என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ரெயில் வந்ததை அறியாத மூதாட்டி மீது திடீரென்று ரெயில் மோதியது.
- மூதாட்டியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவி ரெயில் நிலையம் பகுதியில் தண்டவாளத்தை மூதாட்டி ஒருவர் கடந்து சென்றார்.
அப்போது ரெயில் வந்ததை அறியாத அந்த மூதாட்டி மீது திடீரென்று ரெயில் மோதியது. இதில் மூதாட்டி உடல் சிதைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்ததில் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்த மூதாட்டி வைத்திருந்த பையில் அவரது வங்கி புத்தகம், ஆதார் அட்டை இருந்துள்ளது.
மேலும், இறந்த மூதாட்டி ஆனந்தூர் அருகே உள்ள ரெட்டிபட்டி கிராமப்பகுதியைச் சேர்ந்த வெங்கட்டன் மனைவி மூக்கியம்மாள் என்பதும், அவர் அரசு வங்கியில் தனது முதியோர் உதவித்தொகை பணத்தை எடுப்பதற்காக ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மூதாட்டியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மூக்கியம்மாள் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை அந்தந்த போலீஸ் நிலையங்களை ஒப்படைத்து வருகின்றனர்.
- கோபிசெட்டி பாளையம் துணை உட்கோட்ட பகுதிகளில் உள்ள 7 போலீஸ் நிலையங்களில் மொத்தம் 291 பேர் உரிமம் பெற்று துப்பாக்கிகள் வைத்துள்ளனர்.
கோபி:
தேர்தல் நடைபெறும் போது உரிமம் பெற்ற துப்பாக்கிகளை போலீஸ் நிலையங்களில் ஒப்படைப்பதற்கு உத்தரவிடப்படுவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை அந்தந்த போலீஸ் நிலையங்களை ஒப்படைத்து வருகின்றனர்.
அந்த வகையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையம் துணை உட்கோட்ட பகுதிகளில் உள்ள 7 போலீஸ் நிலையங்களில் மொத்தம் 291 பேர் உரிமம் பெற்று துப்பாக்கிகள் வைத்துள்ளனர். இந்நிலையில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலையொட்டி அந்தந்த பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் துப்பாக்கிகளை ஒப்படைக்க காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் துணை உட்கோட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் கோபி, கவுந்தப்பாடி, திங்களூர், நம்பியூர், கடத்தூர், வரப்பாளையம், சிறுவலூர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் இதுவரை 111 பேர் தங்கள் வைத்திருக்கும் துப்பாக்கிகளை அந்தந்த பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனர்.
- பெண் கவுன்சிலர் நளினியின் கணவர் குருநாதன், நகராட்சியில் குப்பை எடுக்கும் டெண்டர் எடுத்துள்ளார்.
- குருநாதன் மீது புகார்கள் வந்ததால் இதுபற்றி விளக்கம் கேட்கப்பட்டது.
திருவேற்காடு:
சென்னையை அடுத்த திருவேற்காடு நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. 18 வார்டுகளிலும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றது. அதில் 10-வது வார்டு கவுன்சிலராக நளினி குருநாதன் இருந்தார்.
இந்தநிலையில் பெண் கவுன்சிலர் நளினி குருநாதனை, கவுன்சிலர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து திருவேற்காடு நகராட்சி கமிஷனர் கணேசன் உத்தரவிட்டார். தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தை மீறியதால், சட்ட மீறல்கள் சட்டப்பிரிவு 32-ன் கீழ் கவுன்சிலர் பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக நகராட்சி கமிஷனர் குறிப்பிட்டு இருந்தார்.
தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கான ஆணைகள் சம்பந்தப்பட்ட கவுன்சிலருக்கு அனுப்பி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
பெண் கவுன்சிலர் நளினியின் கணவர் குருநாதன், நகராட்சியில் குப்பை எடுக்கும் டெண்டர் எடுத்துள்ளார். கவுன்சிலரின் குடும்பத்தினரே டெண்டர் எடுப்பது விதிமீறல் ஆகும். மேலும் வேட்பு மனு தாக்கலின் போது உறுதிமொழி பத்திரத்தில் தான் கூலி வேலை செய்து வருவதாக குருநாதன் போலியான தகவலை குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் அவர், கடந்த ஆண்டு தனது வார்டில் எந்தவித பணிகளையும் செய்யவில்லை எனக்கூறி வார்டில் உள்ள பெண்களை அழைத்து வந்து நகராட்சி அலுவலகத்தில் கழிவுநீரை ஊற்றி நகராட்சி கமிஷனர் அறையில் அமர்ந்து அவதூறாக பேசியதாகவும் புகார்கள் வந்தது.
தொடர்ந்து குருநாதன் மீது புகார்கள் வந்ததால் இதுபற்றி விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அளித்த விளக்கம் உண்மையானதாக இல்லை என்பதாலும் பெண் கவுன்சிலர் தகுதிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தான் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தகவல் மற்றும் கடிதம் வருவதை அறிந்த நளினி குருநாதன், தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி தனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்வதாக நகர மன்ற தலைவர் மூர்த்தியிடம் ராஜினாமா கடிதத்தை நேற்று கொடுத்தார்.
கவுன்சிலர் நளினி பதவி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து திருவேற்காடு நகராட்சி இணையதளத்தில் உள்ள கவுன்சிலர்கள் பட்டியலில் இருந்து அவரது புகைப்படம் மற்றும் பதவி உடனடியாக நீக்கப்பட்டது. 10-வது வார்டு காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
- தி.நகர் பசுல்லா சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
- பல்லாவரத்தில் உள்ள கொரியர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
சென்னை:
சென்னையில் இன்று 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
தி.நகர், முகப்பேர், கொளத்தூர், அண்ணாநகர், திருவான்மியூர், அம்பத்தூர், மயிலாப்பூர் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.
தி.நகர் பசுல்லா சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். தேசிய நெடுஞ்சாலையில் பெயிண்ட் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டும் பணிக்கான ஒப்பந்தத்தை எடுத்துள்ள நிறுவனம் மற்றும் கட்டுமான நிறுவனம் ஆகியவற்றில் இந்த சோதனை நடந்தது.
குறிப்பிட்ட அரசியல் கட்சி ஒன்றுக்கு நிதி வழங்கிய விவகாரத்தில் சட்ட விரோத பண பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
12 இடங்களிலும் நடத்தப்பட்ட சோதனையில் அலுவலகங்களில் இருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆவணங்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டன.
இதில் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. சோதனைக்குள்ளாகி இருக்கும் தனியார் நிறுவனத்தின் அதிபர் தமிழக அரசியல் பிரமுகர் ஒருவருக்கு மிகவும் நெருக்கமாக இருப்பவர் என்றும் அவர் மூலமாகவே குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு நிதி அளிக்கப்பட்டிருப்பதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டுள்ள அதிகாரிகள் பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றி இருப்பதாக தெரிகிறது.
இதேபோன்று பல்லாவரத்தில் உள்ள கொரியர் நிறுவனம் ஒன்றிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். சோதனை நடைபெற்ற இடங்களில் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- ஆளுநர் ஆர்.என்.ரவி 16ம் தேதி தான் சென்னை திரும்புகிறார்.
- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை கடிதம் எழுதினார்.
தமிழக ஆளுநர் திடீர் டெல்லி பயணத்தால் அமைச்சராக பொன்முடி பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் பெறப்பட்டதை தொடர்ந்து பொன்முடி எம்எல்ஏவாக தொடர்வார் என சட்டப்பேரவை செயலகம் அறிவிப்பாணை வெளியிட்டது.
இதைதொடர்ந்து, தமிழக அமைச்சரவையில் பொன்முடி இடம்பெறவும், அமைச்சராக பதவி ஏற்கவும், ஆளுநருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை கடிதம் எழுதினார்.
இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை காலை டெல்லிக்கு தீடீர் பயணம் மேற்கொள்கிறார்.
நாளை காலை 7.30 மணிக்கு டெல்லி புறப்படும் ஆளுநர் 16ம் தேதி தான் சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது.
மக்களவை தேர்தலுக்கான தேதி வரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், ஆளுநரின் திடீர் பயணத்தால் பொன்முடி அமைச்சராக பதவி ஏற்பது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து, பதவியேற்புக்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதியும் அவசியம் ஆகும்.
மேலும், தமிழக முதலமைச்சரின் பிரந்துரை கடிதத்தின் மீது ஆளுநர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
- தமிழகத்தில் 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும்.
டாடா மோட்டார்ஸ் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், ரூ.9 ஆயிரம் கோடிக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொழிற்சாலையை அமைக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
டாடா மோட்டார்ஸ் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதில், ரூ.9 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் தமிழகத்தில் 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும்.
இதுபோன்ற ஒரு முதலீடு தொடர்ச்சியாக தமிழகத்திற்கு இதற்கு முன் வந்ததா என்று தெரியவில்லை.
தொழில் முதலீட்டாளர்களை தமிழகம் ஈர்க்க பல்வேறு காரணங்கள் உள்ளன.
தொழில் வளர்ச்சியில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. தொழில் தொடங்க வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகம் நோக்கி வரத் தொடங்கி உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு.
- பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக தொடர்வார் என அறிவிப்பு.
சொத்துக்குவிப்பு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடியை குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னாள் அமைச்சர் பொன்முடி மீண்டும் சட்டப்பேரவை உறுப்பினராக தொடர வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் பெறப்பட்டதை தொடர்ந்து பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருக்கோவிலூர் தொகுதிக்கு முதலில் அறிவிக்கப்பட்ட இதைத்தேர்தல் ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, இன்று மாலை அல்லது நாளை காலை அமைச்சராக பதவியேற்பு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொபர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்ப உள்ளார்.
- தமிழகத்தில் 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புள் உருவாகும்.
- தமிழகத்தில் 2 ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.
தமிழக அரசுடன் டாடா மோட்டார்ஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. சுமார் ரூ.9 ஆயிரம் கோடி இந்த ஒப்பந்தத்தின் மூலம் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம், தமிழகத்தில் 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 மாதங்களில் தமிழகத்தில் 2 ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.
கடந்த மாதம் வின்பாஸ்ட் தொழிற்சாலைக்கு தூத்துக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியது.
இதன் தொடர்ச்சியாக தற்போது, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன், தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
- மண் கடத்தும் கும்பலுக்கும், பேராச்சி செல்விக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேஷ், செல்லத்துரையை கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரியில் கிராம நிர்வாக அதிகாரியாக பேராச்சி செல்வி (வயது 35) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
இவர் நேற்று பணியில் இருந்தபோது அங்குள்ள மறுகால்தலை பரும்பு பகுதியில் அனுமதியின்றி சிலர் சரள் மண் எடுப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
உடனே அவர் வருவாய்த்துறை ஊழியர்களுடன் அங்கு சென்றார். அப்போது மண் கடத்தும் கும்பலுக்கும், பேராச்சி செல்விக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
ஒரு கட்டத்தில் மண் கடத்தல் கும்பல் வி.ஏ.ஓ.வை கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்து அங்கிருந்து செல்லுமாறு எச்சரித்துள்ளனர். இதுகுறித்து பேராச்சி செல்வி சீவலப்பேரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்து சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு மண் அள்ளிக்கொண்டிருந்த கும்பலை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் சீவலப்பேரியை சேர்ந்த செல்லத்துரை மகன் முருகேஷ் (30), அவினாப்பேரியை சேர்ந்த உலகநாதன் மகன் செல்லத்துரை (32) என்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் அனுமதியின்றி ஜே.சி.பி. எந்திரம் மூலம் டிப்பர் லாரியில் மண் கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஜே.சி.பி. மற்றும் டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
இச்சம்பவம் குறித்து கிராம நிர்வாக அதிகாரி பேராச்சி செல்வி கொடுத்த புகாரின்பேரில் கொலை மிரட்டல் மற்றும் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேஷ், செல்லத்துரையை கைது செய்தனர்.
- தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 19-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 19-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.
தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று மற்றும் நாளை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
இன்று முதல் 17-ந்தேதி வரை அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நாட்டு படகு மற்றும் வள்ளம் ஆகியவற்றிக்கு தங்குதளம் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பல்வேறு ஏழை குடும்பங்கள் வீடுகள் கட்டி அதற்கான வரியும் செலுத்தி வசித்து வருகிறார்கள்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மக்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தரக்கோரி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்
இந்த சந்திப்பின் போது கன்னியாகுமரி மாவட்டத்தின் அடிப்படை தேவைகளான சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும். சேதமடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீர் செய்து தர வேண்டும்
பல்வேறு இடங்களில் சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சாலை தடுப்புகள் மூலமாக ஏற்படும் விபத்துக்களால் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு வருகின்றது ஆகவே சாலை தடுப்புகளினால் ஏற்படும் விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்
மேலும் மீனவ கிராம மக்களின் கோரிக்கைகளையும் முன் வைத்தார்.
மணக்குடி கிராமத்தின் மேற்கு பகுதியில் உள்ள முகத்துவாரத்தின் மேற்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அலை தடுப்பு சுவரை நீட்டி வளைத்து, கூடுதலாக மேலும் 3 நேர் கற்களை அமைப்பதுடன், காயல் பகுதியில் முகத்துவாரத்தை ஆழப்படுத்தி பாரம்பரிய நாட்டு படகு மற்றும் வள்ளம் ஆகியவற்றிக்கு தங்குதளம் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
மேலும் மணவாளக்குறிச்சி கிராமத்திற்கு உட்பட்ட சின்னவிளை ஊரில் அமைந்திருந்த மிக பழமையான குருசடி கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட இடியால் பாதிக்கப்பட்டது. எனவே ஊர் மக்கள் அந்த குருசடியை புதுப்பிக்க நடவடிக்கை எடுத்து கிட்டத்தட்ட 90% பணிகள் முடிவடைந்த நிலையில் ஒரு சில நிர்வாக காரணங்களால் அந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
ஆகவே தங்கள் இந்த பிரச்னையை குறித்து ஆராய்ந்து இதனை சுமூகமாக முடித்து வைக்கும் விதமாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்
கிள்ளியூர் தாலுகாவிற்கு உட்பட்ட மடத்து பகுதியில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு ஏழை குடும்பங்கள் வீடுகள் கட்டி அதற்கான வரியும் செலுத்தி வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் குடியிருக்கும் மக்கள் ஆண்டாண்டு காலமாக குடிநீர் கட்டணம் மின்கட்டணம் வீட்டுவரி கட்டணம் போன்றவை செலுத்தி வருகின்றனர். மேலும் பலர் வங்கிகள் மூலமாக கடன்கள் பெற்று வீடுகள் கட்டியுள்ளனர் இந்த இடத்தில் வசித்து வரும் இவர்களின் முன்னோர்கள் தங்கள் வீடு மற்றும் இடத்தை விற்றும் வாங்கியும் மாற்றி மாற்றி பத்திரம் செய்தும் பயன்பாடுகளுக்கும் உட்படுத்தியுள்ளனர்.
மேற்படி மடத்தின் நிலங்கள் தனிநபர்கள் பெயரில் நில உடைமைப்பதிவு மேம்பாட்டு திட்டத்தில் தவறுதலாக இணைத்து பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதன் பெயரில் எழுந்த புகாரின் அடிப்படையில் அரசு அதிகாரிகள் இந்த நிலங்களை ஆய்வு செய்துள்ளனர்.
ஸ்ரீ ராமபகவதி கோவில் என்ற தனியார் கோவில் இவர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ளது. இதனை தவறுதலாக மடம் சொத்து என்று அறிவிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. கடந்த 10-10-2019 -அன்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையின் தீர்ப்பு படி திருக்கோயில் மடம் நிலத்தை மட்டும்தான் மீட்டிருக்கவேண்டும். ஆனால் குடியிருப்பு பகுதியும் தவறுதலாக இணைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது மேலும் கடந்த 24-04-2020 அன்று அன்றைய தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்களால் இந்த நில உரிமையாளர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அகவே இங்கு வசித்து வரும் குடும்பங்களை இந்த நிலத்தில் தொடர்ந்து குடியிருக்க அனுமதிக்க வேண்டுமெனவும், அவர்களை சொத்து வரி செலுத்த அனுமதிக்க வேண்டும்.
- பல்வேறு பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
- பொதுமக்கள் முன் எச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்
சென்னை:
நெம்மேலியில் அமைந்துள்ள நாள் ஒன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் பிரதான குடிநீர் உந்து குழாய்கள் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் 15-ந் தேதி மதியம் 2 மணி முதல் 16-ந்தேதி அதிகாலை 2 மணி வரை மண்டலம் 11, 12, 13, 14 மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம், பம்மல், அனகாபுதூர், ராதா நகர் ஆகிய பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. நந்தம்பாக்கம், வளசரவாக்கம், நொளம்பூர், ராமாபுரம், ஆலந்தூர், வேளச்சேரி, பள்ளிப்பட்டு, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம் ஆகிய பகுதிகளில் தண்ணீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
எனவே பொதுமக்கள் முன் எச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https:cmwssb.tn.gov.in/ என்ற இணைய தள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்து உள்ளது.






