search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு வந்த வாலிபர்
    X

    கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு வந்த வாலிபர்

    வீட்டிற்குள் புகுந்த பாம்பை பிடிக்க முயன்றபோது வாலிபரை பாம்பு கையில் கொத்தியது. ஆஸ்பத்திரிக்கு சென்ற அவரிடம் இருந்த பாம்பு தீயணைப்புத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த காக்களூர் பூங்கா நகரைச் சேர்ந்தவர் அமுதன். இவரது வீட்டிற்குள் பாம்பு ஒன்று புகுந்து விட்டது. அக்கம் பக்கத்தினர் கம்பால் அடிக்க முயன்றனர். ஆனால் அமுதன் பாம்பை அடிக்க வேண்டாம் நான் கையிலேயே பிடித்து விடுகிறேன் என்று கூறி, பாம்பை கையில் பிடித்தார்.

    அப்போது அந்த பாம்பு அமுதனை இடது கை விரலில் கொத்தியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பிடித்த பாம்பை பையில் போட்டுக் கொண்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்தார். இதனை அறிந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் பையிலிருந்த பாம்பை கண்டு பயந்து ஒதுங்கினர். இதற்கிடையே பையில் வைத்திருந்த பாம்பு திடீரென கீழே விழுந்து தப்பி ஓடியது. இதனை கண்ட நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

    இதையடுத்து அங்கிருந்தவர்கள் பாம்பை பிடித்து தீயணைப்புத் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பாம்பு கடித்ததில் உடல்நிலை பாதிக்கப்பட்ட அமுதனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    Next Story
    ×