என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மீண்டும் மீண்டும் கலவரத்தை உருவாக்கும் நோக்கில் அ.தி.மு.க. செயல்படுகிறது.
    • ஆர்ப்பாட்டம் செய்ய எல்லா கட்சிகளுக்கும் இடமும், உரிமையும் உள்ளது.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தக்கோரி அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து சபாநாயகர் உத்தரவை அடுத்து அவைக் காவலர்கள் அ.தி.மு.க. வினர் சட்டசபையில் இருந்து வெளியேற்றினர்.

    இதன்பின், சட்டசபையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

    * அவை கூடியதும் தேவையற்ற பிரச்சனைகளை அ.தி.மு.க.வினர் கிளப்புகின்றனர்.

    * கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து கடந்த 20-ந்தேதி சபையில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    * வேண்டுமென்றே திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்த அ.தி.மு.க.வினர் முயற்சி.

    * மீண்டும் மீண்டும் கலவரத்தை உருவாக்கும் நோக்கில் அ.தி.மு.க. செயல்படுகிறது.

    * மக்களவை தேர்தல் தோல்வியால் அதிமுக விரக்தியில் செயல்படுகிறது.

    * கள்ளக்குறிச்சி சம்பவத்தின் உண்மையை அறிய நீதியரசர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    * கள்ளக்குறிச்சியில் இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    * பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

    * ஆர்ப்பாட்டம் செய்ய எல்லா கட்சிகளுக்கும் இடமும், உரிமையும் உள்ளது.

    * நியாயமான ஆர்ப்பாட்டத்திற்கு அரசு அனுமதி அளிக்கிறது.

    * இந்த விவகாரத்தில் சபாநாயகர் தான் முடிவு எடுக்க வேண்டும்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    • வேட்புமனுக்களின் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது.
    • வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு நாளை கடைசி நாளாகும்.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ந் தேதி இறந்தார். இதனை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதியை இந்திய தேர்தல் ஆணையம் காலியாக அறிவித்தது. பாராளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10-ந் தேதி நடைபெற உள்ளது.

    இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ந் தேதி தொடங்கி 21-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, பா.ம.க. சார்பில் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர். அபிநயா ஆகியோர் உட்பட பலர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

    வேட்புமனுக்களின் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. இதில் 29 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு நாளை கடைசி நாளாகும். இதனை தொடர்ந்து தி.மு.க.வும், பா.ம.க.வும் விக்கிரவாண்டி தொகுதி மக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் டாக்டர். அபிநயாவிற்கு ஆதரவாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விக்கிரவாண்டியில், தனது தேர்தல் பிரச்சாரத்தை இன்று மாலை மேற்கொள்ளகிறார். விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க.விற்கும், நாம் தமிழர் கட்சிக்கும் தான் போட்டி என சீமான் கூறி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    • முன்னாள் பிரதமர் வி.பி.சிங் திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.
    • அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மாநில கல்லூரி வளாகத்தில் உள்ள முன்னாள் பிரதமர் வி.பி.சிங் திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.

    முன்னாள் பிரதமர் நீதி காவலர் வி.பி.சிங்-கின் 94-வது பிறந்தநாளான இன்று அவரது திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    அவருடன் அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    வி.பி.சிங் சிலை நிறுவப்பட்ட பிறகு அரசு சார்பில் முதல் பிறந்தநாளான இன்று மரியாதை செலுத்தப்பட்டது.

    • போக்குவரத்து பகுதியாக திம்பம் மலைப்பகுதி உள்ளது.
    • தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று கொண்டிருக்கும்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசிக்கின்றன.

    இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. தமிழக - கர்நாடகா இடையே மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக திம்பம் மலைப்பகுதி உள்ளது. இந்த பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று கொண்டிருக்கும்.

    திம்பம் மலைப்பாதையில் அவ்வப்போது இரவு நேரங்களில் சிறுத்தைகள் நடமாடுவது வழக்கம். இந்த நிலையில் 17-வது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையோர தடுப்புச்சுவரில் ஒரு சிறுத்தை ஜாலியாக படுத்திருந்தது அப்போது அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் சிறுத்தை நடமாட்டத்தை கண்டு அச்சமடைந்தனர்.

    வாகன ஓட்டி ஒருவர் சிறுத்தை நடமாட்டத்தை செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். சிறிது நேரத்தில் சிறுத்தை சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது,

    திம்பம் மலைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் அந்த பகுதியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் இருக்க வேண்டும். தேவையின்றி வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி சாலையோரம் நிற்கக்கூடாது.

    குறிப்பாக இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும். சிலர் இயற்கை அழகை ரசிப்பதாக கூறி வாகனங்களை சாலையோரம் நிறுத்தி செல்போன்களில் படம் எடுத்து வருகின்றனர். இது ஆபத்தான செயலாகும். இது போன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • அவை மாண்பு, மதிப்பை குறைக்கும் வகையில் அ.தி.மு.க. செயல்படுகிறது.
    • நினைப்பதை எல்லாம் பேசுவதற்கு இது பொதுக்கூட்ட மேடை அல்ல.

    தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டம் தொடங்கியது. அவை கூடியதும் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தக்கோரி அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து சபாநாயர் உத்தரவை அடுத்து அ.தி.மு.க. உறுப்பினர்களை அவை காவலர்கள் வெளியேற்றினர்.

    இதன்பின் பேசிய சபாநாயகர் அப்பாவு, அவை மாண்பு, மதிப்பை குறைக்கும் வகையில் அ.தி.மு.க. செயல்படுகிறது. நினைப்பதை எல்லாம் பேசுவதற்கு இது பொதுக்கூட்ட மேடை அல்ல. கள்ளக்குறிச்சி சம்பவத்தை அரசியலாக்குகிறார்கள் என்று கூறினார்.

    இதையடுத்து, இன்று ஒரு நாள் சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள அதிமுக உறுப்பினர்களுக்கு தடை விதித்தார்.

    முன்னதாக, சட்டசபைக்கு வந்த அ.தி.மு.க. உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • புதிய கற்காலத்தில் தான் முதன்முதலில் விவசாயம் தொடங்கியது.
    • இரும்புக் கழிவுகள், பாறை ஓவியங்கள் எனப் பொருள்கள் கிடைத்துள்ளன.

    சிங்காரப்பேட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், சென்னானூரில் இதற்குமுன் நடைபெற்ற அகழாய்வின்போது பழங்காலப் பொருள்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன. இங்குள்ள மலையடிவாரத்தின் மேற்பரப்பில் 5,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நுண்கற்கருவிகள், புதிய கற்கால கைக்கோடாரிகள், இரும்புக் காலத்தைச் சோ்ந்த கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், இரும்புக் கழிவுகள், பாறை ஓவியங்கள் எனப் பொருள்கள் கிடைத்துள்ளன.

    இங்குள்ள ஒரு கிணற்றில் கிடைத்த செங்கற்கள் 2,000 ஆண்டுகள் பழமையானவை என்பதால் இந்த இடம் சங்ககால மக்களின் வாழ்விடமாக இருக்கக் கூடும் என கருதப்படுகிறது. இதையடுத்து இங்கு அகழாய்வுப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக இங்கு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் திங்கள்கிழமை, உடைந்த நிலையில் புதிய கற்காலத்தைச் சோ்ந்த கருவி ஒன்றை அகழாய்வுக் குழுவினா் கண்டெடுத்தனா்.


    இதுகுறித்து சென்னானூா் அகழாய்வு இயக்குநா் பரந்தாமன் கூறியிருப்பதாவது:-

    சென்னானூரில் நடைபெறும் அகழாய்வுப் பணியின்போது பி2 எனும் அகழாய்வுக் குழியில் 53 செ.மீ. ஆழமுள்ள குழியில் உடைந்த புதிய கற்கால வெட்டுக் கருவி ஒன்று எங்களுக்குக் கிடைத்துள்ளது. இந்தக் கருவியின் நீளம் 6 செ.மீ., அகலம், 4 செ.மீ. உள்ளது. இந்தக் கருவி 4,000 ஆண்டுகள் பழமையானது. புதிய கற்காலத்தில் தான் முதன்முதலில் விவசாயம் தொடங்கியது. அப்போது விவசாயத்திற்கு 30 செ.மீ.முதல் 25 செ.மீ., நீளமுள்ள கற்கருவியைத்தான் மக்கள் பயன்படுத்தினா்.

    இந்தக் கருவி அதைவிட அளவில் சிறியது என்பதால் மரக்கிளை, இறைச்சிகளை வெட்டவும், வேட்டையாடுவதற்கும் ஆயுதமாக இதை மனிதன் பயன்படுத்தியிருக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 59 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • சிபிஐ (அ) சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடுமாறு ஐகோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சிகிச்சையில் உள்ள 156 பேரில் 96 பேரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுவரை 8 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளநிலையில், கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 59 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் சிபிஐ (அ) சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடுமாறு ஐகோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    சிபிசிஐடி விசாரித்தால் நியாயமாக இருக்காது என பாமக வழக்கறிஞர் பாலு தாக்கல் செய்த மனு ஐகோர்ட்டில் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

    அதிமுக சார்பில் தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வரும் நிலையில் புதிய மனு மீது ஐகோர்ட்டில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.

    • தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
    • ராஜகோபாலசுவாமி கோவிலில் கடலூர் உட்கோட்ட போலீசார் சார்பில் கூட்டு பிரார்த்தனை நடந்தது.

    கடலூர்:

    கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் குருமூர்த்தி. இவரது மனைவி கீதா. இவரும் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் குருமூர்த்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் புதுவை தனியார் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    அதிதீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி பூரண குணமடைய வேண்டி கடலூர் புதுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ராஜகோபாலசுவாமி கோவிலில் கடலூர் உட்கோட்ட போலீசார் சார்பில் கூட்டு பிரார்த்தனை நடந்தது.

    கடலூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கதிரவன், ருத்திராம்பாள், கவியரசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், ஏட்டு அருள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சொந்தப் பிள்ளைகளாலேயே முதுகில் குத்தப்பட்டு பாரத மாதா கண்ணீர் வடித்த நாள் அது.
    • நமது தாய்நாட்டின் கண்ணியத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்கான உறுதியுடன் இந்த நாளில் துக்கம் அனுசரிப்போம்.

    சென்னை:

    கவர்னர் ஆர்.என்.ரவி இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    50 ஆண்டுகளுக்கு முன்பு, ஜூன் 25, 1975 அன்று இந்த கருப்பு தினத்தில், அரசியலமைப்பை தூக்கியெறிந்தும், குடிமக்களின் அடிப்படை உரிமைகளை முடக்கியும், ஊடகங்களின் வாயைக் கட்டியும், நீதித்துறையை அடக்கிய சர்வாதிகாரியின் காலடியிலும் நமது ஜனநாயகம் எவ்வாறு நசுக்கப்பட்டது என்பதை தேசம் அதிர்ச்சியுடனும் திகிலுடனும் நினைத்துப் பார்க்கிறது.

    ஆயுதமேந்திய ராணுவத்தினர் எங்கள் விடுதிக்குள் புகுந்து, விடுதி அறைகளை உதைத்து திறந்து, ரைஃபிள் துப்பாக்கியின் பின்பக்கத்தால் தாக்கி, புத்தகங்கள், உடைகளை கூட எடுத்துச் செல்ல அனுமதிக்காமல் எங்களை உடனடியாக வெளியேற்றிய நாளை நானும் எனது பல்கலைக்கழக நண்பர்களும் எப்படி மறக்க முடியும்? சொந்தப் பிள்ளைகளாலேயே முதுகில் குத்தப்பட்டு பாரத மாதா கண்ணீர் வடித்த நாள் அது.

    நமது தேசிய வரலாற்றின் இந்த கருப்பு அத்தியாயத்தை யாரும் நினைத்துக்கூட பார்க்காத வகையில் நமது தாய்நாட்டின் கண்ணியத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்கான உறுதியுடன் இந்த நாளில் துக்கம் அனுசரிப்போம் என கூறியுள்ளார்.

    • நிரந்தர உடல் பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.7.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
    • சிறு காயம் ஏற்பட்டவர்களுக்கு வழங்கும் நிவாரணத் தொகை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    உள்ளாட்சித் தேர்தல் பணியின் போது எதிர்பாராத வகையில் உயிரிழக்கும் மற்றும் காயமடையும் பணியாளர்களுக்கான நிவாரணத் தொகையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.

    அதன்படி, குண்டுவெடிப்பு தாக்குதல், சமூக விரோத தாக்குதல் போன்ற காரணங்களால் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    பிற காரணங்களால் உயிரிழப்பவர்கள் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக உயர்வு.

    நிரந்தர உடல் பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.7.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    சிறு காயம் ஏற்பட்டவர்களுக்கு வழங்கும் நிவாரணத் தொகை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    • படுகாயம் அடைந்த செல்வி பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இன்றைய காலகட்டத்தில் சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்து செல்லுதல் உள்ளிட்ட அடிப்படை மனப்பக்குவம் இல்லாததால் கொலை, அடிதடி உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறுகின்றன.

    இதிலும் மது குடிக்க பணம் தராததால் கொலை, பக்கத்து வீட்டாரிடம் ஏற்பட்ட முன்விரோதம் உள்ளிட்ட சொற்ப காரணங்கள் இன்றைக்கு நடைபெறும் கொலைகளுக்கு காரணமாக அமைகிறது.

    அப்படி ஒரு சம்பவம் தான் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. செண்பகராமன்புதூர் பகுதியில் பெட்டிக்கடை வைத்திருப்பவர் செல்வி. இவரது கடைக்கு நேற்று செல்வன் என்பவர் வந்தார். அவர் செல்வியிடம் புகைப்பிடிக்க தீப்பெட்டி தருமாறு கூறியுள்ளார்.

    செல்வி தீப்பெட்டியை தர மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த செல்வன், செல்வியை அரிவாள்மனையால் சரமாரி வெட்டியுள்ளார். செல்வியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் வருவதை கண்ட செல்வன் அங்கிருந்து தப்பியோடினார்.

    இதையடுத்து படுகாயம் அடைந்த செல்வி பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கைதான மீனவர்கள் 10 பேரும் காங்கேசன் துறை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
    • ஏற்கனவே 37 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ள நிலையில் மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதால் மீனவ கிராம மக்கள் கொந்தளிப்புடன் உள்ளனர்.

    நாகை:

    நெடுந்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை இன்று கைது செய்துள்ளது. மேலும் ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளது. கைதான மீனவர்கள் 10 பேரும் காங்கேசன் துறை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    ஏற்கனவே 37 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ள நிலையில் மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதால் மீனவ கிராம மக்கள் கொந்தளிப்புடன் உள்ளனர்.

    முன்னதாக, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்திடக் கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை நேற்று எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×