என் மலர்
உள்ளூர் செய்திகள்

பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கி கைதான கிராம நிர்வாக அலுவலர் சிறையில் அடைப்பு
- பணம் கொடுக்க விருப்பம் இல்லாத சுகுமார் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் அளித்தார்.
- பணத்தை சுகுமாரிடம் கொடுத்து கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுங்கள் என கூறியதாக தெரிகிறது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டி அடுத்து குண்டவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராசு (வயது 39). இவர் பாப்பாபிடி தெற்கு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.
இவரிடம் பாப்பாக்குடி வடக்கு தெருவை சேர்ந்த விவசாயி சுகுமார் (52) என்பவர் தனது நிலத்தின் பட்டா மாறுதல் செய்வதற்காக கேட்டுள்ளார். அதற்கு அவர் பட்டா மாற்றுவதற்கு ரூ.8 ஆயிரம் பணம் தர வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பணம் கொடுக்க விருப்பம் இல்லாத சுகுமார் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரசாயனம் தடவிய ரூ.8 ஆயிரம் பணத்தை சுகுமாரிடம் கொடுத்து கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுங்கள் என கூறியதாக தெரிகிறது.
அலுவலகத்திற்கு சென்ற குமார் பணத்தை வி.ஏ.ஓ. செல்வராசிடம் கொடுத்துள்ளார். அதை அவர் வாங்கியதும் அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் செல்வராசுவை கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர்.
பின்னர் அவரிடமிருந்து ரூ.8 ஆயிரத்தை பறிமுதல் செய்து அலுவலகத்தில் தீவிர சோதனையும் நடத்தினார்கள். அப்பொழுது பட்டா மாற்றம் செய்வதற்காக நீண்ட நாட்களாக வைத்திருந்த சில ஆவணங்கள் மற்றும் மறைத்து வைத்திருந்த ரூ.11 ஆயிரம் பணம் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றி னர்.
கைது செய்யப்பட்ட வி.ஏ.ஓ. செல்வராசு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அரியலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.






