search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கன்னியாகுமரி அருகே இரட்டை கொலையில் 2 வாலிபர்கள் கைது

    கன்னியாகுமரி அருகே இரட்டை கொலையில் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி சுனாமி காலனியைச் சேர்ந்தவர் ஜேசுராஜ் (வயது 24), குண்டல் பகுதியைச் சேர்ந்தவர் செல்வின் (25). இவர்கள் இருவரும் கன்னியாகுமரி 4 வழிச்சாலையில் முருகன் குன்றம் பகுதியில் உள்ள முட்புதரில் பிணமாக கிடந்தனர்.

    இது குறித்து கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி. பாஸ்கரன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் ஆவுடையப்பன், ஜெயச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில், சின்ன முட்டத்தைச் சேர்ந்த ஜெனிஷ் என்பவர் கத்திக் குத்து காயங்களுடன் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் ஜெனிசிடம் விசாரணை நடத்தினார்கள்.

    கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து கஞ்சா வியாபாரிகளை போலீசார் கண்காணித்தனர். அகஸ்தீஸ் வரம் பகுதியைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி ஒருவரிடம் கொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. போலீசார் கஞ்சா வியாபாரியை தேடினார்கள்.

    போலீசார் தேடுவதை அறிந்த கஞ்சா வியாபாரி தலைமறைவாகி விட்டார். கஞ்சா வியாபாரியுடன் தொடர்பில் இருந்த அகஸ்தீஸ் வரம் பகுதியைச் சேர்ந்த பாக்கீஸ்வரன் (23), முத்துகுமார் (18) ஆகிய 2 பேரையும் போலீசார் பிடித்தனர். பிடிபட்ட இருவரிடமும் விசாரணைநடத்தப்பட்டது. இருவரும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.

    சந்தேகம் அடைந்த போலீசார் இருவரையும் ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற் கொண்டனர். அப்போது ஜேசுராஜ், செல்வின் இருவரையும் கொலை செய்ததையும், ஜெனிசை கத்தியால் குத்தியதையும் ஒப்புக்கொண்டனர்.

    இதையடுத்து போலீசார் பாக்கீஸ்வரன், முத்துகுமார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் போலீசாரிடம் கூறியதாவது:-

    நாங்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் முருகன் குன்றம் பகுதிக்கு சென்றோம். அங்கிருந்த ஜெனிஷ், ஜேசுராஜ், செல்வின் 3 பேரும் கஞ்சா பொட்டலங்களை கேட்டனர். நாங்கள் அதற்கு பணம் கேட்டோம். ஆனால் அவர்கள் பணம் தராமல் எங்களிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களை பறிக்க முயன்றதுடன் எங்களை சரமாரியாக தாக்கினர்.

    இதனால் ஆத்திரமடைந்த நாங்கள் ஜெனிசை குத்தினோம். உடனே அவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். மற்ற இருவரும் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டனர். இதனால்அவர்களையும் கத்தியால் குத்தினோம். அவர்கள் இருவரும் மயங்கி விழுந்தனர். பின்னர் நாங்கள் அங்கிருந்து சென்று விட்டோம்.

    பல மணி நேரத்திற்கு பின்னர்தான் இருவரும் இறந்த தகவல் எங்களுக்கு தெரிய வந்தது. போலீசார் எங்களை பிடித்து விடுவார்கள் என்று பயந்து தப்பி செல்ல முயன்றோம். ஆனால் எங்களை போலீசார் பிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    கைது செய்யப்பட்ட இருவரிடமும் கொலை வழக்கில் வேறு நபர்களுக்கு தொடர்பு உண்டா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×