என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லோகோ"

    • அஜித்குமார் ரேஸிங் அணி ஆசிய லீ மான்ஸ் தொடரில் கலந்து கொள்ளவுள்ளது.
    • இந்த தொடரில் அஜித்குமாருடன் இணைந்து நரேன் கார்த்திகேயன் கலந்துகொள்கிறார்

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார் .

    கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், 'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.

    அஜித்குமார் ரேஸிங் அணி ஆசிய லீ மான்ஸ் தொடரில் கலந்து கொள்ளவுள்ளது. இந்த தொடரில் அஜித்குமாருடன் இணைந்து நரேன் கார்த்திகேயன் கலந்துகொள்கிறார்

    இந்திய சினிமாவை பிரபலப்படுத்தும் வகையில் அதன் லோகோவை அஜித்குமார் தனது கார் மற்றும் ரேஸிங் உடையில் பொறித்ததுள்ளார்.

    முன்னதாக தனது ரேஸ் கார் மற்றும் ரேஸ் உடைகளில் Indian Film Industry என்ற லோகோவை அச்சிடவுள்ளதாக அஜித்குமார் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அஜித் கார் ரேஸ் போட்டியில் கவனம் செலுத்தி வருகிறார்.
    • அஜித்தின் அடுத்த திரைப்படமான AK65 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

    நடிகர் அஜித் கடைசியாக குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து இருந்தார். திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்றது. இதற்கிடையே, அஜித் கார் ரேஸ் போட்டியில் கவனம் செலுத்தி வருகிறார். அஜித்தின் அடுத்த திரைப்படமான AK65 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

    சமீபத்தில் ஜெர்மனியில் நடக்கும் கார் ரேஸில் அஜித் பங்கேற்றார். அங்குள்ள ரசிகர்கள் அஜித் சந்தித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    அப்போது அவர்களிடம் பேசிய அஜித்,‛‛கார் ரேஸை பிரபலப்படுத்துங்க, எனக்காக அல்ல. இங்கு கார் பந்தயத்தில் ஈடுபடும் இந்திய வீரர்களை முன்னிலைப்படுத்துங்கள். நிச்சயம் ஒருநாள் இந்திய வீரர்களும் பார்முலா ஒன் கார் ரேஸ் மட்டுமல்ல அனைத்து விதமான ரேஸ் போட்டிகளிலும் இந்திய வீரர்கள் சாம்பியன் ஆவார்கள்" என்ற கருத்தை முன் வைத்தார்.

    இந்நிலையில் தனது ரேஸ் கார் மற்றும் ரேஸ் உடைகளில் Indian Film Industry என்ற லோகோவை அச்சிடவுள்ளதாக அஜித்குமார் அறிவித்துள்ளார்.

    இந்திய சினிமாவை பிரதிபலிக்கும் விதமாக தனது ரேஸ் கார் மற்றும் ரேஸ் உடைகளில் இந்தியன் ஃபிலிம் இண்டஸ்ட்ரி என்ற அச்சிடவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    • 14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டியை நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்றுள்ளது.
    • சென்னை, மதுரை ஆகிய 2 இடங்களில் நவம்பர் 28-ந்தேதி முதல் டிசம்பர் 10-ந்தேதி வரை நடக்கிறது.

    உலக கோப்பை ஜூனியர் (21 வயதுக்குட்பட்டோர்) ஹாக்கிப் போட்டி 1979-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

    இதுவரை 13 போட்டித் தொடர் நடைபெற்றுள்ளது. ஜெர்மனி அதிகபட்சமாக 7 தடவை உலக கோப்பை ஜூனியர் ஆக்கி பட்டத்தை கைப்பற்றி உள்ளது.

    இந்தியா (2001, 2016), அர்ஜென்டினா தலா 2 முறையும், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் தலா 1 தடவையும் சாம்பியன் பட்டம் பெற்றன. கடைசி யாக இந்த போட்டி 2023-ம் ஆண்டு மலேசியா தலைநகர் கோலா லம்பூரில் நடை பெற்றது. இதில் ஜெர்மனி வெற்றி பெற்றது.

    14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டியை நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்றுள்ளது.

    தமிழ்நாட்டில் முதல் முறையாக இந்தப் போட்டியை நடத்தும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி இந்தியாவில் 4-வது முறையாக நடைபெறுகிறது.

    இதற்கு முன்பு 2013-ம் ஆண்டு டெல்லியிலும், 2016-ம் ஆண்டு லக்னோவிலும், 2021-ல் புவனேஷ்வரிலும் நடைபெற்றது.

    14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி சென்னை, மதுரை ஆகிய 2 இடங்களில் நவம்பர் 28-ந்தேதி முதல் டிசம்பர் 10-ந்தேதி வரை நடக்கிறது.

    இதில் போட்டியை நடத்தும் இந்தியா, ஜெர்மனி, அர்ஜென்டினா, கனடா, பெல்ஜியம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜப்பான், மலேசியா, நியூசிலாந்து, எகிப்து உள்பட 24 நாடுகள் பங்கேற்கின்றன. அரை இறுதி மற்றும் இறுதி போட்டி சென்னையில் நடக்கிறது.

    சென்னை, மதுரையில் நடைபெறும் உலக கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டிக்கான இலச்சினை (லோகோ) இன்று வெளியிடப்பட்டது. சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதை வெளியிட்டார்.

    நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது:-

    ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி சென்னை, மதுரையில் நடத்தப்படுகிறது. மதுரையில் இதற்கான உள்கட்டமைப்பு மேற் கொள்ளப்பட்டுள்ளது. உலகத் தரத்திற்கு இணையாக அங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. மதுரையில் இந்த போட்டியை நடத்துவதன் மூலம் தென் மாவட்ட மக்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தும்.

    24 நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டியை சிறப்பாக நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.65 கோடி ஒதுக்கி உள்ளார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதோடு ஜூனியர் உலக கோப்பை போட்டியை நடத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் பரிமாற்றப்பட்டது. இதில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், ஹாக்கி இந்தியா அமைப்பும் கையெழுத்திட்டன.

    நிகழ்ச்சியில் தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி, ஹாக்கி இந்தியா பொதுச் செயலாளர் போலாநாத் சிங், பொருளாளர் சேகர் மனோகரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • கூகுள் ஆப் பீட்டா பதிப்பு 16.18 உடன் ஆண்ட்ராய்டு சாதனங்களிலும் தோன்றுகிறது.
    • கடைசியாக 2015 ஆம் ஆண்டு கூகுள் தனது 'G' லோகோவில் மாற்றம் செய்த

    முன்னணி தேடுபொறி நிறுவனமான கூகுள், சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அதன் 'G' லோகோவில் மாற்றங்களைச் செய்துள்ளது.

    பழைய லோகோவில் பெட்டிகளாக தென்படும், சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் நீலம் ஆகிய நான்கு திட நிறங்கள், தற்போது சாய்வான கலவையாகவும் திடத்தன்மை குறைக்கப்பட்டும் புதிய லோகோவில் காணப்படுகின்றன. 

    கூகுள் தொடர்ந்து புதிய AI அம்சங்களை அறிமுகப்படுத்தி வருவதால் இந்த வடிவமைப்பு உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    9to5Google இன் அறிக்கையின்படி, இந்த புதுப்பிப்பு தற்போது iOS மற்றும் பிக்சல் சாதனங்களில் காணப்படுகிறது. இது கூகுள் ஆப் பீட்டா பதிப்பு 16.18 உடன் ஆண்ட்ராய்டு சாதனங்களிலும் தோன்றுகிறது.

    இருப்பினும், கூகுளின் முக்கிய சொல் அடையாளத்தில் நிறுவனம் இன்னும் எந்த மாற்றங்களையும் செய்யவில்லை.

    கூகிள் தனது தயாரிப்புகளில் AI க்கு முன்னுரிமை அளிப்பதால், எதிர்காலத்தில் மேலும் பல மாற்றங்கள் வரலாம் என்று கூறப்படுகிறது. கடைசியாக 2015 ஆம் ஆண்டு கூகுள் தனது 'G' லோகோவில் மாற்றம் செய்தது குறிப்பிடத்தக்கது .

    • பாமக சார்பில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா நடைபெறுகிறது.
    • அய்யா என்று சொல்லும் போதே ஆயிரம் கோடி மகிழ்ச்சியடா என்ற பாடலையும் பா.ம.க வெளியிட்டது.

    சென்னை அருகே மாமல்லபுரத்தில் வரும் 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பாமக சார்பில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா நடைபெறுகிறது.

    சித்திரை முழு நிலவு மாநாட்டை ஒட்டி அன்புமணி ராமதாசை முன்னிலைப்படுத்தும் வகையில் இருந்த பாடலும், அடுத்ததாக அய்யா என்று சொல்லும் போதே ஆயிரம் கோடி மகிழ்ச்சியடா என்ற பாடலையும் பா.ம.க வெளியிட்டது.

    இந்த நிலையில், சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டுக்கான இலட்சினையை (LOGO) பாமக வெளியிட்டுள்ளது

    அந்த இலட்சினையில் "இனமே எழு உரிமை பெறு" என குறிப்பிடப்பட்டுள்ளது.

     

    • மொழியை பாதுகாப்பதற்கு போராட வேண்டிய அவசியம் அப்போது இல்லை.
    • 'ரூ' என்று மாற்றி இலச்சினை வெளியிட்டு தனது உணர்வினை வெளிப்படுத்தியுள்ளது தமிழ்நாடு அரசு.

    தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது, 2010 ஆம் ஆண்டு ரூபாய் இலட்சினையை மாற்றியமைத்தது. அப்போது மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசு, எந்த மாநிலத்தின் மீதும் மும்மொழிக்கொள்கையை வலிந்து திணிக்கவில்லை. மொழியை பாதுகாப்பதற்கு போராட வேண்டிய அவசியம் அப்போது இல்லை.

    ஆனால், தற்போது ஆட்சியில் இருக்கும் ஒன்றிய பாஜக அரசு ஜனநாயக விரோதமாக வலிந்து மும்மொழிக்கொள்கையை மாநிலங்கள் மீது திணிக்கின்றது.

    அதை ஏற்றுக்கொண்டால்தான் நிதி தருவோம் என ஆணவத்துடன் செயல்படுகிறது. தமிழர்களையும், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வசைபாடுகிறது.

    மொழிக்கொள்கையில் தமிழ்நாடு கொண்ட கொள்கையும், உறுதியான நிலைப்பாட்டையும் சரி என்று மற்ற மாநிலங்கள் உணர்ந்து வருகிறது. அதை உரக்க வெளிப்படுத்தும் நேரமாக இது அமைந்து வருகிறது. அது அவசியமாகிறது. அதை உணர்ந்துதான், நாளை தாக்கல் செய்யப்படவுள்ள தமிழ்நாடு பட்ஜெட்டில் '₹'-க்கு பதில் 'ரூ' என்று மாற்றி இலச்சினை வெளியிட்டு தனது உணர்வினை வெளிப்படுத்தியுள்ளது தமிழ்நாடு அரசு.

    தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு இது பிடிக்காது. தமிழர்கள் இவ்விஷயத்தில் பெருமை கொள்ள வேண்டுமே தவிர, இந்திய இறையாண்மைக்கே பிரச்சனை வந்தது போல பிதற்றக்கூடாது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கடந்த, 16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் ஆசிய சாம்பியன்ஷிப் ஆக்கி போட்டி நடக்கிறது.
    • குன்னூரில் இன்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    ஊட்டி,

    ஆக்கி இந்தியா அமைப்பு மற்றும் தமிழக அரசு விளையாட்டுதுறை சார்பில், சென்னையில் ஆசிய சாம்பியன் போட்டி, அடுத்த மாதம் 3-ந் தேதி தொடங்கி 12-ந் தேதி வரை நடக்க உள்ளது.

    இந்த போட்டியில் இந்தியா, ஜப்பான், சீனா, மலேசியா, தென்கொரியா உள்பட 6 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த நிலையில் ஆசிய கோப்பை ஆக்கி போட்டிக்கான லோகா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    அந்த லோகோவில் சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் வகையில் ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்ஆவண படத்தில் நடித்த முதுமலையை சேர்ந்த யானை மற்றும் பாகன் பொம்மன் பெயரை இடம் பெற செய்து கவுரப்படுத்தி உள்ளது ஆக்கி இந்தியா அமைப்பு.

    லோகோவில் யானை ஆக்கி ஸ்டிக் பிடித்து நிற்பது போலவும், பொம்மன் பெயர் தமிழில் எழுத்துக்களாலும் பொறிக்கப்பட்டு லோகா உருவாக்கப்பட்டுள்ளது.

    தற்போது ஆக்கி போட்டி கோப்பை மற்றும் லோகோ ஆகியவை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கு பயணப்பட்டு வருகிறது. செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

    அந்த வகையில், ஆக்கி போட்டிக்கான வெற்றி கோப்பை மற்றும் லோகோ ஆகியவை இன்று காலை நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு வந்தது. இதனை அமைச்சர் ராமச்சந்திரன், கலெக்டர் அம்ரித் ஆகியோர் வரவேற்று பொதுமக்கள் பார்வைக்கு வைத்தனர். மக்கள் திரண்டு வந்து கோப்பையையும், லோகோவையும் பார்வையிட்டு சென்றனர்.

    இதுகுறித்து ஆக்கி நீலகிரிஸ் அமைப்பு தலைவர் அனந்தகிருஷ்ணன் கூறியதாவது:-

    கடந்த, 16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் ஆசிய சாம்பியன்ஷிப் ஆக்கி போட்டி நடக்கிறது. இது மிகவும் பெருமை வாய்ந்தது. அத்துடன் இந்த வருடம் நடக்க உள்ள ஆக்கி கோப்பை போட்டியானது தமிழகத்திற்கு மட்டுமின்றி நீலகிரிக்கும், தமிழுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது வெகு சிறப்பானதாகும்.

    ஆக்கி போட்டிக்கான கோப்பை மற்றும் பொம்மன் பெயர், யானை அடங்கிய இலச்சினை உருவாக்கப்பட்டுள்ளதே காரணமாகும்.

    மேலும் ஆக்கி போட்டி கோப்பை, லோகோ உள்ளிட்டவை தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்கள் முழுவதும் சுற்றுப்பயணமாகி வருகிறது.

    இந்த கோப்பையானது இன்று நீலகிரிக்கு வருகிறது. இதற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இங்கிருந்து இந்த கோப்பை ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டிக்கு கொண்டு செல்லப்படுகிறது என்றார்.

    • மஸ்க், நிறுவனத்தின் வருவாயை அதிகரிக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்
    • எக்ஸ் நிறுவனம் முறையாக அனுமதி பெறவில்லை என நகர நிர்வாகம் கூறியது

    இணையதளத்தில் 2006-ல் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்ட பிரபலமான சமூகவலைதளம் டுவிட்டர்.

    டுவிட்டரில் பயனர்கள் தங்களை இணைத்து கொண்டு தங்களுக்குள் தகவல்களை, எழுத்து, புகைப்படம், ஒலி மற்றும் வீடியோ வடிவில் பரிமாறி கொள்ளலாம். இதற்கு உலகெங்கும் பல நாட்டு அதிபர்கள் உட்பட பல கோடிக்கணக்கான பயனர்கள் உள்ளனர்.

    கடந்த 2022 அக்டோபரில், உலகின் நம்பர் 1 கோடீசுவரரான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார். அதன் வருவாயை அதிகரிக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக டுவிட்டர் எனும் பெயரை எக்ஸ் என மாற்றினார்.

    இதனை விளம்பரபடுத்தும் விதமாக பிரகாசமாக ஒளிரும் வகையில் மிகப்பெரிய "X" லோகோ, சான் பிரான்ஸிஸ்கோவில் உள்ள அந்நிறுவன தலைமையக கட்டித்தின் மேல் நிறுவப்பட்டது.

    ஆனால் இதை நிறுவ முறையாக அனுமதி பெறப்படவில்லை என நகர நிர்வாகம் இந்நிறுவனத்திற்கு அறிக்கை அனுப்பியது.

    மேலும், அந்த கட்டிடத்தின் அருகில் வசிப்பவர்களில் பலர் அதன் அதிக ஒளியால் கண்கூசுதல் உட்பட பல தொந்தரவுகள் இருப்பதாக புகாரளித்தனர். மேலும் அதில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகவும், மேல் தளத்தில் அது சரியாக நிலைநிறுத்தவில்லை என்றும் எந்நேரமும் அது கீழே விழும் ஆபத்து இருப்பதாகவும் அவர்கள் புகாரளித்தனர்.

    இதுகுறித்த பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரிமாறி கொள்ளப்பட்டது.

    இதுகுறித்து சான் பிரான்ஸிஸ்கோவின் கட்டிட தர பரிசோதனை மற்றும் நகர திட்டமிடலுக்கான நிர்வாகத்திற்கு சுமார் 24 புகார்கள் வந்தது.

    இந்நிலையில் இப்பிரச்சனை பெரிதாவதற்குள் எக்ஸ் நிறுவன அதிகாரிகள் லோகோவை மேல்தளத்திலிருந்து தாங்களாகவே அப்புறப்படுத்தி விட்டனர்.

    • தடைகளைத் தாண்டி.. வளர்ச்சியை நோக்கி.. என்ற தலைப்பில் லோகோ.
    • நிதிநிலை அறிக்கையின் வெற்றியை கூறும் முத்துச்சின்னம்.

    தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் அதற்கான லோகோவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

    அதில், "தடைகளைத் தாண்டி.. வளர்ச்சியை நோக்கி.." என்ற தலைப்பில் லோகோ வெளியிடப்பட்டுள்ளது. 

    இது நிதிநிலை அறிக்கையின் வெற்றியை கூறும் முத்துச்சின்னம் எனவும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

    மேலும், யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே எனும் பழமொழிக்கு ஏற்ப முத்திரை சின்னம் தயார் செய்யப்பட்டுள்ளது.

    • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என்ற பெயரில் விளையாடி வந்த ஆர்சிபி அணி இந்த முறை அதனை மாற்றியுள்ளது.
    • ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் சென்னை பெங்களூரு அணிகள் மோதுகிறது.

    பெங்களூரு:

    ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் இன்னும் 2 நாட்களில் தொடங்க உள்ளது. இதன் முதலாவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.

    இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் 3 மாற்றங்களை கொண்டுள்ளது. கடந்த 16 சீசன்களாக 'ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்' என்ற பெயரில் விளையாடி வந்த ஆர்சிபி அணி இந்த முறை "ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு" என்ற பெயரில் விளையாடவுள்ளது.

    கடந்த 2014-ம் ஆண்டு கர்நாடகா மாநில தலைநகரான பெங்களூரின் பெயர் 'பெங்களூரு' என மாற்றப்பட்டது. அப்போதிருந்தே ஐ.பி.எல். அணியின் பெயரையும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என மாற்ற வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், அந்த அணி நிர்வாகம் பெயரை மாற்றி இருக்கிறது.

    இதனை தொடர்ந்து ஜெர்சியின் வண்ணத்தையும் மாற்றியுள்ளது. ரெட் மற்றும் கருப்பு கலரில் இருந்த ஜெர்சியை தற்போது நீலம் மற்றும் சிவப்பு கலரில் மாற்றியுள்ளது. கடைசியா ஆர்சிபி அணியின் லோகோவை மாற்றியுள்ளது. இது தொடர்பான வீடியோவை ஆரிசிபி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

    • டிடி நியூஸ் தொலைக்காட்சி தனது லோகோவை காவி நிறத்துக்கு மாற்றியுள்ளது.
    • அரசின் செய்தி சேனல் நிறம் மாற்றியதற்கு எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.

    புதுடெல்லி:

    மத்திய அரசின் ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது இந்தி செய்தி சேனலான தூர்தர்ஷன் நியூஸ் லோகோவை சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறுத்துக்கு மாற்றியுள்ளது.

    மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதற்கு ஏற்கனவே எதிர்க்கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

    தற்போது டிடி நியூஸ் சேனலின் லோகோவையும் காவி நிறத்துக்கு மாற்றியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள், ஊடக வல்லுநர்களிடையே கடும் அதிருப்தியும், கண்டனங்களும் எழுந்துள்ளன.

    இதுதொடர்பாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. கூறுகையில், மத்திய அரசு நிறுவனங்கள் முழுவதும் காவி மயமாக்கல் நடவடிக்கை நடக்கிறது. மக்களவை, மாநிலங்களவை ஊழியர்களில் பாதி பேர் இப்போது காவி நிற சீருடைகளை அணிந்துள்ளனர். ஜி 20 லோகோவிலும் காவி நிறம் காணப்பட்டது. இது ஒரு சர்வாதிகார ஆட்சியின் ஒரு பகுதியாகும் என தெரிவித்தார்.

    இந்த விவகாரம் குறித்து பிரசார் பாரதி தலைமை நிர்வாக அதிகாரி கூறுகையில், இது ஆரஞ்சு நிறம். ஜி20 மாநாட்டுக்கு முன் டிடி இந்தியா (ஆங்கில செய்தி சேனல்) லோகோவை அதே நிறத்தில் புதுப்பித்தோம். ஒரே குழுவிலிருந்து வரும் இரு செய்தி சேனல்கள் தற்போது ஒரே தோற்றத்தை பின்பற்றுகின்றன என கூறினார்.

    • டிடி நியூஸ் சேனலின் லோகோவையும் காவி நிறத்துக்கு மாற்றியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது
    • பிரசார் பாரதி இப்போது 'பிரசார' பாரதியாக மாற்றப்பட்டுள்ளது - ஜவகர் சிர்கார்

    மத்திய அரசின் ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது இந்தி செய்தி சேனலான தூர்தர்ஷன் நியூஸ் லோகோவை சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறுத்துக்கு மாற்றியுள்ளது.

    மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதற்கு ஏற்கனவே எதிர்க்கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

    தற்போது டிடி நியூஸ் சேனலின் லோகோவையும் காவி நிறத்துக்கு மாற்றியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள், ஊடக வல்லுநர்களிடையே கடும் அதிருப்தியும், கண்டனங்களும் எழுந்துள்ளன.

    இந்த விவகாரம் குறித்து பிரசார் பாரதி தலைமை நிர்வாக அதிகாரி கூறுகையில், இது ஆரஞ்சு நிறம். ஜி20 மாநாட்டுக்கு முன் டிடி இந்தியா (ஆங்கில செய்தி சேனல்) லோகோவை அதே நிறத்தில் புதுப்பித்தோம். ஒரே குழுவிலிருந்து வரும் இரு செய்தி சேனல்கள் தற்போது ஒரே தோற்றத்தை பின்பற்றுகின்றன என கூறினார்.

    இந்நிலையில், இது தொடர்பாக திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.யும், பிரசார் பாரதி முன்னாள் தலைவருமான ஜவகர் சிர்கார் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

    பிரசார் பாரதியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி என்ற முறையில் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தூர்தர்ஷனின் லோகோவை காவி நிறத்திற்கு மாற்றியதை பார்க்கும்போது எனக்கு வேதனையாக இருக்கிறது.

    ஒரு பாரபட்சமான ஒருபக்க சார்புடைய அரசு, ஒரு 'நடுநிலையான' பொதுத்துறை செய்தி சேனலின் நிறத்தை ஒரு மதத்தின் நிறமாகவும், சங் பரிவார் நிறமாகவும் மாற்றுவது இந்திய வாக்காளர்களை பாதிக்கும்

    பிரசார் பாரதி இப்போது 'பிரசார' பாரதியாக மாற்றப்பட்டுள்ளது. லோகோ மட்டுமல்ல தூர்தர்ஷன் முழுவதுமாகவே காவிமயமாகியுள்ளது. பாஜகவின் செய்திகள் மட்டுமே தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகின்றன" என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

    ×