என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழகம் வருகை"

    • இயற்கை விவசாயம் குறித்த மாநாடு 19-ந் தேதி தொடங்கி 21-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
    • மாநாடு முடிந்து தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை மோடி சந்தித்து பேச வாய்ப்பு.

    பிரதமர் மோடி கடைசியாக கடந்த ஜூலை மாதம் தூத்துக்குடி மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கு வருகை தந்தார்.

    3 மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் மோடி வருகிற 19-ந் தேதி தமிழகம் வருகை தர உள்ளார். கோவையில் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் இயற்கை விவசாயம் குறித்த மாநாடு 19-ந் தேதி தொடங்கி 21-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

    இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இந்த தகவலை தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்தார்.

    மாநாட்டை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி 19-ந் தேதி கர்நாடக மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வருகிறார். அன்று மதியம் கொடிசியாவில் நடைபெறும் விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

    மாநாட்டில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொள்கிறார்கள். 50 இயற்கை வேளாண் விஞ்ஞானிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார்.

    சுமார் ஒரு மணி நேரம் இந்த மாநாட்டு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார். இந்த ஒரு நிகழ்ச்சியில் மட்டுமே மோடி பங்கேற்க உள்ளதாகவும், அதன்பிறகு கோவையில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    மாநாடு முடிந்து தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை மோடி சந்தித்து பேச வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

    பிரதமர் மோடியின் தற்போதைய தமிழக பயணம் பா.ஜ.க.வினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் இரு கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன.

    இதனால் பா.ஜ.க.வினர் உற்சாகத்தில் உள்ளனர். மீண்டும் பீகாரில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமையும் பட்சத்தில், அது அடுத்தடுத்த தேர்தல்களில் எதிரொலிக்கும் என்று அக்கட்சியினர் நம்புகின்றனர்.

    பீகார் தேர்தல் முடிவடைந்த சூழலில், பா.ஜ.க.வின் பார்வை அடுத்து தேர்தல் நடைபெற உள்ள தமிழகம் பக்கம் திரும்பி இருக்கிறது. இந்தநிலையில் மோடி வருகை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இனி வரும் காலங்களில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பயணம் தமிழகத்தில் தொடரும் என பா.ஜ.க.வினர் தெரிவித்துள்ளனர்.

    பிரதமர் மோடி வருகை தொடர்பாக போலீசாரிடம் கேட்டபோது இதுவரை தங்களுக்கு முறையான அறிவிப்பு எதுவும் வரவில்லை எனவும், அறிவிப்பு வந்தால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் எனவும் கூறினர்.

    • வரும் 26-ம் தேதி பிரதமர் மோடி தமிழகத்திற்கு வர உள்ளார் என கூறப்பட்டது.
    • பிரதமர் மோடியின் தமிழக வருகை திடீரென ரத்து செய்யப்பட்டது.

    புதுடெல்லி:

    தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தி.மு.க., அ.தி.மு.க, பா.ஜ.க., நாம் தமிழர் மற்றும் த.வெ.க. உள்ளிட்ட கட்சிகள் அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன.

    இதற்கிடையே, பிரதமர் மோடி கடந்த மாதம் 26-ம் தேதி 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் நடந்த விழாவில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின் அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற ஆடி திருவாதிரை, முப்பெரும் விழாவில் பங்கேற்று ரூ.1,000 மதிப்பிலான, பேரரசர் ராஜேந்திர சோழன் நினைவு நாணயம் ஒன்றையும் வெளியிட்டார்.

    இதையடுத்து, வரும் 26-ம் தேதி பிரதமர் மோடி மீண்டும் தமிழகத்திற்கு வர உள்ளார் என்று கூறப்பட்டது. சிதம்பரம் மற்றும் திருவண்ணாமலை பகுதிகளுக்கு செல்லும் பிரதமர் அங்கு சாமி தரிசனம் செய்வார் என்று தகவல் வெளியானது.

    இந்நிலையில், பிரதமர் மோடியின் தமிழக சுற்றுப்பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. 26-ந்தேதி பிரதமர் தமிழகம் வரவிருந்த நிலையில் அவரது சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டது.

    மாற்றுப் பணி மற்றும் முக்கிய அலுவல்கள் காரணமாக இந்தப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    • கங்கை கொண் சோழபுரம் அருகே குருவாலப்பர் கோவிலில் அமைக்கப்பட்ட ஹெலிபேட் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • பொன்னேரியில் பிரதமரின் ஹெலிகாப்டர் தரை இறங்குவதாக தகவல்.

    தூத்துக்குடியில் சர்வதேச தரத்தில் ரூ. 381 கோடியில் நவீன முறையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள விமான நிலையத்தை நாளை (சனிக்கிழமை) இரவு பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

    இதேபோல் தூத்துக்குடி துறைமுகம் முதல் ரூ.200 கோடியில் அமைக்கப்பட்டு முடிவுற்ற 6 வழிச்சாலை திட்டப் பணி என மொத்தம் ரூ. 4,500 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளையும் தொடங்கி வைக்கிறார்.

    இதற்காக நாளை இரவு 8 மணியளவில் மாலத்தீவில் இருந்து பிரதமர் மோடி தனி விமானத்தில் தூத்துக்குடி விமான நிலையம் வருகிறார்.

    தூத்துக்குடிக்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சித்ராங்கதன் ஏற்பாட்டில் பா.ஜ.க. சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    பிரதமர் மோடி வருகையையொட்டி கங்கை கொண்ட சோழபுரம் அருகே குருவாலப்பர் கோவிலில் அமைக்கப்பட்ட ஹெலிபேட் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    குருவாலப்பர் கோவில் இடத்திற்கு பதிலாக பொன்னேரியில் பிரதமரின் ஹெலிகாப்டர் தரை இறங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஏற்கனவே அமைக்கப்பட்ட ஹெலிபேட் அருகே உயர் மின்னழுத்த கோபுரங்கள் உள்ளதால் விமானியின் அறிவுரையின்படி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    • அமித்ஷாவின் வருகையால் தமிழக பா.ஜ.க.வில் அடுத்தடுத்து புத்துணர்ச்சி ஏற்படுவதாக தமிழக பா.ஜ.க. தலைவர்கள் தெரிவித்தனர்.
    • பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக வாங்கிய வாக்குகள் எண்ணிக்கை மற்ற கட்சிகளை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்து இருந்தது.

    சென்னை:

    தமிழகத்தில் பாஜக கடந்த சில ஆண்டுகளாக வளர்ச்சியை பெற்று வருகிறது. குறிப்பாக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை ஏற்று பணியாற்றிய போது தமிழக பா.ஜ.க.வுக்கு மக்கள் மத்தியில் தனி அந்தஸ்து கிடைத்தது.

    அண்ணாமலை பொறுப்பு ஏற்றபோது அதன் வளர்ச்சி இரட்டிப்பாக மாறியது. குறிப்பாக கடந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக வாங்கிய வாக்குகள் எண்ணிக்கை மற்ற கட்சிகளை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்து இருந்தது.

    இந்த நிலையில் 2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க.வை தோற்கடித்து கணிசமான வெற்றியை அறுவடை செய்ய வேண்டும் என்பதில் பா.ஜ.க. மேலிட தலைவர்கள் தீவிரமாக உள்ளனர். இதற்காக தமிழக பா.ஜ.க.வை வலுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக கிராம அளவில் கிளை அமைப்புகளை உருவாக்க பா.ஜ.க. தலைவர்கள் தீவிரம் காட்டுகின்றனர். மேலும் பூத் கமிட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தும் வகையில் பா.ஜ.க. அமைப்புகள் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன.

    இது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித்ஷா தனது நேரடியாக கண்காணிப்பில் தமிழக பா.ஜ.க. விவகாரங்களை கவனிக்க தொடங்கி உள்ளார்.

    2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வை தமிழகத்தின் 3-வது பெரிய கட்சியாக மாற்ற வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதை கருத்தில் கொண்டு சமீபத்தில் அமித்ஷா சென்னை வந்து அ.தி.மு.க.வுடன் கூட்டணியை உறுதி செய்தார்.

    இதைத் தொடர்ந்து கடந்த 7 மற்றும் 8-ந்தேதிகளில் மதுரையில் முகாமிட்டு தமிழக பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். தமிழக பா.ஜ.க. உயர்மட்ட உறுப்பினர்களுடன் அவர் பேசும்போது, "தமிழகத்தில் பா.ஜ.க.வை மிக பிரமாண்டமாக வளர்க்க வேண்டும். கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இதை ஆய்வு செய்வதற்காக ஒவ்வொரு மாதமும் நான் தமிழகம் வருவேன்" என்று கூறியிருந்தார்.

    அதன்படி மத்திய மந்திரி அமித்ஷா அடுத்த மாதம் (ஜூலை) 8-ந்தேதி தமிழகம் வருவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அப்போது பாஜகவை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வலுப்படுத்துவதற்கான ஆய்வுகளை அவர் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக கிராமப் பகுதிகளில் பா.ஜ.க.வை வலுப்படுத்த செய்துள்ள பணிகளை அமித்ஷா ஆவணங்கள் அடிப்படையில் பார்வையிட்டு ஆய்வு செய்வார் என்றும் கூறப்படுகிறது.

    மேலும் தொகுதி வாரியான ஆய்வு பணிகளையும் அமித்ஷா மேற்கொள்ள இருப்பதாக தமிழக பா.ஜ.க. தலைவர்கள் தெரிவித்தனர். ஜூலை 8-ந்தேதி தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர்கள் மற்றும் உயர்மட்ட குழு உறுப்பினர்களையும் அமித்ஷா சந்தித்து பேச இருப்பதாக தெரியவந்துள்ளது.

    மதுரையில் நடத்தப்பட்டது போல சென்னையிலும் சில தலைவர்களுடன் அமித்ஷா தனி அறையில் சந்தித்து கருத்துக்களை கேட்டறிவார் என்று கூறப்படுகிறது.

    தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடித்த பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் அமித்ஷா சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது. அதுபோல பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசையும் சந்தித்து அவர் பேசுவார் என்று தெரிய வந்துள்ளது.

    எடப்பாடி பழனிசாமி மற்றும் டாக்டர் ராமதாசுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை அமித்ஷா மேற்கொள்வார் என்று தெரிகிறது. குறிப்பாக 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் தேர்தல் பணிகளை கூட்டணி கட்சிகள் எப்படி எடுத்து செல்ல வேண்டும் என்று அவர்கள் ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாக தமிழக பா.ஜ.க. தலைவர்கள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே அடுத்த மாதம் சென்னை வரும் அமித்ஷாவை சந்திக்க அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோர் அனுமதி கேட்டுள்ளனர். இது தொடர்பாக இன்னும் எந்த முடிவும் எடுக்கப்பட வில்லை.

    அமித்ஷாவின் சென்னை பயண நிகழ்ச்சிகளை பொறுத்து அவர்கள் இருவரையும் அவர் சந்திப்பாரா? என்பது தெரிய வரும். அமித்ஷாவின் வருகையால் தமிழக பா.ஜ.க.வில் அடுத்தடுத்து புத்துணர்ச்சி ஏற்படுவதாக தமிழக பா.ஜ.க. தலைவர்கள் தெரிவித்தனர்.

    அடுத்த மாதம் அமித்ஷா வரும்போது சில முக்கிய வியூகங்களை எடப்பாடி பழனிசாமி, டாக்டர் ராமதாஸ் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகளுடன் பகிர்ந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது. இதனால் மத்திய மந்திரி அமித்ஷாவின் ஜூலை மாத தமிழகம் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    • மத்திய அமித்ஷா முதல் முறையாக தமிழகம் வந்ததால் அவர் முன்னிலையில் மையக்குழு கூட்டம் நடந்தது.
    • எல்லா இடங்களிலும் ஆளும்கட்சி மீது அதிருப்தி இருப்பதையும் விளக்கி பேசினார்கள்.

    தமிழக பாஜக கட்சியின் மையக்குழு கூட்டம் மதுரை சிந்தாமணியில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது.

    பா.ஜனதாவை பொறுத்த வரை மையக்குழுதான் உயரிய அதிகாரம் படைத்தது. மிக முக்கியமான முடிவுகள் எடுப்பது, செயல் திட்டங்கள் வகுப்பது எல்லாம் இந்த கூட்டத்தில்தான் நடைபெறும்.

    அந்த வகையில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைந்த பிறகு மத்திய அமித்ஷா முதல் முறையாக தமிழகம் வந்ததால் அவர் முன்னிலையில் மையக்குழு கூட்டம் நடந்தது.

    இந்தக் கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகன், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், அண்ணா மலை, முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன், வானதிசீனிவாசன், எச்.ராஜா, சக்கரவர்த்தி, வினோஜ்செல்வம், கரு.நாகராஜன், ராமசுப்பிரமணியன், கருப்பு முருகானந்தம்,

    கார்த்தியாயினி, வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம் உள்பட 22 உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.

    சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களிடமும் நமது கூட்டணி மற்றும் களநிலவரம் பற்றி கேட்டார். ஒவ்வொருவரும் தங்கள் கருத்துக்களை கூறினார்கள். பேசியவர்கள் அனைவருமே பலமான கூட்டணியை அமைத்து தந்திருப்பதை வரவேற்றனர். எல்லா இடங்களிலும் ஆளும்கட்சி மீது அதிருப்தி இருப்பதையும் விளக்கி பேசினார்கள்.

    எல்லோருடைய கருத்துக்களையும் கேட்ட பிறகு, அமித்ஷா அவர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் பலமான கூட்டணி அமைத்து உள்ளோம். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. இந்த சூழலில் மக்களிடம் செல்லுங்கள்.

    பா.ஜனதா அரசு நாட்டை முன்னேற்ற செய்து வரும் மகத்தான சாதனைகளை எடுத்து சொல்லுங்கள். அதன் மூலம் அவர்களை கவருங்கள். இந்த பணிகள் பூத் அளவில் இருந்து தொடங்க வேண்டும்.

    தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள்தான் இருக்கிறது. இந்த கால கட்டத்தில் திட்டமிட்டு நீங்கள் செய்யும் பணிகள்தான் வெற்றியை தேடி தரும். மற்ற மாநி லங்களைப் போல் தமிழ்நாட்டிலும், இந்தியா கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும். மீண்டும் அடுத்த மாதம் (ஜூலை) தமிழ் நாட்டுக்கு வருவேன் என்றார்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஸ்ரீ அருள்மிகு ராமநாதசுவாமி ஆலயத்தில் நான் பிரார்த்தனை நடத்தவுள்ளேன்.
    • ரூ 8,300 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைக்கிறேன்.

    புனிதமான ராமநவமி நாளில் தமிழ்நாட்டில் எனது சகோதர, சகோதரிகளை சந்திப்பதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன் என பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு தனது வருகை குறித்து பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியதாவது:-

    நாளை, ஏப்ரல் 6-ம் தேதி, புனிதமான ராம நவமி நாளில், தமிழ்நாட்டின் எனது சகோதர சகோதரிகளை சந்திப்பதை நான் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்.

    புதிய பாம்பன் ரெயில் பாலம் திறந்து வைக்க உள்ளேன். ஸ்ரீ அருள்மிகு ராமநாதசுவாமி ஆலயத்தில் நான் பிரார்த்தனை நடத்தவுள்ளேன். ரூ 8,300 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளும் தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டவும் உள்ளேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • டெல்லியில் இருந்து கோவை சூலூர் விமானப்படை தளம் வரும் ஜனாதிபதி உதகை செல்கிறார்.
    • ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக காவல் துறையினர் ஆலோசனை.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 நாட்கள் அரசு முறை பயணமாக வரும் 27ம் தேதி அன்று தமிழ்நாடு வருகிறார்.

    அதன்படி, டெல்லியில் இருந்து கோவை சூலூர் விமானப்படை தளம் வரும் ஜனாதிபதி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் உதகை செல்கிறார்.

    நவம்பர் 28ம் தேதி மற்றும் 29ம் தேதிகளில் உதகையிலும், நவம்பர் 30ம் தேதி திருவாரூரிலும் சில நிகழ்ச்சிகளில் ஜனாதிபதி பங்கேற்க உள்ளார்.

    ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக காவல் துறையினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    • சத்தீஸ்கர், தமிழ்நாடு ஆகிய 6 மாநிலங்களில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மையங்கள் செயல்படுகிறது.
    • நிகழ்ச்சியில் வீரர்கள் அதிகாரிகள் உள்பட சுமார் 4 ஆயிரம் பேர் கலந்து கொள்கிறார்கள்.

    சென்னை:

    மத்திய மந்திரி அமித்ஷா நேற்று முன்தினம் கோவை வந்தார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியபோது தமிழக அரசை கடுமையாக விமர்சித்தார். மேலும் வருகிற 5-ந்தேதி பாராளுமன்ற தொகுதிகள் மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சிகள் கூட்டம் நடைபெற உள்ளது.

    அந்த கூட்டத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழகத்தில் தொகுதிகள் எண்ணிக்கை குறையாது என்று உறுதிமொழியும் அளித்தார்.

    இந்த நிலையில் அமித்ஷா மீண்டும் வருகிற 7-ந்தேதி தமிழகம் வருகிறார். ராணிப்பேட்டை அருகே தக்கோலத்தில் உள்ள மத்திய தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

    இந்தியாவில் ஒடிசா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், சத்தீஸ்கர், தமிழ்நாடு ஆகிய 6 மாநிலங்களில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மையங்கள் செயல்படுகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 10-ந்தேதி தொழிற் பாதுகாப்பு படையின் உதய தின நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது. வழக்கமாக இந்த நிகழ்ச்சி தலைநகர் டெல்லி மற்றும் அதை சுற்றி உள்ள இடங்களில்தான் கொண்டாடப்படும். ஆனால் இப்போது வெளி மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.

    அந்த வகையில் இந்த ஆண்டு ராணிப்பேட்டையில் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் வீரர்கள் அதிகாரிகள் உள்பட சுமார் 4 ஆயிரம் பேர் கலந்து கொள்கிறார்கள்.

    அன்றைய தினம் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த இளம் ராணுவ அதிகரிகளின் வீர சாகச நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். மறுநாள் (8-ந் தேதி) பயிற்சி நிறைவு அணி வகுப்பு நடக்கிறது.

    ×