என் மலர்
உள்ளூர் செய்திகள்
- காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கு இம்மாத இறுதிக்குள் தொகுதி உடன்பாடு மேற்கொள்ள தி.மு.க. முடிவு செய்துள்ளது.
- அமைச்சர் உதயநிதி 40 தொகுதிகளுக்கும் ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்வார் என மூத்த நிர்வாகிகள் கூறினார்கள்.
சென்னை:
நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் 2024 பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தீவிரமாக தயாராகி வருகின்றன.
அந்த வகையில் தமிழகத்தின் பிரதான கட்சியான தி.மு.க.வும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி பணிகளை துவக்கி விட்டது.
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் கைப்பற்ற பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் உள்ள 65 ஆயிரம் வாக்குச்சாவடிகளுக்கும் தி.மு.க. சார்பில் பி.எல்.2 முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுடன் இணைந்து பணியாற்றும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மண்டலம் வாரியாக அழைத்து தேர்தலில் பணியாற்றுவது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கி இருந்தார்.
இதன் அடுத்த கட்டமாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி வீடு வீடாக திண்ணை பிரசாரம் செய்யும்படி கட்சியினருக்கு கட்டளையிட்டார். அந்த பிரசாரமும் துவங்கி விட்டது.
தேர்தலுக்கான கட்சி பிரசாரத்தை தொடங்கி விட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கி கொடுக்கும் பணியில் இப்போது ஈடுபட்டு வருகிறார்.
அதன் அடிப்படையில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் ஆகிய கட்சிகளுடன் சுமூக உடன்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளுக்கு தி.மு.க.கூட்டணியில் தொகுதி உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு இன்று உடன்பாடு ஏற்படும் என தெரிகிறது.
காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கு இம்மாத இறுதிக்குள் தொகுதி உடன்பாடு மேற்கொள்ள தி.மு.க. முடிவு செய்துள்ளது.
இதன் அடுத்த கட்டமாக தி.மு.க. வேட்பாளர் பட்டியலை மார்ச் 10-ந்தேதிக்குள் அறிவிக்க உள்ளதாக தெரிகிறது. இதற்காக தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் முக்கிய ஊர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.
இதற்காக மண்டல வாரியாக பொதுக்கூட்டங்கள் நடத்த தி.மு.க. ஏற்பாடு செய்து வருகிறது. டெல்டா மண்டலம், தென் மண்டலம், மேற்கு மண்டலம், வடக்கு மண்டலம், சென்னை மண்டலம் என 5 மண்டலங்களுக்கும் சென்று பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய உள்ளார். தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை, ஒரே மேடையில் அமர வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச உள்ளார்.
இதற்கான சுற்றுப் பயண திட்டம் தயாராகி வருகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஊர்களுக்கு சென்று பிரசாரம் செய்யும் அதே வேளையில் இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி 40 தொகுதிகளுக்கும் ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்வார் என மூத்த நிர்வாகிகள் கூறினார்கள்.
பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக தி.மு.க.வின் பிரசாரம் படு வேகமாக இருக்கும் என்றும் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசின் செயல்பாட்டை மக்களிடம் எடுத்து கூறுவதே பிரசாரத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும் என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- தேர்தல் நேரத்தில் ஒன்றிய அரசு என பேசாமல் ஆட்சியில் அமர்ந்ததும் ஒன்றிய அரசு என்று பிரிவினை சித்தாந்தத்தை விதைத்து வருகிறார்.
- பேரிடர் மேலாண்மை விதிகளின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு ஏற்கனவே விடுவிடுத்துள்ளது.
கோவை:
கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2019 பாராளுமன்ற தேர்தல் போல மோடி எதிர்ப்பலையை கட்டமைக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவதூறு பரப்பி வருகிறார்.
முதல்-அமைச்சராக பொறுப்பேற்றது முதல் மத்திய அரசுடன் தேவையற்ற மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார்.
தேர்தல் நேரத்தில் ஒன்றிய அரசு என பேசாமல் ஆட்சியில் அமர்ந்ததும் ஒன்றிய அரசு என்று பிரிவினை சித்தாந்தத்தை விதைத்து வருகிறார்.
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி தான் பா.ஜ.க அரசின் தாரக மந்திரம். நிதி ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளின் படியே அனைத்து மாநிலங்களுக்கும் நிதி வழங்கப்படுகிறது.
பேரிடர் மேலாண்மை விதிகளின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு ஏற்கனவே விடுவிடுத்துள்ளது.
இதுவரை ரூ.1000 கோடி வழங்கப்பட்டுள்ளது. மழை வெள்ள பாதிப்புகளை ஆராய வந்த மத்திய குழுவின் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு கூடுதல் நிதி வழங்கும்.
மக்களவை தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் போது பாதிப்பு ஏற்படும் என கருதும் மாநிலங்கள் அவர்களின் கருத்துக்களை ஆதாரங்களுடன் முன்வைத்தால் பாதிப்புகளை தடுக்க முடியும் என்று தான் மத்திய நிதி மந்திரி கூறினார்.
ஆனால் இதனை வெள்ள நிவாரணத்துடன் தொடர்புபடுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திசை திருப்பி மக்களை ஏமாற்றுவதற்காகவே மத்திய அரசு மீது அவதூறு பரப்பி வருகிறார்.
ஊழல், குடும்ப ஆட்சியின் அவலங்களால் தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
அதனை திசை திருப்பி மக்களை ஏமாற்றுவதற்காகவே மத்திய அரசு மீது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திரும்ப, திரும்ப அவதூறு பரப்பி வருகிறார்.
தமிழக மக்கள் என்றும் தேசியத்தின் பக்கம் தான் என்பது வரும் மக்களவை தேர்தல் முடிவுகளில் தெரியவரும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத் மற்றும் முக்கிய நகரங்களில் வெப்ப நிலை உயர்ந்து வருவதால் மது பிரியர்கள் அதிக அளவில் பீர் குடிக்க தொடங்கி விட்டனர்.
- தெலுங்கானா மாநிலம் முழுவதும் உள்ள மதுக்கடைகளில் பீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சென்னை:
டாஸ்மாக் மதுக்கடைகளில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மதுபான ஆலைகளில் இருந்து பீர் வகைகள் வாங்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சூப்பர் ஸ்ட்ராங் பீர், கோல்டு பிரீமியம், லேகர் பீர், கிங்பிஷர் ஸ்ட்ராங் பீர், பிரீமியம் பீர், கிளாசிக் பீர், மேக்மை ஸ்ட்ராங் பீர், எஸ்.என்.ஜே. 10 ஆயிரம் டீலர்ஸ் சூப்பர் ஸ்ட்ராங் பீர், கோல்டு கெஸ்ட்ரா, ஸ்ட்ராங் பீர், ஹண்டர் வூட்பெக்கர், பவர் கூல் உள்பட 35 வகையான பீர் வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு தமிழ்நாடு முழுவதும் தினமும் 50 லட்சம் பெட்டிகளுக்கு மேல் பீர் விற்பனையாகிறது. கோடை காலம் வந்து விட்டதால் பீர் விற்பனை இன்னும் அதிகரித்து வருகிறது. இதனால் தினமும் 65 லட்சம் பெட்டி அளவுக்கு பீர் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுவும் கூலிங் பீர் வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் கேட்டு வாங்குகிறார்கள். அதற்கேற்ப டாஸ்மாக் கடைகளில் கூலிங் பீர் தட்டுப்பாடின்றி வினியோகிக்கிறார்கள்.
தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத் மற்றும் முக்கிய நகரங்களில் வெப்ப நிலை உயர்ந்து வருவதால் மது பிரியர்கள் அதிக அளவில் பீர் குடிக்க தொடங்கி விட்டனர். இதனால் தெலுங்கானா மாநிலம் முழுவதும் உள்ள மதுக்கடைகளில் பீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கிராம பகுதிகளில் உள்ள மதுக்கடைகளில் பீர் முழுமையான அளவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிமகன்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
இதுபோன்ற நிலை தமிழகத்தில் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மது ஆலைகளில் இருந்து அதிகளவு பீர் கொள்முதல் செய்யப்பட்டு டாஸ்மாக் கடைகளுக்கு பீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் ஒரு வாரத்துக்கு தேவையான பீர் இருப்பு வைக்கப்பட்டு, தட்டுப்பாடின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து டாஸ்மாக் விற்பனையாளர்கள் கூறுகையில், இதற்கு முன்பு மது குடிப்பவர்கள் குறிப்பிட்ட ரக மதுபானங்களை வாங்கி குடிப்பது வழக்கம். மற்ற ரக பீர்களை குடித்தால் தலை வலிக்கும் என்று வாங்க மாட்டார்கள்.
ஆனால் இப்போது அப்படி அல்ல. எந்த ரகமாக இருந்தாலும் வாங்கி குடிக்கிறார்கள். அவர்களுக்கு போதை ஏற வேண்டும். அதுதான் நோக்கம். இதனால் ஒரு பிராண்ட் இல்லாவிட்டால் வேறொரு பிராண்டை வாங்கிச் சென்று குடிக்கிறார்கள். குடிகாரர்களின் மனநிலை மாறிவிட்டது. 5 வருடத்துக்கு முன்பு குடித்தவர்கள் மனநிலை வேறு விதமாக இருந்தது. இப்போது மனநிலை வேறு விதமாக உள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் போதைக்கு அடிமையாகி கிடைத்த சரக்கை வாங்கி குடிக்கிறார்கள்.
இதனால் மது தட்டுப்பாடு என்ற நிலை வரவில்லை. டாஸ்மாக் நிர்வாகமும் தேவைக்கு அதிகமாக கொள்முதல் செய்து ஒரு வாரம் இருப்பு வைக்கும் அளவுக்கு சரக்கை அனுப்புகிறார்கள். இதனால் பீர் தட்டுப்பாடு தமிழகத்தில் ஏற்பட வாய்ப்பில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- பொங்கல் என்பது அறுவடைத் திருநாள்.
- சத்குருவின் வழிகாட்டுதலில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இருவேறு சாதனாக்களும் விரதங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஆன்மீக பாதையில் பயணிப்பவர்களுக்கு உத்தராயண காலம் என்பது மிகவும் முக்கியமான காலம் . பூமியின் வடக்கு பாகத்தில், சூரியன் பயணிக்கும் 6 மாத காலகட்டத்தை உத்தராயணம் என்று குறிப்பிடுகிறோம்.
அருளையும் ஞானத்தையும் உள்வாங்கிக் கொள்வதற்கு இது மிகச் சரியான நேரம். அதிலும் குறிப்பாக உத்தராயணத்தின் முதல் பாதி அதாவது மார்ச் மாதம் முடியும் வரை அதிகபட்சமான அருளைப் பெறுவதற்கு மிகச் சிறப்பான நேரம்.
தட்சிணாயணம் தூய்மைப்படுத்துவதற்கானது. உத்தராயணம் ஞானமடைதலுக்கானது. இது உள்வாங்குதலுக்கான காலம், அருளைப் பெறுவதற்கும் ஞானமடைவதற்கும் உகந்தது, மற்றும் உச்சபட்ச தன்மையை எட்டுவதற்கான காலம் இந்த நேரத்தில் விவசாய அறுவடையும் நடைபெறுகிறது.
பொங்கல் என்பது அறுவடைத் திருநாள். ஆகவே, இது உணவு தானியங்களை அறுவடை செய்வதற்கான காலம் மட்டுமன்றி, மனித ஆற்றலை அறுவடை செய்வதற்கும் உகந்த காலமாக இருக்கிறது. இப்படிப்பட்ட உத்தராயணத்தின் தொடக்கத்தில், விழிப்புணர்வுடன் அருளை உள்வாங்கும் தன்மையை மக்களிடம் அதிகரிப்பதற்காக ஈஷாவில் குறிப்பிட்ட ஒரு வாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. அது தான் சிவாங்கா சாதனா. சத்குருவின் வழிகாட்டுதலில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இருவேறு சாதனாக்களும் விரதங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த சாதானாவில் இருக்கும் பெண்கள் 21 நாட்கள் விரதமிருந்து, மாலை அணிந்து மிக விசேஷமான தைப்பூச தினத்தன்று தேவி லிங்கபைரவியை தரிசித்து, தொழுது விரதத்தை பூர்த்தி செய்வார்கள். ஆண்களோ, 42 நாட்கள் விரதமிருந்து மஹாசிவராத்திரி இரவில் வெள்ளியங்கிரி மலையில் யாத்திரை செய்து மறுநாள் காலை தியானலிங்க வளாகத்தில் விரதத்தை நிறைவு செய்வார்கள். இந்த வாய்ப்பு அருள் தேடும் அனைவருக்கும்– ஈஷாவில் வகுப்பு செய்தோர், செய்யாதவர், எல்லோருக்கும் வழங்கப்படுகிறது.
சிவாங்கா சாதனாவின் அடுத்த தீட்சை குறித்த கூடுதல் தகவல்களுக்கு +9183000 83111 என்ற எண்ணையும், info@shivanga.org என்கிற மின்னஞ்சலையும் தொடர்பு கொள்ளலாம் மேலும் சிவாங்கா சாதனாவில் பங்கேற்ற தன்னார்வலர்கள் ஆதியோகி ரத யாத்திரையிலும் பங்கேற்று வருகின்றனர். ஆதியோகி ரதயாத்திரையானது தற்போது தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் வலம் வந்த வண்ணம் உள்ளது. இது மார்ச் 8 ஆம் தேதி மஹாசிவராத்திரி அன்று கோவையில் உள்ள ஈஷா யோக மையத்தை வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாலகுமார் உள்ளிட்ட 8 பேர் விசைபடகின் மூலம் ஆத்மநாதன் பைபர் படகில் வேகமாக மோதினர்.
- கடலில் விழுந்து மாயமான காலாத்திநாதனை சகமீனவர்கள், கடலோர காவல் படையினர் தேடி வருகிறார்கள்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுக பகுதியை சேர்ந்தவர்கள் ஆத்மநாதன் (வயது 33), சிவநேசசெல்வம் (25), காலாத்திநாதன் (22). 3 பேரும் சகோதர்கள். இவர்கள் நேற்றிரவு பைபர் படகில் நாகை துறைமுகத்திற்கு கிழக்கே சுமார் 2 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது நாகப்பட்டினம் கீச்சாங்குப்பம் பகுதியை சேர்ந்த பாலகுமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீதர், காளியப்பன், பாலகிருஷ்ணன், வேலாயுதம், மாரியப்பன், கண்ணன், தண்டயுதபாணி, பாலகுமார் உள்ளிட்ட 8 பேர் விசைபடகில் அங்கு மீன் பிடிக்க வந்தனர். பின்னர் ஆத்மநாதன் மீன் பிடிப்பதற்காக கடலில் விரித்து வைத்திருந்த வலையை அறுத்து விட்டு சென்றனர். இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் அது கோஷ்டி மோதலாக உருவெடுத்தது.
இதில் ஆத்திரமடைந்த பாலகுமார் உள்ளிட்ட 8 பேர் விசைபடகின் மூலம் ஆத்மநாதன் பைபர் படகில் வேகமாக மோதினர். இதனால் பைபர் படகு நடுகடலில் கவிழ்ந்தது. அதில் இருந்த ஆத்மநாதன், சிவநேசசெல்வம், காலாத்திநாதன் ஆகிய 3 பேரும் கடலில் விழுந்து தத்தளித்தனர். கடலில் விழுந்தவர்கள் கவிழ்ந்த பைபர் படகை பிடித்து கொண்டு நீந்தினர். இதைத் தொடர்ந்து பாலகுமார் உள்ளிட்ட 8 பேரும், கடலில் தத்தளித்த 3 பேரையும் பயங்கர ஆயுதங்களால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இந்நிலையில் அங்கு மீன் பிடித்து கொண்டிருந்த நம்பியார்நகரை சேர்ந்த மீனவர்கள், கடலில் தத்தளித்தவர்களை மீட்க வந்தனர். இதற்குள் கடலில் விழுந்த காலாத்திநாதன் மாயமானார். இதைத் தொடர்ந்து ஆத்மநாதன், சிவநேசசெல்வம் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவநேசசெல்வம் இறந்தார். ஆத்மநாதனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீதர், காளியப்பன், பாலகிருஷ்ணன், வேலாயுதம், மாரியப்பன், கண்ணன், தண்டயுதபாணி உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். பாலகுமார் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
மேலும் கடலில் விழுந்து மாயமான காலாத்திநாதனை சகமீனவர்கள், கடலோர காவல் படையினர் தேடி வருகிறார்கள். அசம்பாவிதங்களை தடுக்க 2 கிராமத்திலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கோஷ்டி மோதலில் மீனவர் ஒருவர் இறந்தது, கடலில் விழுந்து மீனவர் மாயம் ஆகிய சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தால் மீனவர்கள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.
- ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ. காதர் பாட்சா முத்துராமலிங்கம் அங்கு சென்று மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ராமேசுவரம்:
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமேசுவரத்தை சேர்ந்த 5 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தில் நேற்று முன்தினம் முதல் மீனவர்கள் சாகும் வரை தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினா். அப்போது இலங்கை கடற்படை பறிமுதல் செய்த 151 தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த போராட்டத்தின்போது வலியுறுத்தினர்.
இந்த போராட்டம் நேற்று 2-வது நாளாக தொடர்ந்தது. இதில் ஏராளமான மீனவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரத்தில் மீனவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் 8-வது நாளை எட்டி உள்ளது.
இதனால் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் 8-வது நாளாக நேற்று மீன் பிடிக்க செல்லாமல் துறைமுக கடல் பகுதியில் அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டன. காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தால் மீனவர்கள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.
இதற்கிடையே நேற்று மாலையில் ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ. காதர் பாட்சா முத்துராமலிங்கம் அங்கு சென்று மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து எம்.எல்.ஏ.வின் சமாதான பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொண்ட மீனவர்கள், கடந்த 2 நாள் நடந்த உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். அதேபோல் இன்று(திங்கட்கிழமை) ஆலோசனை கூட்டம் நடத்தி அதன்பின்னர் கடலுக்கு மீன்பிடிக்க செல்வது என விசைப்படகு மீனவர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.
- விஜய பிரபாகரன் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட தேமுதிகவினர் தீர்மானம்
- திருமங்கலத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட தேமுதிகவினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.
தேமுதிகவின் மதுரை புறநகர் தெற்கு மாவட்டத்தின் சார்பாக மதுரை திருமங்கலத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், விஜயகாந்தின் மனைவியும் தேமுதிகவின் பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த், நாடாளுமன்ற கூட்டணி தொடர்பாக கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் மதுரை புறநகர் தெற்கு மாவட்டத்தின் சார்பாக மதுரை திருமங்கலத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விஜய பிரபாகரன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டுமென தேமுதிகவினர் விருப்பங்களை தெரிவித்தனர். பின்னர் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டியிட வேண்டுமென தேமுதிகவினர் தீர்மானம் நிறைவேற்றினர்.
- காலிறுதிப் போட்டியில் சௌராஷ்டிரா அணியைவீழ்த்தி, 7 ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது தமிழ்நாடு அணி
- தமிழ்நாடு கேப்டன் சாய் கிஷோர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்
கோவையில் நடந்த ரஞ்சி கோப்பை தொடரின் காலிறுதிப் போட்டியில் சௌராஷ்டிரா அணியை வீழ்த்தி, 7 ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதிப் போட்டிக்கு தமிழ்நாடு அணி முன்னேறியது
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் விதர்பா, கர்நாடகா, மும்பை, பரோடா, தமிழ்நாடு, சவுராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட 8 அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறின.
இந்நிலையில் இன்று நடைபெற்ற மூன்றாவது காலிறுதி போட்டியில் தமிழக அணி சவுராஷ்டிராவை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சவுராஷ்ட்ரா அணி கேப்டன் ஜெய்தேவ் உனத்கட் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதல் இன்னிங்சில் களமிறங்கிய சவுராஷ்டிரா அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதில் அதிகபட்சமாக ஹர்விக் தேசாய் 83 ரன்கள் எடுத்தார். தமிழ்நாடு அணி தரப்பில் கேப்டன் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகள், அஜித் ராம் 3 விக்கெட், சந்தீப் வாரியர் 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழக அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 338 ரன்கள் குவித்தது. இதன் மூலம் தமிழக அணி 155 ரன்கள் முன்னிலையில் இருந்தது. தமிழக அணி சார்பில் பாபா இந்திரஜித் 80 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 155 ரன்கள் பின்னிலையுடன் தனது 2-வது இன்னிங்சை சவுராஷ்டிரா அணி தொடங்கியது.
2-வது இன்னிங்க்சை தொடங்கிய சவுராஷ்டிரா வீரர்கள் தமிழகத்தின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் சவுராஷ்டிரா அணி 75.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 122 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால தமிழக அணி 33 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது
இப்போட்டியில் 9 விக்கெட்டுகள் எடுத்து, முதல் இன்னிங்ஸில் 60 ரன்களையும் குவித்து அதிரடி காட்டிய தமிழ்நாடு கேப்டன் சாய் கிஷோர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
- பல்வேறு அரசியல் கட்சியினரும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வந்தனர்.
- நில எடுப்புக்கு தனியாக அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
காஞ்சிபுரம்:
சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்காக சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 5250 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில் 1500 ஏக்கர் அரசு நிலம் ஆகும். மீதி உள்ளவை பட்டா நிலங்கள் ஆகும்.
விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் புதிய விமான நிலைய அறிவிப்பு வெளியான நாள் முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் விமான நிலைய எதிர்ப்பு குழுவையும் உருவாக்கி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வந்தனர்.
இதற்கிடையே விமான நிலையம் அமைய உள்ள இடத்தில் நிலங்களை கையகப்படுத்துவதற்கான நிர்வாக அனுமதியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசு வழங்கி உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து நில எடுப்புக்கு தனியாக அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் பரந்தூர் விமானநிலையத்துக்கு முதல் கட்டமாக நிலம் எடுப்பதற்காக அறிவிப்பை அரசு வெளியிட்டு உள்ளது. பொடாவூர் கிராமத்தில் 218 பேரிடம் இருந்து 93 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த இடங்களில் 566 பனை மரங்கள் மற்றும் காட்டுவாமரம், அரசமரம், மாமரம், வேப்பமரம், தைலமரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பட்டாதாரர்களுக்கு விரைவில் நோட்டீஸ் அனுப்பப்பட இருக்கிறது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
பரந்தூர் விமான நிலைய பணிக்கு முதல் கட்டமாக பொடாபூர் கிராமத்தில் 218 பேரிடம் இருந்து 93 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான பொது அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. நிலத்தின் உரிமையாளர்களுக்கு தனித்தனியே நோட்டீஸ் தரப்படும். அவர்கள் 30 நாட்களுக்குள் ஆட்சேபனை தெரிவிக்கலாம். அதன்மீது ஏப்ரல் மாதம் 4-ந்தேதி விசாரணை மேற் கொள்ளப்படும். அரசு அறிவித்தபடி நிலம் வழங்கு வோருக்கு சந்தை மதிப்பை விடம கூடுதல் இழப்பீடு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பு வெளியான நிலையில் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினர் இன்று இது தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளனர். கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை தொடர்ந்து அடுத்த கட்ட போராட்டம் நடைபெறும் என அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
- வணிகர் பாதுகாப்பு குறித்து அரசு சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்.
- ஜி.எஸ்.டி.வரி விதிப்பு முறையில் 18, 12, 28 என்ற முறையை மாற்றி ஒரே முறை வரியாக மாற்றிட வேண்டும்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம்-வேண்பாக்கம் வியாபாரிகள் சங்க தலைவர் சுரேஷ் குமார். இவரது மகன் விக்னேஷ்குமார்-உமா மகேஸ்வரி திருமணம் பொன்னேரியில் உள்ள திருமணமண்டபத்தில் நடைபெற்றது.
மணமக்களை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வாழ்த்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மாநகராட்சிகளில் கடைகளுக்கு உரிமம் பெற கட்டிட உரிமையாளர் வரி கட்டியிருக்க வேண்டும் என்று அறிவித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல. கடைகளுக்கு நிபந்தனைகள் ஏதுமின்றி உரிமம் தர வேண்டும். கடையை காலி செய்ய வேண்டுமென்றால் கட்டிட உரிமையாளர் வேண்டுமென்றே வரியை கட்டாமல் கடைக்கு சீல் வைக்கும் ஆபத்து உள்ளது.
ஜி.எஸ்.டி.வரி விதிப்பு முறையில் 18, 12, 28 என்ற முறையை மாற்றி ஒரே முறை வரியாக மாற்றிட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் வைத்து வருகிறோம். மே மாதம் புதிய அரசு அமைந்தவுடன் மீண்டும் சென்று வலியுறுத்த உள்ளோம். ஒட்டு மொத்தமாக 30 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. அரிசி விலை கடுமையாக ஏறியுள்ளது. பூண்டு விலை தற்போது சரிந்து வருகிறது.
வணிகர்களின் கோரிக்கைகளை ஏற்கும் அரசியல் கட்சி குறித்து ஆய்வு செய்து பாராளுமன்ற தேர்தலில் வணிகர்கள் சங்க பேரமைப்பு ஆதரவு அளிக்கும். கடைகளுக்குள் புகுந்து வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலிடம் இருந்து பாதுகாப்பு குறித்து மே மாதம் நடைபெற்ற உள்ள வணிகர்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
வணிகர் பாதுகாப்பு குறித்து அரசு சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். 24 மணி நேரம் கடையை திறக்கலாம் என்று முதலமைச்சர் அறிவித்துள்ள நிலையில் போலீசார் கடைகளை மூட நிர்பந்திப்பது அபத்தமானது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பேரமைப்பு தலைவர் வில்லியம்ஸ், நந்தன், எஸ்.வி, முருகன், மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன், மாவட்ட கூடுதல் செயலாளர் முருகன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம் பால்ராஜ், கேசவன், ரமேஷ் கண்ணன், செங்குன்றம் வியாபாரிகள் சங்கதலைவர் செல்வகுமார், செல்லதுரை, அப்துல், காதர், வேலு, ஆச்சாரி, பால் பாண்டி, பாலகிருஷ்ணன், அஜிஸ், யுவராஜ், திராஜிதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- வாக்கு எந்திரத்தை வைத்து தேர்தல் நடக்கும்போது முடிவு மக்கள் கையில் இருக்காது.
- தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் நடக்கும் போதும் நிச்சயமாக எங்கள் கட்சி போட்டியிடும்.
கே.கே.நகர்:
திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடும். நான் போட்டியிட போவதில்லை. ஜாதியின் அடிப்படையில் வேட்பாளருக்கு வாய்ப்பளிக்கிறேன். ஆதி தமிழ் குடிமக்களை அங்கீகரிக்க வேண்டும் என்கிற நோக்கில் அதை செய்கிறோம்.
தனித்தொகுதி என்பது இல்லை என்றால் இங்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கு வேட்பாளராக போட்டியிட வாய்ப்பே இருக்காது. அரசியல் அதிகாரம், அங்கீகாரம் இல்லாமல் இருப்பவருக்கு நாங்கள் வாய்ப்பளிக்கிறோம். நிராகரிக்கப்பட்டவர்களை முன்னேற்றுவது தான் சமூக நீதி.
நாட்டை அரை நூற்றாண்டு காலம் ஆண்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி தற்பொழுது ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்கிறார். இவ்வளவு நாள் அவர் என்ன செய்து கொண்டு இருந்தார்? தேர்தல் வரும் பொழுது அனைவர் மீதும் பாசம் வருகிறது. இவை அனைத்தும் நாடகங்கள். வாக்களித்து தேர்ந்தெடுத்த தமிழக மக்களை வாழவைக்காமல், இந்திய மக்களை வாழவைக்க ஸ்டாலின் புறப்பட்டு விட்டார். நான் ஆட்சியில் அமர்ந்த பின்பு மீனவர்கள் மீது முடிந்தால் யாராவது தொட்டுப் பார்க்கட்டும்.
காங்கிரஸ் கட்சி இனி இருக்காது, அதனால் பா.ஜ.க.விற்கு செல்லலாம் என்கிற நினைப்பில் விஜயதாரணி அங்கு சென்று இருக்கலாம். காங்கிரஸ் கட்சியாவது அவருக்கு 3 முறை எம்.எல்.ஏ சீட்டு வழங்கியது. ஆனால் பா.ஜ.க.வை பொறுத்தவரை அக்கட்சியில் சேரும்போது ஏதாவது செய்வார்கள். அதன்பின் எந்த செய்தியும் வராது.
வாக்கு எந்திரத்தை வைத்து தேர்தல் நடக்கும்போது முடிவு மக்கள் கையில் இருக்காது. பா.ஜ.க.வினர் ஒரு கையில் நோட்டு பெட்டியும் மற்றொரு கையில் வாக்கு பெட்டியும் வைத்துள்ளார்கள். அவர்கள் எத்தனை சீட்டு வெல்வோம் என கூறுகிறார்களோ அத்தனையும் வெல்வார்கள். நாம் தமிழர் கட்சியை கூட்டணியில் சேர பல்வேறு கட்சியில் இருந்து அழைப்பு வருகிறது. என்னிடம் ரகசியமாக பேசுகிறார்கள். நானும் அதை ரகசியமாக வைத்துள்ளேன். அதை வெளிப்படையாக கூறுவது மாண்பாக இருக்காது. வேட்பாளர் அறிவித்த பிறகு எங்கள் நிலைப்பாட்டை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
வாக்கு எந்திரத்தை நமக்கு தயாரித்து தருவது ஜப்பான். ஆனால் அந்த நாட்டு தேர்தலிலேயே அதை பயன்படுத்துவதில்லை.
நீட் தேர்வு எழுத செல்லும் மாணவிகளின் தோடு, மூக்குத்தி உள்ளிட்டவற்றில் விடைகளை மறைத்து வைத்து எடுத்துச் செல்ல முடியும் என கூறுகிறார்கள். ஆனால் இவ்வளவு பெரிய வாக்கு எந்திரத்தில் எதுவும் செய்ய முடியாது என அவர்களே தெரிவிக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் நடக்கும் போதும் நிச்சயமாக எங்கள் கட்சி போட்டியிடும் என்று கூறினார்.
- இன்று காலை 11 மணிக்கு தண்டவாள பராமரிப்பு பணிகள் தொடங்கின.
- பயணிகள் மாநகர பஸ்கள் மற்றும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
சென்னை:
சென்னை கோடம்பாக்கம்-தாம்பரம் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்றன. இதன் காரணமாக அன்று 44 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக பஸ்கள் மற்றும் மெட்ரோ ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதையடுத்து பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு கூடுதல் பஸ்கள் மற்றும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டன.
இந்த நிலையில் இன்றும் கோடம்பாக்கம்-தாம்பரம் இடையே காலை 11 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்றும், அந்த நேரத்தில் 44 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 11 மணிக்கு தண்டவாள பராமரிப்பு பணிகள் தொடங்கின.
இதையடுத்து சென்னை கடற்கரை- தாம்பரம், செங்கல்பட்டு, கடற்கரை-அரக்கோணம் இடையே இயக்கப்படும் மின்சார ரெயில்களும், மறுவழித்தடத்தில் தாம்பரம்-கடற்கரை, செங்கல்பட்டு-கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரெயில்களும் என 44 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் தவித்தனர். இதையடுத்து பயணிகள் மாநகர பஸ்கள் மற்றும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதன் காரணமாக இன்று மாநகர பஸ்கள் மற்றும் மெட்ரோ ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. எனவே பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 3.15 மணி வரை தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பஸ்களுடன் கூடுதலாக 150 பஸ்கள் பஸ்கள் விடப்பட்டுள்ளன.
பாரிமுனையில் இருந்து அண்ணாசாலை வழியாக தாம்பரம் வரை 60 பஸ்களும், பாரிமுனையில் இருந்து தி.நகர், எழும்பூர் வழியாக தாம்பரம் வரை 20 பஸ்களும், கிண்டியில் இருந்து கிளாம்பாக்கம் வரை 10 பஸ்களும், கொருக்குப்பேட்டையில் இருந்து தாம்பரம் வரை 30 பஸ்களும், பாரிமுனையில் இருந்து கூடுவாஞ்சேரி வரை 20 பஸ்களும், தி.நகரில் இருந்து கூடுவாஞ்சேரி வரை 10 பஸ்களும் கூடுதலாக இயக்கப்பட்டன. இதையடுத்து அந்த பஸ்களில் ஏறி பொதுமக்கள் பயணம் செய்தனர்.
மேலும், பயணிகள் வசதிக்காக தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு காலை 11.55, பகல் 12.45, பகல் 1.25, பகல் 1.45, பகல் 1.55, பிற்பகல் 2.40, பிற்பகல் 2.55 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. மறு வழித்தடத்தில் செங்கல்பட்டில் இருந்து தாம்பரத்துக்கு காலை 9.30, காலை 9.40, காலை 10.55, காலை 11.05, காலை 11.30, பகல் 12, பகல் 1 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன.






