என் மலர்tooltip icon

    சென்னை

    • ஆய்வின்போது சுகாதார நெறிமுறைகள் கடைபிடிக்காதது தெரியவந்தால் சான்றிதழை ரத்து செய்ய வாய்ப்பு உள்ளது.
    • நேரடியாக ஆவணங்கள் மற்றும் நகல்களை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை.

    சென்னை:

    பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொது மக்கள் அதிகம் கூடும் கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், முதியோர் மற்றும் குழந்தைகள் காப்பகம், பெண்கள் விடுதிகள், தொழிற்சாலைகள் மற்றும் பிற வணிக கட்டிடங்களில் சுகாதாரச் சான்றிதழ் பெறுவது அவசியம். சுகாதார சீர்கேடுகளை தவிர்க்கவும், வளாகங்களில் தூய்மை மற்றும் சுகாதார தரத்தை உறுதிபடுத்தவும் சுகாதாரச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் சுகாதாரச் சான்றிதழை பெற்றுக்கொள்ள வேண்டும். நேரடியாக விண்ணப்பிக்கும் முறை மூலம் சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது.

    இதில் சில சிக்கல் எழுந்தது. இதையடுத்து, சுகாதாரச் சான்றிதழ் வழங்கும் நடைமுறையை எளிமைப்படுத்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை திட்டமிட்டது. அதன்படி, எளிமை ஆளுமை திட்டத்தின் வாயிலாக இ-சேவை தளம் மூலம் சுகாதாரச் சான்றிதழ் வழங்கும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    https://tnesevai.tn.gov.in என்ற தமிழ்நாடு இ-சேவை தளத்தின் மூலம் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம். சுகாதார சான்றிதழுக்கான ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சுய உறுதிமொழி சான்றிதழை பதிவேற்றம் செய்தவுடன், சுகாதாரச் சான்றிதழ் தானாக அதற்குரிய தளத்தில் உருவாக்கம் செய்யப்படுகிறது.

    சுகாதாரச் சான்றிதழ் பெற விரும்பும் அனைத்து விண்ணப்பதாரர்களும் https://tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் இ-சேவை தளத்தை அணுக வேண்டும். பின்னர், விண்ணப்பதாரர்களின் விவரங்களை உள்ளீடு செய்து தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். சுகாதார ஆவணங்கள் வெற்றிகரமாக பதிவேற்றம் செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட நபரால் சுய உறுதிமொழி பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டவுடன், சுகாதார சான்றிதழ் ஒரு வருடம் செல்லுபடியாகும் வகையில் தானாகவே உருவாக்கப்பட்டு பதிவிறக்கம் செய்ய இயலும். அவ்வாறு பெறப்படும் சான்றிதழை வளாகத்தில் காட்சிப்படுத்த வேண்டும்.

    மேலும், சுகாதாரச் சான்றிதழ்களில் வெளியிடப்பட்டு உள்ள நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். எந்த நேரத்திலும் அதிகாரிகள் கள ஆய்வு செய்வார்கள். ஆய்வின்போது சுகாதார நெறிமுறைகள் கடைபிடிக்காதது தெரியவந்தால் சான்றிதழை ரத்து செய்ய வாய்ப்பு உள்ளது.

    எனவே, இனிவரும் காலங்களில் நேரிடையாக சுகாதாரச் சான்றிதழ் வழங்கும் நடைமுறை நிறுத்தப்பட்டு தமிழ்நாடு அரசின் இ-சேவை தளத்தின் வாயிலாக மட்டுமே பெற இயலும். நேரடியாக ஆவணங்கள் மற்றும் நகல்களை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் நடிகர் ரஜினிகாந்த் 2020-ம் ஆண்டு கட்சி தொடங்க இருந்தார்.
    • வரும் நவம்பர் மாதம் ஆட்டோ சின்னம் கேட்டு தேர்தல் கமிஷனில் விஜய் விண்ணப்பிக்க இருக்கிறார்.

    சென்னை:

    நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் 2026-ம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. த.வெ.க. சந்திக்கும் முதல் தேர்தல். இதற்காக வார்டு வாரியாக நிர்வாகிகளை நியமித்து முடித்துள்ளார், விஜய். கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தி வருகிறார்.

    அடுத்தக்கட்டமாக, தேர்தல் சின்னத்தை தேர்வு செய்யும் பணியில் விஜய் ஈடுபட்டு வருகிறார். தேர்தல் கமிஷனால் வழங்கப்பட்டுள்ள சின்னங்களில் த.வெ.க.வுக்கு பொருத்தமான சின்னம் எது? எந்த சின்னம் மக்களை எளிதாக கவரும் என்ற வகையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    சின்னம் தேர்வு செய்யும் பணி கடந்த சில மாதங்களாகவே நடந்து வந்தது. தற்போது த.வெ.க. நிர்வாகிகளின் ஒட்டுமொத்த விருப்பமாக, ஆட்டோ சின்னம் தேர்வாகியுள்ளது. வரும் சட்டசபை தேர்தலில் ஆட்டோ சின்னத்திலேயே, தேர்தலை சந்திக்கலாம் என்று விஜய் முடிவு எடுத்துள்ளார். வரும் நவம்பர் மாதம் ஆட்டோ சின்னம் கேட்டு தேர்தல் கமிஷனில் விஜய் விண்ணப்பிக்க இருக்கிறார்.

    தேர்தல் கமிஷனில் சின்னம் கேட்டு பதிவு செய்யும்போது 3 சின்னங்களை தேர்வு செய்து கொடுக்க வேண்டும். அதில் விருப்ப சின்னத்தையும் குறிப்பிட வேண்டும். அந்தவகையில் ஆட்டோ, நட்சத்திரம், அகல் விளக்கு ஆகிய 3 சின்னங்களை தேர்வு செய்து, விருப்ப சின்னமாக ஆட்டோவை ஒதுக்க த.வெ.க. கோர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் நடிகர் ரஜினிகாந்த் 2020-ம் ஆண்டு கட்சி தொடங்க இருந்தார். ரஜினி மன்ற நிர்வாகி பெயரில் தேர்தல் கமிஷனால் பதிவு செய்யப்பட்ட அந்த கட்சிக்கு 'ஆட்டோ' சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. கால சூழல், ரஜினிகாந்த் கட்சி தொடங்காமலேயே அறிவிப்புடன் முடிந்து போனது.

    இந்த சூழலில்தான், ஆட்டோ சின்னத்தை விரும்பி த.வெ.க. பெற முயற்சி மேற்கொண்டு வருவது முக்கியத்துவம் பெற்றுள்ளது. நடிகர் விஜய் வேட்டைக்காரன் படத்தில் ஆட்டோ ஓட்டி வருவார். எனவே இந்த ஆட்டோவை கட்சிக்கு சின்னமாக பெறுவது பொருத்தமாக இருக்கும் என்று விஜய் தரப்பு கருதுகிறது.

    கட்சி தொடங்குவதற்கு முன்பு, 2022-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் பல இடங்களில் ஆட்டோ சின்னத்தை விருப்பமாக கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • காதலித்த பெண்ணின் வீட்டு மாடியிலேயே அவர் தூக்கிட்டிருப்பது மிகுந்த சந்தேகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
    • பாதிக்கப்பட்ட அந்த இளைஞரின் குடும்பத்தின் பக்கம் பாஜக உறுதியாக நிற்கும்.

    தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் மாற்று மதப்பெண்ணை காதலித்து திருமணம் செய்யவிருந்த இந்து பட்டியல் சமூக இளைஞரான தனுஷ் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதுவும் அவர் காதலித்த பெண்ணின் வீட்டு மாடியிலேயே அவர் தூக்கிட்டிருப்பது மிகுந்த சந்தேகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    மேலும், அந்தப் பெண்ணின் நெருங்கிய உறவினர்கள் திமுகவில் உள்ளதாக தகவல்கள் வந்துள்ள நிலையில், இந்த வழக்கு முறையாக விசாரிக்கப்படுமா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது.

    நல்லமுறையில் கல்வி கற்று, கோவையில் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞரான தனுஷ் தான் காதலிக்கும் பெண்ணின் வீட்டிலேயே தூக்கிட்டுக் கொண்டார் என்பது நம்பும்படியான செய்தியாக இல்லை.

    கடந்த நான்காண்டுகளில் தமிழகத்தில் சீர்குலைந்து போயுள்ள சட்டம் ஒழுங்கு அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டது. குறிப்பாக, பட்டியலின மக்கள் மீதான வன்முறைகள் இந்த ஆட்சியில் தான் கொடூர உச்சங்களைத் தொட்டிருக்கிறது.

    ஆக, இவ்வழக்கில் எவ்வித அரசியல் தலையீடும் இல்லாமல் முறையான பிரேத பரிசோதனை செய்து உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டியது காவல்துறையினரின் பொறுப்பு. அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கும் திமுக-விற்கும் நெருங்கிய தொடர்புகள் இருப்பதால் திமுகவின் வழக்கமான அராஜகப் போக்கிற்கு தமிழகக் காவல்துறை இணங்கக் கூடாது. ஆளுங்கட்சியின் வாக்கரசியலுக்கு துணை போகும் நோக்கத்தோடு ஒருதலை பட்சமாக காவல்துறை செயல்படக்கூடாது.

    ஆட்சி மாற்றத்திற்கு இன்னும் ஒரு சில மாதங்கள் தான் உள்ள நிலையில், ஆளும் திமுக-வின் அரசியல் அழுத்தத்திற்கு ஆட்படாமல், இவ்வழக்கின் உண்மைத் தன்மையை விரைவாக வெளிக்கொணர வேண்டுமென தமிழக காவல் துறையினரை வலியுறுத்துகிறேன்.

    மேலும், பாதிக்கப்பட்ட அந்த இளைஞரின் குடும்பத்தின் பக்கம் பாஜக உறுதியாக நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் இன்று BP எகிறி கதறிக் கொண்டிருக்கிறார்.
    • என் மீது அவர் காட்டும் கோபம் ஏன் தமிழர் பெருமையை சிதைப்பவர்கள் மீது வரவில்லை?

    தமிழக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழர் நாகரீகம் உலகின் மூத்த நாகரீகம் என நிறுவும் கீழடி சான்றுகளை அவமதிக்கும் ஒன்றிய அரசின் அலட்சியத்தையும், மாற்றாந்தாய் மனப்பான்மையையும் எதிர்க்கட்சியான அதிமுக இப்போது வரை கண்டிக்காதது ஏன்?

    கீழடிக்காக அதிமுக குரல் கொடுக்காதது ஏன்?

    பாஜகவிடம் கூட்டணியில் இருப்பதன் ஒரே காரணத்திற்காக தமிழரின் தொன்மையான நாகரிகத்தைக் காக்க குரல் கொடுக்காமல் 'உறங்குவது ஏன்' என்ற நியாயமான கேள்வியை எழுப்பிய திமுக பதிவிற்கு, தகாத அர்த்தங்களைக் கற்பித்து நமது எதிர்கட்சியினர் தங்களைத் தாங்களே ஏன் தாழ்த்திக்கொள்கிறார்கள்?

    நியாயமாக வந்திருக்க வேண்டிய கோபம் என்ன?

    தொன்மை தமிழர் நாகரீகத்தின் ஆதாரமான கீழடியை புறங்கையில் தள்ளும் ஒன்றிய மைனாரிட்டி பாஜக அரசின் நடவடிக்கைகளுக்கு அல்லவா கோபம் வந்திருக்க வேண்டும்?

    இப்போது வரை அப்படியொரு கோபம் ஒன்றிய அரசின் மீதும், பாஜக மீதும் அதிமுகவிற்கு வரவேயில்லையே ஏன்?

    ஒன்றிய அரசின் வஞ்சகத்தை ஒருசேர எதிர்த்து நிற்க வேண்டிய நேரத்தில் இப்படி திசை திருப்பும் வேளைகளில் அற்பமாக இறங்குவது தமிழர் விரோத செயல் இல்லையா?

    எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் இன்று BP எகிறி கதறிக் கொண்டிருக்கிறார் என்று உடன்பிறப்புகள் தெரிவித்தனர்.

    ஆனால் தமிழ் வளர்த்த மதுரையைச் சேர்ந்த அண்ணன் அவர்கள்கூட இதுவரை கீழடிக்காக குரல் கொடுக்கவில்லையே? எது தடுக்கிறது?

    என் மீது அவர் காட்டும் கோபம் ஏன் தமிழர் பெருமையை சிதைப்பவர்கள் மீது வரவில்லை?

    இன்றுகூட மதுரையின் பெருமைக்காக அவர் பாய்ந்து எழாமல் "கீழடியை வைத்து நமது தொன்மையை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை" என்று சொன்னவர் பேட்டி அளித்தது ஏன் !

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று 100.5 டிகிரி ஃபாரண்ஹீட் வெப்பம் பதிவானது.
    • சென்னையில் பல்வேறு இடங்களில் கருமேகம் சூழ்ந்து திடீரென மழை பெய்தது.

    தமிழகத்தில் இன்று 13 இடங்களில் வெயில் சதம் அடித்தது. இதேபோல், சென்னை ராயபுரம். வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி, மாதவரம், திருவொற்றியூர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் காலையிலிருந்து வெயில் வாட்டி வதைத்தது.

    சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று 100.5 டிகிரி ஃபாரண்ஹீட் வெப்பம் பதிவானது.

    இந்நிலையில் இன்று மாலை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கருமேகம் சூழ்ந்து திடீரென மழை பெய்தது.

    அரும்பாக்கம், சூளைமேடு, வடபழனி, அமைந்தகரை, அண்ணா நகர், கோயம்பேடு உள்ளிட்ட இடங்கள் மிதமான மழை பெய்து வருகிறது.

    சென்னை புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, நசரத்பேட்டை, செம்பரம்பாக்கம், மாங்காடு ஆகிய இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இதனால், வெப்பம் சற்று தணிந்து குளிர்ந்த காற்று வீசி வருகிறது. இதனால் சென்னை வாசிகள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர்.

    • அமித்ஷாவின் வருகையால் தமிழக பா.ஜ.க.வில் அடுத்தடுத்து புத்துணர்ச்சி ஏற்படுவதாக தமிழக பா.ஜ.க. தலைவர்கள் தெரிவித்தனர்.
    • பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக வாங்கிய வாக்குகள் எண்ணிக்கை மற்ற கட்சிகளை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்து இருந்தது.

    சென்னை:

    தமிழகத்தில் பாஜக கடந்த சில ஆண்டுகளாக வளர்ச்சியை பெற்று வருகிறது. குறிப்பாக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை ஏற்று பணியாற்றிய போது தமிழக பா.ஜ.க.வுக்கு மக்கள் மத்தியில் தனி அந்தஸ்து கிடைத்தது.

    அண்ணாமலை பொறுப்பு ஏற்றபோது அதன் வளர்ச்சி இரட்டிப்பாக மாறியது. குறிப்பாக கடந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக வாங்கிய வாக்குகள் எண்ணிக்கை மற்ற கட்சிகளை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்து இருந்தது.

    இந்த நிலையில் 2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க.வை தோற்கடித்து கணிசமான வெற்றியை அறுவடை செய்ய வேண்டும் என்பதில் பா.ஜ.க. மேலிட தலைவர்கள் தீவிரமாக உள்ளனர். இதற்காக தமிழக பா.ஜ.க.வை வலுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக கிராம அளவில் கிளை அமைப்புகளை உருவாக்க பா.ஜ.க. தலைவர்கள் தீவிரம் காட்டுகின்றனர். மேலும் பூத் கமிட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தும் வகையில் பா.ஜ.க. அமைப்புகள் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன.

    இது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித்ஷா தனது நேரடியாக கண்காணிப்பில் தமிழக பா.ஜ.க. விவகாரங்களை கவனிக்க தொடங்கி உள்ளார்.

    2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வை தமிழகத்தின் 3-வது பெரிய கட்சியாக மாற்ற வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதை கருத்தில் கொண்டு சமீபத்தில் அமித்ஷா சென்னை வந்து அ.தி.மு.க.வுடன் கூட்டணியை உறுதி செய்தார்.

    இதைத் தொடர்ந்து கடந்த 7 மற்றும் 8-ந்தேதிகளில் மதுரையில் முகாமிட்டு தமிழக பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். தமிழக பா.ஜ.க. உயர்மட்ட உறுப்பினர்களுடன் அவர் பேசும்போது, "தமிழகத்தில் பா.ஜ.க.வை மிக பிரமாண்டமாக வளர்க்க வேண்டும். கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இதை ஆய்வு செய்வதற்காக ஒவ்வொரு மாதமும் நான் தமிழகம் வருவேன்" என்று கூறியிருந்தார்.

    அதன்படி மத்திய மந்திரி அமித்ஷா அடுத்த மாதம் (ஜூலை) 8-ந்தேதி தமிழகம் வருவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அப்போது பாஜகவை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வலுப்படுத்துவதற்கான ஆய்வுகளை அவர் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக கிராமப் பகுதிகளில் பா.ஜ.க.வை வலுப்படுத்த செய்துள்ள பணிகளை அமித்ஷா ஆவணங்கள் அடிப்படையில் பார்வையிட்டு ஆய்வு செய்வார் என்றும் கூறப்படுகிறது.

    மேலும் தொகுதி வாரியான ஆய்வு பணிகளையும் அமித்ஷா மேற்கொள்ள இருப்பதாக தமிழக பா.ஜ.க. தலைவர்கள் தெரிவித்தனர். ஜூலை 8-ந்தேதி தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர்கள் மற்றும் உயர்மட்ட குழு உறுப்பினர்களையும் அமித்ஷா சந்தித்து பேச இருப்பதாக தெரியவந்துள்ளது.

    மதுரையில் நடத்தப்பட்டது போல சென்னையிலும் சில தலைவர்களுடன் அமித்ஷா தனி அறையில் சந்தித்து கருத்துக்களை கேட்டறிவார் என்று கூறப்படுகிறது.

    தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடித்த பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் அமித்ஷா சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது. அதுபோல பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசையும் சந்தித்து அவர் பேசுவார் என்று தெரிய வந்துள்ளது.

    எடப்பாடி பழனிசாமி மற்றும் டாக்டர் ராமதாசுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை அமித்ஷா மேற்கொள்வார் என்று தெரிகிறது. குறிப்பாக 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் தேர்தல் பணிகளை கூட்டணி கட்சிகள் எப்படி எடுத்து செல்ல வேண்டும் என்று அவர்கள் ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாக தமிழக பா.ஜ.க. தலைவர்கள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே அடுத்த மாதம் சென்னை வரும் அமித்ஷாவை சந்திக்க அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோர் அனுமதி கேட்டுள்ளனர். இது தொடர்பாக இன்னும் எந்த முடிவும் எடுக்கப்பட வில்லை.

    அமித்ஷாவின் சென்னை பயண நிகழ்ச்சிகளை பொறுத்து அவர்கள் இருவரையும் அவர் சந்திப்பாரா? என்பது தெரிய வரும். அமித்ஷாவின் வருகையால் தமிழக பா.ஜ.க.வில் அடுத்தடுத்து புத்துணர்ச்சி ஏற்படுவதாக தமிழக பா.ஜ.க. தலைவர்கள் தெரிவித்தனர்.

    அடுத்த மாதம் அமித்ஷா வரும்போது சில முக்கிய வியூகங்களை எடப்பாடி பழனிசாமி, டாக்டர் ராமதாஸ் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகளுடன் பகிர்ந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது. இதனால் மத்திய மந்திரி அமித்ஷாவின் ஜூலை மாத தமிழகம் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    • விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள போது கணவரிடம் கையெழுத்து பெற்று வருமாறு வலியுறுத்தல்.
    • கணவரின் கையெழுத்தை வற்புறுத்தாமல் பாஸ்போர்ட் வழங்க உத்தரவிடக் கோரினார்.

    பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் மனைவி, கணவரின் கையெழுத்தைப் பெறுவது அவசியம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள போது கணவரிடம் கையெழுத்து பெற்று வருமாறு பாஸ்போர்ட் அதிகாரி கூறியதாக உயர் நீதிமன்றத்தில் பெண் வழக்கு தொடர்ந்தார்.

    அதில், கணவரின் கையெழுத்தை வற்புறுத்தாமல் பாஸ்போர்ட் வழங்க உத்தரவிடக் கோரினார்.

    இந்த மனு மீதான இன்றைய விசாரணையில், "பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் மனைவி, கணவரின் கையெழுத்தைப் பெறுவது அவசியம் இல்லை.

    திருமணமாகிவிட்டால் ஒரு பெண் தனது அடையாளத்தை இழந்து விடுவதில்லை

    கணவனின் கையெழுத்து பெற வேண்டும் என்ற நடைமுறை ஆணாதிக்கத்தை காட்டுகிறது" என தெரிவிக்கப்பட்டது.

    மேலும், மனுதாரரின் விண்ணப்பத்தை 4 வாரங்களில் பரிசீலித்து பாஸ்போர்ட் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, 80 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.
    • 1,330 திருக்குறள்களும் பளிங்கு கற்களில் செதுக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளன.

    சென்னை நுங்கம்பாக்கத்தில் திருவள்ளுவரின் நினைவாக 1974-1976 ஆம் ஆண்டுகளில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் வள்ளுவர் கோட்டம் கட்டப்பட்டது.

    இது திராவிட மற்றும் பல்லவர் கட்டிடக்கலை பாணியில், 5 ஏக்கர் பரப்பளவில் ஒரு முக்கிய நினைவுச்சின்னமாக அமைந்துள்ளது.

    10 ஆண்டுகளாக பராமரிப்பின்றி பாழடைந்திருந்த வள்ளுவர் கோட்டம், திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, 80 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.

    பணிகள் நிறைடைந்த நிலையில், வள்ளுவர் கோட்டம் புதிய பொலிவுடன் நாளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    வள்ளுவர் கோட்டத்தில், அய்யன் வள்ளுவர் கலையரங்கம்: 1,548 இருக்கைகளுடன் அதிநவீன ஏர் கண்டிஷனர் வசதி, குறள் மணிமாடம்: 1,330 திருக்குறள்களும் பளிங்கு கற்களில் செதுக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளன.

    மேலும், திருக்குறள் ஆய்வரங்கம் மற்றும் நூலகம்: 100 பேர் அமரக்கூடிய ஆராய்ச்சி மையம், மல்டி-லெவல் பார்க்கிங்: 164 வாகனங்கள் நிறுத்த வசதி, உணவகம் (கஃபெடேரியா) மற்றும் ஒலி-ஒளி காட்சிக்கூடம் உள்ளிட்ட புதிய வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    • ஜனாதிபதி இன்று அவரது 67-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
    • எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து வெளியிட்டுள்ளார்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று தனது 67-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.

    நமது நாட்டில் பெண்கள் அதிகாரமளிப்பின் ஒளிரும் சின்னமாக நீங்கள் திகழ்கிறீர்கள்.

    நீங்கள் நாட்டை கருணை, கண்ணியம் மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் வழிநடத்திச் செல்லும்நிலையில், உங்களுக்கு நல்ல ஆரோக்கியமும் வலிமையும் தொடர்ந்து கிடைக்க வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அரசாணை பெறப்பட்டவை எத்தனை? செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் எவ்வளவு? என்பது போன்ற விவரங்களை ஆய்வு செய்தார்.
    • பரந்தூர் விமான நிலையத்தின் வருங்கால செயல்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்தும் விரிவாக ஆய்வுகள் நடத்தினார்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களாக துறை வாரியாக ஆய்வுக் கூட்டம் நடத்தி வருகிறார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துறை வாரியான அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் பங்கேற்று வருகின்றனர்.

    அந்த வகையில் இன்று வருவாய் பேரிடர் மேலாண்மை துறை, குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை, தொழில் முதலீடுக்கு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை ஆகிய 4 துறைகளின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

    சட்டசபையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடு எந்த அளவுக்கு உள்ளது? முடிவுற்ற பணிகள் எத்தனை? அரசாணை பெறப்பட்டவை எத்தனை? செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் எவ்வளவு? என்பது போன்ற விவரங்களை ஆய்வு செய்தார்.

    இத்துடன் பரந்தூர் விமான நிலையத்தின் வருங்கால செயல்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்தும் விரிவாக ஆய்வுகள் நடத்தினார்.

    இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்தி ரன், அனிதா ராதாகிருஷ் ணன், டி.ஆர்.பி.ராஜா மற்றும் துறை வாரியான அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    • ஜி.கே.மணி திடீர் உடல் நலக்குறைவால் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • ஜி.கே.மணியை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த செல்வப்பெருந்தகை அவருக்கு ஆறுதல் கூறினார்.

    பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கும், கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. இந்த சூழலில், அன்புமணி ராமதாஸ் மாவட்டந்தோறும் நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று கட்சி பணிகளை தீவிரப்படுத்த நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார்.

    பா.ம.க. கவுரவ தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜி.கே.மணி திடீர் உடல் நலக்குறைவால் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதேபோல, சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ அருள், உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணியை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அவருக்கு ஆறுதல் கூறினார்.

    • தமிழ்நாட்டில் தற்போது செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது.
    • மொத்தம் 36 கோடியே 17 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவிலான கட்டிடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    சென்னை:

    ஏழை எளிய கிராமப்புற மாணவ, மாணவியரின் உயர்கல்வித் தேவையை நிறைவுசெய்யும் பொருட்டு, 2025-26-ம் ஆண்டிற்கான உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கையில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பின்படி, 2025-26-ம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 26.5.2025 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.

    அதன் தொடர்ச்சியாக, வரப்பெற்ற கோரிக்கைகளின் அடிப்படையிலும், கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையிலும், இக்கல்வியாண்டில் (2025-2026), உயர் கல்வித் துறையின் சார்பில் வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஆகிய நான்கு இடங்களில் கூடுதலாக 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 30.5.2025 அன்று அறி க்கப்பட்டது.

    அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் இன்றைய தினம் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த 4 கல்லூரிகளும், தலா 5 பாடப்பிரிவுகளுடன் தொடங்கப்படும். மேலும், ஒவ்வொரு கல்லூரிக்கும் 12 ஆசிரியர்கள் (உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்கள் முதலாமாண்டிற்கு மட்டும்) மற்றும் 14 ஆசிரியரல்லாப் பணியிடங்கள் வீதம் 4 கல்லூரிகளுக்கு மொத்தம் 48 ஆசிரியர்கள் மற்றும் 56 ஆசிரியரல்லாப் பணியிடங்களைத் தோற்றுவிக்கப்பட்டு, 4 கல்லூரிகளுக்கு ஓராண்டுக்கான தொடர் மற்றும் தொடராச் செலவினத்திற்காக மொத்தம் 8 கோடியே 67 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம், இப்பகுதிகளிலுள்ள சுமார் 1,120 மாணவர்கள் உயர்கல்வி பயிலும் வாய்ப்பைப் பெறுவார்கள்

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்ட இப்புதிய 4 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைச் சேர்த்து தமிழ்நாட்டில் தற்போது செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும், வேலூர் மாவட்டம், சேர்க்காடு, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 18 கோடியே 74 இலட்சம் ரூபாய் செலவில் ஐந்து தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடம், 2 கோடியே 38 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள துணைவேந்தர் குடியிருப்பு, 8 கோடியே 49 லட்சம் ரூபாய் செலவில் உதவி பேராசிரியர்கள் குடியிருப்புகள் மற்றும் 6 கோடியே 56 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆசிரியரல்லா பணியாளர்களுக்கான குடியிருப்புகள், என மொத்தம் 36 கோடியே 17 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவிலான கட்டிடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ. வேலு, கோவி. செழியன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், உயர் கல்வித்துறை செயலாளர் சமயமூர்த்தி கல்லூரி கல்வி ஆணையர் சுந்தரவல்லி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×