திம்பம் மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம்

போக்குவரத்து பகுதியாக திம்பம் மலைப்பகுதி உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று கொண்டிருக்கும்.
திம்பம் மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம்
Published on

தாளவாடி:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசிக்கின்றன.

இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. தமிழக - கர்நாடகா இடையே மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக திம்பம் மலைப்பகுதி உள்ளது. இந்த பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று கொண்டிருக்கும்.

திம்பம் மலைப்பாதையில் அவ்வப்போது இரவு நேரங்களில் சிறுத்தைகள் நடமாடுவது வழக்கம். இந்த நிலையில் 17-வது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையோர தடுப்புச்சுவரில் ஒரு சிறுத்தை ஜாலியாக படுத்திருந்தது அப்போது அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் சிறுத்தை நடமாட்டத்தை கண்டு அச்சமடைந்தனர்.

வாகன ஓட்டி ஒருவர் சிறுத்தை நடமாட்டத்தை செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். சிறிது நேரத்தில் சிறுத்தை சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது,

திம்பம் மலைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் அந்த பகுதியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் இருக்க வேண்டும். தேவையின்றி வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி சாலையோரம் நிற்கக்கூடாது.

குறிப்பாக இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும். சிலர் இயற்கை அழகை ரசிப்பதாக கூறி வாகனங்களை சாலையோரம் நிறுத்தி செல்போன்களில் படம் எடுத்து வருகின்றனர். இது ஆபத்தான செயலாகும். இது போன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com