின் பவள விழாப் பொதுக்குழு ஜூன் 1-ஆம் நாள் கூடல் மாநகராம் மதுரையில் நடைபெறவிருப்பதைக் கழகப் பொதுச்செயலாளர் அவர்கள் அறிவித்திருக்கிறார். அதில், தேர்தல் பணிகள் குறித்து இன்னும் விரிவான செயல்திட்டங்கள் முன்வைக்கப்படும்.
அதற்கு முன்னதாக, தமிழ்நாட்டில் 1,244 இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கும் சொற்பொழிவாளர்கள் நான்காண்டு கால திராவிட மாடல் அரசின் ஆட்சியின் சாதனைகளையும்; அதனால் மக்கள் பெற்றுள்ள பயன்களையும் ஒவ்வொரு இடத்திலும் எடுத்துரைக்க வேண்டும். இந்தியாவுக்கே முன்னோடியாக விளங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணத் திட்டம், காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் போன்ற முத்திரைத் திட்டங்களால் மக்கள் பெற்றுள்ள நன்மைகளைப் புள்ளிவிவரங்களுடன் எடுத்துரைப்பது அவசியமாகும். நீண்ட நேரம் உரையாற்ற வேண்டிய கட்டாயமில்லை. எளிமையாக – இனிமையாக – சுருக்கமாக – கேட்பவரைக் கவர்கின்ற வகையில் எடுத்துரைத்தாலே திராவிட மாடல் அரசின் திட்டத்தால் பயன் பெற்றுள்ள தமிழ்நாட்டு மக்கள் அதனைப் புரிந்துகொள்வார்கள்.
கழகப் பேச்சாளர்கள் அவரவருக்குரிய பாணியில் நல்ல முறையில் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும். நம்மை எதிர்ப்பவர்கள் தங்கள் மேடைகளில் பொய்யாக – மோசமாக – ஆபாசமாக - அருவருப்பாகப் பேசினாலும், நமது பேச்சாளர்கள் கண்ணியக்குறைவான சொற்களைப் பயன்படுத்திடக் கூடாது என்பதை அறிவுறுத்தலாகவும் கட்டளையாகவும் தெரிவிக்கிறேன். ஆட்சிக்கு வந்த நான்காண்டுகளில் சொன்னதைச் செய்தது மட்டுமின்றி, சொல்லாததையும் செய்து காட்டியிருக்கிறோம். அவற்றை எடுத்துச் சொன்னாலே போதும். குறைகுடங்கள் கூத்தாடுவது போல, நிறைகுடமான நாம் இருந்திட வேண்டியதில்லை.
பல வேலைச் சூழல்களுக்கிடையதான் பொதுக்கூட்டங்களில் பேசப்படுவதைப் பொதுமக்கள் உற்று கவனிக்கிறார்கள். அவர்களின் மனதில் பதியக்கூடிய வகையில், நிமிட நேரத்தில் செய்தியின் சாரத்தைச் சொல்லக்கூடிய ஆற்றல் மிக்கவர்களாக நம் சொற்பொழிவாளர்கள் இருந்திடுவது அவசியம். பொதுக்கூட்டங்களுக்குக் கழகத்தின் பாக முகவர்களும், பூத் கமிட்டி உறுப்பினர்களும் கட்டாயம் வருகின்ற வரையில் மாவட்ட – ஒன்றிய -நகர - பகுதிக் கழகச் செயலாளர்கள் உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அவர்கள்தான் சொற்பொழிவாளர்களின் கருத்துகளை ஒவ்வொரு வாக்காளரிடமும் கொண்டு சேர்க்கக் கூடியவர்கள்.
பொதுக்கூட்டங்கள் என்பவை தேர்தல் களத்திற்கு உத்வேகம் தரக்கூடியவை. அத்துடன், இன்றைய தலைமுறையினர் அதிகம் விரும்புகின்ற - அவர்களின் வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அங்கமாகவே ஆகிவிட்ட சமூக வலைத்தளங்களிலும் பாக முகவர்களும், பூத் கமிட்டி உறுப்பினர்களும், கழகத்தின் மற்ற நிர்வாகிகளும் முனைப்புடன் செயல்பட வேண்டும். கழக நிர்வாகிகளையும் வாக்காளர்களையும் இணைக்கக்கூடிய வாட்ஸ்அப் குழுக்களில் ஒவ்வொருவரும் நிச்சயம் இடம்பெற்றிருக்க வேண்டும். தலைமைக் கழகம் சார்பிலும், கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணி சார்பிலும் மற்ற அணிகளை ஒருங்கிணைத்தும் அனுப்பப்படும் செய்திகளை அவரவர் வாட்ஸ்அப் குழுக்களில் பகிர வேண்டும். கழக அரசின் சாதனைகளும் அதன் பயன்களும் ஒவ்வொரு வாக்காளரிடமும் போய்ச் சேர வேண்டும்.
ஒரு மணி நேரப் பேச்சைவிட, ஒரு நிமிட - அரை நிமிடக் காணொலிகள், ரீல்ஸ்கள்தான் இலட்சக்கணக்கானவர்களிடம் உடனடியாகப் போய்ச் சேர்கின்றன. முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டையொட்டி தலைமைக் கழகத்தால் வழங்கப்பட்ட பொறுப்பினை ஏற்று, கழக இளைஞரணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு, அதிலிருந்து தேர்வு பெற்றுள்ள இளம்பேச்சாளர்கள் பலருடைய உரைகளை ஒரு நிமிடக் காணொலியாகப் பார்க்கிறேன். அவர்களின் ஆர்வத்தை, உத்வேகத்தை, கொள்கையுணர்வைக் கண்டு மகிழ்கிறேன். கழக நிர்வாகிகளும், பாக முகவர்களும், பூத் கமிட்டி உறுப்பினர்களும் இத்தகைய உரைகளைக் கேட்டு அவற்றைப் பகிர்வதுடன், அவரவர் பகுதிகளில் நிறைவேற்றப்பட்டுள்ள திராவிட மாடல் அரசின் திட்டங்களையும், அதனால் மக்கள் பெற்றுள்ள பயன்களையும் சமூக வலைத்தளங்கள் - வாட்ஸ்அப் குழுக்கள் வாயிலாக வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்துத் தமிழ்நாட்டுக்கு துரோகமிழைப்பவர்களும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளும் தி.மு.க.வை வீழ்த்திவிட முடியாதா எனத் தொடர் தோல்வியின் ஆற்றாமையில் தவிக்கிறார்கள். அவர்களின் மனக்கணக்கு தப்புக்கணக்காகவே முடியும் என்பதைச் சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் போடுகிற கணக்கு தீர்மானிக்கும். நாம் மக்களிடம் செல்வோம். அவர்களுக்காகக் கழக அரசு செய்ததைச் சொல்வோம். தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் அவற்றை எடுத்துரைப்போம். கழக சொற்பொழிவாளர்களின் கருத்துகளை உள்வாங்கி, கழக அரசின் சாதனைகளை ஒவ்வொரு வீடாகச் சென்று முழங்கிடுவோம்!
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
- தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- வருகிற 9-ந்தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
சென்னை:
தமிழ்நாடு முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 3-ந்தேதி தொடங்கி 25-ந் தேதி வரை நடைபெற்றது.
இந்த தேர்வினை 8 லட்சத்து 21 ஆயிரம் பேர் எழுதினார்கள். 3 லட்சத்து 88 ஆயிரம் மாணவர்களும் 4 லட்சத்து 24 ஆயிரம் மாணவிகளும், தனித் தேர்வர்கள் 18 ஆயிரம் பேரும், சிறைவாசிகள் 145 பேரும் எழுதினார்கள்.
விடைத்தாள்கள் கடந்த ஏப்ரல் மாதம் திருத்தப்பட்டு மதிப்பெண்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டன. மாணவர்கள் நலன் பாதிக்கப்படாத வகையில் விடைத்தாள்களை கவனமாக திருத்தவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
மதிப்பெண் விவரங்களை டேட்டா என்ட்ரியில் பதிவு செய்யும்போது பிழைகள் இல்லாமல் பதிவேற்றம் செய்யவும் ஊழியர்களுக்கு தேர்வுத்துறை கூறி இருந்தது.
அதன் அடிப்படையில் அனைத்து பணிகளும் நிறைவுற்று தேர்வு முடிவினை அறிவிப்பதற்கு அரசு தேர்வு துறை தயாராக இருந்தது. பிளஸ்-2 தேர்வு முடிவு மே 9-ந்தேதி வெளியிடப்படும் என்று கல்வித்துறை அட்டவணைப்படி தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கு ஒருநாள் முன்னதாக 8-ந்தேதி தேர்வு முடிவுகளை அறிவிக்க அரசு முடிவு செய்தது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, தேர்வு முடிவுகளை வெளியிடுவது குறித்து அனுமதி கேட்டார். நாளை மறுநாள் 8-ந்தேதி (வியாழக்கிழமை) தேர்வு முடிவுகளை வெளியிட முதலமைச்சர் அனுமதி வழங்கி உள்ளார்.
அதனைத் தொடர்ந்து பிளஸ்-2 தேர்வு முடிவு 8-ந்தேதி காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு தேர்வு துறை இயக்குனர் தெரிவித்து உள்ளார்.
பிளஸ்-2 தேர்வு முடிவுகளை 8-ந்தேதி காலை 9 மணிக்கு கிண்டி அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிடுகிறார்.
தேர்வு முடிவுகளை https/results.digilocker.gov.in மற்றும் www.tnresults.nic.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.
மாணவ-மாணவிகள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள முடியும். இது தவிர மாணவர்களின் செல்போன் எண்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் முடிவுகள் அனுப்பப்படும்.
- நேற்று தங்கம் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,200-க்கு விற்பனையானது.
- வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் விலை உயர்ந்து புதிய உச்சத்தில் விற்கப்படுவதால் தங்கம் எட்டாக்கனியாகி விடுமோ என்று மக்கள் கவலை அடைந்துள்ளனர். திருமணம், சுப நிகழ்ச்சிக்காக தங்கம் வாங்க நினைப்பவர்களும் செய்வதறியாது தவிக்கின்றனர்.
இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான நேற்று தங்கம் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,200-க்கும் கிராமுக்கு ரூ.20 உயர்நது ஒரு கிராம் ரூ.8,775-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 250 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,025-க்கும் சவரனுக்கு 2,000 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,200-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 3 ரூபாய் உயர்நது ஒரு கிராம் வெள்ளி ரூ.111-க்கும், கிலோவுக்கு மூவாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
05-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,200
04-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,040
03-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,040
02-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,040
01-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,200
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
05-05-2025- ஒரு கிராம் ரூ.108
04-05-2025- ஒரு கிராம் ரூ.108
03-05-2025- ஒரு கிராம் ரூ.108
02-05-2025- ஒரு கிராம் ரூ.109
01-05-2025- ஒரு கிராம் ரூ.109
- சராசரி அரசியல்வாதியை போல் திருமாவளவனை கணக்கு போடாதீர்கள்.
- 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெல்ல வேண்டும்.
வணிகர் தினத்தையொட்டி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வணிகர் அணி சார்பில் தேர்தல் அங்கீகார வெற்றி விழா சென்னை கோயம்பேட்டில் நேற்று நடந்தது.
விழாவுக்கு கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கிப் பேசியதாவது:-
நாங்கள் எப்போதும் வெறும் கையால் முழம் போட மாட்டோம். எத்தனை நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தலைவர்கள் வந்தாலும் எங்களுடைய களம் முற்றிலும் வேறானது. ஏ.சி. அறைக்குள் உட்கார்ந்துகொண்டு நாங்கள் அரசியல் செய்வதில்லை. சாதியவாதிகளோடும், மதவாதிகளோடும் எந்தச் சூழலிலும் கைகோர்க்க மாட்டோம். இதை வெளிப்படையாக அறிவிக்கிறோம். சராசரி அரசியல்வாதியை போல் திருமாவளவனை கணக்கு போடாதீர்கள்.
அது எந்த காலத்திலும் நடக்காது. நுழையக்கூடாது என்றால் நுழைவோம், நடக்கக்கூடாது என்றால் நடப்போம், பேசக்கூடாது என்றால் பேசுவோம், கூட்டம் போடக்கூடாது என்றால் மாநாடே நடத்துவோம். மதச்சார்பின்மையை பாதுகாக்க திருச்சியில் 31-ந்தேதி மாபெரும் பேரணியை நடத்துகிறோம்.
அ.தி.மு.க., விஜய், பா.ஜ.க. என எந்த பக்கத்தில் வேண்டுமானாலும் நாம் கதவுகளை திறந்து வைக்கலாம். ஆனால், அவ்வாறு எந்த கதவையும் திறந்துவைக்கவில்லை. என்னுடைய 2 எம்.பி.யை அமித்ஷாவும், மோடியும் வேண்டாம் என்று சொல்லிவிடுவார்களா?.
டெல்லியில் மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கும் அதிகாரி ஒருவர் என்னுடன் பேசினார். பா.ஜ.க.விற்கு அழைத்தார். பிரதமரிடம் நேரில் பேசலாம் என்றார். அவரிடம் அதெல்லாம் வேண்டாம் என்று கையெடுத்து கும்பிட்டுவிட்டு திரும்பி விட்டேன்.
மதசார்பற்ற கூட்டணியில் இடம்பெறுகிறோம் என்பதில் உறுதியாக இருக்கிறேன். 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெல்ல வேண்டும். மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்பதைவிட சனாதன சக்திகள் எந்த சூழலிலும் வலிமை பெற்றுவிடக்கூடாது. பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நாங்கள் வீழ்த்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வைகோ நேற்று வீட்டில் கீழே விழுந்து அடிபட்ட நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
- கடந்த ஆண்டும் கீழே விழுந்ததில் காயம் அடைந்த வைகோவுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை சாலிகிராமத்தில் வசித்து வரும் வைகோ நேற்று வீட்டில் கீழே விழுந்து அடிபட்ட நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டும் கீழே விழுந்ததில் காயம் அடைந்த வைகோவுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
- 23 மீனவர்களை இலங்கையை சேர்ந்த அமையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு உள்ளனர்.
- இலங்கை அதிகாரிகளிடம் பிரச்சனையை எடுத்து சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
கடந்த மே 25ம் தேதி நாகையைச் சேர்ந்த 23 மீனவர்கள் இலங்கையை சேர்ந்த அமையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு உள்ளனர்.
இதுபோன்ற தாக்குதல் சம்பவங்களை தடுக்க இலங்கை அதிகாரிகளிடம் பிரச்சனையை எடுத்து சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட 101 மீனவர்கள், 12 படகுகளையும் இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழகத்தில் மாணவர்கள் கடும் சோதனைக்குட்பட்டே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
- நீட் தேர்வு கட்டுப்பாடால் மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதிகாண் மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.
இந்த தேர்வில் மாணவ-மாணவிகள் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே மேற்சொன்ன படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
அதேபோல், ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது.
2025-26-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான 'நீட்' தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வில் நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் பேர் பங்கேற்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் மாணவர்கள் கடும் சோதனைக்குட்பட்டே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
குறிப்பாக, மாணவிகளில் துப்பட்டாவை கழற்ற சொல்வது முதல், மூக்குத்தி, காதில் தோடு என மாணவிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
திருப்பூரில் ஒரு மாணவியில் உடையில் நிறைய பொத்தான்கள் இருந்ததாக கூறி அதை அறுத்து எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நாம் தமிழர் சட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நீட் மாணவிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுபாடுகளுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தார்.
அப்போது அவர்," தமிழ்நாட்டு மாணவர்களை மட்டும் குறிவைத்து பாகுபாடு காட்டப்படுகிறது. மூக்குத்தி மூலம் மாணவி எப்படி பிட் கொண்டு செல்ல முடியும்? பட்டன்கள் மூலம் மாணவர்கள் பிட் கொண்டு செல்ல முடியுமா?" என்று கேள்வி எழுப்பினார்.
நீட் தேர்வு எழுதும் மாணவிகள் அணிந்து வரும் அடைகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பதால், பல்வேறு ஜவுளி கடைகளில் நீட் தேர்வுக்கான ஆடை விற்பனைக்கு வந்துள்ளது.
தேசிய தேர்வுகள் முகமை எதிர்பார்க்கும் வகையில், பொத்தன்கள் இல்லாத, எந்த வித டிசைன்களும் இல்லாத பிளெயின் நிறத்தில் சுடிதார் டாப்கள் விற்பனைக்கு வந்துள்ளது.
- நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
- தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
திரைத்துறையில் இருந்து ஏராளமானோர் வந்து கவுண்டமணியின் மனைவியின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் கவுண்டமணியின் மனைவி உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
மேலும், விஜய் நடிகர் கவுண்டமணியை ஆரத் தழுவி ஆறுதல் தெரிவித்தார்.
- குரூப் 2ஏ பதவியில் 2006 பதவிக்கான மெயின் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி நடைபெற்றது.
- குரூப் 2ஏ தேர்வு முடிவுகளை tnpsc.gov.in என்கிற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தமிழகம் முழுவதும் குரூப் 2ஏ மெயின் தேர்வு 82 மையங்களில் கடந்த பிப்ரவரி 8ம் தேதி நடைபெற்றது. 2006 பதவிக்கு நடைபெற்ற தேர்வை 21,563 பேர் எழுதினர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2, குரூப் 2ஏ பணியில் காலியாக உள்ள 2,540 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 20ம் தேதி வெளியிட்டது.
இந்நிலையில் குரூப் 2ஏ பதவியில் 2006 பதவிக்கான மெயின் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி நடைபெற்றது. மெயின் தேர்வு தாள் II பொது அறிவு மற்றும் பொது திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் மற்றும் மொழி (பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம்) கொள்குறி வகை தேர்வு நடைபெற்றது.
இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ மெயின் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
குரூப் 2ஏ தேர்வு முடிவுகளை tnpsc.gov.in என்கிற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, 12ஆவது முறையாக குறிப்பிட்ட மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
- மக்களின் பிரச்சினைகள் குறித்து விஜய்க்கு போதிய புரிதல் இல்லை.
- பிரபலமான நடிகர்கள் என்றால் அவர்கள் கையில் கொடுத்து விட முடியுமா?
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு அரசியல் பார்வை இல்லை என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
மக்களின் பிரச்சினைகள் குறித்து விஜய்க்கு போதிய புரிதல் இல்லை.
சிலர் விஜய்யை பவன் கல்யாணுடன் ஒப்பிடுவதாகவும் நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரபலமான நடிகர்கள் என்றால் அவர்கள் கையில் கொடுத்து விட முடியுமா?
நடிகர்கள் அரசியல்வாதிகளாக மாறும்போது மாற்று சக்தி என சீட் வாய்ப்பு கிடைப்பதகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
- பாமக சார்பில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா நடைபெறுகிறது.
- அய்யா என்று சொல்லும் போதே ஆயிரம் கோடி மகிழ்ச்சியடா என்ற பாடலையும் பா.ம.க வெளியிட்டது.
சென்னை அருகே மாமல்லபுரத்தில் வரும் 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பாமக சார்பில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா நடைபெறுகிறது.
சித்திரை முழு நிலவு மாநாட்டை ஒட்டி அன்புமணி ராமதாசை முன்னிலைப்படுத்தும் வகையில் இருந்த பாடலும், அடுத்ததாக அய்யா என்று சொல்லும் போதே ஆயிரம் கோடி மகிழ்ச்சியடா என்ற பாடலையும் பா.ம.க வெளியிட்டது.
இந்த நிலையில், சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டுக்கான இலட்சினையை (LOGO) பாமக வெளியிட்டுள்ளது
அந்த இலட்சினையில் "இனமே எழு உரிமை பெறு" என குறிப்பிடப்பட்டுள்ளது.

- கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வால் கட்டுமானப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
- மணல் லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழ்நாடு மணல் குவாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 23-ந்தேதி முதல் லாரிகள் ஓடாது.
இதுகுறித்து மாநிலத் தலைவர் யுவராஜ் கூறியதாவது:-
கடந்த 1½ ஆண்டுகளாக மணல் குவாரிகள் இயங்கவில்லை. இதனால் மாற்றாக எம்.சாண்ட் பயன்படுத்தப்படுகிறது. குவாரி உரிமையாளர்களால் ஜல்லி எம்.சாண்ட், பி சாண்ட் விலை உயர்த்தப்பட்டது. யூனிட்டுக்கு ரூ.1000 வீதம் 2 முறை உயர்த்தி உள்ளனர்.
கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வால் கட்டுமானப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதை அடுத்து சமீபத்தில் 1000 ரூபாய் விலை குறைக்கப்படும் என்று அரசு அறிவித்தது.
ஆனால் எம்.சாண்ட் விலை குறைக்கப்படவில்லை. கல் குவாரிகளுக்கு கேரளாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சட்ட விரோதமாக லாரிகளில் கல் கொண்டு செல்லப்படுகிறது.
இதன் காரணமாக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.25 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே கல் குவாரிகளை அரசுடமையாக்க வேண்டும்.
மணல் லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டுள்ளது. இது பற்றி அரசுக்கு பல முறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மணல் குவாரிகளை விரைவாக திறந்து விலை உயர்வை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 23-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் மணல் லாரிகள் ஓடாது. லாரிகளை நிறுத்தி வைத்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.






