என் மலர்tooltip icon

    இந்தியா

    • நம் கொள்கைத் தலைவர் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்.
    • தவெக அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் விஜய்.

    சட்டமேதை அம்பேத்கர் நினைவு நாளை ஒட்டி அவரது படத்திற்கு தவெக தலைவர் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    அரசியலமைப்புச் சட்டத்தின் வழியாக எளியவர்களுக்கும் அதிகாரம் வழங்கி, எல்லோருக்கும் சட்ட உரிமைகள் கிடைக்க அடித்தளம் அமைத்தவர், நம் கொள்கைத் தலைவர் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள். அவரது நினைவுநாளை முன்னிட்டு, நமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன்.

    அண்ணல் அம்பேத்கர் அவர்கள் காட்டிய வழியில்,

    சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மையைப் பேணிப் பாதுகாக்க உறுதியேற்போம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • டிசம்பர் 3ம் தேதி ஹூப்பள்ளியில் வரவேற்புக்கான ஏற்பாடு செய்யப்பட்டது.
    • டிசம்பர்-2 காலை முதல் மறுநாள் அதிகாலை வரை விமானம் தாமதம் என இன்டிகோ ஊழியர்கள் கூறினர்.

    பெங்களூரு:

    கர்நாடகத்தின் ஹூப்பள்ளியைச் சேர்ந்தவர் மேகா க்ஷீரா சாகர். இவர் ஒடிசாவின் புவனேஸ்வரைச் சேர்ந்த சங்கிராம் தாஸ் என்பவரை காதலித்து நவம்பர் 23-ம் தேதி திருமணம் செய்துகொண்டார். டிசம்பர் 3ம் தேதி மேகாவின் சொந்த ஊரான ஹூப்பள்ளியில் ரிசப்ஷனுக்கான ஏற்பாடு செய்யப்பட்டது.

    ரிசப்ஷனில் கலந்து கொள்வதற்காக மணமக்கள் இருவரும் புவனேஸ்வரிலிருந்து பெங்களூருவிற்கும், அங்கிருந்து ஹூப்பள்ளிக்கும் டிசம்பர் 2ம் தேதி விமானத்தில் முன்பதிவு செய்தனர். அதேபோல், சில உறவினர்களுக்கும் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர்.

    இதற்கிடையே, டிசம்பர் 2-ம் தேதி காலை முதல் மறுநாள் அதிகாலை வரை விமானம் தாமதம் என இன்டிகோ ஊழியர்கள் கூறினர். அதன்பின், விமானம் ரத்து செய்யப்பட்டது என தெரிவித்தனர். ஊழியர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விமானங்கள் ரத்தானது என விமான நிறுவனம் தெரிவித்தது.

    இந்நிலையில், விமானம் ரத்தானதால் மணமக்கள் ஹூப்பளி செல்ல முடியவில்லை. இதனால் வேறு வழியின்றி புவனேஸ்வரில் இருந்தபடியே வீடியோ காலில் பங்கேற்றனர். ஹூப்பள்ளியில் உறவினர்கள் இருந்தபடி வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

    ஹூப்பள்ளியில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்த மேடையில், மணமக்களுக்குப் பதிலாக மணமகளின் பெற்றோர் அமரவைக்கப்பட்டு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

    • மேலப்பாளையம் பகுதியில் எஸ்.டி.பி.ஐ., த.மு.மு.க. உள்ளிட்டவைகள் சார்பில் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டது.
    • மேலப்பாளையத்தில் ஆட்டோ, வேன்கள் உள்ளிட்டவை ஓடவில்லை.

    நெல்லை:

    பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ந் தேதி இஸ்லாமிய அமைப்பு கள் சார்பில் கருப்பு நாளாக அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி இஸ்லாமிய அமைப்புகள் இன்று கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.

    அதன்படி நெல்லை மாநகர பகுதியான மேலப் பாளையத்தில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன.

    மேலப்பாளையம் சந்தை முக்கு ரவுண்டானா, அண்ணா வீதி, அம்பை சாலை, வி.எஸ்.டி சந்திப்பு, கொக்கிர குளம் சாலை, பஜார் வீதிகள் உள்பட பிரதான சாலைகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள டீக்கடைகள், வணிக வளாகங்கள், ஜவுளிக்கடைகள் உள்ளிட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. சுமார் 1,500 கடைகள் வரை அடைக்கப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் முக்கிய சாலைகள், பஜார் வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. பால் கடைகள், மருந்து கடைகள் மட்டும் திறந்திருந்தன. ஒரு சில இடங்களில் கேன்களில் டீ வைத்து வியாபாரிகள் விற்பனை செய்தனர்.

    மேலப்பாளையம் பகுதியில் எஸ்.டி.பி.ஐ., த.மு.மு.க. உள்ளிட்டவைகள் சார்பில் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டது. பதற்றமான இடமாக கருதப்படும் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் மூலமும், ரோந்து வாகனங்கள் மூலமும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அதேநேரம் மேலப்பாளையத்தில் இன்று ஆட்டோ, வேன்கள் உள்ளிட்டவை ஓடவில்லை. இருப்பினும், அரசு மற்றும் தனியார் பஸ் சேவைகள் வழக்கம் போல் இயங்கி வருவதால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.

    • விழா முடிவடைந்த பின் பிற்பகலில் விமானம் மூலம் மு.க.ஸ்டாலின் சென்னை செல்கிறார்.
    • பாதுகாப்பு கருதி இன்றும், நாளையும் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மதுரை:

    மதுரையில் நாளை நடைபெறும் தொழில் முதலீட்டு மாநாடு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக இன்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகிறார். அவருக்கு விமான நிலையத்தில் அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், கலெக்டர் பிரவீன்குமார் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வரவேற்கின்றனர்.

    தொடர்ந்து இன்று இரவு அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் மாளிகையில் மு.க.ஸ்டாலின் தங்குகிறார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் விடுதலை கட்சி நிறுவனர் முருகவேல்ராஜன் இல்ல திருமண விழா கருப்பாயூரணியில் உள்ள தனியார் மகாலில் நடக்கிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்துகிறார்.

    பின்னர் மதுரை மேலமடை சந்திப்பில் ரூ.150.28 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். பின்னர் காலை 10 மணியளவில் விரகனூர் ரிங்ரோட்டில் உள்ள வேலம்மாள் ஐடா ஸ்கெட்டா அரங்கில் தொழில் முதலீட்டாளர் மாநாடு நடைபெறுகிறது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். அப்போது பல்வேறு நிறுவனவங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

    இதனை தொடர்ந்து மதுரை உத்தங்குடியில் அரசு சார்பில் நடைபெறும் பிரமாண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதில் மாற்றுத்திறனாளிகள், சுய உதவிக்குழுவினர் உள்ளிட்ட 1 லட்சத்து 67 ஆயிரம் பேருக்கு மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    மேலும் இந்த விழாவில் முல்லை பெரியாறு லோயர் கேம்ப் பகுதியில் இருந்து மதுரை மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். விழா முடிவடைந்த பின் பிற்பகலில் விமானம் மூலம் மு.க.ஸ்டாலின் சென்னை செல்கிறார்.

    முதலமைச்சர் வருகையை முன்னிட்டு மதுரை விமான நிலையம், அவர் தங்கும் இடம், விழா நடைபெறும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி இன்றும், நாளையும் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • அன்புமணி தரப்பில் கொடுக்கப்பட்ட ஆவணங்களை ஏற்று அவரை பா.ம.க. தலைவராக தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
    • வருகிற ஆகஸ்டு மாதம் வரை அவரது தலைவர் பதவி உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், டாக்டர் அன்புமணிக்கும் மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் டாக்டர் அன்புமணி தரப்பில் கொடுக்கப்பட்ட ஆவணங்களை ஏற்று அவரை பா.ம.க. தலைவராக தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. வருகிற ஆகஸ்டு மாதம் வரை அவரது தலைவர் பதவி உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் டாக்டர் அன்புமணி மீது டெல்லி போலீசில் டாக்டர் ராமதாஸ் சார்பாக ஜி.கே.மணி இன்று புகார் செய்துள்ளார். அந்த புகாரில், "தேர்தல் ஆணையத்திடம் போலி ஆவணங்களை அளித்து டாக்டர் அன்புமணி மோசடி செய்துள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.

    • தமிழக வெற்றிக்கழகத்தில் செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் இணைவதால் எங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.
    • வாக்காளர் பட்டியல் தீவிர சுருக்க திருத்த பணி என கூறி ஒரே இரவில் என்னுடைய தொகுதியில் 22,000 பேரை நீக்கி விட்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் இன்று அம்பேத்கார் நினைவுதினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு அமைச்சர் இ.பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மேயர் இளமதி, காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் துரைமணிகண்டன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    அதன் பின்னர் அமைச்சர் இ.பெரியசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழக வெற்றிக்கழகத்தில் செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் இணைவதால் எங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. த.வெ.க. இன்னும் மக்கள் மன்றத்தில் அங்கீகாரம் பெறவே இல்லை. இந்த சூழ்நிலையில் அந்தக் கட்சியுடன் யார் சேர்ந்தாலும், பிரிந்தாலும் எங்களுக்கு எந்த கவலையுமில்லை.

    திருப்பரங்குன்றம் விஷயத்தில் தி.மு.க. அரசு சரியான பாதையில் செல்கிறது. தமிழகத்தில் மதத்தை வைத்து அரசியல் செய்ய யார் நினைத்தாலும் அது மக்கள் மத்தியில் எடுபடாது. நீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது சட்டமில்லை. எங்கள் உரிமையை பெறுவதற்காக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம். விரைவில் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

    வாக்காளர் பட்டியல் தீவிர சுருக்க திருத்த பணி என கூறி ஒரே இரவில் என்னுடைய தொகுதியில் 22,000 பேரை நீக்கி விட்டனர். இது சம்பந்தமாக தேர்தல் ஆணையத்துக்கு நான் புகார் அனுப்பியுள்ளேன். பி.எல்.ஓ. எனப்படும் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் எந்த வீடுகளுக்கும் நேரடியாக சென்று படிவங்களை வழங்கி கையெழுத்து பெறவில்லை. ஒரே அறையில் உட்கார்ந்து கொண்டு கணக்கு காண்பிக்க வேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையத்துக்கு வேலை பார்த்துக் கொண்டு வருகிறார்கள். இதனால் எஸ்.ஐ.ஆர். படிவத்தில் ஏராளமான குளறுபடிகள் உள்ளன. எனவே மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தேர்தலை நடத்துங்கள், வாக்காளர்கள் அவர்களாக வாக்களிக்கட்டும். திண்டுக்கல்லில் உயிருடன் உள்ள தி.மு.க. நிர்வாகியை இறந்ததாக கூறி பட்டியலில் இருந்து நீக்கி விட்டனர். ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட நரிக்கல்பட்டி, நீலமலைக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் வாக்காளர் குளறுபடி நடந்துள்ளது. பி.எல்.ஓ. அலுவலர்கள் இடமாற்றம் செய்து விட்டதாக பல படிவங்களை தள்ளுபடி செய்து விட்டனர். இது போன்று பல்வேறு தொகுதிகளிலும் குளறுபடி நடந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிங்காநல்லூர் பஸ் நிலையம், உக்கடம் பஸ் நிலையங்களிலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
    • வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய்களின் உதவியுடன் முக்கிய இடங்களில் சோதனை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    கோவை:

    பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி கோவை மாவட்டத்தில் அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    அதன்படி கோவை மாநகரில் 1300 போலீசாரும், புறநகரில் 1000 போலீசாரும் என்று மாவட்டம் முழுவதும் 2300 போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

    பொதுமக்கள் அதிகம் கூடும் கிராஸ்கட் ரோடு, காந்திபுரம், டவுன்ஹால், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அந்த வழியாக வரும் வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

    இதேபோல காந்திபுரம் மத்திய பஸ் நிலையம், திருவள்ளுவர் பஸ் நிலையம், புறநகர் பஸ் நிலையம், சிங்காநல்லூர் பஸ் நிலையம், உக்கடம் பஸ் நிலையங்களிலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    கோனியம்மன் கோவில், தண்டு மாரியம்மன் கோவில் உள்பட அனைத்து கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் ஆகியவை முன்பாக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    இதுதவிர கோவை ரெயில் நிலையம் மற்றும் விமான நிலையத்துக்கு வரும் பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் சோதனை போடப்பட்டு வருகிறது. மேலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய்களின் உதவியுடன் முக்கிய இடங்களில் சோதனை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மதுரை மேலமடை சந்திப்பு சாலையில் உள்ள மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்பட்டது.
    • நாளை திறக்கப்பட உள்ள நிலையில் மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    மதுரை மேலமடை சந்திப்பு சாலையில் உள்ள மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்பட்டது.

    மதுரை திருநகர் மேலமடை சந்திப்பில் ரூ.150 கோடி செலவில் கட்டப்பட்ட மேம்பாலத்திற்கு வேலுநாச்சியார் பெயரை சூட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    நாளை திறக்கப்பட உள்ள நிலையில் மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    அண்மையில் கோவையில் திறக்கப்பட்ட மேம்பாலத்திற்கு ஜி.டி. நாயுடு பெயர் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி ராமனின் ஆட்சியாக இருக்கும்.
    • திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற எந்த இஸ்லாமியரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * திருப்பரங்குன்றம் அயோத்தியாக மாறுவதில் தவறில்லை. அயோத்தி இந்தியாவில் தானே இருக்கிறது.

    * தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி ராமனின் ஆட்சியாக இருக்கும்.

    * திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற எந்த இஸ்லாமியரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

    * சனாதன தர்மத்தை அழிப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளில் ஈடுபடுகிறார்களா? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

    • கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.
    • பிப்ரவரி மாத இறுதிக்குள் 10 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கும் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில், அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது.

    இந்த நிலையில், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் வருகிற 19-ந்தேதி விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதிக்குள் 10 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கும் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

    • உள்நாட்டில் அதிகளவில் விமானங்களை இயக்கும் இண்டிகோ நிறுவனம் சிக்கல்களை சந்தித்து வருகிறது.
    • சென்னையில் இருந்து கோவை இடையேயான விமான கட்டணம் ரூ.49,400-ஆக உயர்ந்துள்ளது.

    உள்ளாட்டு விமான பயணங்களில் விமானிகள் மற்றும் பணியாளர்களுக்கான புதிய பணி நேரக்கட்டுப்பாடு கடந்த 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. இதன்படி விமானிகள் தொடர்ச்சியாக 18 மணி நேரம் வேலை பார்க்கலாம் என்ற விதியை திருத்தி 8 மணி நேரமாக குறைத்தது. விமானிகளின் விடுப்பு நேரம் முன்பு வாரத்திற்கு 36 மணி நேரமாக இருந்தது. அது தற்போது 48 மணி நேரமாக அதிகரித்தது.

    மேற்கண்டவை உள்ளிட்ட பல்வேறு புதிய நடைமுறைகளை அமல்படுத்த மற்ற விமான நிறுவனங்கள் படிப்படியாக தேவையான ஏற்பாடுகளை செய்தது. ஆனால் இண்டிகோ விமான நிறுவனம் இதில் மெத்தனம் காட்டியதாக விமானிகள் கூட்டமைப்பு குற்றம்சாட்டியது.

    இதன் காரணமாக உள்நாட்டில் அதிகளவில் விமானங்களை இயக்கும் இண்டிகோ நிறுவனம் சிக்கல்களை சந்தித்து வருகிறது. கடந்த 3 நாட்களாக அந்த விமானங்கள் தாமதம் மற்றும் ஏராளமான விமானங்கள் ரத்து காரணமாக பயணிகள் பரிதவித்தனர்.

    நேற்று 4-வது நாளாக இதே சூழ்நிலை நீடித்ததால் ஒரேநாளில் 1,000-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. டெல்லியில் சுமார் 220 விமானங்கள், பெங்களூருவில் 100-க்கும் மேற்பட்ட விமானங்களும், ஐதராபாத்தில் 90-க்கும் மேற்பட்ட விமானங்களும் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

    நாட்டின் நிதி தலைநகரான மும்பையில் மட்டும் 104 இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் இயக்கப்பட்ட விமானங்களும் கடும் கால தாமதத்தை சந்தித்தன. இதனால் நாட்டில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் நூற்றுக்கணக்கான பயணிகள் சிரமங்களை எதிர்கொண்டனர்.

    இந்நிலையில் இண்டிகோ விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் சென்னையில் விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

    * சென்னையில் இருந்து கோவை இடையேயான விமான கட்டணம் ரூ.49,400-ஆக உயர்ந்துள்ளது.

    * சென்னையில் இருந்து கொச்சிக்கு விமான கட்டணம் ரூ.41,000-ஆக உயர்ந்துள்ளது.

    * சென்னையில் இருந்து டெல்லிக்கு விமான கட்டணம் ரூ.35,000-ஆக உயர்ந்துள்ளது.

    * சென்னையில் இருந்து திருச்சிக்கு விமான கட்டணம் ரூ.26,000-ஆக உயர்ந்துள்ளது.

    * சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல விமான கட்டணம் ரூ.25,000-ஆக உயர்ந்துள்ளது.

    * சென்னையில் இருந்து கோவைக்கு நாளை செல்ல விமான கட்டணம் ரூ.71,000-ஆக உயர்ந்துள்ளது.

    • ஆராய்ச்சி படிப்புகளை மாணவர்கள் படிக்க வேண்டும் என கூறி வருகிறேன்.
    • ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலன் திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில் அதிகம்.

    கோட்டூர்புரம்:

    சென்னை கோட்டூர்புரத்தில் முதலமைச்சரின் தாயுமானவரின் திட்ட விரிவாக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். மேலும் கபடி விளையாட்டில் அர்ஜுனா விருது பெற்ற மணத்தி கணேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும், சமத்துவ சமுதாயம் அமைய வேண்டும் என்பதே லட்சியம்.

    * விளிம்பு நிலையில் இருக்கும் மக்களை முன்னேற்றி முன்னுக்கு கொண்டு வருகிறோம்.

    * அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதை தி.மு.க. அரசு உறுதி செய்திருக்கிறது.

    * ஒரு சமுதாயம் முன்னேற வேண்டும் என்றால் அதற்கு கல்விதான் அடிப்படை.

    * அண்ணல் அம்பேத்கர் அயல்நாட்டு கல்வி உதவித் தொகை திட்டம்தான் முக்கியமானது.

    * சென்னை, கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ரூ.80 கோடி செலவில் மாதிரி விடுதிகள்.

    * ஆராய்ச்சி படிப்புகளை மாணவர்கள் படிக்க வேண்டும் என கூறி வருகிறேன்.

    * ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலன் திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில் அதிகம்.

    * உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் பயில அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டம் செயல்படுத்துகிறோம்.

    * சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சிக்காக ரூ.1000 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    * 9,659 மாணவர்களுக்கு ரூ.90 கோடி அளவுக்கு உதவித் தொகை வழங்கியுள்ளோம்.

    * தி.மு.க. ஆட்சியில் 385 மாணவர்கள் தலைசிறந்த வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பயின்று வருகின்றனர்,

    * சட்டப்படிப்பு என்பது நமக்கு மிகவும் முக்கியமானது என்பதை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

    * இவ்வளவு நேரம் நான் பட்டியலிட்ட திட்டங்கள் அனைத்தும் எள் முனையளவுதான்.

    * அனைத்து தடைகளையும் உடைத்து நாம் முன்னேற வேண்டும்.

    * ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம் என்பது உறுதி என்றார். 

    ×