என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மதுரையில் நடக்கும் அரசியல் மாநாட்டில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலையும் விஜய் அறிவிக்க திட்டமிட்டுள்ளார்.
    • மதுரையை தொடர்ந்து சென்னை மண்டல பூத் கமிட்டி மாநாட்டை காஞ்சிபுரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை:

    தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார். ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்த விஜய், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுவதாக கூறி வந்தார்.

    தற்போதைய சூழலில் நிர்வாக சீர்கேடுகள், ஊழலை ஒழிக்கவும், சாதி, மத பேதங்களால் மக்களை பிளவுபடுத்த துடிக்கும் கலாச்சாரத்தை தடுக்கவும் அடிப்படை அரசியல் மாற்றத்தை நோக்கி தனது அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்று கூறிவந்த விஜய் மீதான அரசியல் பிரவேச எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதற்கேற்ப தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகளும் இருந்து வருகிறது.

    தனது களப்பணியின் முதல்கட்டமாக விக்கிரவாண்டியில் லட்சக்கணக்கான தொண்டர்களுடன் மாநாட்டை நடத்திய விஜய், சமீபத்தில் பொதுக்குழுவையும் கூட்டினார். வரலாற்று சிறப்புமிக்க தீர்மானங்களை முன்மொழிந்த தமிழக வெற்றிக் கழகத்தின் மீதான எதிர்பார்ப்பு மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது.

    அதிலும் குறிப்பாக முதல் தேர்தலை சந்திக்க உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி என்பது கட்சி தொடங்கிய உடனேயே எழுதப்பட்டு விட்டதாக அதன் தொண்டர்கள் நம்பிக்கையுடன் கூறிவருகிறார்கள். அதனை முன்னெடுத்து செல்லும் வகையில், முதன் முதலாக பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினரை விஜய் சந்தித்தார். பின்னர் இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்காக மண்டல வாரியாக பூத் கமிட்டி மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த மாதம் கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு 2 நாட்கள் பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் விஜய், தனது தொண்டர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை கூறினார். தனித்து போட்டியிட்டு பலத்தை நிரூபிக்க வியூகம் வகுத்து வரும் விஜய், அடுத்த கட்ட பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார்.

    இதற்கிடையே கடந்த மாத இறுதியில் கொடைக்கானலில் நடைபெற்ற தனது கடைசி படமான ஜனநாயகன் படப்பிடிப்பிற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் மதுரைக்கு விஜய் வந்தார். விமான நிலையத்தின் வெளியே திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்களின் வரவேற்பில் நெகிழ்ந்த விஜய், விரைவில் உங்களை சந்திக்கிறேன் என்று கூறிச் சென்றார்.

    இந்தநிலையில் மதுரையில் அடுத்த மாதம் (ஜூன்) பூத் கமிட்டி மாநாடு நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். சமீபத்தில் கொடைக்கானல் வருகை தந்த அவர், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் மதுரையில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் இந்த பூத் கமிட்டி மாநாடு நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும், அதற்கான முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    மதுரை மாநகர் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் கூறியதாவது:-

    தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்று சக்தியாக தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக த.வெ.க. மக்கள் மத்தியில் வெற்றி கொடி நாட்டி உள்ளது. எங்கள் தலைவர் விஜய் மேற்கொண்டுள்ள அரசியல் வியூகங்கள் மற்ற அரசியல் இயக்கங்களுக்கு மாற்றாக மக்கள் விரும்பும் வகையில் அமைந்துள்ளது.

    கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் வரலாற்று சிறப்புமிக்க அளவில் நடத்தப்பட்டது. இப்போது பூத் கமிட்டி கூட்டங்கள் கூட மாநாடு போல நடத் தப்பட்டு வருகிறது. தி.மு.க., அ.தி.மு.க.வை விட சிறந்த முறையில் பூத் கமிட்டி அமைத்துள்ளோம். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 250 பேர் பூத் கமிட்டியில் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இளைஞர்கள். இளைஞர்கள் மத்தியில் தலைவர் விஜய் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார்.

    த.வெ.க. வருகிற 2026 சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெறும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இதற்கான அரசியல் வியூக மாநாடு மதுரையில் செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிடப்படுகிறது. முன்னதாக பூத் கமிட்டி மாநாடும் நடைபெறுகிறது. இதனிடையே தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களையும் கட்சி தலைமை ரகசியமாக தயார் செய்து வருகிறது.

    மதுரையில் நடக்கும் அரசியல் மாநாட்டில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலையும் விஜய் அறிவிக்க திட்டமிட்டுள்ளார். எனவே நிர்வாகிகளும், தொண்டர்களும் இப்போதே சட்டசபை தேர்தல் பணியில் இறங்கி விட்டோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    தற்போது தமிழ்நாட்டில் ஆட்சிப்பொறுப்பில் உள்ள தி.மு.க.வை வீழ்த்துவதில் உறுதியாக இருக்கும் விஜய் அதற்கான வியூகங்களை வகுத்து களப்பணியாற்றி வருகிறார். முன்னதாக தமிழகம் முழுவதும் கட்சி ரீதியாக 120 மாவட்ட செயலாளர்களை நியமித்துள்ள விஜய், 66 ஆயிரம் ஓட்டுச்சாவடிகளுக்கு கட்சி சார்பில் ஏஜெண்டுகளையும் நியமித்து வருகிறார். மதுரையை தொடர்ந்து சென்னை மண்டல பூத் கமிட்டி மாநாட்டை காஞ்சிபுரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ள விஜய், நாளை முதல்கட்டமாக டெல்டா மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதாவது திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, நாகை உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள் நாளை சென்னையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

    இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அந்தந்த மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் பணிகள், நிர்வாகிகள் நியமனம், கட்சியின் வளர்ச்சி மற்றும் பொதுமக்களிடம் எடுத்து செல்லப்பட வேண்டிய விஷயங்கள், அதிக அளவில் இளைஞர்களை த.வெ.க.வில் இணைத்தல், பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான அறிவுரைகள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட செயலாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்களை வழங்க இருக்கிறார். அதே போல் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் விஜய் முக்கிய ஆலோசனைகள் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

    • பெட்ரோல் குண்டு வீசியதில் வீட்டின் வளாகத்தில் இருந்த மின்விசிறி, மின் விளக்கு உள்ளிட்ட சாதனங்கள் சேதம் அடைந்தன.
    • 2 பேர் அடுத்தடுத்து 3 குண்டுகளை வீசுவது சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள கீழ முன்னீர்பள்ளத்தை சேர்ந்தவர் செல்வசங்கர் (வயது 45). இவர் பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க. பொருளாளராக இருந்து வருகிறார்.

    நேற்று இரவு இவர் வழக்கம்போல் குடும்பத்தினருடன் சேர்ந்து சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றார். இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென வீட்டு முன்பு பயங்கர சத்தம் கேட்டது. உடனே வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தபோது தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.

    இதையடுத்து அதனை தண்ணீரை ஊற்றி அணைத்தனர். அப்போது வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வசங்கர் உடனடியாக முன்னீர்பள்ளம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதில் அவரது வீட்டின் வளாகத்தில் இருந்த மின்விசிறி, மின் விளக்கு உள்ளிட்ட சாதனங்கள் சேதம் அடைந்தன.

    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தபோது 4 வாலிபர்கள் அங்கு வந்து செல்வசங்கர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. மர்மநபர்கள் 4 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வருகின்றனர். அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக முகத்தில் துணியை கட்டிக்கொண்டு வரும் அந்த வாலிபர்கள் வீட்டின் முன்புள்ள தெருவில் வைத்து பெட்ரோல் குண்டை பற்ற வைப்பதும், 2 பேர் அடுத்தடுத்து 3 குண்டுகளை வீசுவதும் பதிவாகி உள்ளது. அந்த காட்சிகளை வைத்து மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    செல்வசங்கர் கட்சி நிகழ்வுகளுக்கு கொடிகள் கட்டும் பணியை மொத்தமாக எடுத்து செய்து வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி. இவர் பாளையங்கோட்டை யூனியன் கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி விட்டது. செல்வசங்கர் அப்பகுதியில் உள்ள செல்லாயி அம்மன் கோவிலில் சாமியாடி வந்துள்ளார்.

    இவர், சமீபத்தில் உடல்நலக்குறைவால் இறந்த பாளையங்கோட்டை யூனியன் சேர்மன் கே.எஸ்.தங்கபாண்டியனின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தவர். ஏதேனும் அரசியல் தொடர்பான பிரச்சனைகளில் அவர் வீட்டின்மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    தி.மு.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை கேள்விப்பட்ட அவரது ஆதரவாளர்கள், பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதனிடையே போலீசாரும் குவிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் கொள்முதல் செய்ய தமிழக அரசு மறுப்பதால் உழவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
    • மத்திய அரசிடம் பேசி கொள்முதல் அளவை குறைந்தது 5 மடங்கு, அதாவது 7,000 டன்களாக தமிழக அரசு அதிகரிக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் பச்சைப்பயறு சாகுபடி மிகப்பெரிய அளவில் செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவற்றை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் கொள்முதல் செய்ய தமிழக அரசு மறுப்பதால் உழவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

    தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பச்சைப்பயறு கொள்முதல் செய்யப்படாததால் உழவர்கள் இழப்பை சந்தித்து கடன் வலையில் சிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

    இதைத் தடுக்க மத்திய அரசிடம் பேசி கொள்முதல் அளவை குறைந்தது 5 மடங்கு, அதாவது 7,000 டன்களாக தமிழக அரசு அதிகரிக்க வேண்டும். இல்லாவிட்டால், தமிழக அரசே அதன் சொந்த செலவில் பச்சைப் பயறை உச்சவரம்பின்றி கொள்முதல் செய்து உழவர்களின் துயரத்தைப் போக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பூக்களை பார்த்து ரசித்து செல்கின்றனர்.
    • நாளை கண்காட்சி தொடங்கியதும் புல்வெளியில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர்.

    ஊட்டி:

    மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்தில் நிலவும் சீதோஷ்ண நிலையை அனுபவிக்கவும், சுற்றுலா தலங்களை பார்வையிடவும் தினமும் இங்கு சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

    அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கோடைவிழா கடந்த 3-ந் தேதி காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது.

    கோடைவிழாவின் சிகர நிகழ்ச்சியான 127-வது மலர் கண்காட்சி ஊட்டி தாவரவியல் பூங்காவில் நாளை தொடங்குகிறது.

    கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, அங்கு வைக்கப்பட்டுள்ள மலர் அலங்காரங்களையும் பார்வையிடுகிறார். நாளை தொடங்கும் கண்காட்சி வருகிற 25-ந் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது.

    கண்காட்சியை முன்னிட்டு, ஊட்டி தாவரவியல் பூங்காவில் 35 ஆயிரம் மலர் தொட்டிகளில் மேரிகோல்டு, பேன்சி, பிக்கோனியா, பால்சன், டேலியா, கிராந்தியம், லில்லி உள்பட பல்வேறு வகையான மலர்களும் பூத்து குலுங்குகின்றன.

    இவை பூங்காவில் உள்ள மலர் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. தற்போது அதில் பூக்கள் பூத்து குலுங்கி கொண்டிருக்கிறது. பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அந்த பூக்களை பார்த்து ரசித்து செல்கின்றனர்.

    கண்காட்சியையொட்டி பூங்காவில் பல வண்ண மலர்கள் மற்றும் பொருட்களை கொண்டு பல்வேறு வகையான அலங்காரங்களும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

    நீலகிரி மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த தோட்டக்கலைத்துறை சார்பில் பல்வேறு அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. பூங்கா முழுவதும் அலங்காரம் செய்யும் பணி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. பூங்காவின் நுழைவு வாயிலில் பல வண்ண மலர்களை கொண்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.

    பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையிலும் பூந்தொட்டிகள் அடுக்கி வைக்கும் பணிகளும் நடக்கிறது.

    தாவரவியல் பூங்காவில் உள்ள புல் மைதானத்தில் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. நாளை கண்காட்சி தொடங்கியதும் புல்வெளியில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர்.

    ஊட்டி மலர் கண்காட்சியை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

    மலர் கண்காட்சியை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வசதிக்காக சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது. அதன்படி கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் மேட்டுப்பாளையத்திற்கு ஊட்டியில் இருந்தும், மேட்டுப்பாளையம், கோவை, திருப்பூர், ஈரோட்டில் இருந்து ஊட்டிக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    இதுதவிர ஊட்டியில் சுற்றுலா பயணிகள் சுற்றி பார்ப்பதற்கு வசதியாக 30 சர்க்கியூட் பஸ்களும் இயக்கப்பட உள்ளது. மலர் கண்காட்சியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.

    • அமெரிக்க தூதரகத்தில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்தார்.
    • போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

    சென்னை:

    சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்தார். இதைத் தொடர்ந்து உஷாரான போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

    இதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது. மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    • எனது ஊரான உடன்குடி காலன்குடியிருப்பு பெருமாள்புரத்தில் கீழத்தெரு என்ற தெரு இருந்தது.
    • கடந்த 20 ஆண்டுகளில் கீழத்தெரு காணாமல் போய்விட்டது.

    சமூக வலைதளமான டிக்டாக் மூலம் பிரபலமானவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது வட்டார மொழியில் பேசும் அவரது பேச்சு பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.

    இதனிடையே, தமிழ் திரைப்படம் ஒன்றில் நடிகர் வடிவேலு எனது கிணற்றை காணவில்லை என போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுப்பார். அதனை போன்று தனது தெருவை காணவில்லை என ஜி.பி. முத்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

    அந்த மனுவில், எனது ஊரான உடன்குடி காலன்குடியிருப்பு பெருமாள்புரத்தில் கீழத்தெரு என்ற தெரு இருந்தது. இந்த பகுதியில் அரசு புறம்போக்கு பாதையாக பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது. இது வருவாய்த்துறை ஆவணங்களில் உள்ளது. ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் கீழத்தெரு காணாமல் போய்விட்டது.

    அந்த தெரு முழுவதும் பல்வேறு தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. பொதுப்பாதையும் அடைக்கப்பட்டுவிட்டது. எனவே அந்த பகுதியில் நில அளவை செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கீழத்தெருவை மீட்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    ஜி.பி.முத்து அளித்த மனுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வீட்டை முற்றுகையிடப்போவதாக ஊர் பொதுமக்கள் கூறியிருந்தனர். இதையடுத்து வீடியோ வெளியிட்டு பேசிய ஜி.பி.முத்து, போலீசார் தனக்கு உதவி செய்யுமாறு வலியுறுத்தி இருந்தார்.

    இந்த நிலையில், ஜி.பி.முத்து வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

    • பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட தேதிக்கு ஒரு நாள் முன்னதாக கடந்த 8-ந்தேதி வெளியானது.
    • சி.பி.எஸ்.இ பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று ஒரே நாளில் வெளியானது.

    சென்னை:

    தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 28-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 15-ந் தேதி வரை நடந்தது.

    இதில் சுமார் 9 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். தேர்வு முடிந்ததும் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடந்தது. தற்போது மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு மே 19-ந்தேதி வெளியிடப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்திருந்தது.

    இதற்கிடையே பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட தேதிக்கு ஒரு நாள் முன்னதாக கடந்த 8-ந்தேதி வெளியானது. அதேபோன்று 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் முன் கூட்டியே வெளியாகலாம் என்று தகவல் வெளியானது.

    மேலும் சி.பி.எஸ்.இ பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று ஒரே நாளில் வெளியானது. இதையடுத்து தமிழக பள்ளிக்கல்வி, 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை முன்கூட்டியே வெளியிட பள்ளி கல்வித்துறை முடிவு செய்தது.

    அதன்படி 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருகிற 16-ந் தேதி வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடந்த 2024-25-ம் கல்வியாண்டிற்கான 10 மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருகிற 16-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியால், அரசு தேர்வுகள் இயக்ககம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் வெளியிடப்பட உள்ளது.

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவை காலை 9 மணிக்கும், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவை பிற்பகல் 2 மணிக்கும் மாணவர்கள் இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம். தேர்வு முடிவுகளை https//results.digilocker.gov.in, www.tnresults.nic.in என்ற இணையதளங்களில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

    தேர்வர்கள் மேற்கண்டு உள்ள இணைய தளங்களில் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

    பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கெள்ளலாம். மேலும் பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளது.

    10 மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 3 நாட்களுக்கு முன்னதாக வெளியிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
    • சன்னதி தெரு, ராம்தாஸ் நகர், சின்ன கோலடி, திருவேங்கடம் நகர், அன்பு நகர், செல்லியம்மன் நகர், தேவி நகர் உள்ளிட்ட பகுதிகள்.

    சென்னை:

    சென்னையில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னையில் நாளை (15.05.2025) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    அதன்படி, எழும்பூர் பகுதிகளான சைடன்ஹாம்ஸ் சாலையின் ஒரு பகுதி, டெப்போ தெரு, பி.டி.முதலி தெரு, சாமி பிள்ளை தெருவின் ஒரு பகுதி, ஏ.பி. சாலை, ஹண்டர்ஸ் லேன், ஜெனரல் காலின்ஸ் சாலை, மேடெக்ஸ் தெரு, வி.வி. கோவில் தெரு, குறவன் குளம், சுப்பஹா நாயுடு தெரு, நேரு ஸ்டேடியம் (வெளிப்புறம் மற்றும் உட்புறம்), அப்பாராவ் கிருஷ்ணா தெரு, ஆண்டியப்பன் தெரு, ஆண்டியப்பன் முதலி தெரு, சூளை பகுதி, கே.பி.பார்க் பகுதி, பெரம்பூர் பேராக்ஸ் சாலை, ரோட்லர் தெரு, காளத்தியப்பா தெரு, விருச்சூர்முத்தையா தெரு, டாலி தெரு, மாணிக்கம் தெரு, ரெங்கையா தெரு ஒரு பகுதி, அஸ்தபுஜம் சாலை ஒரு பகுதி, ராகவா தெரு ஒரு பகுதி. பரிவாக்கம் பகுதியில் காவலன்சேரி, திருமணம் சிடுகாடு, திருக்கோவில்பத்து.

    திருவேற்காடு: தேரோடும் வீதி, சன்னதி தெரு, ராம்தாஸ் நகர், சின்ன கோலடி, திருவேங்கடம் நகர், அன்பு நகர், செல்லியம்மன் நகர், தேவி நகர், காவேரி நகர், சீனிவாசா நகர், அருள் நகர், நடசேனர் நகர், பாரதிநகர், லட்சுமி நகர் பிரிவு I மற்றும் II.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இளம்பெண் பணி முடிந்து வீடு திரும்பியபோது அவரை பின்தொடர்ந்து வந்த நபர் அவரிடம் அத்துமீறி நடந்து உள்ளார்.
    • விசாரணை நடத்திய துரைப்பாக்கம் போலீசார் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த யோகேஸ்வரன் என்ற நபரை கைது செய்தனர்.

    பணி முடிந்து வீடு திரும்பிய பெண்ணை இழுத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை பெருங்குடியில் ஐ.டி. ஊழியரான கேரளாவை சேர்ந்த இளம்பெண் (24) பணி முடிந்து வீடு திரும்பியபோது அவரை பின்தொடர்ந்து வந்த நபர் அவரிடம் அத்துமீறி நடந்து உள்ளார்.

    இளம்பெண்ணின் வாயை மூடி இழுத்துச்சென்ற வாலிபரின் கையை கடித்துவிட்டு இளம்பெண் தப்பி உள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய துரைப்பாக்கம் போலீசார் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த யோகேஸ்வரன் என்ற நபரை கைது செய்தனர். யோகேஸ்வரன் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருகிறார். அவர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கைதான யோகேஸ்வரன் காவல்நிலைய கழிவறையில் வழுக்கி விழுந்ததில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்தனர்.

    • ஜவுளி தொழிலிலும் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
    • மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அலெக்ஸ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    திருச்சி:

    திருச்சி மேல கல்கண்டார்கோட்டை மேகலா தியேட்டர் எதிர்புறம் உள்ள மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 42). இவர் மேல கல்கண்டார் கோட்டை மருதம் அங்காடி பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார்.

    இவரது மனைவி விக்டோரியா (35) ரெயில்வே ஊழியர். இந்த தம்பதியருக்கு ஆராதனா( 9), ஆலியா( 3) ஆகிய 2 பெண் குழந்தைகள். இவர்கள் அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.

    அலெக்ஸ் மேற்கண்ட முகவரியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கீழ கற்கண்டார் கோட்டை மீனாட்சி நகர் பகுதியில் சொந்தமாக ஒரு வீடு வாங்கியதாக கூறப்படுகிறது.

    இதில் அவருக்கு கடன் தொல்லை ஏற்பட்டதாக தெரிகிறது. புதிய வீடு கட்ட வாங்கிய கடனுக்கான தவணை தொகையை அலெக்சின் மாமியார் தனது பென்சன் தொகை மூலமாக செலுத்தி வந்தார்.

    சமீபத்தில் அவர் இறந்துவிட்டார். இதனால் பென்சன் நின்றுபோனது.

    இதற்கிடையே அலெக்ஸ் தஞ்சையில் உள்ள தனது சகோதரர் ஒருவருக்கு கடனுக்கு ஜாமின் கொடுத்து, அதிலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அலெக்சின் தயார் கேன்சரால் பாதிக்கப்பட்டு பல லட்சம் ரூபாய் சிகிச்சைக்கு செலவழிக்க நேரிட்டது.

    இதற்கிடையே ஜவுளி தொழிலிலும் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ஜவுளிக்கடையை மூடியுள்ளார்.

    இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அலெக்ஸ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தான் மட்டும் தற்கொலை செய்தாலும் கடன்காரர்கள் மனைவி, குழந்தைகளை தொந்தரவு செய்வார்களே என கருதிய அவர் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

    நேற்று இரவு கணவன், மனைவி இருவரும் குழந்தைகள் ஆராதனா, ஆலியா ஆகியோருக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்தனர். இதில் சிறிது நேரத்தில் அந்த குழந்தைகள் இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    பின்னர் குழந்தைகளின் அதே அறையில் அலெக்ஸ் மின்விசிறி கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். பக்கத்து அறையில் விக்டோரியா தூக்குப்போட்டு தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.

    இன்று காலை வழக்கம் போல் கடன்காரர் ஒருவர் அந்த வீட்டின் கதவை தட்டியுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. எந்த சப்தமும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம்பக்கத்தில் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.

    இது பற்றி தகவல் அறிந்த பொன்மலை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். மேலும் உதவி போலீஸ் கமிஷனர் சதீஷ்குமார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். பின்னர் நான்கு பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கடன் தொல்லை காரணமாக ஜவுளிக்கடை அதிபர் 2 குழந்தைகளை கொன்று மனைவியுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் திருச்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    • பள்ளிக்கல்வியை முடித்தவர்களுக்கு அழகான எதிர்காலத்தை கொடுப்பதுதான கல்லூரி கனவு திட்டம்.
    • இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம்.

    சென்னையில் கல்லூரிக் கனவு 2025 திட்டத்தை தொடங்கி வைத்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * பள்ளிக்கல்வியை முடித்தவர்களுக்கு அழகான எதிர்காலத்தை கொடுப்பதுதான கல்லூரி கனவு திட்டம்.

    * கல்வி மட்டுமே வாழ்க்கையை மாற்றும் சக்தி என்பதை உணர்வு அனைவரும் நன்று பயில வேண்டும்.

    * யார் கூறுவதையும் அப்படியே நம்பாமல் பகுந்தாய்ந்து உணர வேண்டும் என்று பெரியார் கூறியதை கடைப்பிடிப்பவர்கள் இன்றைய மாணவர்கள்.

    * கல்லூரிக் கனவுத்திட்டம் மூலம் ஆண்டுக்கு ஒரு லட்சம் மாணவர்களை கல்லூரிகளில் சேர்க்க நடவடிக்கை.

    * இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம்.

    * புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டங்களால் மாணவ, மாணவிகள் பெருமளவில் பயன்பெறுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 114.45 அடியாக உள்ளது.
    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 38.30 அடியாக உள்ளது. 14 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை.

    கூடலூர்:

    தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கியதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அந்தமானில் தொடங்கிய நிலையில் கேரளாவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    ஆனால் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலையே நிலவி வருகிறது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் மழைப்பொழிவு இல்லாததால் அணைகளுக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்தது.

    குறிப்பாக வைகை அணைக்கு தண்ணீர் வரத்து முற்றிலும் நின்று விட்டது. இதனால் அணையின் நீர்மட்டமும் 53.58 அடியாக சரிந்துள்ளது. மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 2496 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 114.45 அடியாக உள்ளது. 3 கன அடி நீர் வருகிறது. 100 கன அடி நீர் தமிழக பகுதிக்கு திறக்கப்படுகிறது. அணையில் 1635 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 38.30 அடியாக உள்ளது. 14 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 98.23 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சண்முகா நதி அணையின் நீர்மட்டம் 41.70 அடியாக உள்ளது. 6 கன அடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை. மழை எங்கும் இல்லை.

    ×