என் மலர்tooltip icon

    ஜம்மு காஷ்மீர்

    • உமர் அப்துல்லாவை விட அப்துல் ரஷீத் 1,80,478 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
    • அப்துல் ரஷீத், உபா சட்டத்தில் கைதாகி 2019ம் ஆண்டு முதல் டெல்லி திகார் சிறையில் இருக்கிறார்.

    ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா தொகுதியில் தோல்வியை ஏற்பதாக முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா அறிவித்துள்ளார்.

    வெற்றி பெற போகும் சுயேச்சை வேட்பாளர் அப்துல் ரஷீத்க்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    உமர் அப்துல்லாவை விட அப்துல் ரஷீத் 1,80,478 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

    எஞ்சினியர் ரஷீத் என அழைக்கப்படும் அப்துல் ரஷீத், உபா சட்டத்தில் கைதாகி 2019ம் ஆண்டு முதல் டெல்லி திகார் சிறையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பின் நடந்த முதல் மக்களவைத் தேர்தல் இதுவாகும்.
    • காஷ்மீர் மக்களின் மனநிலையை இந்த தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கும்

    ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கும் அரசியலமைப்பு விதி 370 ஐ கடந்த 2019 இல் மத்திய பாஜக அரசு நீக்கியது. வெளி மாநிலங்களை சேர்த்தவர்கள் ஜம்மு காஷ்மீர் பகுதியில் நிலம் வாங்கக்கூடாது உள்ளிட்ட சிறப்பு அந்தஸ்துகள் நீக்கப்பட்டு  யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. அரசியல் ரீதியாகவும் ஜம்மு காஷ்மீர் பொதுமக்களிடையேயும் சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்கு கடும் எதிரிப்பு கிளம்பியது.

    இந்நிலையில் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பின் நடந்த முதல் மக்களவைத் தேர்தல் இதுவாகும். எனவே ஜம்மு காஷ்மீர் மக்களின் மனநிலையை இந்த தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கும் என்று கூறப்படுகிறது. அதன்படி இன்று (ஜூன் 4) நடக்கும் வாக்கு எண்ணிக்கையின் 11 மணி நிலவரப்படி ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 5 இடங்களுள் 4 இடங்களில் இந்தியா கூட்டணி முன்னிலையில் உள்ளது. 1 இடத்தில பாஜவின் என்.டி.ஏ கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

    இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் JKNC தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா பிரமுல்லா தொகுதியில் முன்னிலையில் உள்ளார். மேலும் அனந்தக் ராஜௌரி தொகுதியில் ஜம்மு காஷ்மீரின் மற்றொரு முன்னாள் முதலவரும் ஜம்மு காஷ்மீர் ஜனநாயக மக்கள் கட்சியைச் சேர்ந்த மெகபூபா மூப்தி முன்னிலையில் உள்ளார். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் ஜம்மு காஷ்மீரில் இந்தியா கூட்டணி 5 இல் 2 முதல் 3 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

     

    • காட்டுப்பகுதியில் நேற்று காலையில் தீ விபத்து ஏற்பட்டது.
    • மரங்கள் மற்றும் பிற இயற்கை வளங்களும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் உத்தம்பூர் மாவட்டத்தில் உள்ள கங்கேரா மலைப்பகுதியிலும் நேற்று காட்டுத்தீ ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

    இது தொடர்பாக வனத்துறை அதிகாரி பரம் தத் சர்மா கூறுகையில்,

    காட்டுப்பகுதியில் நேற்று காலையில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்தும் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டோம். அது இன்னும் தொடர்கிறது.

    முதற்கட்ட மதிப்பீட்டின்படி, தீயினால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. பரந்த காடுகள் அழிந்துள்ளது. மரங்கள் மற்றும் பிற இயற்கை வளங்களும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். 

    இதேபோல் ஜம்முவின் ராம்நகர் வனப்பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த தீ பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனைகளில் அனுமதி.
    • விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜம்மு- பூஞ்ச் நெடுஞ்சாலையில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்டுள்ள விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

    உத்தர பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் இருந்து பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, அக்னூர் பகுதியில் உள்ள தாண்டா மோர் என்ற பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர்.

    இந்த விபத்தில் இதுவரை 21 பேர் உயிரிழந்த நிலையில், பேருந்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒரு ராணுவ அதிகாரியின் வீட்டில் ஒரு வழக்கு விசாரணைக்காக காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
    • ராணுவ வீரர்கள் காவலர்களை தாக்கும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் காவல்நிலையத்தில் நுழைந்த ராணுவ வீரர்கள் அங்குள்ள காவலர்களை தாக்கியதில் 4 காவலர்கள் காயமடைந்துள்ளனர்.

    காயமடைந்த ரயீஸ் கான், இம்தியாஸ் மாலிக், சலீம் முஷ்டாக், ஜாகூர் அஹ்மத் ஆகிய 4 காவலர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக கொலை முயற்சி, அரசு ஊழியரை பனி செய்ய விடாமல் தடுத்தல், பணியில் இருக்கும் அரசு ஊழியரை தாக்குதல் உள்ளிட்ட பல பிரிவுகளில் 16 ராணுவ வீரர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 16 பேரில் 3 பேர் லெப்டினல் கர்னல் பதவியில் இருக்கும் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஒரு ராணுவ அதிகாரியின் வீட்டில் ஒரு வழக்கு விசாரணைக்காக காவல்துறையினர் சோதனை நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த ராணுவ வீரர்கள் காவல்நிலையத்தில் உள்ள காவலர்களை தாக்கியதாக சொல்லப்படுகிறது.

    காவல்நிலையத்திற்குள் ராணுவ வீரர்கள் புகுந்து காவலர்களை தாக்கும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

    காவல்துறை அதிகாரிகளை ராணுவ வீரர்கள் தாக்கியதாக வெளிவரும் தகவல்கள் தவறானவை என்றும் காவல்துறையினருக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட சிறு பிரச்சனை இப்போது பேசி தீர்க்கபட்டுள்ளது என்று இந்திய ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    • காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள ஸ்ரீநகர், பாரமுல்லா, அனந்த்நாக்-ரஜோரி தொகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு 19.16 சதவீத வாக்குகள்தான் பதிவானது.
    • இந்த மூன்று தொகுதிகளிலும் தற்போது 50.86 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

    இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை ஆறு கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகர், பாரமுல்லா, அனந்த்நாக்-ரஜோரி, உதம்பூர், ஜம்மு ஆகிய ஐந்து மக்களவை தேர்தலில் வாக்குப்பதிவு முடிவடைந்து விட்டது.

    இந்த ஐந்து தொகுதிகளிலும் கடந்த 35 வருடங்கள் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். அதேபோல் போட்டியிடும் வாக்காளர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

    இந்த அளவிற்கு தேர்தலில் பங்கேற்றுள்ளது, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில சட்டசபை தேர்தலை நடத்துவதற்கு மிகப்பெரிய அளவில் நேர்மறையானதாகும். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஜனநாயக செயல்முறை தொடர்ந்து செழித்து வருகிறது எனத் தெிவித்துள்ளார்.

    ஐந்து தொகுதிகளிலும் 58.46 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள ஸ்ரீநகர், பாரமுல்லா, அனந்த்நாக்-ரஜோரி தொகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு 19.16 சதவீத வாக்குகள்தான் பதிவானது. தற்போது 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த மூன்று தொகுதிகளிலும் 50.86 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஸ்ரீநகரில் 38.49 சதவீத வாக்குகள், பாரமுல்லாவில் 59.1 சதவீத வாக்குகள், அனந்த்நாக்-ரஜோரியில் 57.84 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

    உதம்பூர் தொகுதியில் 68.27 சதவீத வாக்குகளும், ஜம்முவில் 72.22 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

    ஜம்மு-காஷ்மீரில் 83 சட்டமன்ற இடங்கள் 90 ஆக அதிகரித்துள்ளது. உச்சநீதிமன்றம் செப்டம்பர் மாதம் 30-ந்தேதிக்குள் சட்டமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஆற்றில் இருந்து காப்பாற்றப்படும் குழந்தையை கரையோரத்தில் படுக்க வைத்து மூச்சு கொடுத்து வாலிபர் காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
    • குழந்தையை காப்பாற்றியவரை பயனர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

    இன்றைய உலகில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஏராளமான வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்கள் பதிவிடப்படுகின்றன.

    அந்த வகையில், ஸ்ரீநகரில் உள்ள சஃபாகடலில் ஜீலம் ஆற்றில் தவறி விழுந்த 7 வயது குழந்தையை அப்பகுதி மக்கள் காப்பாற்றிய திக்.. திக்... பதற வைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    ஒன்றரை வினாடிகள் ஓடும் வீடியோவில், ஜீலம் ஆற்றில் தவறி விழுந்த குழந்தையை தண்ணீர் அடித்து செல்வதும், அக்குழந்தையை காப்பாற்ற தன் உயிரையும் பற்றி கவலைப்படாத ஒருவர் பின் தொடர்ந்து செல்வதும், கரையோரம் உள்ள வாலிபர்கள் ஓடிச்செல்வம் பார்க்க முடிகிறது. ஆற்றில் இருந்து காப்பாற்றப்படும் குழந்தையை கரையோரத்தில் படுக்க வைத்து மூச்சு கொடுத்து வாலிபர் காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

    அக்குழந்தையை காப்பாற்றியவரை பயனர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

    • எங்கள் கட்சி தொண்டர்கள் எந்த காரணம் இன்றி போலீஸ் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
    • டிஜி, எல்ஜி, என அனைத்து அலுவலகங்களின் உயர் அதிகாரி முதல் எல்லோரும் இதில் ஈடுபட்டுள்ளனர்.

    ஜம்மு-காஷ்மீரில் இன்று இரண்டு தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. தெற்கு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக்-ரஜோரி தொகுதியில் அம்மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி போட்டியிடுகிறார்.

    இந்த நிலையில் இன்று காலை மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா திடீரென சாலை மறியலில் ஈடுபட்டார். அவருடன் அவரது கட்சி தொண்டர்களும் போராட்டத்தில் குதித்தனர். பாதுகாப்பு படையினர் தங்களது கட்சி ஏஜெண்டுகளை பணியாற்ற விடாமல் தடுப்பதாக கூறி மெகபூபா மறியலை மேற்கொண்டார். அவரை பாதுகாப்பு படையினர் சமரசம் செய்தனர். இதனால் அனந்த்நாக் தொகுதியில் சில இடங்களில் ஓட்டுப்பதிவு சற்று தாமதம் ஆனது.

    இது தொடர்பாக மெகபூபா முப்தி கூறிகையில் "எங்கள் கட்சி தொண்டர்கள் எந்த காரணம் இன்றி போலீஸ் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். டிஜி, எல்ஜி, என அனைத்து அலுவலகங்களின் உயர் அதிகாரி முதல் எல்லோரும் இதில் ஈடுபட்டுள்ளனர். காவல் நிலையத்தில் பூத் ஏஜென்ட்களை அடைத்து வைத்துள்ளனர்.

    சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடைபெற வேண்டும் என்று சொல்கிறீர்கள். ஆனால் இந்த விசயங்கள் அனைத்தையும் நீங்கள் செய்கிறீர்கள். வாக்கு எந்திரத்தில் முறைகேடு செய்ய இருப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது" என்றார்.

    இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு நேற்று மெகபூபா முப்தி கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 49 தொகுதிகளிலும் இன்று காலை முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
    • பைசாபாத் பாராளுமன்றத் தொகுதி, அயோத்தி நகரை உள்ளடக்கியதாகும்.

    பாராளுமன்ற தேர்தலில் 5-ம் கட்ட வாக்குப்பதிவு 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடந்து வருகிறது. வாக்குப்பதிவையொட்டி வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    அமேதி, ரேபரேலி, பைசாபாத் உள்ளிட்ட அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பாராளுமன்றத் தொகுதிகளில் இத்தோ்தல் நடைபெறுகிறது. இதில் பைசாபாத் பாராளுமன்றத் தொகுதி, அயோத்தி நகரை உள்ளடக்கியதாகும்.

    5-ம் கட்டமாக இன்று நடந்து வரும் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்கு வங்கத்தில் 7, பீகாா், ஒடிசாவில் தலா 5, ஜார்க்கண்டில் 3, ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் தலா ஒரு தொகுதி அடங்கி உள்ளன. இந்த தொகுதிகளில் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

    இந்த நிலையில், இன்று காலை 11 மணி நிலவரப்படி 5-ம் கட்ட தேர்தலில் 23.66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

    பீகார் - 21.11 சதவீதம்

    உத்தரபிரதேசம்- 27.76 சதவீதம்

    ஜம்மு & காஷ்மீர் - 26.18 சதவீதம்

    ஜார்க்கண்ட் - 26.18 சதவீதம்

    லடாக்- 27.87 சதவீதம்

    மகாராஷ்டிரா - 15.93 சதவீதம்

    ஒடிசா- 21.07 சதவீதம்

    மேற்கு வங்காளம்- 32.70 சதவீதம்


    • பாராளுமன்ற தேர்தலின் 4-வது கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது.
    • ஜம்மு காஷ்மீரில் முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா வாக்களித்தார்.

    ஸ்ரீநகர்:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. 4-வது கட்டமாக 96 தொகுதிக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா தனது வாக்கைப் பதிவு செய்தார்.

    அதன்பின், பரூக் அப்துல்லா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், எங்குமே வன்முறை இல்லை. அமைதி நிலவுகிறது என சொல்லிக் கொள்ளும் பா.ஜ.க. அரசு, எங்கள கட்சியினரை கடந்த 2 நாட்களாக தடுப்புக் காவலில் வைத்துள்ளது. எங்கள் கட்சி நிர்வாகிகளை வெளியில் விடாமல் பிடித்து வைத்து இருப்பது ஏன் என மோடியிடமும் அமித்ஷாவிடமும் கேட்க நான் விரும்புகிறேன். தோல்வி அடைந்துவிடுவோம் என பா.ஜ.க. பயப்படுகிறது. உண்மையில் அந்தக் கட்சி தோற்கத்தான் போகிறது என தெரிவித்தார்.

    • பிரதமர் மோடி வெறுப்புணர்வு பிரசாரத்தை கையில் எடுத்துள்ளார்.
    • பிரதமர் பதவியில் இருப்பவர் அநாகரீகமான செயலில் ஈடுபடக்கூடாது.

    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலை வருமான பரூக் அப்துல்லா பிரசார கூட்டத்தில் பேசியதாவது:-

    பிரதமர் மோடி ஓட்டுக்காக இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார். அவரை அனைவரும் ஒன்று சேர்ந்து அதிகாரத்தில் இருந்து விரட்ட வேண்டும்.

    முஸ்லிம்கள், இந்துக்கள் மத்தியில் திட்டமிட்டு பிரதமர் மோடி வெறுப்புணர்வு பிரசாரத்தை கையில் எடுத்துள்ளார். பிரதமர் பதவியில் இருப்பவர் இத்தகைய அநாகரீகமான செயலில் ஈடுபடக்கூடாது.

    பிரதமர் மோடி வெளி நாட்டுக்கு செல்லும் போது இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர் அனைவருக்கும் அவர்தான் பிரதமர். ஆனால் அவர் உள்ளூரில் ஓட்டுக் கேட்கும் போது, அனைவரையும் மத ரீதியாக பிரிக்க முயற்சி செய்கிறார்.

    பிரதமர் மோடி எப்போ தும் ராமரை பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார். இதற்கு முன்பு அவர் ராமரை பற்றி அதிகம் பேசியதில்லை. தேர்தல் என்றதும் ராமரை கையில் எடுத்துள்ளார்.

    ராமரை பிரதமர் மோடி அருகில் இருந்து பார்த்தது போலவே பேசுகிறார். ஓட்டுக்காக அவர் எந்த பொய்யையும் சொல்வார். கடந்த தேர்தலின் போது புல்வாமா தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப் பட்ட விவகாரத்திலும் நிறைய சதி உள்ளது.

    வெடிகுண்டுகளுடன் அந்த பகுதியில் கார், 3 வாரங்களாக சுற்றிக்கொண்டே இருந்தது. குறிப்பிட்ட பகுதிக்கு வந்ததும் அப்பாவி மக்களை கொல்லும் வகையில் தாக்குதல் நடத்தப்பட்டது.

    பிரதமர் மோடி இந்த தாக்குதலுக்கு வெளி யாட்கள் தான் காரணம் என்றார். பிறகு பாகிஸ்தா னில் துல்லிய தாக்குதல் நடத்தியதாக கூறினார். இந்த பொய்யை சொல்லியே மோடி கடந்த முறை தேர்தலில் வெற்றி பெற்றார்.

    இப்போது மத ரீதியாக வெறுப்புணர்வை தூண்டி பேசி வருகிறார். காஷ்மீரில் 370-வது சட்டப் பிரிவு நீக்கப்பட்டதை ஏற்க இயலாது. இதற்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.

    தற்போது இருப்பது காந்தியின் இந்தியாவில் அல்ல. மோடியின் இந்தியா. மோடி இந்தியாவில் முஸ்லிம்கள், இந்துக்கள் தனித்தனியாக இருக்க வேண்டும் என்கிறார்கள். அதை நாங்கள் ஏற்கமாட்டோம்.

    இவ்வாறு பரூக் அப்துல்லா பேசினார்.

    • என்கவுண்ட்டரில் 2 பயங்கரவாதிகள் ஏற்கனவே சுட்டு கொல்லப்பட்டனர்.
    • பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சூடு.

    ஜம்மு மற்றும் காஷ்மீரின் தெற்கே குல்காம் மாவட்டத்தில் ரெட்வானி பயீன் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது.

    இதில், பயங்கரவாதி ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார். கடந்த செவ்வாய் கிழமை இதே பகுதியில் நடந்த என்கவுண்ட்டரில் 2 பயங்கரவாதிகள் ஏற்கனவே சுட்டு கொல்லப்பட்டனர்.

    இந்நிலையில், நேற்று நடந்த சண்டையில் 3-வது பயங்கரவாதி கொல்லப்பட்டு உள்ளார்.

    பயங்கரவாதியை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

    இதனை தொடர்ந்து, காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, தேடுதல் வேட்டையும் தீவிரப்படுத்தப்பட்டது.

    ×