என் மலர்tooltip icon

    கேரளா

    • பிளாஸ்டிக் இல்லாத, சுற்றுச்சூழலுக்கு ஆபத்து இல்லாத புதிய வகை பேனாவை கண்டுபிடிக்க அமலா தீர்மானித்தார்.
    • புதிய கண்டுபிடிப்புக்கு அரசு ரூ.2 லட்சம் பரிசு வழங்கியது.

    கேரள மாநிலம், தொடுபுழா அருகே உள்ள மூலமட்டம் பகுதியை சேர்ந்தவர் அமலா (வயது 25). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. இறுதி ஆண்டு படித்து வருகிறார்.

    தற்போது பயன்பாட்டில் உள்ள பேனாக்கள் அனைத்தும் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டுள்ள நிலையில், பிளாஸ்டிக் இல்லாத, சுற்றுச்சூழலுக்கு ஆபத்து இல்லாத புதிய வகை பேனாவை கண்டுபிடிக்க அமலா தீர்மானித்தார். தொடர்ந்து இது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    அதன் பயனாக பிளாஸ்டிக் இல்லாத புதிய பேனாவை அவர் கண்டுபிடித்தார். இந்த பேனாவுக்கு அரசின் தகுதி சான்றிதழ் நேற்று கிடைத்தது. மேலும் இந்த புதிய கண்டுபிடிப்புக்கு அரசு ரூ.2 லட்சம் பரிசு வழங்கியது. ரூ.15, ரூ.20 ஆகிய விலைகளில் 2 வகையான பேனாக்களை அமலா உருவாக்கியுள்ளார். விரைவில் இந்த பேனாக்கள் விற்பனைக்கு வர உள்ளது.

    • பிரிட்டிஷ் கடற்படையின் மேம்பட்ட போர் விமானங்களில் முதன்மையானது F35B ஆகும்.
    • போர் விமானம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது

    தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கேரளாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட பிரிட்டிஷ் F-35B போர் விமானம், கடந்த ஆறு நாட்களாக இந்தியாவில் உள்ளது.

    அதிநவீன தொழில்நுட்பத்திற்கு பெயர் பெற்ற மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஒன்றாகக் கருதப்படும் இந்த ஜெட் விமானம், ஹேங்கரில் (விமான நிறுத்துமிடத்தில்) நிறுத்தப்படவில்லை என்று நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விமானம் தற்போது வெளியில் இருப்பதாக தேசிய ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

    பிரிட்டிஷ் கடற்படை விமானத்தை தங்கள் ஹேங்கரில் வைத்திருக்க ஏர் இந்தியா முன்வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

    இருப்பினும், பிரிட்டிஷ் கடற்படை இந்த வாய்ப்பை பணிவுடன் நிராகரித்துள்ளது. பிரிட்டிஷ் கடற்படை அதன் தனித்துவமான அதிநவீன தொழில்நுட்பம் யாருடைய கைகளிலும் சிக்குவதை விரும்பாததால் இந்த முடிவை எடுத்ததாகத் தெரிகிறது.

    இருப்பினும், இறுதி ஆய்வுகளின் போது விமானத்தை ஹேங்கருக்கு நகர்த்தவும் அவர்கள் ஒப்புக்கொள்ளலாம் என்று நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    பிரிட்டிஷ் கடற்படையின் மேம்பட்ட போர் விமானங்களில் முதன்மையானது F35B ஆகும். அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இந்த விமானம் உலகிலேயே மிகவும் விலை உயர்ந்தது என்று கூறப்படுகிறது. வேறு எந்த போர் விமானத்திலும் காணப்படாத மேம்பட்ட தொழில்நுட்ப அமைப்புகளை இது கொண்டுள்ளது.

    இந்த விமானம் பிரிட்டனின் HMS பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் ஸ்ட்ரைக் குழுவின் ஒரு பகுதியாக இந்தோ-பசிபிக் பிராந்தியம் வந்தடைந்தது. F35B சமீபத்தில் இந்திய கடற்படையுடன் கடற்படை பயிற்சிகளிலும் பங்கேற்றுள்ளது.

    ஜூன் 14 அன்று, போர் விமானம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் குறைந்த எரிபொருள் இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டதால், விமானி கேரளாவில் தரையிறங்க வேண்டியிருந்தது. இந்திய விமானப்படை மறுநாள் இந்த சம்பவத்தை உறுதிசெய்து, தேவையான உதவிகளை வழங்குவதாக அறிவித்தது. அப்போதிருந்து, அது வெளியில் நிறுத்தப்பட்டுள்ளது.

    ஹைட்ராலிக் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்ய பிரிட்டிஷ் நிபுணர்களும் விமானியும் கடுமையாக முயன்று வருகின்றனர். மறுபுறம், விமானத்திற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

    • படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில்களை ரெயில்வே துறை விரைவிலேயே இயக்க உள்ளது.
    • திருவனந்தபுரம்-காசர்கோடு, மங்களூரு சென்ட்ரல்-திருவனந்தபுரம் வழித்தடத்தில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    திருவனந்தபுரம்:

    ரெயில் பயணிகளின் வசதிக்காக ரெயில்வே துறை பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. மேலும் பலவிதமான புதிய ரெயில்களையும் அறிமுகப்படுத்துகிறது. அதில் ஒன்று தான் வந்தே பாரத் ரெயில்.

    முழுவதும் குளிர்சாதன வசதியுடன், பயணிகள் உட்கார்ந்து பயணிக்கும் வகையிலான இந்த ரெயில்கள் பல மாநிலங்களில் முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் விரைவான பயணம், உணவு உள்ளிட்ட பல வசதிகள் பயணிகளுக்கு கிடைக்கின்றன.

    இதனால் வந்தே பாரத் ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில்களை ரெயில்வே துறை விரைவிலேயே இயக்க உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் வந்தே பாரத் ரெயில்களில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

    அனைத்து மாநிலங்களிலுமே உணவு தொடர்பாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டபடி இருந்து வருகிறது. கேரள மாநிலத்திலும் வந்தே பாரத் ரெயிலில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக புகார் கூறப்படுகிறது. கேரள மாநிலத்தை பொறுத்தவரை திருவனந்தபுரம்-காசர்கோடு, மங்களூரு சென்ட்ரல்-திருவனந்தபுரம் வழித்தடத்தில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    அந்த ரெயில்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவு தரமற்ற முறையில் இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன. மேலும் சமீபத்தில் அது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவியது. ஆனால் அதற்கு ரெயில்வே நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

    தரமற்ற உணவு வழங்கியதாக தங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை எனவும் விளக்கம் அளித்திருந்தது. இந்தநிலையில் கேரளாவில் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில்களில் தரமற்ற உணவு வழங்கியதாக ஏராளமான புகார்கள் கொடுத்திருப்பதும், உணவு ஒப்பந்த நிறுவனம் லட்சக்கணக்கில் அபராதம் செலுத்தியிருப்பதும் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக தெரியவந்துள்ளது.

    வந்தே பாரத் ரெயில்களில் தரமற்ற உணவு வழங்கப்பட்டதாக கடந்த 9 மாதத்தில் மொத்தம் 319 புகார்கள் வந்துள்ளன. மேலும் உணவு சப்ளை செய்துவரும் ஒப்பந்த நிறுவனத்துக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை மட்டும் ரூ14.87லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

    அந்த தொகையை ஒப்பந்த நிறுவனம் செலுத்தியிருப்பது தகவல் அரியும் உரிமை சட்டத்தில் தெரியவந்துள்ளது. வந்தே பாரத் ரெயிலில் தரமற்ற உணவு வழங்கப்பட்டதாக கொடுக்கப்பட்டிருக்கும் புகார்கள் தொடர்பாக வெளியாகியிருக்கும் இந்த தகவல் கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நான் கட்சி தொண்டர்களுடன் கடந்த 16 வருடங்களாக நெருங்கிய தொடர்பில் இருக்கிறேன்.
    • அவர்களை நெருங்கிய நண்பர்களாக, சகோதரர்களாக பார்க்கிறேன்.

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தரூர், அக்கட்சியின் சில தலைவர்களுடன் தனக்கு கருத்து வேறுபாடு உண்டு எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சசி தரூர் கூறியதவாது:-

    நான் கட்சி தொண்டர்களுடன் கடந்த 16 வருடங்களாக நெருங்கிய தொடர்பில் இருக்கிறேன். அவர்களை நெருங்கிய நண்பர்களாக, சகோதரர்களாக பார்க்கிறேன். எனினும், சில காங்கிரஸ் தலைவர்களுடன் தனக்கு கருத்து வேறுபாடு உண்டு. சில விஷயங்கள் குறித்து நான் என்ன பேசிக் கொண்டிருக்கிறேன் என்பது பொது வெளியில் உள்ளன. நீங்கள் (மீடியா) கூட வெளியிட்டுள்ளீர்கள்.

    இடைத்தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ள எனக்கு அழைப்பு விடுக்கவில்லை. அதனால் நான் செல்லவில்லை. அழைப்பில்லாத இடத்திற்கு செல்லமாட்டேன். வெளிநாட்டுக்கு என்னுடைய தலைமையிலான குழு சுற்றுப் பயணம் செய்து சிந்தூர் நடவடிக்கை குறித்து எடுத்துரைத்தது. இது தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்தேன். அப்போது உள்ளூர் அரசியல் குறித்து விவாதிக்கவில்லை.

    இவ்வாறு சசி தரூர் தெரிவித்தார்.

    • சுற்றுலா தலங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும்.
    • அரசு விழாக்களில் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மலையோர பகுதிகளில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு அம்மாநில ஐகோர்ட் தடை விதித்துள்ளது.

    இதுதொடர்பான பொதுநல வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட், அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி தினம் முதல் இந்தத் தடை அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.

    கேரள மலையோர பகுதிகளில் 5 லிட்டருக்கு குறைவான குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்யக் கூடாது.

    தண்ணீர் குடிப்பதற்கு ஸ்டீல், காப்பர் டம்ளர்களைப் பயன்படுத்த ஊக்கப்படுத்த வேண்டும்.

    தேக்கடி, வாகமண், அதிரப்பள்ளி, சாலக்குடி, நெல்லியம்பதி, பூக்கோடு ஏரி-வைத்திரி, வயநாட்டில் உள்ள கர்லாட் ஏரி, அம்பலவயல், வயநாடு பாரம்பரிய அருங்காட்சியகம் ஆகிய சுற்றுலா தலங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும்.

    சுற்றுலா தலங்கள் தவிர கேரளா முழுவதும் உள்ள அனைத்து திருமண மண்டபங்கள், ஓட்டல்கள் மற்றும் உணவகங்களிலும், அனைத்து அதிகாரப்பூர்வ மத்திய மற்றும் மாநில அரசு விழாக்களிலும் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    • பலத்த மழை காரணமாக கேரளாவின் ஒரு சில இடங்களில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • மழை காரணமாக பல மாவட்டங்களில் பொது மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு, வயநாடு, பத்தினம் திட்டா உள்ளிட்ட பல மாவட்டங்களில் கன மழை கொட்டுகிறது.

    பலத்த மழை காரணமாக ஒரு சில இடங்களில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த பகுதிகளில் பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டு பொதுமக்களை மீட்டு வருகின்றனர். மழை காரணமாக பல மாவட்டங்களில் பொது மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.

    இந்நிலையில், காசர்கோடு மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை அலுவலகம் இடிந்து விழுந்தது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.

    தினமும் குறைந்தது 10 பேர் இந்த அலுவலகத்தில் கேரம் விளையாட வரும் நிலையில், விபத்து அன்று யாரும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    • பெங்களூருக்கு திரும்பிச் சென்ற அந்த பெண், பூசாரியின் உதவியாளரான அருண் என்பவர் அழைத்ததன் பேரில் கேரளாவுக்கு வந்திருக்கிறார்.
    • தலைமை பூசாரி உன்னி தாமோதரன் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் அருகே பெரிங்கோட்டில் பிரசித்திபெற்ற ஸ்ரீ விஷ்ணு மாயா கோவில் இருக்கிறது. இந்த கோவிலுக்கு கேரளா மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் வந்து செல்கிறார்கள்.

    கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே உள்ள ஹரளூர் பகுதியை சேர்ந்த 38 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த கோவிலுக்கு வந்திருக்கிறார். அந்த பெண்ணின் கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன்பிறகு அவரது குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டபடி இருந்திருக்கிறது.

    அதற்கு பரிகார பூஜை செய்வதற்காக ஸ்ரீ விஷ்ணு மாயா கோவிலுக்கு வந்திருக்கிறார். அந்த கோவிலின் தலைமை பூசாரியான உன்னி தாமோதரனை சந்தித்து தனது பிரச்சனையை தெரிவித்தார். இந்த கோவிலில் சிறப்பு பூஜை செய்தால் பிரச்சனைகள் தீரும் என்று அந்த பெண்ணிடம் பூசாரி கூறியிருக்கிறார்.

    தான் கூறும் நாளில் கோவிலில் பூஜை செய்ய வருமாறு அந்த பெண்ணிடம் பூசாரி கூறினார். அதன்பேரில் பெங்களூருக்கு திரும்பிச் சென்ற அந்த பெண், பூசாரியின் உதவியாளரான அருண் என்பவர் அழைத்ததன் பேரில் கேரளாவுக்கு வந்திருக்கிறார்.

    பின்பு அவருடன் கோவிலுக்கு அருகில் உள்ள கட்டிடத்துக்கு சென்றிருக்கிறார். அங்கு வைத்து அந்த பெண்ணை பூசாரி மற்றும் அவரது உதவியாளர் அருண் ஆகிய இருவரும் சேர்ந்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக அந்த பெண் பெங்களூரு பெலந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்தனர். சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த திருச்சூர் வந்த அவர்கள், பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் கூறப்பட்ட கோவில் ஊழியர் அருணை கைது செய்தனர்.

    தலைமை பூசாரி உன்னி தாமோதரன் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பரிகார பூஜை செய்வதாக கூறி பெண்ணை கோவில் பூசாரி மற்றும் ஊழியர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் திருச்சூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பலத்த மழை காரணமாக ஒரு சில இடங்களில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • மழை காரணமாக பல மாவட்டங்களில் பொது மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு ஒரு வாரத்திற்கு முன்னதாக கடந்த மாதமே தொடங்கிவிட்டது. அதில் இருந்தே அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இடையில் ஒரு சில நாட்கள் மட்டும் மழை குறைந்தநிலையில், தற்போது மீண்டும் அங்கு பலத்த மழை பெய்ய தொடங்கியிருக்கிறது. கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு, பத்தினம் திட்டா உள்ளிட்ட பல மாவட்டங்களில் கன மழை கொட்டுகிறது.

    பலத்த மழை காரணமாக ஒரு சில இடங்களில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த பகுதிகளில் பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டு பொதுமக்களை மீட்டு வருகின்றனர். மழை காரணமாக பல மாவட்டங்களில் பொது மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.

    மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை தொடர்ந்து வரும் நிலையில் கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் பாலக் காடு, திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், பத்தினம்திட்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், திருவனந்தபுரம், ஆலப்புழா, கொல்லம் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மாவட்டங்களில் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

    கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    காசர்கோடு, வயநாடு, மலப்புரம், பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், பத்தினம்திட்டா ஆகிய மாவட்டங்கள், ஆலப்புழா மவட்டத்தில் குட்டநாடு மற்றும் அம்பலப்புழா தாலுகாக்களில் உள்ள தொழில்முறை கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.

    கோழிக்கோடு மற்றும் கணணூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டது. பலத்த மழை காரணமாக கொல்லம் அருகே உள்ள போலயாதோடு பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் மரம் முறிந்து விழுந்தது. இதனால் அந்த வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    • மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களுக்கு 17-ந் தேதி சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • மழையின் காரணமாக கேரள கடற்கரையில் மணிக்கு 40 முதல் 60 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வருகிற 18-ந் தேதி வரை அங்கு மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பத்தனம் திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களுக்கு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

    மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களுக்கு 17-ந் தேதி சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழையின் காரணமாக கேரள கடற்கரையில் மணிக்கு 40 முதல் 60 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், 18-ந் தேதி வரை மீனவர்கள் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • விமான விபத்தில் பலியான ரஞ்சிதாவுக்கு இந்து சூதன்(15) என்ற மகனும், இதிகா(12) என்ற மகளும் உள்ளனர்.
    • சிறுமியை தேற்ற முடியாமல் அவரது பாட்டி மற்றும் உறவினர்கள் தவித்து வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    அகமதாபாத் விமான விபத்தில் பலியானவர்களில் ஒருவர் கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் கோழஞ்சேரி புல்லாடு பகுதியை சேர்ந்த ரஞ்சிதா நாயர்(வயது39). 9 ஆண்டுகள் ஓமனில் நர்சாக பணியாற்றிய இவர், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு லண்டனுக்கு சென்றார்.

    அங்கும் நர்சாக வேலை பார்த்து வந்த ரஞ்சிதா நாயருக்கு, கேரள அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நர்சு வேலை கிடைத்தது. அவரது சொந்த ஊரான கோழஞ்சேரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியிலேயே அவருக்கு வேலை கிடைத்திருக்கிறது.

    அந்த வேலையில் சேருவதற்காக, லண்டனில் பார்த்து வந்த வேலையை ராஜினாமா செய்ய ரஞ்சிதா நாயர் முடிவு செய்தார். இதற்காக அவர் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணித்தார். அப்போது தான் விமான விபத்தில் சிக்கி பலியாகிவிட்டார்.

    விமான விபத்தில் பலியான ரஞ்சிதாவுக்கு இந்து சூதன்(15) என்ற மகனும், இதிகா(12) என்ற மகளும் உள்ளனர். மகன் 10-ம் வகுப்பும், மகள் 7-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். அவர்கள் இருவரும் பாட்டி துளசியுடன் இருந்து வருகின்றனர்.

    ரஞ்சிதா சென்ற விமானம் விபத்தில் சிக்கிய தகவலை அறிந்த அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த விபத்தில் அவர் உயிர் தப்பியிருப்பார் என்றே நினைத்தனர். இந்த நிலையில் விமான விபத்தில் ரஞ்சிதா பலியாகிவிட்ட தகவல் பத்தினம்திட்டா கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டது.

    அதனைக்கேட்டு ரஞ்சிதாவின் தாய் துளசி மற்றும் குழந்தைகள் உடைந்து போனார்கர். சில நாட்களுக்கு முன்பு தங்களுடன் இருந்த அவர், பலியாகிவிட்டதை நினைத்து கதறினர். நேற்று வரை தன்னை கொஞ்சிய தாய் இறந்துவிட்டதை நினைத்து, ரஞ்சிதாவின் மகள் இதிகா மிகுவும் வேதனையடைந்தார்.

    அவர் தனது பாட்டியை கட்டிப்பிடித்து அழுதபடியே இருந்தார். சிறுமியை தேற்ற முடியாமல் அவரது பாட்டி மற்றும் உறவினர்கள் தவித்து வருகின்றனர். பாட்டியை கட்டிப்பிடிதத்து சிறுமி கதறி அழுதது, ஆறுதல் கூறச்சென்ற அக்கம்பக்கத்து வீட்டினரை கண் கலங்க செய்தது.

    ரஞ்சிதா அனைவரிடமும் அன்பாக பழகி வந்துள்ளார். அதிலும் தன்னுடன் வேலை பார்க்கும் சக ஊழியர்களுடன் மிகவும் நட்பாக இருந்துள்ளார். இதனால் அவரது மறைவு அவருடைய குடும்பத்தினருக்கு மட்டுமின்றி, உடன் பணிபுரியும் ஊழியர்களுக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது.

    • கடந்த ஓராண்டுக்கு முன்பு லண்டனில் நர்சாக பணியில் சேர்ந்தார்.
    • ரஞ்சிதாவுக்கு கேரள அரசு பணியாளர் தேர்வாணயம் மூலம் கோழஞ்சேரி அரசு ஆஸ்பத்திரியில் வேலை கிடைத்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கோழஞ்சேரி புல்லாடு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சிதா நாயர் (வயது39). இவர் ஓமனில் 9 ஆண்டுகள் நர்சாக பணி செய்து வந்தார். பின்னர் கடந்த ஓராண்டுக்கு முன்பு லண்டனில் நர்சாக பணியில் சேர்ந்தார்.

    இந்தநிலையில் ரஞ்சிதாவுக்கு கேரள அரசு பணியாளர் தேர்வாணயம் மூலம் கோழஞ்சேரி அரசு ஆஸ்பத்திரியில் வேலை கிடைத்தது. இதற்காக கேரளா வந்த அவர் லண்டனில் பணியாற்றிய ஆஸ்பத்திரிக்கு சென்று ராஜினாமா கடிதம் கொடுக்க முடிவு செய்தார்.

    இதற்காக அவர் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு விமானத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி பலியானார். அரசு ஆஸ்பத்திரியில் வேலை கிடைத்த நிலையில் விமான விபத்தில் நர்சு பலியான சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சிங்கப்பூர் சரக்கு கப்பல் வெடித்துச் சிதறும் அபாயத்தில் உள்ளதால் பதற்றம் நிலவுகிறது.
    • கடலில் மாயமான 4 பேரை மீட்கும் பணியில் டிரோன்கள், கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

    திருவனந்தபுரம்:

    இலங்கையின் கொழும்புவில் இருந்து மும்பை நோக்கி 'எம்.வி. வான ஹை 503' என்ற சிங்கப்பூர் சரக்கு கப்பல் கடந்த 9ம் தேதி சென்று கொண்டிருந்தது.

    கேரளாவின் கண்ணூர் மாவட்டம் அழிக்கல் கடற்கரை அருகே நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது திடீரென சரக்கு கப்பலின் ஒரு பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. அந்த தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. கப்பலில் இருந்த கன்டெய்னர்களுக்கும் தீ பரவியதால் அவற்றில் சில பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

    சரக்கு கப்பலில் இருந்த கேப்டன் உள்பட 22 பேர் உயிர் தப்பிக்க கடலில் குதித்தனர். அவர்கள் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டு இருந்தனர். தகவலறிந்து அழிக்கல் துறைமுகத்தில் இருந்து கடலோர பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

    மீட்பு பணியில் ஈடுபட்ட இந்திய கடற்படை கப்பல் ஐ.என்.எஸ். சூரத் மூலம் நடுக்கடலில் தத்தளித்த 18 பேரை மீட்புக் குழுவினர் மீட்டு கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு பனம்பூரில் உள்ள புதிய மங்களூரு கப்பல் துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர். அவர்களில் 2 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருந்ததால் மங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மீட்கப்பட்டவர்கள் சீனாவை சேர்ந்த 8 பேர், தைவானை சேர்ந்த 4 பேர், மியான்மரை சேர்ந்த 4 பேர், இந்தோனேசியாவை சேர்ந்த 2 பேர் என்பது தெரியவந்தது. கடலில் மாயமான மீதமுள்ள 4 பேரை மீட்கும் பணியில் டிரோன்கள், கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

    இந்நிலையில், கேரள கடல் பகுதியில் தீப்பிடித்து எரியும் சிங்கப்பூர் சரக்கு கப்பல் தற்போது வெடித்துச் சிதறும் அபாயத்தில் உள்ளதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    குளோரோ பார்மேட், டைமெத்தில் சல்பேட், ஹெக்ஸாமெதிலீன் டிசோசைனேட் உள்ளிட்ட ரசாயனங்கள் மற்றும் வேதிப்பொருட்கள் உள்ளதால் வெடித்துச் சிதறலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை வெடிப்பு ஏற்பட்டால், கேரளக் கடற்கரைப் பகுதியில் மீன்பிடித் தொழில், சுற்றுச்சூழல், மற்றும் சுற்றுலாத்துறை கடுமையாகப் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

    ×