search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் ஒரே நாளில் டெங்கு காய்ச்சலுக்கு 4 பேர் பலி
    X

    கோவையில் ஒரே நாளில் டெங்கு காய்ச்சலுக்கு 4 பேர் பலி

    கோவையில் ஒரே நாளில் டெங்கு காய்ச்சலுக்கு கோவையில் மாணவி உள்பட 4 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கோவை:

    கோவை, திருப்பூர் மாவட்டங்களில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு கடந்த 4½ மாதத்தில் 60-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்தநிலையில் கோவை காட்டூர் சோமசுந்தரா மில் பகுதியை சேர்ந்தவர் வினோத் சர்மா. தொழில் அதிபர். இவரது மகள் சில்கி சகானா என்கிற சுவாதி (வயது 24). இவர் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    சுவாதி கடந்த 4 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவரை அவரது பெற்றோர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அப்போது அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக தெரிவித்து மருந்து மாத்திரைகளை கொடுத்தனர். ஆனால் சுவாதிக்கு காய்ச்சல் குணமாகவில்லை.

    இதனையடுத்து அவருக்கு ரத்த பரிசோதனை செய்த போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் சுவாதியை அனுமதித்தனர். நேற்று திடீரென சுவாதியின் நிலைமை மோசமானது. இதனையடுத்து ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் ஒன்றும் செய்ய முடியாது. வீட்டுக்கு அழைத்து செல்லுங்கள் என்று சுவாதியின் பெற்றோரிடம் கூறினர். இதனையடுத்து சுவாதியை அவரது பெற்றோர் வீட்டுக்கு அழைத்து வந்தனர். அப்போது வரும் வழியிலேயே சுவாதி பரிதாபமாக இறந்தார்.

    இதனை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுவாதியின் வீட்டு முன்பு திரண்டனர். பின்னர் மாநகராட்சிக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினர். அப்போது அவர்கள் கூறியதாவது,

    டெங்கு காய்ச்சலுக்கு சுவாதி இறந்ததையடுத்து மாநகராட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள்

    இந்த பகுதியில் குப்பைகள் சரியாக அள்ளப்படுவது இல்லை, சாக்கடைகளை சுத்தம் செய்யப்படுவதும் இல்லை. கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க தடுப்பு மருந்துகளும் தெளிப்பது இல்லை. இதனாலேயே இந்த பகுதியில் ஏராளமானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மாநகராட்சி போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து காய்ச்சல் பரவுவதை தடுக்க வேண்டும் என்றனர்.

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ளது ஆத்துப்பொள்ளாச்சி. இந்த பகுதியை சேர்ந்தவர் நாகப்பன். இவரது மகள் சந்தியா (வயது 10). 5-ம் வகுப்பு மாணவி. சந்தியா கடந்த 2 நாட்களாக மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். அவரது பெற்றோர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு காய்ச்சல் குணமாகவில்லை.

    இதனையடுத்து நேற்று முன்தினம் மாலை சந்தியாவை அவரது பெற்றோர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் நேற்று சிகிச்சை பலனின்றி சந்தியா பரிதாபமாக இறந்தார்.

    திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்தவர் கருப்புசாமி (34). பனியன் தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். அவரது உறவினர்கள் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கருப்புசாமியை சேர்த்தனர். அங்கு காய்ச்சல் குணமாகவில்லை.

    இதனையடுத்து கோவை அரசு ஆஸ்பத்திரியில் அவரை சேர்த்தனர். இங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கருப்புசாமி பரிதாபமாக இறந்தார்.

    தாராபுரம் திருப்பூர் ரோட்டை சேர்ந்தவர் ஜான்சன். இவரது மனைவி சத்யா (27). இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அவரது கணவர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார். கோவை அரசு ஆஸ்பத்திரியில் சத்யாவை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே சத்யா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    நேற்று ஒரே நாளில் டெங்கு காய்ச்சலுக்கு கோவையில் மாணவி உள்பட 4 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×