என் மலர்
உள்ளூர் செய்திகள்
- எடப்பாடி பழனி சாமி மீதும் எதிர்ப்பாளர்கள் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர்.
- தேர்தல் தோல்வி பற்றி விரிவாக ஆலோசனை நடத்தி உள்ளார்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்ததைத் தொடர்ந்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தே.மு.தி.க. உள்ளிட்ட சில கட்சிகளோடு கூட்டணி அமைத்து போட்டியிட்ட அ.தி.மு.க. தேர்தலில் பின்னடைவை சந்தித்தது. பா.ஜ.க. கூட்டணி சில தொகுதியில் இரண்டாம் இடத்தை பிடித்ததால் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனி சாமி மீதும் எதிர்ப்பாளர்கள் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க.வில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள அனைவரையும் மீண்டும் சேர்த்து கொண்டால் மட்டுமே அ.தி.மு.க. பழைய நிலைக்கு திரும்பி வலுப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் நோக்கர்களும் கணித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து பாராளுமன்ற தொகுதி வாரியாக கட்சியினர் மாவட்ட செயலாளர்கள் உள்பட முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் ஆலோசனை நடத்த உள்ளார்.
ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று மாலை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதிகளை சேர்ந்த முக்கிய பொறுப் பாளர்கள் பங்கேற்கிறார்கள். அவர்களுடன் எடப்பாடி பழனிசாமி தேர்தல் தோல்வி பற்றி விரிவாக ஆலோசனை நடத்தி உள்ளார்.
நாளை முதல் வருகிற 19-ந் தேதி வரை தொடர்ச்சியாக 26 பாராளுமன்ற தொகுதிகளை சேர்ந்த அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்த உள்ளார்.
நாளை முதல் 19-ந் தேதி வரை காலை 9 மணிக்கு தொடங்கும் ஆலோசனை கூட்டம் மாலை வரையில் நடைபெற உள்ளது.
ஒவ்வொரு நாளும் 3 தொகுதிகளை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். இதன்படி நாளை (11-ந் தேதி) காலை 9 மணிக்கு சிவகங்கை பாராளுமன்ற தொகுதியினருடனும், 11 மணிக்கு வேலூர் நிர்வாகி களுடனும், மாலை 3.30 மணிக்கு திருவண்ணாமலை நிர்வாகிகளுடனும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி கருத்துக்களை கேட்கிறார். எந்தெந்த தொகுதிகளை சேர்ந்தவர்கள் ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்கிறார்கள் என்பது பற்றிய விவரம் வருமாறு:-
12-ந்தேதி-அரக் கோணம் தஞ்சை, திருச்சி, 13-ந்தேதி-சிதம்பரம், மதுரை, பெரம்பலூர். 15-ந்தேதி- நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி. 16-ந்தேதி-ராமநாதபுரம், நெல்லை, விருதுநகர். 17-ந் தேதி-தென்காசி, தேனி, திண்டுக்கல். 18-ந் தேதி-பொள்ளாச்சி, நீலகிரி, கோவை. 19-ந்தேதி-விழுப்புரம், கன்னியாகுமரி, தர்மபுரி.
பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கான காரணம் என்ன? என்பதை கண்டறிய முடிவு செய்துள்ள எடப்பாடி பழனிசாமி கட்சியின் மேல்மட்ட நிர்வாகிகள் முதல் கீழ் மட்ட நிர்வாகிகள் வரையில் உள்ள அனைவரிடமும் கருத்துக்களை கேட்க உள்ளார்.
இதைத் தொடர்ந்து தொகுதி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் தலைமை கழக செயலா ளர்கள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் கள், முன்னாள் மாவட்ட செயலாளர்கள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள், ஒன்றிய, பேரூராட்சி, பகுதி செயலாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பு களில் உள்ளவர்கள் என அனைவரும் கூட்டத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.
இந்த கூட்டங்கள் முடிந்த பிறகு சென்னை உள்பட மீதமுள்ள தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளுடனும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
இதன் பின்னர் தேர்தல் தோல்விக்கு காரணமான வர்கள் கண்டறியப்பட்டு அவர்கள மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.
- விலங்கின் காலடி தடங்களை பதிவு செய்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பசுமாட்டினை சிறுத்தை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதி விவசாயிகளுடைய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி:
எடப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட பக்க நாடு ஊராட்சி, சன்னியாசி முனியப்பன் கோவில் அருகிலுள்ள ஒடுவங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் மகன் பழனிசாமி, விவசாயியான இவரது விவசாயத் தோட்டம் அங்குள்ள வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இவரது விவசாயத் தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த ஆடு கடந்த மாதம் 7-ந் தேதி அன்று திடீரென காணாமல் போனது.
இதனை அடுத்து பழனிசாமி தனது தோட்டத்தில் கட்டி இருந்த ஆட்டினை தேடி சென்ற போது சற்று தூரத்தில் உள்ள வனப்பகுதியில் ஆடு இறந்து கிடப்பதும், அதன் உடலில் பெரும் பகுதியை மர்ம விலங்கு தின்று இருப்பதும் கண்டு பழனிசாமி அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் அங்கிருந்த மர்ம விலங்கின் காலடித் தடங்களை பதிவு செய்தனர். ஆட்டினை வேட்டையாடிய மர்ம விலங்கின் காலடித்தடம் சிறுத்தை காலடி தடத்தை போல் இருப்பதைக் கண்டு சந்தேகம் அடைந்த வனத்துறையினர், அது குறித்து மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாவட்ட உதவி வன அலுவலர் செல்வகுமார் தலைமையிலான 10க்கும் மேற்பட்ட வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் பக்கநாடு கிராமம், கோம்பைகாடு பகுதியைச் சேர்ந்த விவசாயி மாதையன் தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த பசுமாட்டினை சிறுத்தை அடித்துக் கொன்றது. பசு மாட்டின் உடலின் ஒரு பகுதியை சிறுத்தை கடித்துத் தின்ற நிலையில், காலையில் அப்பகுதிக்கு வந்த விவசாய மாதையன் தனது தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த பசுமாடு இறந்து கிடப்பதையும் அதன் உடல் பகுதியை மர்ம விலங்கு கடித்து தின்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து சம்பந்தப்பட்ட வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், அப்பகுதியில் முகாமிட்டுள்ள வனத்துறையினர் அங்கு பதிவாகி இருந்த விலங்கின் காலடி தடங்களை பதிவு செய்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பக்க நாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராம மக்கள் இரவு நேரங்களில் அருகிலுள்ள வனப்பகுதிக்கு இயற்கை உபாதை கழிக்க செல்ல வேண்டாம் எனவும், மாலை மற்றும் அதிகாலை நேரங்களில் சிறுவர்களை தனியாக வேளியே விட வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சந்தித்த ஒன்றிய குழு தலைவர் குப்பம்மாள் மாதேஷ் ஆறுதல் கூறினார். எடப்பாடி அருகே நள்ளிரவு நேரத்தில் மீண்டும் விவசாய தோட்டத்தில் கட்டியிருந்து பசுமாட்டினை சிறுத்தை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதி விவசாயிகளுடைய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
- விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதுண்டு.
- நகரின் முக்கிய பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
பழனி:
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தினந்தோறு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவிழாக்கள் மற்றும் முக்கிய விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதுண்டு.
இந்நிலையில் பக்தர்கள் வரும் முக்கிய பகுதியான அடிவாரம், கிரிவீதி, சன்னதிவீதி உள்ளிட்ட பகுதிகளில்அ திகளவு ஆக்கிரமிப்பு கடைகள் இருந்தன. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த சிரமம் அடைவதாகவும், குறிப்பாக அலகு குத்தி வரும் பக்தர்கள் பாதிக்கப்படுவதாகவும், புகார்கள் எழுந்தன.
இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்ட நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் மற்றும் தேவஸ்தானத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன்பின் படிப்படியாக நடைபாதை கடைகள் அகற்றப்பட்டதுடன் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் வருவதும் தடுக்கப்பட்டது. இதனால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன் வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறி தொடர் போராட்டங்கள் நடைபெற்றன.
கடந்த வாரம் பழனி நகர்மன்ற தலைவர் தலைமையில் அனைத்து கவுன்சிலர்களும் தேவஸ்தான அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக வருகிற 13-ந் தேதி பழனியில் கடையடைப்பு போராட்டம் நடத்துவது என நகர்மன்றம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பழனி நகர மக்களின் பொது வழிப்பாதை உரிமைகளை பாதுகாத்திடவும், பழனி நகராட்சியின் உரிமைகளை முடக்கும் தேவஸ்தானத்தை கண்டித்தும், நீதியரசர் கவனத்தை ஈர்த்திடும் வகையில் இந்த போராட்டம் நடைபெறும் என நகரின் முக்கிய பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
விரைவில் உலக முருக பக்தர்கள் பேரவை மாநாடு நடைபெற உள்ள நிலையில் தேவஸ்தானத்திற்கும், நகராட்சிக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த போராட்ட சூழல் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- 41 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 38.87 அடியாக உள்ளது.
- 33 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.70 அடியாக உயர்ந்து உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
பவானிசாகர் அணைக்கு நேற்று வினாடிக்கு ஆயிரம் கனஅடியாக வந்த நீர் இன்று காலை மேலும் அதிகரித்து 4,649 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 69.31 அடியாக உயர்ந்து உள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் 41 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 38.87 அடியாக உள்ளது. இதேபோல் 33 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.70 அடியாக உயர்ந்து உள்ளது.
- டோல்கேட்டை முற்றிலும் அகற்றவேண்டும் என்று அனைத்து தரப்பு மக்கள், தொழிலாளர்கள், பல்வேறு சங்கங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர்.
- கப்பலூர் டோல்கேட்டை அகற்ற பலமுறை அரசுக்கு கவனத்திற்கு எடுத்துச் சென்றும் இன்னமும் தீர்வு காணப்படவில்லை.
மதுரை:
தென்தமிழகத்தின் நுழைவுப் பகுதியான மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி கப்பலூரில் டோல்கேட் அமைக்கப்பட்டுள்ளது. இதை அகற்ற வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கப்பலூர் டோல்கேட்டை மூடக்கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டார்.
இதற்கிடையே கடந்த வாரம் உள்ளூர் பகுதி மக்களின் வாகனங்களுக்கு கட்டணம் அதிகரிக்கப்பட்டது. அப்போது மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் பல்வேறு அமைப்புகள் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களும் தொடர்ந்து சுங்கச்சாவடிக்கு எதிராக எதிர்ப்பு குரல் எழுப்பி வருகிறார்கள்.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ஏராளமான அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் இன்று கப்பலூர் டோல்கேட்டில் தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டோல்கேட்டை மூட வலியுறுத்தியும், உள்ளூர் வாகனங்களை கட்டணம் இன்றி அனுமதிக்க வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சரவணன், மாணிக்கம், டாக்டர் சரவணன், மகேந்திரன், தமிழரசன், பேரவை மாநில துணைச் செயலாளர் வெற்றிவேல் மற்றும் நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். அ.தி.மு.க.வினரின் முற்றுகை போராட்டம் காரணமாக கன்னியாகுமரி முக்கிய நெடுஞ்சாலையான கப்பலூர் டோல்கேட் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் விரைந்து சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-
கப்பலூர் டோல்கேட் விவகாரத்தில் மூன்று ஆண்டுகள் ஆகியும் கொடுத்த வாக்குறுதியை பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது வாய் திறக்க மறுத்து வருகிறார். நாங்கள் போராடினால் எங்கள் மீது பொய் வழக்கு தொடுத்து கைது செய்யும் சூழ்நிலை உள்ளது.
தற்போது உள்ளூர் வாகனங்களுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உள்ளூர் வாகனங்கள் 50 சதவீத கட்டணத்துடன் செல்ல வேண்டும் என்று சொல்கிறார்கள். இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நடவடிக்கை அனைத்து மக்களும் போராட தூண்டும் வகையில் உள்ளது. இதே எடப்பாடியார் ஆட்சி காலத்தில் மத்திய அரசிடம் பேசி உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண சலுகை அளிக்கப்பட்டது.
எனவே டோல்கேட்டை முற்றிலும் அகற்றவேண்டும் என்று அனைத்து தரப்பு மக்கள், தொழிலாளர்கள், பல்வேறு சங்கங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர். கடையடைப்பு போராட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. இந்த அரசு மக்கள் பிரச்சனையில் அக்கறை செலுத்தவில்லை.
மத்திய அரசு ஏற்கனவே 60 கிலோமீட்டர் உள்ள டோல்கேட்டுகள் அகற்றப்படும் என்று கூறியுள்ளார்கள். அதை பயன்படுத்தி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து செய்திருக்க வேண்டும், ஆனால் அதை அரசு செய்யவில்லை. எடப்பாடியார் இருக்கும்பொழுது டோல்கேட்டில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது.
அதன் மூலம் மக்களிடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது அந்த போதிய பயிற்சி அளிக்கப்படவில்லை. இதனால் தினந்தோறும் பிரச்சனைகள் ஏற்படுகிறது. மக்களுக்கு சேவை செய்யாமல் லாப நோக்கத்துடன் தான் தற்போது இயங்கி வருகிறது.
கப்பலூர் டோல்கேட்டை அகற்ற பலமுறை அரசுக்கு கவனத்திற்கு எடுத்துச் சென்றும் இன்னமும் தீர்வு காணப்படவில்லை. இந்த பிரச்சனையில் எடப்பாடியாரிடம் அனுமதி பெற்று மக்களுடன் இணைந்து போராடி வருகிறோம். அடக்குமுறைக்கு அஞ்சாமல் எங்கள் போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முதுநிலை வேளாண் படிப்புகளுக்கு சேர்வதற்கான நுழைவுத் தேர்வு கடந்த ஜூன் 23-ந் தேதி நடைபெற்றது.
- நுழைவுத்தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது மாணவர்களிடையே குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
வடவள்ளி:
கோவையில் செயல்படும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் 18 உறுப்பு கல்லூரிகளும் 28 இணைப்பு கல்லூரிகளும் செயல்பட்டு வருகிறது.
இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள முதுநிலை வேளாண் படிப்புகளுக்கு சேர்வதற்கான நுழைவுத் தேர்வு கடந்த ஜூன் 23-ந் தேதி நடைபெற்றது.
இந்த தேர்வினை ஏராளமான மாணவர்கள் எழுதி, முதல்நிலை படிப்பில் சேர்வதற்காக காத்திருந்தனர். இந்த நிலையில் இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் இ-மெயில் முகவரிக்கு நேற்று இரவு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் மாணவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள இ-மெயிலில், ஜூன் 23-ல் நடைபெற்ற தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் செலுத்திய விண்ணப்ப கட்டணம் திரும்பி வழங்கப்படும்.
2024-2025-ம் கல்வி ஆண்டிற்கான முதுநிலை மாணவர்கள் சேர்க்கை நுழைவுத் தேர்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுழைவுத்தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது மாணவர்களிடையே குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சாப்ட்வேர் பிரச்சனை மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. 10 நாட்களுக்குள் நுழைவுத் தேர்வு நடைபெறுவது குறித்தும், தேர்வு நடைபெறும் தேதி குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்.
சாப்ட்வேர் பிரச்சனை மற்றும் தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு, தேர்வுகள் நடத்தப்படும். இளநிலை படிப்பு செப்டம்பர் மாதம் முடியும் நிலையில், செப்டம்பர் இறுதியிலேயே முதுநிலை படிப்புகளுக்கான வகுப்புகள் ஆரம்பமாகும். மாணவர்கள் சேர்க்கை தாமதம் இன்றி நடைபெறும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு எல்லையை மீறி சென்றுவிட்டது.
- ஆர்.எஸ்.பாரதியிடம் இருந்து ரூ.1 கோடி பெற்று கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்டோருக்கு வழங்குவேன்.
சென்னை:
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தன்னை பற்றி அவதூறு பேசியதாக தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது:-
* நான் அரசியலுக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் யார் மீதும் மான நஷ்ட வழக்கு தொடர்ந்ததில்லை.
* ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு எல்லையை மீறி சென்றுவிட்டது.
* ஆர்.எஸ்.பாரதி மீது சட்ட ரீதியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என நீதிபதியிடம் வலியுறுத்தியுள்ளேன்.
* ஆர்.எஸ்.பாரதியிடம் இருந்து ரூ.1 கோடி பெற்று கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்டோருக்கு வழங்குவேன்.
* இந்த சின்ன பையன் என்ன செய்வான் என்பதை இனி பார்க்க போகிறீர்கள்.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
- தரவரிசை பட்டியலை தொழில்நுட்ப கல்வி இயக்கக ஆணையர் வீரராகவராவ் வெளியிட்டார்.
- தரவரிசைப் பட்டியல் tneaonline.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
2024-25-ம் கல்வியாண்டில் என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே மாதம் 6-ந்தேதி தொடங்கி, கடந்த மாதம் (ஜூன்) 6-ந்தேதியுடன் நிறைவு பெற்றது. பின்னர், மேலும் அவகாசம் கேட்டு வந்த கோரிக்கைகளின் அடிப்படையில், கடந்த மாதம் 10 மற்றும் 11-ந்தேதிகளில் விண்ணப்பப் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, விண்ணப்பப் பதிவு நிறைவு பெற்ற நிலையில், 2 லட்சத்து 53 ஆயிரத்து 954 பேர் விண்ணப்பப் பதிவு செய்து இருந்ததாக தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை அலுவலகம் தெரிவித்தது.
விண்ணப்பப் பதிவு செய்தவர்களில், 2 லட்சத்து 9 ஆயிரத்து 645 பேர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியும், அவர்களில் ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 853 பேர் சான்றிதழ்களை பதிவேற்றமும் செய்து இருந்தனர்.
இந்த நிலையில் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியவர்கள் அனைவருக்கும் ரேண்டம் எண்ணும் கடந்த மாதம் 12-ந்தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 13-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டது.
ஏற்கனவே வெளியிட்டு இருந்த அட்டவணைப்படி, விண்ணப்பித்து, கட்டணம் செலுத்தி, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. தரவரிசை பட்டியலை தொழில்நுட்ப கல்வி இயக்கக ஆணையர் வீரராகவராவ் வெளியிட்டார்.
தரவரிசைப் பட்டியல் tneaonline.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தரவரிசை பட்டியலில் செங்கல்பட்டை சேர்ந்த மாணவி தோஷிதா லட்சுமி முதலிடம் பெற்றுள்ளார். நெல்லையை சேர்ந்த மாணவி நிலஞ்சனா 2-வது இடம் பெற்றுள்ளார். முதல் 2 இடங்களை மாணவிகள் பெற்ற நிலையில் நாமக்கலை சேர்ந்த கோகுல் என்ற மாணவன் 3-வது இடம்பெற்றுள்ளார்.
வரும் 22-ந்தேதி பொறியியல் கலந்தாய்வு தொடங்குகிறது.
- சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபைக்குள் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
- கனகசபைக்குள் தீட்சிதர்கள் மட்டுமே சென்று வந்தநிலையில் இன்று காலை முதல் பக்தர்கள் அனைவரும் அனுமதிக்கப்பட்டனர்.
சென்னை:
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபையில் ஏறி நின்று சாமி தரிசனம் செய்வதை தடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறநிலையத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபைக்குள் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
இன்று காலை முதல் கனகசபைக்குள் நின்று நடராஜரை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கனகசபைக்குள் தீட்சிதர்கள் மட்டுமே சென்று வந்தநிலையில் இன்று காலை முதல் பக்தர்கள் அனைவரும் அனுமதிக்கப்பட்டனர்.
- 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது.
- விரைவில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க உள்ளனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள செந்தாரப்பட்டியை சேர்ந்தவர் அருண் (24), ஓட்டல் மேனேஜ்மெண்ட் பட்டதாரி. இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு லாவோஸ் நாட்டில் உள்ள ஓட்டலுக்கு வேலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கிருந்த ஒரு கும்பல் அவரை அடைத்து வைத்து சைபர் குற்றத்தில் ஈடுபடும் நிறுவனத்தில் வேலையில் சேரும் படி வற்புறுத்தி உள்ளனர். பின்னர் அருண் தூதரகம் வழியாக சொந்த ஊர் திரும்பினார். இது குறித்து தம்மம்பட்டி போலீசில் அவர் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் வழக்கு பதிவு செய்து ரூ. 1.65 லட்சம் வாங்கி கொண்டு மோசடி செய்த தஞ்சையை சேர்ந்த சையது, சென்னை பெரம்பூரை சேர்ந்த அப்துல் காதர் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், தமிழகம் முழுவதும் ஏராளமானவர்களை வெளிநாடுகளுக்கு இது போல அனுப்பி வைத்துதும், இதில் ஏஜெண்டுகள் பலருக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றி டி.ஜி.பி. உத்தரவிட்டார்.
இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்திய போது பரபரப்பு தகவல்கள் வெளிடியானது, அதன் விவரம் வருமாறு-
தமிழ்நாடு முழுவதும் வெளிநாட்டில் வேலை தேடும் இளைஞர்களின் விவரங்களை சேகரித்து அவர்களை இந்த ஏஜெண்டுகள் தொடர்பு கொண்டு பேசி அவர்கள் விரும்பும் வேலை அதிக சம்பளத்தில் இருப்பதாக கூறி தாய்லாந்து, லாவோஸ் நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களை தனித்தனி அறைகளில் தங்க வைத்து அவர்கள் விரும்பும் நிறுவனங்களுக்கு நேர்முகததேர்வுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
இந்த நிறுவனங்கள் சைபர் குற்றங்களில் ஈடுபடும் சட்ட விரோத நிறுவனங்கள் ஆகும். சரளமாக ஆங்கிலம் பேசும் இளைஞர்களை தேர்வு செய்து அவர்களை இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகளில் வசிக்கும் நபர்களோடு பேச செய்து அவர்களது வங்கி கணக்கில் இருந்து பணத்தை சுருட்டும் மோசடி வேலையில் ஈடுபட செய்கின்றனர்.
இப்படி மோசடி வேலைகளுக்கு தான் ஆட்களை அனுப்புகிறோம் என்று இங்குள்ள ஏஜெண்டுகளுக்கு தெரியும். அதற்காக அதிகப்படியான கமிஷன் தொகையை வெளிநாட்டு சைபர் குற்றவாளிகளிடம் இருந்து பெற்று வந்துள்ளனர். ஆத்தூர் பகுதியை சேர்ந்த அருணுடன் லாவோஸ் நாட்டிற்கு 15-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதில் 5 இளைஞர்களை சைபர் கிரைம் குற்ற செயலில் ஈடுபடும் வேலையை செய்ய சொல்லி வற்புறுத்தி உள்ளனர்.
அதற்கான கம்பெனிகள் என பல இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளனர். அந்த வேலை தெரியாது என்று சொன்னவர்களிடம் ரூ. 5 முதல் 10 லட்சம் வரை தந்தால் தான் உங்கள் நாட்டிற்கு அனுப்பி வைப்போம் என்று அந்த கும்பல் மிரட்டி உள்ளது. அதன் பிறகே தூதரக அதிகாரிகள் உதவியுடன் மோசடி கும்பலிடம் இருந்து மீண்டு அருண் உள்பட 5 இளைஞர்கள் தமிழ்நாட்டிற்கு திரும்பி உள்ளனர்.
இந்த நிலையில் தான் பாதிக்கப்பட்ட நபர்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் ஓரிரு நாளில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. விரைவில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க உள்ளனர்.
சி.பி.ஐ.டி. போலீசார் முழுமையாக விசாரித்து ஆன்லைன் சைபர் குற்றச்செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டு கும்பலையும் அவர்களுக்கு தேவையான ஆட்களை இங்கிருந்து அனுப்பி வைத்த ஏஜெண்டுகளையும் கைது செய்தால் மேலும் பலர் சிக்குவார்கள் என்பதும், அவர்கள் மூலம் முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்பதால் இந்த வழக்கில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.
- ராமேசுவரம் மீனவர்கள் கடந்த 8-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
- வேலை நிறுத்த போராட்டம் காரணமாக ஆயிரக்கனக்கான மீனவர்கள் மாற்று தொழிலுக்கு சென்று வருவது குறிப்பிடத்தக்கது.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 560-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறது. இதன்மூலம், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் சார்பு தொழிலாளர்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில், மீன்பிடி தடைகாலத்திற்கு முன்பு இறால் மீன், கணவாய், நண்டு, சங்காயம் உள்ளிட்ட மீன்கள் அதிக விலைக்கு கொள்முதல் செய்தனர். ஆனால் தடைகாலம் நிறைவடைந்து மீன்பிடிக்க சென்று திரும்பிய போது 50 சதவீதம் விலையை குறைத்து வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து கொள்முதல் செய்தனர்.
இதனால் படகு ஒன்றுக்கு பல ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இலங்கை கடற்படையினர் அச்சுறுத்தலை தாண்டி மீன்பிடித்து வரும் மீன்களுக்கு உள்ளூர் மீன் ஏற்றுமதியாளர்கள் விலையை குறைத்து மீன்களை கொள்முதல் செய்வதால் படகுகளை தொடர்ந்து இயக்க முடியாத நிலைக்கு மீனவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இறால் மீனுக்கு உரிய விலை வழங்கிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் கடந்த 8-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். மூன்றாவது நாளாக இன்றும் வேலை நிறுத்த போராட்டம் நீடித்தது.
இதன் காரணமாக துறைமுகத்தில் நூற்றுக்கணக்கான படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது. மூன்று நாள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக ராமேசுவரத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான மீன் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. வேலை நிறுத்த போராட்டம் காரணமாக ஆயிரக்கனக்கான மீனவர்கள் மாற்று தொழிலுக்கு சென்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே ராமேசுவரத்தில் 150-க்கும் மேற்பட்ட சிறிய படகுகள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்று மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதுகுறித்து மீனவ சங்க பொதுச்செயலாளர் என்.ஜே.போஸ் கூறுகையில், ராமேசுவரத்தில் இயக்கப்பட்டு வரும் சிறிய படகுகள் குறைந்தளவே செலவு செய்து மீன்பிடிக்க செல்வதால் அதற்கு ஏற்றவாறு மீன்கள் கிடைத்தால் போதும். இதனால் அவர்கள் இன்று கடலுக்கு சென்று உள்ளனர்.
விசைப்படகு மீனவர்கள் பிடித்து வரும் இறால்மீன், நண்டு, கணவாய், சங்காயம் மீனுக்கு வியாபாரிகள் விலையை உயர்த்தி வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
- பானிபூரி கடைகள் மற்றும் அசைவ உணவகங்களில் ஆய்வு செய்யப்பட்டது.
- 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தரவின்படியும், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தங்க விக்னேஷ் அறிவுறுத்தலின் படியும், சத்தியமங்கலம் நகர பகுதியில் உள்ள பானிபூரி கடைகள் மற்றும் அசைவ உணவகங்களில் ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வில் அசைவ ஓட்டல்களில் செயற்கை வண்ணம் கலந்து சில்லி சிக்கன் தயாரித்து விற்பனை செய்த 2 கடைகள் கண்டறியப்பட்டு ஆயிரம் ரூபாய் வீதம் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் சில்லி புரோட்டா தயாரிப்புக்கு பழைய புரோட்டாவை பயன்படுத்திய ஒரு ஓட்டல் உரிமையாளருக்கு ரூபாய் ஆயிரம் அபராதமும், அஜினோமோட்டோ பயன்படுத்திய ஒரு கடைக்காரருக்கு ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மொத்தமாக ரூ.4000 அபராதம் விதிக்கப்பட்டது.
கோபிசெட்டபாளையம் நகர பகுதியில் உள்ள அசைவ உணவகங்கள், பேக்கரி கடைகள் மற்றும் பானி பூரி கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது
ஆய்வில் சுகாதாரம் இல்லாத 2 கடைகள் கண்டறியப்பட்டு ஒவ்வொரு கிடைக்கும் தலா ரூ.1000 வீதம் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. பஜ்ஜி போண்டா போன்ற எண்ணெய் பலகாரங்களை நியூஸ் பேப்பரில் வைத்து உண்பதற்கு கொடுத்த 2 கடைகளுக்கு ரூ.1000 வீதம் 2 கடைகளுக்கு 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த ஆய்வு தொடர்ந்து நடைபெறும் எனவும், பானி பூரி விற்பனை செய்யும் கடைக்காரர்கள் தரமான பானி பூரியை பயன்படுத்த வேண்டும் எனவும் பானி பூரி ரசத்தில் செயற்கை வண்ணம் ஏதும் சேர்க்கக் கூடாது எனவும், உணவு பாதுகாப்பு உரிமம் பானி பூரி கடைக்காரர்கள் பெற்றிருக்க வேண்டும் எனவும், முக கவசம், கையுறை அணிந்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
ஆய்வில் சத்தியமங்கலம் நகரம் மற்றும் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம், கோபி நகரம் உணவு பாதுகாப்பு அலுவலர் குழந்தைவேல் மற்றும் புஞ்சை புளியம்பட்டி நகர உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டனர்.






