search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேஎஸ் அழகிரி
    X
    கேஎஸ் அழகிரி

    தமிழ்நாட்டுக்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் - கேஎஸ் அழகிரி அறிக்கை

    ஜூன் 4-ந் தேதி வரை 18வயதிற்கு மேற்பட்டவர்களில் 17.5 சதவீதத்தினருக்குதான் முதல் டோஸ் தடுப்பூசி தமிழகத்தில் போடப்பட்டுள்ளதாக கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    2020 ஏப்ரல் மாதம் தொடங்கி கடந்த திங்கட்கிழமை வரை கொரோனா தொடர்பாக 9 முறை நாட்டு மக்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றி இருக்கிறார். இதற்கு முன்பு 8 முறை அவர் உரையாற்றியதில் எந்த பலனும் ஏற்படவில்லை.

    ஜூன் 21-ந் தேதி முதல் புதிய தடுப்பூசி கொள்கை அமல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பிரதமர் மோடி தமது உரையில் இதுவரை நாடு முழுவதும் 23 கோடியே 18 லட்சம் பேருக்குத்தான் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.

    தடுப்பூசி பற்றாக்குறை காரணமாகவே, இரண்டாவது டோஸ் தடுப்பூசியைப் போடுவதற்கான காலத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. தடுப்பூசி பற்றாக்குறையை மூடி மறைக்கவே இந்த கால நீடிப்பை மத்திய அரசு செய்துள்ளது. உற்பத்தியைப் பெருக்காமல், கொள்கை முடிவுகளை பிரதமர் மோடி அறிவித்து வருகிறார்.

    பிரதமர் மோடி

    அகில இந்திய காங்கிரஸ் அறிவிப்பின்படி நாடு முழுவதும் நிகழ்த்தப்பட்ட பரப்புரை மற்றும் உச்ச நீதிமன்றத்தின் கடுமையான கண்டனங்களால் பிரதமர் மோடி தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி இலவசம் என்று அறிவித்திருக்கிறார். இது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தொடர் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியாகும்.

    மாநிலங்களுக்குத் தடுப்பூசி வழங்குவதிலும் மிகுந்த பாரபட்சத்தை மத்திய அரசு காட்டி வருகிறது. தமிழகத்தில் இதுவரை தடுப்பூசி போடத் தகுதியுள்ளவர்களில் 13.8 சதவிகிதத்தினருக்கு ஒரு டோசும், 3.6 சதவிகிதத்தினருக்கு இரண்டு டோசும் போடப்பட்டுள்ளன.

    ஆனால், தேசிய சராசரியாக ஒரு டோஸ் போட்டவர்கள் 20 சதவிகிதமும், இரண்டு டோஸ் போட்டவர்கள் 3.3 சதவிகிதமாக உள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரை தடுப்பூசி போடத் தயக்கமான நிலை இல்லாமல் அனைவரும் ஆர்வத்துடன் போட்டுக்கொள்ள முனைகின்றனர். ஆனால், மத்திய அரசு குறைவான தடுப்பூசிகளைத் தமிழகத்திற்கு ஒதுக்குவதால் தமிழகத்தின் பல பகுதிகளில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.

    ஜூன் 4-ந் தேதி வரை 18வயதிற்கு மேற்பட்டவர்களில் 17.5 சதவீதத்தினருக்குதான் முதல் டோஸ் தடுப்பூசி தமிழகத்தில் போடப்பட்டுள்ளது.

    கொரோனா தொற்று போன்ற கொடிய நோய் மக்களை வாட்டுகிற போது, மாநிலங்களின் மக்கள் தொகை அடிப்படையிலும், தொற்று எண்ணிக்கை அடிப்படையிலும் தான் தடுப்பூசி பகிர்ந்து கொடுக்கப்பட வேண்டும்.

    அரசியல் பாகுபாடு காட்டுவதன் மூலம் பிரதமர் மோடி கூட்டாட்சி கொள்கைகளுக்கு விரோதமாகவும், அரசியல் பாகுபாட்டோடும் நடந்து கொள்கிறார்.

    இத்தகைய அணுகு முறையைப் பிரதமர் மோடி உடனடியாக கைவிட்டு, தடுப்பூசி விநியோகம் செய்வதில் தமிழகத்திற்கு நியாயம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×