என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • விஜயகாந்த் இல்லாமல் தே.மு.தி.க. சந்திக்கும் முதல் பாராளுமன்ற தேர்தல் இது.
    • தே.மு.தி.க. விரும்பிய தொகுதிகளை அ.தி.மு.க. வழங்கியுள்ளது.

    சென்னை:

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தே.மு.தி.க. தலைமைக் கழகத்தில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டமும், பாராளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் நேர்காணலும் நடந்து வருகிறது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளும் இன்று விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி விட்டு விஜயகாந்த் அறையில் சிறிது நேரம் கலந்தாலோசனை செய்தனர்.

    வருகிற 24-ந்தேதி திருச்சியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடக்க இருக்கிறது. அந்த பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க., தே.மு.தி.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சேர்ந்த அனைத்து தலைவர்களும் கலந்து கொள்ள இருக்கிறோம்.

    அந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருமாறு எடப்பாடி பழனிசாமி என்னை நேரில் வந்து அழைத்துள்ளார். எனவே நானும், முக்கிய நிர்வாகிகளும் அந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறோம்.

    40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அந்த பொதுக்கூட்டத்தில் அறிமுகம் செய்து அன்று முதல் பிரசாரத்தையும் தொடங்க இருக்கிறோம்.

    இந்த கூட்டணி ஒற்றுமையாக கூட்டணி தர்மத்துடன் செயலாற்றி 'நாளை நமதே, நாற்பதும் நமதே' என்று வெற்றி ஒன்றையே இலக்காக கொண்டு நல்ல புரிதலோடு பயணிக்க இருக்கிறோம்.

    இங்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகிய 3 தெய்வங்களின் ஆசீர்வாதத்தோடு இந்த கூட்டணி, 2011-ல் அமைந்த வெற்றிக் கூட்டணி போல சரித்திரம் படைக்கும்.

    தே.மு.தி.க.வுக்கு மேல் சபை உறுப்பினர் சீட் உறுதியாகிவிட்டது. வெற்றிலை பாக்கை மாற்றி உறுதி செய்துவிட்டோம். ஆனால் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

    மேல்சபை எம்.பி. தேர்தலில் யார் போட்டியிடுவார் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. சார்பில் நீலகிரி தொகுதி வேட்பாளராக லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
    • தனபால் தற்போது அவினாசி தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

    கோவை:

    நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் ஆ.ராசா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். ஏற்கனவே இவர் 2 முறை இந்த தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி.யாக உள்ளார். கடந்த பல மாதங்களுக்கு முன்பே தேர்தல் பணியை தொடங்கி களப்பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் அ.தி.மு.க. சார்பில் நீலகிரி தொகுதி வேட்பாளராக லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் முன்னாள் சபாநாயகர் ப.தனபாலின் மகன் ஆவார். இவர் அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

    இவருக்கு முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர்., தமிழ்ச்செல்வன் என்ற பெயரை வைத்துள்ளார்.

    இவரது திருமணத்தை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நடத்தி வைத்துள்ளார்.

    தனபால் தற்போது அவினாசி தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். இந்த சட்டமன்ற தொகுதி நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் தான் வருகிறது. இதனால் தங்களுக்கு சாதமாக இருக்கும் என கருதி லோகேஷ் தமிழ்ச்செல்வன் களமிறக்கப்பட்டுள்ளார்.

    தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசாவுக்கு, லோகேஷ் தமிழ்ச்செல்வன் கடும் நெருக்கடி அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொகுதியில் பாரதிய ஜனதாவும் களமிற ங்குவது உறுதியாகி உள்ளது. இதனால் நீலகிரி தொகுதியில் போட்டி கடுமையாக இருக்கும்.

    • பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலமே இருப்பதால் வேட்பாளர்கள் பம்பரமாக சுழன்று தேர்தல் பணியை மேற்கொள்ள தொடங்கி உள்ளனர்.
    • பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலையின் பிரசாரம் தேர்தல் களத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. தி.மு.க. தலைமையிலான கூட்டணி ஒரு அணியாகவும், அ.தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும், பா.ஜ.க. தலைமையில் ஒரு அணியும் களத்தில் உள்ளன.

    இந்த 3 அணிகளுக்கு இடையே சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இப்படி தமிழக தேர்தல் களத்தில் நான்கு முனை போட்டி நிலவும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

    அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில் வாக்குப்பதிவுக்கு இன்னும் 28 நாட்களே உள்ளன.

    நேற்று வேட்பு மனுதாக்கல் தொடங்கியுள்ள நிலையில் வேட்பாளர்கள் மனு தாக்கல், பிரசாரம் என தீவிரமாக தேர்தல் களத்தில் இறங்கி பணியாற்ற தொடங்கி இருக்கிறார்கள். தேர்தல் காலம் என்பதால் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தங்களது கட்சியின் தலைமை அலுவலகங்களில் திரண்டு தேர்தல் பணிகளுக்கான முன்னேற்பாடுகளை சுறுசுறுப்பாக மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதனால் அரசியல் கட்சிகளின் அலுவலகங்களில் திருவிழா கோலம் போல தொண்டர்களும், நிர்வாகிகளும் திரண்டு காணப்படுகிறார்கள்.

    பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலமே இருப்பதால் வேட்பாளர்கள் பம்பரமாக சுழன்று தேர்தல் பணியை மேற்கொள்ள தொடங்கி உள்ளனர்.

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வருகிற 26-ந் தேதி தூத்துக்குடியில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அடுத்த மாதம் 17-ந் தேதி வரை அவரது சுற்றுப்பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற 24-ந் தேதி திருச்சியில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். முதல் கட்ட பிரசாரத்தை வருகிற 31-ந் தேதி வரையில் அவர் மேற்கொள்கிறார். முதல் கட்ட பிரசாரம் முடிந்த பிறகு எடப்பாடி பழனிசாமியின் 2-வது கட்ட சுற்றுப்பயணமும் தயாராகி வருகிறது.

    இதே போன்று மற்ற கட்சிகளின் தலைவர்களும் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் சென்னையில் அனைத்து வேட்பாளர்களையும் ஒரே மேடையில் ஏற்றி வருகிற 23-ந் தேதி தேர்தல் பிரசாரத்தை பல்லாவரம் ரேடியல் சாலையில் தொடங்குகிறார்.

    இப்படி அரசியல் கட்சிகளின் தலைவர்களும் முன்னணி நிர்வாகிகளும் தொண்டர்களும் தேர்தல் களத்தில் பரபரப்பாக இயங்க தொடங்கி இருக்கிறார்கள். அடுத்த வாரம் வேட்புமனு தாக்கல் முடிவடைந்த பிறகு தற்போது இருப்பதைவிட தேர்தல் களம் மேலும் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தலைவர்களின் அனல் பறக்கும் பிரசாரத்தால் தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில் இந்த தேர்தல் களத்தில் நான்கு முனைகளில் இருந்தும் பிரசார குரல் ஒலிக்க உள்ளது.

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து தனது பிரசாரத்தின்போது வாக்கு சேகரிக்க உள்ளார்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தி.மு.க. அரசை கடுமையாக விமர்சித்து தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளார்.

    பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலையின் பிரசாரமும் தேர்தல் களத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுவரை தமிழகத்தை ஆண்ட 2 திராவிட கட்சிகளையும் விமர்சித்து அவரது பிரசாரம் இருக்கும். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் எப்போதும் போல மத்திய மாநில அரசுகளை விமர்சித்து தனது அனல் பறக்கும் பேச்சை கக்க உள்ளார்.

    இப்படி தமிழக தேர்தல் களம் விறுவிறுப்படைந்து இருப்பதால் அனைத்து கட்சியின் தொண்டர்களுமே சுறுசுறுப்போடு தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டு இருக்கிறார்கள்.

    • பாராளுமன்ற தொகுதிகள் 6 சட்டமன்ற தொகுதிகளில் அடங்கி இருக்கும். அதற்கேற்ற வகையில் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளரை தேர்வு செய்துள்ளோம்.
    • தி.மு.க. தங்களது தேர்தல் அறிக்கையில் எப்போதுமே நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளையே கொடுப்பார்கள்.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டை யில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்களின் 2-வது பட்டியலை வெளியிட்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கே: தேர்தல் நேரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றுள்ளதே? அ.தி.மு.க.வுக்கு இது நெருக்கடியை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்களா?

    ப: அ.தி.மு.க.வுக்கு நெருக்கடி என்ற பேச்சுக்கே இடமில்லை. எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கிய போதும், ஜெயலலிதா பொதுச்செயலாளராக இருந்து கட்சியை வழி நடத்தியபோதும் பல்வேறு நெருக்கடிகளையும், பிரச்சனைகளையும் எதிர்கொண்டு வெற்றி அடைந்துள்ளனர். அவர்கள் வழியில் நாங்களும் வெற்றி பெறுவோம்.

    தமிழக அரசு லஞ்ச ஒழிப்பு போலீஸ் மூலம் வழக்கு போட்டுள்ளது. ஏற்கனவே வருமான வரித்துறை சோதனையும் நடந்துள்ளது. இது போன்ற சோதனைகளை எல்லாம் நாங்கள் சட்ட ரீதியாக சந்திப்போம்.

    கே: அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலில் ஒரே ஒரு பெண் மட்டும் இடம்பெற்றுள்ளார். சிறுபான்மையினர் யாரும் இடம்பெறவில்லையே?

    ப: அ.தி.மு.க. ஆட்சி மன்ற குழுவை கூட்டி வெற்றி வாய்ப்புகளை கண்டறிந்து வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளோம். நெல்லை பாராளுமன்ற தொகுதியில் பெண் வேட்பாளர் தானே அறிவிக்கப்பட்டுள்ளார்.

    அ.தி.மு.க.வை பொறுத்தவரையில் பெண்களின் முன்னேற்றத்தை முன்னெடுக்கும் ஆட்சியாகும். அவர்களிடம் எந்த பாகுபாட்டையும் நாங்கள் காட்டுவதில்லை. படித்த இளைஞர்களையும் வேட்பாளர்களாக தேர்வு செய்து அறிவித்துள்ளோம். அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர் இஸ்லாமிய வேட்பாளர் தான் இதுபோன்ற கேள்விகளே தவறானதாகும்.

    சாதி, மத அடிப்படையால் இப்படி பிரித்து பார்க்கக் கூடாது. பாராளுமன்ற தொகுதிகள் 6 சட்டமன்ற தொகுதிகளில் அடங்கி இருக்கும். அதற்கேற்ற வகையில் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளரை தேர்வு செய்துள்ளோம்.

    கே: புது முகங்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால் கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகள் வருத்தப்படமாட்டார்களா?

    ப: அ.தி.மு.க.வில் ஜூனியர், சீனியர் என்று பிரித்து பார்ப்பதில்லை. அப்படி பார்த்திருந்தால் இணை செயலாளராக இருந்த நான் எப்படி பொதுச்செயலாளராக இருக்க முடியும். அ.தி.மு.க.வில் எப்போதுமே நேர்மையாக உழைப்பவர்களுக்கும், விசுவாசமாக இருப்பவர்களுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில்தான் தற்போதைய வேட்பாளர்கள் தேர்வு நடைபெற்றுள்ளது.

    கே: தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்று கூறி இருக்கிறார்களே. அது சாத்தியமா?

    ப: தி.மு.க. தங்களது தேர்தல் அறிக்கையில் எப்போதுமே நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளையே கொடுப்பார்கள். ஏற்கனவே தேர்தல் நேரத்தில் டீசல் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் குறைப்பதாக கூறி இருந்தார்கள். அது காற்றோடு போய்விட்டது. இப்போதும் அது போன்று அறிவித்திருக்கிறார்கள். இது தி.மு.க. அறிவித்துள்ள வெற்று வாக்குறுதியாகவே பார்க்கப்படுகிறது. பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க.வும் வெற்றி பெற போவதில்லை. இந்தியா கூட்டணியும் வெல்லப் போவதில்லை.

    கே: அப்படி என்றால் பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற வாய்ப்புள்ளதா?

    ப: இந்த கேள்வியே தவறானது. நாங்கள் பலம் வாய்ந்த அணியை உருவாக்கி தேர்தலில் போட்டியிடுகிறோம். நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம். தி.மு.க. அரசு தேர்தல் நேரத்தில் சொன்னது எதையும் இதுவரை செய்யவில்லை. நாங்கள் ஒரே நாளில் கூட்டணி அறிவிப்பை வெளியிட்டு தொகுதி பங்கீட்டையும் முடித்து விட்டோம். காங்கிரசில் இன்னும் வேட்பாளர்களே அறிவிக்கப்படவில்லை.

    கே: தி.மு.க.வை விமர்சிக்கும் அளவுக்கு நீங்கள் பா.ஜனதாவை விமர்சிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளதே?

    ப: ஒரு கூட்டணியில் இருக்கும் போது அவர்களை ஓஹோ என்று புகழ்ந்து பேசுவதும், வெளியில் வந்த பிறகு விமர்சனம் செய்து பேசுவதும் நாங்கள் அல்ல. அதே நேரத்தில் மக்களை பாதிப்புக்குள்ளாக்கும் பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுக்க தயங்க மாட்டோம். இப்போது தானே ஆரம்பித்திருக்கிறோம். பொறுத்திருந்து பாருங்கள். நீங்கள் நினைப்பது நிச்சயம் நடக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடற்கரை-சிந்தாதிரிப்பேட்டை மின்சார ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
    • கிரிக்கெட் ரசிகர்கள் வசதிக்காக கூடுதல் ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.

    சென்னை:

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை (22-ந்தேதி) தொடங்குகிறது. இரவு 8 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

    ஐபிஎல் போட்டி நடைபெற இருக்கு நிலையில் சிந்தாதிரிப்பேட்டை முதல் வேளச்சேரி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

    கடற்கரை எழும்பூர் வரையிலான 4வது பாதைக்கான பணிகள் நடைபெறுவதால் பறக்கும் ரெயில் வழித்தடத்தில் கடற்கரை-சிந்தாதிரிப்பேட்டை மின்சார ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

     

    இந்த சூழ்நிலையில் ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதால் மின்சார ரெயிலில் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் வசதிக்காக கூடுதல் ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.

    அதன்படி ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு 22, 26 ஆகிய தேதிகளில் வேளச்சேரி - சிந்தாதிரிப்பேட்டை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    • பாரதிய ஜனதா, காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் சில தினங்களில் வெளியாக இருக்கிறது.
    • நட்சத்திர பேச்சாளர்கள் பிரசார பட்டியல் வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 19-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டணி, வேட்பாளர் தேர்வு ஆகிய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. பாரதிய ஜனதா, காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் சில தினங்களில் வெளியாக இருக்கிறது.

    இந்நிலையில் பிரசார களத்தில் ஈடுபட்ட ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் சார்பிலும் பங்கேற்க இருக்கும் பட்டியல் மற்றும் பிரசாரம் செய்யும் இடங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

    தி.மு.க. சார்பில் நடிகர்கள் வாகை சந்திரசேகர், பெஞ்சமின், இமான் அண்ணாச்சி, போஸ் வெங்கட் உள்பட பல நடிகர்கள் பிரசாரத்தில் ஈடுபட தயாராகி வருகின்றனர்.

    அ.தி.மு.க. சார்பில் சிங்கமுத்து, வையாபுரி, விந்தியா, நாஞ்சில் அன்பழகன், கவுதமி, காயத்ரி ரகுராம், அனுமோகன், பபிதா, ஜெயமணி ஆகியோர் பிராசரம் செய்ய தயாராக இருக்கின்றனர். நட்சத்திர பேச்சாளர்கள் பிரசார பட்டியல் வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    பிரசாரம் பற்றி சிங்கமுத்துவிடம் கேட்டபோது, கட்சி சார்பில் பிரசாரம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். அறிவிப்பு வெளியான பின்தான் யார்-யார் எங்கு பிரசாரம் செய்ய உள்ளார்கள் என்ற விபரம் தெரியவரும். தேர்தல் அறிக்கை மற்றும் பல்வேறு விசயங்கள் மற்றும் விமர்சனங்கள் தேர்தல் பிரசார களத்தில் பேச இருக்கிறோம்.

    கட்சியின் அறிவிப்பு வெளியிட்டவுடன் எங்களது பிரசார பணிகள் தொடங்கும் என கூறினார்.

    பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக நடிகைகள் குஷ்பு, நமீதா, ரஞ்சனா நாச்சியார் உள்பட பலர் பிரசாரம் செய்ய இருக்கின்றனர்.

    • திருச்சி சிறுகனூரில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகிறார்.
    • முதலமைச்சர் 23-ந்தேதி திருச்சி விமான நிலையத்துக்கு வந்து சென்னை செல்கிறார்.

    திருச்சி:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை திருச்சி வருகிறார். திருச்சி சிறுகனூரில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு பேசுகிறார். பின்பு அவர் காரில் தஞ்சை வழியாக திருவாரூர் செல்கிறார்.

    பின்னர் 23-ந்தேதி அவர் திருச்சி விமான நிலையத்துக்கு வந்து சென்னை செல்கிறார். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு அவர் பயணம் செய்யும் சாலைகளில் பாதுகாப்பு கருதி ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த தடை இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 23-ந்தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

    • அரசரடி கிராமத்தில் தொடக்கப்பள்ளி ஒன்று பழுதடைந்த நிலையில் பல வருடமாக காணப்பட்டது.
    • நாங்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ள நிலையில் வாக்குப்பதிவு மையத்தை சீரமைத்து என்ன பயன் என்றும் தெரிவித்தனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா மேகமலை ஊராட்சிக்குட்பட்ட அரசரடி, இந்திரா நகர், பொம்முராஜபுரம், நொச்சிஓடை ஆகிய கிராமங்களில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சராசரியாக 1500 வாக்குகள் பதிவாகும். வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த கிராமங்களில் எந்தவித அடிப்படை வசதியும் செய்யப்படவில்லை.

    குறிப்பாக சாலை வசதி, தெரு விளக்கு, குடிநீர் போன்ற எந்த பணிகள் மேற்கொள்ள வேண்டுமானாலும் வனத்துறை அனுமதி பெற்றே செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் அரசரடி கிராமத்தில் தொடக்கப்பள்ளி ஒன்று பழுதடைந்த நிலையில் பல வருடமாக காணப்பட்டது.

    அதனை சீரமைக்க கூட வனத்துறை அனுமதிக்கவில்லை. பள்ளி கட்டிடம் பழுதான நிலையில் இருப்பதால் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இடிந்து மாணவர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என தெரிவித்தும் கட்டிடத்தை சீர் செய்யவில்லை.

    இது போன்ற காரணங்களால் மேற்படி 4 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக வீடுகளில் கருப்புக்கொடி கட்டி அறிவிப்பு பலகை வைத்தனர். தாசில்தார் தலைமையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் பொதுமக்கள் ஏற்கவில்லை.

    இந்நிலையில் இங்குள்ள அரசு பள்ளியில்தான் பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதால் அந்த வாக்குப்பதிவு மையத்தை சீரமைக்க அதிகாரிகள் தலைமையில் பணியாளர்கள் வந்தனர்.

    இதை பார்த்த அப்பகுதி மக்கள் மாணவர்களுக்கு பாதிப்பு என்று நாங்கள் சொன்னபோது வராமல் வாக்குப்பதிவுக்காக மட்டும் பள்ளியை சீரமைக்க எதற்காக வந்தீர்கள் என கேள்வி எழுப்பினர். பள்ளியின் மேற்கூரையை இடித்து விட்டு நிரந்தரமாக கட்டிடத்தை சீரமைத்தால் அந்த பணியை மேற்கொள்ள வேண்டும். தற்காலிக பணி மேற்கொள்வதென்றால் வேண்டாம் என அவர்களுக்கு எச்சரித்தனர்.

    மேலும் நாங்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ள நிலையில் வாக்குப்பதிவு மையத்தை சீரமைத்து என்ன பயன் என்றும் தெரிவித்தனர். இதனால் பணியை மேற்கொள்ளாமல் ஆணையாளர் தலைமையில் வந்தவர்கள் திரும்பிச் சென்றனர். இன்று திட்ட அலுவலர் தலைமையில் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தரமான நாட்டுக்கோழி ஒன்று ரூ.400 முதல் ரூ.500 வரை விற்பனையானது.
    • வரும் வாரங்களில் மேலும் விற்பனை அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் வாரம் தோறும் வியாழக்கிழமை வாரச்சந்தை நடைபெறும். அதிகாலை 2 மணிக்கு தொடங்கி 9 மணி வரை நடைபெறும் இந்த சந்தையில் பல்வேறு கிராமங்களில் இருந்து ஆடு, கோழி, சேவல் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.

    பெரும்பாலும் ஆடு, கோழிகள் வாங்குவதற்காகவே உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் வருகை தருவதுண்டு. தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் அதிக அளவு பணம் சந்தைக்கு கொண்டு வர முடியுமா? என்ற சந்தேகம் எழுந்தது. பங்குனி மாதத்தில் கோவில் திருவிழாக்கள் நடைபெறுவதால் ஆடுகள் பலியிடப்படும்.

    மேலும் ரம்ஜான் பண்டிகைக்காகவும், தேர்தலுக்காக தொண்டர்களுக்கு கிடா விருந்து வைக்கவும் ஆடுகள் அதிக அளவு விற்பனையாகும் என நினைத்து ஏராளமான செம்மறி, வெள்ளாடுகள் கொண்டு வரப்பட்டன. மெயின் ரோட்டில் வழியாக வராமல் புறவழிச்சாலையில் உள்ள கிராமப்புறங்கள் வழியாக அதிக அளவு வாகனங்கள் சந்தைக்கு வந்தன.

    தரமான நாட்டுக்கோழி ஒன்று ரூ.400 முதல் ரூ.500 வரை விற்பனையானது. 10 கிலோ கொண்ட ஆடு ரூ.6500 முதல் ரூ.8000 வரை விற்கப்பட்டது. விதவிதமான சேவல்களை கிராமப்புறங்களில் வளர்த்து வரும் வாலிபர்கள் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    ரூ.3000 முதல் ரூ.30000 வரை சேவல்கள் விற்பனையாகின. தேர்தல் சமயத்தில் ஆடு, கோழிகள் எதிர்பார்த்த அளவு விற்பனையாகுமோ என்று விவசாயிகள் கவலையடைந்த நிலையில் அதிக அளவு கால்நடைகள் எதிர்பார்த்த விலைக்கு விற்கப்பட்டதால் அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். வரும் வாரங்களில் மேலும் விற்பனை அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தற்போது இந்தியா கூட்டணியில் பெட்ரோல் விலை நேர் பாதியாக குறைப்போம் என்று சொல்லி இருக்கின்றோம்.
    • அற்புதமான திட்டங்களை எல்லாம் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குறுதியாக அளித்துள்ளோம்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவரிடம் தி.மு.க. சட்டமன்ற தேர்தல் அறிக்கை போலவே பாராளுமன்ற தேர்தல் அறிக்கையும் உள்ளதாக பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்து அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது:-

    அண்ணாமலைக்கு சட்டமன்ற தேர்தல் என்றால் என்ன?, பாராளுமன்ற தேர்தல் என்றால் என்னவென்று தெரியாது. அவர் சட்டமன்றத்திற்கும், பாராளுமன்றத்திற்கும் சென்றவர் அல்ல. எந்த நடவடிக்கையையும் கவனித்தவரும் அல்ல.

    10 ஆண்டு காலம் கியாஸ், பெட்ரோல் விலையை உயர்த்தி இந்திய நாட்டில் உள்ள மக்கள் அத்தனை பேரையும் வஞ்சித்தது மோடி அரசு.

    தற்போது இந்தியா கூட்டணியில் பெட்ரோல் விலை நேர் பாதியாக குறைப்போம் என்று சொல்லி இருக்கின்றோம். கியாஸ் விலை 500 ரூபாய்க்கு கொண்டு வரப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் இருப்பது போன்று உரிமைத் தொகை இந்தியா முழுவதும் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும். இந்த அற்புதமான திட்டங்களை எல்லாம் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குறுதியாக அளித்துள்ளோம்.

    இது கூட தெரியாமல் ஒருவர் கட்சி நடத்துகிறாரா? இல்லை எப்போதுமே பேசவேண்டும் என்பதற்காக பொய்யை புழுகி விட்டுக் கொண்டிருக்கிறார்களா? என்பதே எங்களுடைய கேள்வி.

    தி.மு.க. அரசு மக்கள் மத்தியில் பலமாக ஊடுருவி உள்ளது. சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளை முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார். 75 சதவீதத்திற்கு மேல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம். இன்னும் சில திட்டங்கள், பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    தமிழ்நாட்டில் சில கட்சிகள் வெற்றி வாய்ப்பு வேட்பாளர்களுக்கு தடுமாறிக் கொண்டிருக்கின்ற நேரத்தில் தி.மு.க. வெற்றி வேட்பாளர், வெற்றி கூட்டணி அமைத்து தி.மு.க. பிரசாரத்தை ஆரம்பித்து இருக்கின்றார்.

    இது மகத்தான கூட்டணி. 40 என்ற மந்திரத்தை நிதர்சனத்தில் உருவாக்கும் என்ற ஒரு தேர்தலாக தான் இந்த தேர்தல் 100 சதவீதம் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 26-4-2024 அன்று இந்த கல்வி ஆண்டிற்கான கடைசி வேலை நாளாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி நடைபெறுவதால் 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கான இறுதி தேர்வு முன்கூட்டியே நடத்தப்படுகிறது.

    தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு ஏப்ரல் 2-ந்தேதி தொடங்கி 12-ந்தேதி வரை நடத்தப்படும். 13-ந்தேதி முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் தெரிவித்துள்ளன.

    மேலும் ஏப்ரல் 23-ந் தேதி முதல் 26-ந்தேதி வரையில் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தல், தேர்வு முடிவுகள் வெளியிடுதல் மற்றும் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். 26-4-2024 அன்று இந்த கல்வி ஆண்டிற்கான கடைசி வேலை நாளாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கல்வித்துறை இயக்குனர்கள் அறிவொளி மற்றும் கண்ணப்பன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    • தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகளும் , எஸ்.டி.பி.ஐ. மற்றும் புதிய தமிழகம் கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்துள்ளது.
    • பிரசார கூட்டத்தில் தமிழகம், புதுவையில் போட்டியிடும் 40 வேட்பாளர்களையும் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்து பேசுகிறார்.

    திருச்சி:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ., புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இதையடுத்து கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு முடிந்து விட்டது.

    தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகளும் , எஸ்.டி.பி.ஐ. மற்றும் புதிய தமிழகம் கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்துள்ளது. மீதமுள்ள 33 தொகுதிகளிலும் அதிமுக நேரடியாக களம் காண உள்ளது. இந்த நிலையில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 16 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி நேற்று அறிவித்தார். இன்று 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தார்.

    இதற்கிடையே அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி கே.பழனிசாமி வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சூறாவளி பிரசாரத்தை திருச்சியில் தொடங்க உள்ளார்.

    அன்று மாலை 4 மணிக்கு திருச்சி வண்ணாங்கோவில் நவலூர் குட்டப்பட்டு பகுதியில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. இதில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    இந்த பிரசார கூட்டத்தில் தமிழகம், புதுவையில் போட்டியிடும் 40 வேட்பாளர்களையும் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்து பேசுகிறார். இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் முபாரக், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

    இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகளை அ.தி.மு.க. நிர்வாகிகள் செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக 26-ந் தேதி தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலும், 27-ந் தேதி நாகர்கோவில், சங்கரன்கோவில் பகுதியிலும், 28-ந் தேதி சிவகாசி மற்றும் ராமநாதபுரம் பகுதியிலும்,

    29-ந் தேதி சென்னை மதுராந்தகம், பல்லாவரம் ஆகிய இடங்களிலும், 30-ந்தேதி புதுச்சேரி மற்றும் கடலூரிலும் 31-ந் தேதி மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் மாவட்டங்களிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.

     பாராளுமன்ற தேர்தல் களத்தில் தி.மு.க.வை போல அ.தி.மு.க.வும் தனது முதல் தேர்தல் பிரசாரத்தினை திருச்சியில் தொடங்க உள்ளது அக்கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை) சிறுகனூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய உள்ள நிலையில் வருகிற 24-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) திருச்சி நவலூர் குட்டப்பட்டு பகுதியில் எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம் செய்ய இருப்பதால் திருச்சி விழா கோலம் பூண்டுள்ளது.

    ×