search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோடிக்கணக்கில் ஊழல்- ஆலயங்களை விட்டு அரசு வெளியேற இல.கணேசன் எம்.பி. வலியுறுத்தல்
    X

    கோடிக்கணக்கில் ஊழல்- ஆலயங்களை விட்டு அரசு வெளியேற இல.கணேசன் எம்.பி. வலியுறுத்தல்

    கோவில்களில் கோடிக்கணக்கில் ஊழல், சிலை கடத்தல் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்றால், ஆலயங்களை விட்டு அரசு வெளியேற வேண்டும் என இல.கணேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். #LaGanesan #idolsmuggling
    சென்னை:

    இந்து அறநிலையத்துறையில் ஆன்லைன் மூலம் பக்தர்கள் கோவில்களுக்கு வழங்கிய காணிக்கையில் ரூ.500 கோடி வரை ஊழல் நடந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

    இதுகுறித்து இல.கணேசன் எம்.பி.யிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    ரூ.500 கோடிதான் ஊழல் நடந்திருப்பதாக கண்டு பிடித்திருக்கிறார்கள். ஆனால் நடந்தது இன்னும் எவ்வளவோ? அறநிலையத்துறையில் ஊழல் நடப்பது புதிது அல்ல. கோவில் சொத்துக்கள் சூறையாடப்பட்டு வருகின்றன.

    அறநிலைய துறையில் பொறுப்புக்கு வருபவர்களுக்கு தெய்வ நம்பிக்கை கட்டாயம் இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. பக்தர்கள் பல்வேறு வழிபாடுகளுக்கு அளிக்கும் காணிக்கைகள் உரிய முறையில் செலவிடப்படுவது இல்லை. வருமானத்தில் 20 சதவீதம் மட்டுமே கோவில்களுக்கு செலவிடப்படுகிறது. மீதம் உள்ள 80 சதவீதம் நிர்வாக செலவுகளுக்காக எடுக்கப்படுகிறது.

    ஆலயங்களை விட்டு அரசு வெளியேற வேண்டும் என்ற எங்களது கோரிக்கை வலுவடைந்து வருகிறது. கோவிலையும் அதன் சொத்துக்களையும் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்டவர்களே அதை சூறையாடி வருவது வேதனைக்குரியது.


    திருட்டு போன சிலைகளை ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல், உண்மையான உணர்வோடு கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு அறநிலையத்துறையின் முக்கிய நிர்வாகிகளே ஒத்துழைக்கவில்லை. அதற்கு என்ன காரணம் என்பது தெய்வத்துக்குத் தான் வெளிச்சம்.

    காணாமல் போன சிலைகள் மீட்கப்பட வேண்டும். கோவில் சொத்துக்கள் மீட்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். ஆண்டவன் தண்டனை ஒரு புறம் இருக்கட்டும், குற்றவாளிகளை கோர்ட்டு மூலம், ஆள்பவர்கள் தண்டிக்க வேண்டும்.

    இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்றால், ஆலயங்களை விட்டு அரசு வெளியேற வேண்டும். தெய்வ நம்பிக்கை கொண்டவர்களிடம் கோவில்கள் ஒப்படைக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு இல.கணேசன் எம்.பி. கூறினார். #BJP #LaGanesan #idolsmuggling
    Next Story
    ×