search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோசடி
    X
    மோசடி

    நாகர்கோவிலில் மீனவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.40 லட்சத்து 61 ஆயிரம் பண மோசடி- 3 பேர் மீது வழக்கு

    மீனவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.40 லட்சத்து 61 ஆயிரம் பண மோசடி செய்த பெண் அதிகாரி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில், புன்னை நகர் பகுதியை சேர்ந்தவர் அருள் சேகர் (வயது 54). மீனவர். இவர் நாகர்கோவில் மற்றும் ராமன்புதூர் பகுதியில் உள்ள 3 வங்கிகளில் கணக்கு வைத்து உள்ளார். பல ஆண்டுகளாக இந்த கணக்குகள் மூலம் பண பரிவர்த்தனையும் நடத்தி வருகிறார்.

    இந்த பண பரிவர்த்தனையில் முறைகேடு நடந்திருப்பதாக இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    நாகர்கோவில் மற்றும் ராமன்புதூரில் உள்ள 3 வங்கிகளில் எனக்கு கணக்கு உள்ளது. இந்த கணக்குகளில் உள்ள பணத்தை சரிபார்த்த போது ரூ.40 லட்சத்து 61 ஆயிரத்து 530 பணம் என் அனுமதியின்றி எடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    இது பற்றி நான் 3 வங்கிகளின் மானேஜர்களிடம் விபரம் கேட்டேன். அவர்கள் முறையான விபரங்களை கூறவில்லை. மேலும் முன்னுக்குபின் முரணாகவும் பேசினர். எனவே போலீசார் இதுபற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

    இது பற்றி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜ் விசாரணை நடத்தினார்.

    பின்னர் அவர் இது தொடர்பாக 3 வங்கிகளின் பெண் மானேஜர் உள்பட 3 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 420 -ன் கீழ் வழக்குபதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    Next Story
    ×