search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்
    X
    சென்னை ஐகோர்ட்

    புத்தக பைகளில் முதல்-அமைச்சர் புகைப்படமா?- சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

    பள்ளிக்குழந்தைகள் பயன்படுத்தும் பாடப் புத்தகங்கள், நோட்டுகளில் முதல்-அமைச்சரின் படத்தை அச்சிட்டு பொது மக்களின் பணத்தை வீணாக்க கூடாது என்று உத்தரவிட்ட ஐகோர்ட்டு இந்த வி‌ஷயத்தில் தமிழக முதல்-அமைச்சரை பாராட்டுவதாக கருத்து தெரிவித்துள்ளது.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில் நமது திராவிட இயக்கம் என்ற அமைப்பின் தலைவர் ஓவியம் ராஜன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில் கூறியிருப்பதாவது:-

    பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தற்போது இருப்பில் உள்ள பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்களை பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.

    ஜெயலலிதா

    இருப்பில் உள்ள பாடப் புத்தகங்கள் நோட்டுகள், பைகள் உள்ளிட்டவற்றில் முன்னாள் முதல்- அமைச்சர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படங்கள் இருப்பதனால் அவற்றை விநியோகிக்க வேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

    பொதுமக்களுடைய வரிப் பணத்தை வீணாக்க கூடாது. எனவே, ஏற்கனவே பிரிண்ட் செய்யப்பட்ட பாட புத்தகங்கள் மற்றும் நோட்டுகள், பைகளை வீணாக்கக்கூடாது அவற்றை மாணவ, மாணவிகளுக்கு வினியோகிக்க உத்தரவிட வேண்டும்.

    எதிர்காலத்தில் இது போல பாடப்புத்தகங்கள் நோட்டுகள், பைகளில் அரசியல் கட்சி தலைவர்களை படங்களை பிரிண்ட் செய்ய தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முக சுந்தரம் ஆஜராகி, முந்தைய முதல்வர்கள் படங்கள் அச்சடிக்கப்பட்ட சுமார் 65 லட்சம் புத்தகங்கள், நோட்டுகளை வீணாக்காமல் அச்சடிக்கப்பட்ட அதே நிலையில் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு அந்த புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.

    இதை கேட்ட நீதிபதிகள், தமிழக முதல்-அமைச்சருக்கு பாராட்டுதல்களை தெரிவித்தனர்.

    பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் புத்தகங்கள், நோட்டுகள், எழுது பொருட்கள் அடங்கிய பைகளில் முதல்-அமைச்சர், அமைச்சர் ஆகியோரது படங்கள் அச்சடிப்பது மக்களின் வரி பணத்தை வீணடிப்பதாகும். அரசியல்வாதிகள் தங்களின் தனிப்பட்ட விருப்பத்திற்காக இது போன்று மக்கள் பணத்தை செலவு செய்யக்கூடாது. எதிர்காலத்தில் இதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

    தற்போதுள்ள அரசு மாணவர்களுக்கான நோட்டு, புத்தக பைகளில் முதல்-அமைச்சரின் புகைப்படம் அச்சிடப்படாது என்பதை உறுதி செய்ய வேண்டும். பொது நிதி இதுபோன்ற விளம்பரங்களுக்காக பயன்படுத்தக் கூடாது. இதை தற்போதைய அரசு மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கிறோம்" என்று உத்தரவிட்டனர்.

    Next Story
    ×