என் மலர்
உள்ளூர் செய்திகள்
- நேற்று தங்கத்தின் விலை சற்று குறைந்தது.
- வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.
சென்னை:
கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, கடந்த 22-ந்தேதி, இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியது. அன்றைய தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.9 ஆயிரத்து 290-க்கும், ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்து 320-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஒரே நாளில், சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்தது.
இனி, தங்கம் விலை ஏற்றம் காணும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில், மறுநாளே அர்ந்தர் பல்டி அடித்தது. 23-ந்தேதி சவரனுக்கு ரூ.2, 200-ம், ஒரு கிராம் ரூ.275-ம் ஏறிய வேகத்திலேயே சரிந்தது. நேற்றும் தங்கத்தின் விலை சற்று குறைந்தது. ஒரு கிராம் ரூ.10-ம், ஒரு சவரன் ரூ.80-ம் குறைந்து, கிராம் ரூ.9 ஆயிரத்து 5-க்கும், ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்து 40-க்கும் விற்பனையானது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று மாற்றம் இல்லை. தங்கம் விலை சவரன் ரூ.72 ஆயிரத்து 40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராம் ரூ.9,005-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையிலும் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.111-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
24-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,040
23-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,120
22-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,320
21-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,120
20-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,560
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
24-04-2025- ஒரு கிராம் ரூ.111
23-04-2025- ஒரு கிராம் ரூ.111
22-04-2025- ஒரு கிராம் ரூ.111
21-04-2025- ஒரு கிராம் ரூ.111
20-04-2025- ஒரு கிராம் ரூ.110
- எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.
- அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி உறுதியான பின் நடைபெறும் முதல் கூட்டம் இது என்பதால் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஏப்.25-ந்தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.
அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி உறுதியான பின் நடைபெறும் முதல் கூட்டம் இது என்பதால் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கோயம்பேடு மார்க்கெட்டிற்கு ஒரு நாளைக்கு 150 டன் மாம்பழங்கள் வருகின்றன.
- தரம் குறைந்த மாம்பழங்கள் கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை குறைவாக விற்பனை செய்யப்படும்.
சென்னை:
முக்கனிகளில் முதன்மையானதும், பழங்களின் அரசன் என்றும் போற்றப்படும் மாம்பழம் சீசன் களைகட்டத் தொடங்கி உள்ளது. கோடை காலம் என்றாலே மாம்பழம் சீசன் அதிகரித்து விற்பனை அமோகமாக காணப்படும். அந்த வகையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மாம்பழ விற்பனை விருவிருப்பாக நடைபெற்று வருகிறது.
மாம்பழம் சீசன் கோடையில் அதிகரித்தாலும், ஜனவரி மாதம் முதலே சேலத்தில் இருந்து மல்கோவா, அல்போன்சா, இமாம்பசா, களப்பாடி போன்ற மாம்பழங்கள் வரத்து தொடங்கிவிடும். அடுத்தபடியாக பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கேரளாவில் இருந்து பங்கனப் பள்ளி, செந்தூரா போன்ற மாம்பழங்கள் வரத்து அதிகரித்து விடும்.
அதைத் தொடர்ந்து, ஏப்ரல் மாதத்தில் திருவள்ளூர், கிருஷ்ணகிரி, விருதுநகர், தென்காசி, தேனி, கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் இருந்து நாட்டு மாம்பழங்கள் வரத் தொடங்கிவிடும். இதனால் சீசன் களைகட்டும்.
மே மாதத்தில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து மல்லிகா, ருமானி, ஜவாரி மாம்பழங்கள் வரத் தொடங்கும். அப்போது மாம்பழங்கள் வரத்து அதிகரித்து மாம்பழங்களின் விலை இன்னும் குறையும். ஜூன், ஜூலை மாதம் வரை மாம்பழம் சீசன் நீட்டிக்கும்.
இந்த ஆண்டு சேலம் மாவட்டப் பகுதிகளில் மாம்பழம் விளைச்சல் வழக்கத்தைவிட 10 சதவீதம் அதிகரித்து உள்ளதால் மாம்பழங்கள் வரத்து அதிகமாக காணப்படுகிறது. தற்போது கோயம்பேடு மார்க்கெட்டிற்கு ஒரு நாளைக்கு 150 டன் மாம்பழங்கள் வருகின்றன.
வரும் மே, ஜூன் மாதங்களில் இந்த மாம்பழம் வரத்தானது 250 டன் முதல் 350 டன் வரை அதிகரிக்கும். முன்பெல்லாம் பெரிய லாரிகளில் வந்த மாம்பழங்கள் தற்போது டெம்போக்களில் அதிக அளவில் வருகின்றன.
கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனையாகும் மாம்பழங்களின் விலை நிலவரம் குறித்து மாம்பழ வியாபாரி பாலகிருஷ்ணன் கூறியதாவது:-
அல்போன்சா மாம்பழம் மொத்தமாக கிலோ ரூ.120 -க்கும், சில்லரைக்கு கிலோ ரூ.150-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பங்கனப்பள்ளி கிலோ ரூ.90-க்கும் (மொத்தம்), ரூ.150-க்கும் (சில்லரை) விற்பனை செய்யப்படுகிறது.
இதே போன்று செந்தூரா, இமாம்பசந்த் மாம்பழங்கள் முறையே ரூ.60, ரூ.150 மொத்தமாகவும், ரூ.80, ரூ.180-க்கு சில்லரையாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இது முதல் ரக மாம்பழங்களின் விலை ஆகும். இதைவிட தரம் குறைந்த மாம்பழங்கள் கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை குறைவாக விற்பனை செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோயம்பேடு மார்க்கெட்டில் ஏராளமான பொதுமக்கள் மாம்பழங்களை உற்சாகமாக வாங்கிச் செல்கின்றனர்.
- நாளை ஊட்டி தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா மலை சிகரம் ஆகிய சுற்றுலா தலங்களை பார்வையிடுகிறார்.
- இன்று மாலை முத்தநாடுமந்து பகுதியில் தோடர் இன மக்களை சந்திக்கிறார்.
ஊட்டி:
தமிழக அரசுக்கு போட்டியாக ஆளுநர் ஆர்.என்.ரவி, நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவனில் இன்று, நாளை ஆகிய 2 நாட்கள் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த மாநாட்டில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதற்காக அவர், இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்து, அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் காலை 11.15 மணிக்கு ஊட்டி தீட்டுக்கல் பகுதியில் தரையிறங்குகிறார். அங்கு அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு உயர் அதிகாரிகள் வரவேற்கின்றனர். துணை வேந்தர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளும் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், இன்று மாலை 6 மணிக்கு ஊட்டி அடுத்த முத்தநாடுமந்து பகுதியில் தோடர் இன மக்களை சந்திக்கிறார்.
நாளை ஊட்டி தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா மலை சிகரம் ஆகிய சுற்றுலா தலங்களை பார்வையிடுகிறார். நாளை மறுநாள் ஊட்டியில் இருந்து துணை ஜனாதிபதி விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு கோவை விமான நிலையத்தை சென்றடைகிறார். அதன் பின்னர், அன்று காலை கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் மாணவ-மாணவிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகிறார்.
இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி விமானம் மூலம் கோவை வந்து, அங்கிருந்து கார் மூலம் கோத்தகிரி சாலை மார்க்கமாக நேற்று மாலை 6 மணியளவில் ஊட்டி ராஜ்பவனுக்கு வந்தார். அங்கு அவரை கலெக்டர் லட்சுமி பவ்யா, போலீஸ் சூப்பிரண்டு நிஷா ஆகியோர் வரவேற்றனர். ஆளுநர் வருகையையொட்டி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.
துணை ஜனாதிபதி வருகையையொட்டி நேற்று முன்தினம் ஹெலிகாப்டர் ஒத்திகை நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று பாதுகாப்பு வாகன ஒத்திகை நடைபெற்றது. நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஊட்டி தீட்டுக்கல் ஹெலிகாப்டர் இறங்குதளம், துணை ஜனாதிபதி வரும் சாலை, தாவரவியல் பூங்கா ஆகிய பகுதிகள் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.
நீலகிரியில் உள்ள 16 சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் சந்தேகத்திற்கிடமான வகையில் தங்கி இருப்பவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஓட்டல்களில் தங்கி இருப்பவர்களின் முழு விவரங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
- முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் கணவர் சந்திரசேகர் உடல்நலக் குறைவால் காலமானார்.
- அவரது மறைவுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை:
சென்னை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளருமான கோகுல இந்திராவின் கணவர் சந்திரசேகர் உடல்நலக் குறைவால் காலமானார்.
இந்நிலையில், அவரது மறைவுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை:
அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர், செய்தி தொடர்பாளர், முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா கணவர் சந்திரசேகர் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.
கணவரை இழந்து மிகுந்த வேதனையில் வாடும் கோகுல இந்திராவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், இந்த துயரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், சந்திரசேகர் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
- நாங்கள் கடந்த காலங்களிலும் இதே மாதிரியான நிலையில் இருந்திருக்கிறோம்.
- ஆனால் பிரச்சனைகளை சரிசெய்து அடுத்த ஆண்டே சாம்பியனும் ஆகியிருக்கிறோம்.
சென்னை:
ஐபிஎல் தொடரின் 43-வது லீக் ஆட்டம் சென்னையில் இன்று மாலை நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில், சி.எஸ்.கே. அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அடுத்து வரும் 6 போட்டிகளையும் வென்று பிளே ஆப் சுற்றுக்கு செல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இப்படியொரு நிலையிலிருந்து எப்படி வெல்வது என்பதற்கான புளூ பிரிண்டை ஆர்சிபி அணி கடந்த ஆண்டு அமைத்துக் கொடுத்துள்ளது.
ஒருவேளை நாங்கள் தகுதிபெறாவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கிறோம்.
கடந்த காலங்களிலும் இதே மாதிரியான நிலையில் இருந்திருக்கிறோம். பிரச்சனைகளை சரிசெய்து அடுத்த ஆண்டே சாம்பியனும் ஆகியிருக்கிறோம்.
அடுத்து வரும் அத்தனைப் போட்டிகளையும் எங்களை சரிசெய்து கொள்வதற்கான வாய்ப்பாகத்தான் பார்க்கிறோம். எந்த வாய்ப்பையும் தவறவிடமாட்டோம் என தெரிவித்தார்.
- பஹல்காம் தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உள்பட 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் பரமேஸ்வரன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தத் தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உள்பட 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மேலும், பலர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, பஹல்காம் தாக்குதலில் காயமடைந்த தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் பரமேஸ்வரன்
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், மருத்துவர் பரமேஸ்வரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்பேசியில் தொடர்பு கொண்டு மருத்துவர் பரமேஸ்வரனுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
பரமேஸ்வரன் மனைவியிடம் முதலமைச்சர் பேசினார். அப்போது அவர், தேவையான அனைத்து உதவிகளும் தமிழக அரசு வழங்கும் எனவும் உறுதி அளித்துள்ளார்.
- பிளாஸ்டிக் பொருட்கள் தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் புகை மண்டலமாக காணப்பட்டது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாதவரம்:
புழல் பகுதியில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்களில் தினசரி குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைக் கழிவுகள் புழல், சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலை ஓரத்தில் அங்குள்ள திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் சேகரிக்கப்பட்டு தரம் பிரிக்கப்படுகிறது.
இந்த நிலையில், குப்பைக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த இடத்தில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென குப்பை கிடங்கு முழுவதும் வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
குப்பைக் கழிவுகளில் காய்ந்த ரப்பர், பிளாஸ்டிக் பொருட்கள் தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் புகை மண்டலமாக காணப்பட்டது. தகவல் அறிந்ததும் செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ரசாயனக் கலவையால் பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். குப்பை கழிவில் இரவில் தீப்பிடித்தது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கைதான 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
வண்டலூர்:
கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுப்பகுதியில் கடந்த சில மாதங்களாக தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவம் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூடுவாஞ்சேரி அடுத்த காரணை புதுச்சேரி, ஊரப்பாக்கம் ஆகிய பகுதியில் ஆயிஷா, மகேஷ்வரி, அம்மினி, ஆகிய 3 பெண்களிடம் அடுத்தடுத்து நகைகளை மர்ம நபர்கள் பறித்து தப்பி சென்றனர்.
இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் நகைபறிப்பில் தொடர்புடைய கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள்
நகைபறிப்பு சம்பவம் நடைபெற்ற இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரித்தனர்.
இதில் உத்தரபிரதேச மாநிலம், சாம்லி மாவட்டத்தைச் சேர்ந்த 3 வாலிபர்கள் தொடர்ந்து நகை பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது. மேலும் அவரிகளில் 2 பேர் மீண்டும் நகை பறிப்பில் ஈடுபட சென்னைக்கு ரெயிலில் வந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்தில் சுற்றிய உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த சஞ்சய், சோகான் தபஸ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
அப்போது, போலீசாரிடம் இருந்து தப்பி ஓடியபோது சோகான் தபஸ், தண்டவாளத்தில் தவறி விழுந்தார். இதில் அவரது இடது கை மற்றும் வலது காலில் முறிவு ஏற்பட்டு மாவு கட்டு போடப்பட்டது.
பின்னர் கைதான 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான சூரஜ் என்பவனை போலீசார் தேடி வருகின்றனர்.
- தமிழகத்தில் ஜூன் 16ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் னெ்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
- தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.
தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப்பின் ஜூன் 16ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் னெ்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
2025-2026ம் கல்வியாண்டில் அனைத்து அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஜூன் 16ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வி இயக்குனர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், "தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித்தேர்வு 24ம் தேதி முடியும் நிலையில் 25ம் தேதி முதல் கோடை விடுமுறை விடுக்கப்படுகிறது.
விடைத்தாள் திருத்தும் பணி, தேர்வு முடிவு வெளியிடும் பணி மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு 30ம் தேதி இறுதி வேலை நாள்." என குறிப்பிடப்பட்டுள்ளது.
- பணம் கொடுக்க விருப்பம் இல்லாத சுகுமார் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் அளித்தார்.
- பணத்தை சுகுமாரிடம் கொடுத்து கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுங்கள் என கூறியதாக தெரிகிறது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டி அடுத்து குண்டவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராசு (வயது 39). இவர் பாப்பாபிடி தெற்கு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.
இவரிடம் பாப்பாக்குடி வடக்கு தெருவை சேர்ந்த விவசாயி சுகுமார் (52) என்பவர் தனது நிலத்தின் பட்டா மாறுதல் செய்வதற்காக கேட்டுள்ளார். அதற்கு அவர் பட்டா மாற்றுவதற்கு ரூ.8 ஆயிரம் பணம் தர வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பணம் கொடுக்க விருப்பம் இல்லாத சுகுமார் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரசாயனம் தடவிய ரூ.8 ஆயிரம் பணத்தை சுகுமாரிடம் கொடுத்து கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுங்கள் என கூறியதாக தெரிகிறது.
அலுவலகத்திற்கு சென்ற குமார் பணத்தை வி.ஏ.ஓ. செல்வராசிடம் கொடுத்துள்ளார். அதை அவர் வாங்கியதும் அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் செல்வராசுவை கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர்.
பின்னர் அவரிடமிருந்து ரூ.8 ஆயிரத்தை பறிமுதல் செய்து அலுவலகத்தில் தீவிர சோதனையும் நடத்தினார்கள். அப்பொழுது பட்டா மாற்றம் செய்வதற்காக நீண்ட நாட்களாக வைத்திருந்த சில ஆவணங்கள் மற்றும் மறைத்து வைத்திருந்த ரூ.11 ஆயிரம் பணம் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றி னர்.
கைது செய்யப்பட்ட வி.ஏ.ஓ. செல்வராசு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அரியலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
- ரகசிய வாக்கெடுப்பில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தை வெற்றிப்பெற செய்ய வேண்டும்.
- தொழிலாளர் முன்னேற்ற சங்கம் தனிப்பெரும் சங்கமாக வரவேண்டியது காலத்தின் கட்டாயம்.
என்எல்சியில் நடக்கும் வாக்கெடுப்பில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் எண் 6க்கு வாக்களித்து தனிப்பெரும் சங்கமாக உருவாக்குங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் நடக்க உள்ள ரகசிய வாக்கெடுப்பில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தை வெற்றிப்பெற செய்ய வேண்டும்.
தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தை எண் 6ல் வாக்களித்து தனிப்பெரும் சங்கமாக உருவாக்கி தர வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர், "முக்கிய கோரிக்கைகளை வென்றெடுக்க தொழிலாளர் முன்னேற்ற சங்கம் தனிப்பெரும் சங்கமாக வரவேண்டியது காலத்தின் கட்டாயம்.
தொழிலாளர் வாரிசுகள், நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை போன்றவை உறுதி செய்ய வேண்டிய கடமை நமக்கு உள்ளது என்றும்" அவர் கூறினார்.






