search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலை நிறுத்த போராட்டம் எதிரொலி: கரூரில் 2,600 லாரிகள் ஓடாததால் உற்பத்தி பொருட்கள் தேக்கம்
    X

    வேலை நிறுத்த போராட்டம் எதிரொலி: கரூரில் 2,600 லாரிகள் ஓடாததால் உற்பத்தி பொருட்கள் தேக்கம்

    வேலை நிறுத்த போராட்டம் எதிரொலி காரணமாக கரூரில் 2,600 லாரிகள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டன. இதனால் ஜவுளி, கொசுவலை உள்ளிட்ட உற்பத்தி பொருட்கள் தேக்கம் அடைந்ததால் வர்த்தகர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    கரூர்:

    டீசல் விலை உயர்வு, சுங்கச் சாவடிகளில் அதிக கட்டணம் வசூல் உள்ளிட்டவற்றால் லாரித்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பெட்ரோல்- டீசல் விலையை குறைத்து ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் பிரிமியத்தொகை உயர்த்தப்பட்டுள்ளதை குறைக்க வேண்டும். சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை குறைத்து ஆண்டுக்கு ஒரு முறை செலுத்துவது போல் வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுடெல்லி ஆல் இந்தியா மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ், தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் உள்ளிட்ட சங்கங்கள் ஜூலை 20-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தன. அந்த வகையில் நேற்று நாடு முழுவதும் லாரிகள் ஓடாததால் வர்த்தகம் பாதிப்படைந்தது.

    இந்த போராட்டத்திற்கு கரூர் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்டவையும் ஆதரவு தெரிவித்து இருந்ததால் கரூரில் நேற்று 2,000 லாரிகள், 600 மினி லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் உள்ளிட்டவை இயக்கப்படாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் தொழில் நகரம் என பெயர் பெற்ற கரூரில் ஜவுளிகள், கைத்தறி துணிகள், கொசுவலை, பஸ்பாடி, சிமெண்டு, சர்க்கரை ஆலையிலிருந்து அனுப்பப்படும் சர்க்கரை மூட்டைகள் உள்ளிட்ட உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் பெருமளவில் தேக்கம் அடைந்தன. இதனால் கோடிக்கணக்கிலான வர்த்தகம் முடங்கியதால் வர்த்தகர்கள் உள்ளிட்டோர் பாதிப்படைந்தனர். மேலும் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் உள்ளிட்டவற்றையும் வெளியிடங்களிலிருந்து லாரிகளில் கொண்டுவர முடியாததால் சில நிறுவனங்களில் பணி செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டது.

    எனினும் சிலர் கரூர் ரெயில் நிலைய பார்சல் சேவை, பஸ் உள்ளிட்டவை மூலம் உற்பத்தி பொருட்களை அனுப்பி வைத்ததையும் காண முடிந்தது. லாலாபேட்டை, குளித்தலை உள்ளிட்ட இடங்களில் வாழைத்தார் உள்ளிட்டவற்றை வெளியிடங்களுக்கு விற்பனைக்காக அனுப்ப முடியாமல் விவசாயிகள் சிரமத்திற்கு ஆளானார்கள். இது போல் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தேக்கம் அடையும் சூழல் ஏற்படுவதால் அதன் விலைவாசி உயர வாய்ப்புள்ளது என தெரிகிறது. கரூரில் பொதுமக்களுக்கு காய்கறி, பால், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்எச்சரிக்கை நடவடிக்கை செய்யப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் போலீசார் மாவட்டம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டு லாரி வேலை நிறுத்தத்தை பயன்படுத்தி பொருளாதார ரீதியிலான சரிவை ஏற்படுத்தும் நோக்கில் பதுக்கல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் யாரும் ஈடுபடுகின்றனரா? என தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    வேலை நிறுத்த போராட்டம் தொடர்பாக கரூர் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் வக்கீல் ராஜூவிடம் கேட்டபோது அவர் தெரிவித்ததாவது:-

    மத்திய- மாநில அரசுகள் லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை ஏற்று கொண்டு நிறைவேற்றி தரும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்பதில் மாற்றம் இல்லை. கரூரில் வர்த்தகர்கள், வணிகர்கள் உள்ளிட்டோருக்கு ஏற்படும் சிரமங்களுக்காக வருந்துகிறோம். எனினும் வேலை நிறுத்த போராட்டத்தால் லாரி டிரைவர்கள், கிளனர்கள், உரிமையாளர்கள் உள்ளிட்டோருக்கும் பாதிப்பு இருக்க தான் செய்கிறது என்று கூறினார்.

    லாரி ஓடாததன் காரணத்தால் ஏற்பட்டள்ள ஜவுளி தேக்கம் குறித்து கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் ஸ்டீபன்பாபு கூறுகையில், கரூரில் தயாராகும் போர்வை, திரைசீலை உள்ளிட்ட ஜவுளி பொருட்கள் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. அந்த வகையில் ஜவுளி உற்பத்தி பொருட்களை லாரி மூலம் சென்னை, தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு சென்று தான் ஏற்றுமதி செய்கிறோம். அந்த வகையில் கரூரில் லாரிகள் இயக்கப்படாததால் ரூ.10 கோடி முதல் ரூ.15 கோடி வரையிலான ஜவுளி தேக்கம் அடைந்திருக்கிறது. இதனால் குறித்த நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு அதனை டெலிவரி செய்ய முடியாததால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் ஜவுளி தயாரிப்புக்கு தேவையான உதிரி பொருட்களை வெளியிடங்களிலிருந்து லாரிகளில் கொண்டுவர முடியாததால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே லாரி வேலை நிறுத்தத்தில் மத்திய-மாநில அரசுகள் விரைவில் தீர்வு காண வேண்டும் என்று கூறினார். 
    Next Story
    ×