என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
உள்ளாட்சி தேர்தல்: ரஜினி ஆதரவு பெற கமல்ஹாசன் முயற்சி
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். 25 ஆண்டுகால காத்திருப்புக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரஜினிகாந்தே முற்றுப்புள்ளி வைத்தார். ரசிகர்கள் முன்னிலையில் தனது அரசியல் வருகையை உறுதி செய்தார்.
தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் நிற்க போவதாக அறிவித்தார். அதன் பின் அவரது அரசியல் பணிகள் வேகம் எடுத்தன. தனது ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றினார். அதற்கு மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் நிர்வாகிகளை நியமித்தார். உறுப்பினர் சேர்க்கையையும் பூத் கமிட்டிகள் அமைக்கும் பணிகளையும் தீவிரப்படுத்தினார்.
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளின் வேகமான பணிகளால் தமிழ்நாடு முழுக்க ஒரு கோடி உறுப்பினர் சேர்க்கவும் 66 ஆயிரம் பூத் கமிட்டிகள் அமைக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ரஜினிகாந்த் இன்னும் கட் சியே தொடங்கவில்லை. ஆனால் ஒரு கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்கி மற்ற கட்சியினரிடம் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டார். அடுத்த கட்டமாக குடிநீர் பிரச்சினையில் அவரது மக்கள் மன்றத்தினரின் பணிகள் மக்களிடம் வரவேற்பை பெற்றது.
ரஜினி போல பல ஆண்டுகளாக இழுக்காமல் ஜெயலலிதா மறைந்த சில மாதங்களிலேயே தீவிர அரசியலில் கமல்ஹாசன் இறங்கினார். டுவிட்டர் மூலம் ஆட்சியை விமர்சித்தவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் களம் இறங்கி சுமார் 4 சதவீத வாக்குகளை பெற்றார்.
கமலுக்கு நகர்ப்புறங்களில் அதிகம் வாக்குகள் கிடைத்தது. எனவே கிராமப்புறங்களில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார். தான் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை கூட தனது அரசியலுக்கு பயன்படுத்தி வருகிறார்.
ரஜினியும் கமலும் சினிமாவில் அறிமுகமானது முதலே நண்பர்கள். அரசியலிலும் அப்படி இணைவார்களா? என்ற எதிர்பார்ப்பு தொடக்கம் முதலே இருந்து வருகிறது. கமல் பெற்ற வாக்கு சதவீதம், ரஜினிக்கு இருக்கும் நிர்வாகிகள் பலம், கிராமப்புற செல்வாக்கு இவற்றை எல்லாம் கணக்கு போட்டு பார்த்த இருவருக்கும் பொதுவான நண்பர்கள், இருவரும் இணைந்தால் நிச்சயம் ஆட்சியை பிடிக்கலாம் என்ற ரீதியில் ஆலோசனை கூறி வருகின்றனர்.
இந்த விஷயத்தில் தொடக்கம் முதலே கமல்ஹாசன் ஆர்வம் காட்டுகிறார். சில பேட்டிகளில் கூட ரஜினி தனக்கு ஆதரவு கொடுப்பார் என்று நம்பிக்கை தெரிவித்தார். ஒரு பேட்டியில் ‘நீங்களும் ரஜினியும் தேசியம் குறித்த ஒரே மாதிரியான கருத்தையே வைத்திருக்கிறீர்கள். இருவரும் சேர்ந்து பயணிப்பதில் என்ன சிரமம்?’ என்று கேட்டதற்கு’அதை நாங்கள் இருவரும் அல்லவா பேச வேண்டும். நாடு நன்றாக இருக்க வேண்டும் என்பதில் எங்கள் இருவருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. இருவரும் பேசி முடிவுசெய்ய வேண்டும்’ என்று கூறி இருந்தார். ரஜினி இவற்றுக்கு எந்த பதிலும் கூறவில்லை.
கமல் பிறந்தநாள் நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாக மேடையேறினார்கள். பாலச்சந்தர் சிலை திறப்பு விழாவில் எங்களை பிரிக்க முடியாது என்று கமலே சூளுரைத்தார். கமலின் அரசியல் நுழைவு குறித்து செய்தியாளர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டபோது, கமல் ஹாசனுக்கு அரசியல் பற்றி என்ன தெரியும்? தொண்டர்களாவது தனது படத்தை பார்க்கட்டும் என்று தான் நடித்துக்கொண்டிருக்கிறார் என பதிலளித்தார்.
இது குறித்து கமல்ஹாசனிடம் கேட்கப்பட்ட போது, முதல்வர் பழனிசாமி என்னை பற்றி பேசியது அவரது கருத்து. தமிழகத்தில் தற்போது வெற்றிடம் என்பது உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடலாமா என்பது குறித்து ஆலோசனை செய்து கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார்.
வெற்றிடம் உள்ளது எனும் ரஜினியின் கருத்தை கமல் ஏற்றுக்கொண்டிருப்பதால், நீங்கள் துணிந்து களத்தில் இறங்குங்கள், உங்கள் பின்னால் நான் இருக்கிறேன், இணைந்து பணி செய்வோம் என்று இருவரும் கூட்டணி போட்டு மறை முகமாக அரசியல் பணிகளை செய்வதாகவும் கூறப்படுகிறது.
உள்ளாட்சி தேர்தலில் ரஜினி ஆதரவுடன் கமல் களம் இறங்க தயாராகி விட்டார் என்கிறார்கள். ரஜினிக்கும் கமலுக்கு ஆதரவு தெரிவிப்பது மூலம் தனது மன்றத்துக்கு இருக்கும் மக்கள் ஆதரவை தெரிந்து கொள்ள நல்ல வாய்ப்பாக அமையும்.
இதை ரஜினி- கமல் கூட்டணிக்கான தொடக்கமாகவே அரசியல் விமர்சகர்கள் பார்க்கிறார்கள். கமலுக்கு தேர்தலை சந்தித்த அனுபவம் இருக்கிறது. ரஜினிக்கு கிராமப் புறங்களில் நல்ல செல்வாக்கு இருக்கிறது. இருவரும் இணைவது என்பது இருவருக்குமே நன்மை தரும் ஒன்றாக இருக்கும்.
அரசியலில் எது வேண்டு மானாலும் நடக்கலாம் என்பார்கள். ஒருவேளை ரஜினி கமலுடன் கூட்டணி வைத்தால் அது தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை உருவாக்கலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்