என் மலர்tooltip icon

    இந்தியா

    • முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 159 ரன்னில் சுருண்டது.
    • அடுத்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 189 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    கொல்கத்தா:

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்தது.

    முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 159 ரன்னில் சுருண்டது. அடுத்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 189 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 153 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது. இதையடுத்து, 124 என்ற எளிய இலக்கை எடுக்க முடியாமல் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.

    இந்நிலையில், டெஸ்டில் பவுமா தலைமையில் தென் ஆப்பிரிக்க அணி தோற்றதில்லை என்ற பெருமையை தக்க வைத்துக் கொண்டது.

    அவரது கேப்டன்ஷிப்பில் தென் ஆப்பிரிக்கா 10-ல் வெற்றியும், ஒன்றில் டிராவும் சந்தித்துள்ளது.

    இதன்மூலம் டெஸ்டில் தோல்வியே சந்திக்காமல் அதிவேகமாக 10 வெற்றிகளைத் தேடித்தந்த கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

    • புல்லட் ரெயில் இயங்குவதற்கான தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
    • பணிகளை மேற்கொண்டு வரும் புல்லட் ரெயில் இன்ஜினியர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

    அகமதாபாத்:

    இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் சேவை திட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாதில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வரை தொடங்கப்பட உள்ளது. இதற்காக 508 கி.மீ. தொலைவுக்கு புல்லட் ரெயில் இயங்குவதற்கான தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    அகமதாபாத், ஆனந்த், வதோதரா, பருச், சூரத், பிலிமோரா, வாபி, பொய்சார், விரார், தானே மற்றும் மும்பை என முக்கிய நகரங்கள் வழியாக இந்த புல்லட் ரெயில் இயக்கப்படவுள்ளது.

    இந்நிலையில், சூரத்தில் பணிகளை மேற்கொண்டு வரும் புல்லட் ரெயில் இன்ஜினியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் கேட்டறிந்தார். அதன்பின் பிரதமர் மோடி பேசியதாவது:

    மும்பை-அகமதாபாத் இடையிலான புல்லட் ரெயில் சேவை திட்டம் தொடர்பான அனுபவங்களை, இன்ஜினியர்கள் ஆவணப்படுத்தி வைக்க வேண்டும். எதிர்காலத்தில் இது போன்ற திட்டங்களை செயல்படுத்துவதற்கு அந்த அனுபவம் உதவியாக இருக்கும்.

    நம் நாடு தொடர்ந்து சோதனை நடத்துவதிலேயே இருக்கக் கூடாது. பணிகளில் கிடைத்த அனுபவங்களை புதிய திட்டங்களில் பிரதிபலிக்க வைக்க வேண்டும். அனுபவங்களை ஆவணப்படுத்துவதன் மூலம் அடுத்து வரும் இளம் தலைமுறையினர் தேச கட்டுமானப் பணிகளில் சிறப்பான பங்களிப்பை தர முடியும். அர்ப்பணிப்பு உணர்வுடன் வாழ வேண்டும் என தெரிவித்தார்.

    • சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.
    • இதனால் ஆர்ப்பாட்டம் வரும் வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளில் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி தி.மு.க.வினரால் நிகழ்த்தப்படும் பல்வேறு முறைகேடுகளுக்குக் காரணமான தி.மு.க. ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த சென்னை மாவட்டங்களின் சார்பில் 17.11.2025, திங்கட்கிழமை காலை 10 மணியளவில், எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளதால், மேற்கண்ட கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டு 20.11.2025, வியாழக்கிழமை காலை 10 மணியளவில், எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • காரைக்கால் பகுதிகளில் நாளை கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
    • முன்னெச்சரிக்கையாக காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    சென்னை மண்டல வானிலை ஆய்வு நிலையம் வெளியிட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கு தென்மேற்கே வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த பகுதி நிலவி வருகிறது. அதனுடன் தொடர்புடைய மேல் வளிமண்டல சுழற்சி கடல் மட்டத்திலிருந்து 5.8 கி.மீ. உயரம் வரை தென்மேற்கு திசை நோக்கி சாய்ந்த நிலையில் பரவியுள்ளது.

    அடுத்த 24 மணி நேரத்தில் இது மெதுவாக மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளது.

    இதன் காரணமாக காரைக்கால் பகுதிகளில் நாளை கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது என அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

    • அரியானாவின் அல்-பலா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பல மருத்துவர்களை தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) கைது செய்தது.
    • டெல்லி சம்பவத்திற்கும் அவர்களுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று NIA அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கடந்த திங்கள்கிழமை மாலை 13 பேர் உயிரிழந்த டெல்லி செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்புகளில் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில் அரியானாவின் அல்-பலா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பல மருத்துவர்களை தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) கைது செய்தது.

    கைதுசெய்யப்பட்ட  மருத்துவர்கள் ரெஹான், முகமது மற்றும் முஸ்தகிம் ஆகிய மூவைரயும், உர வியாபாரி தினேஷ் சிங்கிளா என்பவரையும் 3 நாள் தொடர் விசாரணைக்குப் பிறகு இன்று NIA இறுதியாக விடுவித்தது.

    டெல்லி குண்டுவெடிப்புகளுடன் எந்த குறிப்பிட்ட தொடர்பும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    டெல்லி குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளி மருத்துவர் உமர் உன்-நபியுடன் அவர்களுக்கு ஏதேனும் தொடர்பு இருந்ததா என்பதைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

    இருப்பினும், டெல்லி சம்பவத்திற்கும் அவர்களுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று NIA அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அவர்கள் நீண்ட காலத்திற்கு முன்பு உமருடன் பழகியிருந்தாலும், சமீப காலங்களில் அவர்களுக்கு எந்த தொடர்பும் இருந்ததாகத் தெரியவில்லை. எனவே, அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் சில நாட்களுக்கு கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என்று NIA தெரிவித்துள்ளது.  

    • அறிவு திருவிழாவில் அவர்கள் விமர்சித்து பேசிவிட்டோம் என்ற கோபம் வேற.
    • எப்படி போலீஸ் பெயரை கேட்டால் திருடனுக்கு பயம் வருமோ, அதேபோல் அறிவு என்ற வார்த்தையை கேட்டாலே அவர்களுக்கு அலர்ஜி

    தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் "அறிவுத் திருவிழா என்ற பெயரில் பரண்களில் கிடக்கும் பழைய ஓலைகளைத் தூசு தட்டித் தோரணம் கட்டப் பார்க்கும் அவர்களின் பழைய மற்றும் புதிய கொள்கை உறுதி பற்றிக் கொஞ்சமே கொஞ்சம் பார்க்கலாமா?

    யாரை ஏளனமாகப் பரிகாசம் செய்தார்களோ அவர்களிடமே பதவிக்காகப் பம்மினரே, அப்போது எங்கே போயிற்று மானம்?

    ஆட்சியில் இல்லாதபோது 'தமிழ் தமிழ்' என்பதும், 'தமிழர் தமிழர்' என்பதும், ஆட்சிக்கு வந்ததும் அதிகாரப் பதவிகளுக்குள் அடக்கமாக அமர்ந்துகொண்டு, அரசியல் சாசனக் கட்டுப்பாடுகள் மீது பழி போட்டுப் பதவி சுகம் காணும்போது எங்கே போனது மண், மானம் மற்றும் மொழி மீதான கொள்கைப் பாசம்?

    சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை நடத்தாமல் மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்ற அர்த்தமற்ற வாதத்தை வைத்துத் தப்பிக்கும்போது, எங்கே போனது அவர்களின் சமூக நீதிக் கொள்கை?

    அறிவுத் திருவிழா என்று பெயர் வைத்துவிட்டு, முழுக்க முழுக்க, தமிழக வெற்றிக் கழகத்தை மட்டுமே மறைமுகமாகத் திட்டும் திருவிழாவாக அதை மாற்றியதிலேயே அது அறிவுத் திருவிழாவாக இல்லாமல் அவதூறுத் திருவிழாவாகத்தானே மாறியது?

    பெரியார், அண்ணா கொள்கைகளை மறந்துவிட்ட அவர்கள், மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகளோடு களம் இறங்கி, யாருக்கும் எதற்கும் வளையாமல் வலம் வரும் தமிழக வெற்றிக் கழகத்தைப் பார்த்து, கொள்கையற்றவர்கள் என்று கூறுவதற்கான காரணம் அவர்களுக்கு ஏற்பட்ட உளைச்சலும் குமைச்சலுமன்றி வேறென்ன?

    53 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும், ஆட்சி அதிகாரத்தைப் பகல் கனவாக்கப் போகும் ஒரு 'பக்கா மாஸ்' கட்சி வந்திருப்பதைக் கண்டு நாள்தோறும் நாக்குழறி, உளறும் அவர்களுக்கு நாம் சொல்வதெல்லாம் என்ன தெரியுமா?

    பவளவிழா பாப்பா - நீ

    பாசாங்கு காட்டல் ஆகாது பாப்பா

    நீ நல்லவர்போல நடிப்பதைப் பார்த்து

    நாடே சிரிக்கிறது பாப்பா.

    சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில்கூட யாரை விமர்சிக்க வேண்டுமோ அவர்களை விமர்சிப்பதைவிட, நம்மைத் திட்டவைத்து அகமகிழ்ந்ததே நடந்தது.

    எல்லா வகையிலும் கபட நாடகம் ஆடும் அவர்களது அவல ஆட்சியின் லட்சணங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம். மேலும், மக்கள் சக்தியின் மதிப்பை, வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களுடன் மக்களாக இணைந்து நின்று, இந்த அவதூறு மன்னர்கள் உணரச் செய்வோம்" என திமுக-வை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

    இந்த நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற அறிவு திருவிழாவில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது "எப்படி நீங்கள் அறிவு திருவிழா நடத்தலாம். யாரைக் கேட்டு நடத்துறிங்க. எதுக்காக நடத்துறிங்க. அறிவு இருக்கிறவன் திருவிழா நடத்துறான். அறிவு திருவிழாவில் அவர்கள் விமர்சித்து பேசிவிட்டோம் என்ற கோபம் வேற. எப்படி போலீஸ் பெயரை கேட்டால், திருடனுக்கு பயம் வருமோ, அதேபோல் அறிவு என்ற வார்த்தையை கேட்டாலே அவர்களுக்கு அலர்ஜி" எனப் பதிலடி கொடுத்துள்ளார்.

    • வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பகல் இரவாக பணி பார்ப்பதால் மனஅழுத்தம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு.
    • மனஅழுத்தம் காரணமாக அலுவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், புறக்கணிக்கும் முடிவு.

    தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் அரசு பணி ஊழியர்கள் உள்ளிட்டோர் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

    ஒரு மாதத்திற்குள் அனைத்து வாக்காளர்களுக்கும் படிவம் வினியோகம் செய்து, அது நிரப்பப்பட்டு சரிபார்க்கப்பட வேண்டும்.

    சரியாக ஒரு மாதத்திற்குள் இந்த பணியை முடிக்க வேண்டும் என்பதால் பகல் இரவாக பணியில் ஈடுபட வற்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    கண்ணூர் பய்யனூரைச் சேர்ந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர் அனீஷ் ஜார்ஜ் (44) SIR பணியால் மனஅழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கு உடனடியாக தீர்வு காணப்படவில்லை என்றால் அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் செயல் மன்றம், ஆசிரியர் சேவை அமைப்புகளின் கூட்டுக் குழு மற்றும் கேரள அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் சங்கம் நாளை புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளன.

    கேரள மாநில தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி போராட்ட பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளன.

    ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலுக்கான பணி நடைபெற்று வருகிறது. தற்போது இந்த SIR பணியால் வாக்குசாவடி அளவிலான அதிகாரிகள் மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாகி வருவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

    • அரசியலை விட்டு விலகுவதாகவும் குடும்பத்துடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொள்வதாகவும் அறிவித்தார்.
    • லாலுவின் மற்ற மூன்று மகள்களும் வீட்டை விட்டு வெளியேறி டெல்லி சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பீகார் தேர்தலில் ஏற்பட்ட பெரும் பின்னடைவைத் தொடர்ந்து, ஆர்ஜேடி நிறுவனர் லாலு பிரசாத் யாதவின் குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    லாலுவின் மகன் ரோஹிணி ஆச்சார்யா நேற்று, அரசியலை விட்டு விலகுவதாகவும் குடும்பத்துடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொள்வதாகவும் அறிவித்தார்.

    இதன் பின்ணணியில் தேஜஸ்வி யாதவ் இருப்பதாக கூறப்படுகிறது. தேர்தல் தோல்விக்கு பிறகு வீட்டில் ஏற்பட்ட சண்டையில், தேஜஸ்வி, மூத்த சகோதரி ரோகிணியை குடும்பத்தின் சாபம் என்றும் அவரின் சாபத்தால் தான் தேர்தல் தோல்வி ஏற்பட்டதாகவும் திட்டியுள்ளார் என்றும் ரோஹிணி மீது தேஜஸ்வி செருப்பை எடுத்து வீசியுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ரோஹிணி தந்தை லாலுவுக்கு சிறுநீரக தானம் செய்திருந்த நிலையில் அதையும் தேஜஸ்வி குறை சொன்னதாக கூறப்படுகிறது.

    இதைத்த்தொடர்ந்தே ரோஹிணி அறிக்கை விட்டுள்ளார். அதில், "நேற்று, யாரோ ஒருவர் என்னை சபித்து, நான் என் தந்தைக்கு மிகவும் அழுக்கான சிறுநீரகத்தைக் கொடுத்து, கோடிக்கணக்கான ரூபாய்களைப் பெற்று, மக்களவை டிக்கெட் வாங்கினேன் என்று சொன்னார்கள்.

    இப்போது என் மூன்று குழந்தைகள் மற்றும் கணவர் உட்பட என் குடும்பத்தினரின் அனுமதியைப் பெறாமல் என் சிறுநீரகத்தை தானம் செய்தது ஒரு பெரிய தவறு என்பதை நான் புரிந்துகொள்கிறேன். நான் கடவுளாகக் கருதும் என் தந்தையைக் காப்பாற்ற இதைச் செய்தேன்.

    தந்தையுடன் ரோகிணி

     

    இப்போது நான் தொடர்ந்து கேட்கும் குற்றச்சாட்டு என்னவென்றால், அது ஒரு மோசமான வேலை. உங்களில் யாரும் மீண்டும் இதுபோன்ற தவறைச் செய்யக்கூடாது. ரோகிணியைப் போன்ற ஒரு மகள் மீண்டும் எந்த குடும்பத்திலும் பிறக்கக்கூடாது" என்று தெரிவித்துள்ளார். தனது குடும்பம் தன்னை ஒதுக்கிவிட்டதாக அவர் விரக்தியுடன் தெரிவித்தார். மேலும் தேஜஸ்வியின் நெருங்கிய கூட்டாளிகள் இருவர் தனக்கு எதிராக சதி செய்வதாகவும் ரோகிணி குற்றம்சாட்டியுள்ளார்.

    ஏற்கனவே மனைவியை விட்டு வேறொரு இளம்பெண்ணுடம் தொடர்பில் இருந்ததால் வெளியேற்றப்பட்ட லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப், தன்னை போலவே குடும்பத்தால் சகோதரி ரோஹணி அவமதிக்கப்பட்டதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே லாலுவின் மற்ற மூன்று மகள்களும் பாட்டனாவில் உள்ள வீட்டை விட்டு வெளியேறி டெல்லி சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லாலு மற்றும் ராபிரி தேவி தம்பதிக்கு லாலு மற்றும் ராப்ரிக்கு ஏழு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

    • தொடர்ந்து சோனியின் தலையை சுவரில் மோதினார்.
    • கடுமையான இரத்தப்போக்கு காரணமாக சோனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    குஜராத் மாநிலம் பாவ்நகர் பாவ்நகரைச் சேர்ந்த சாஜன் பரையா (25) மற்றும் சோனி ரத்தோட் (23) ஆகியோர் கடந்த ஒரு வருடமாக ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

    இதற்கிடையே அவர்களது திருமணம் நேற்று நடைபெறுவதாக இருந்தது. திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், திருமண முகூர்த்தத்திற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பு இரவு 9 மணிக்கு, சாஜன், சோனிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. திருமண சேலை பிடிக்காதது தொடர்பாக வெடித்த வாக்குவாதம் திருமண செலவுகள் மற்றும் பணம் குறித்து நீண்டது.

    ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சாஜன், இரும்பு கம்பியால் சோனியின் கைகளிலும் கால்களிலும் அடித்துள்ளார். தொடர்ந்து சோனியின் தலையை சுவரில் மோதினார். கடுமையான இரத்தப்போக்கு காரணமாக சோனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து சாஜன் அங்கிருந்து தப்பியோடினார்.

    தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். சாஜன் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரை சிறப்பு குழுக்கள் அமைத்து தேடி வருவதாக ராஜேஷ் படேல் தெரிவித்தார்.   

    • தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களில் வெற்றி பெற்றது.
    • நிதிஷ் குமார் கட்சி 101 இடங்களில் போட்டியிட்டு 85 இடங்களில் வெற்றி பெற்றது.

    பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி- இந்தியா கூட்டணி இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி 243 இடங்களில் 202-ல் வெற்றி பெற்றது. பீகார் தேர்தலில் அக்கூட்டணிக்கு அமோக வெற்றி கிடைத்தது. பாஜக 89 இடங்களிலும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களிலும் வெற்றி பெற்றன.

    இந்த நிலையில் நிதிஷ் குமார் குமார் மகன் நிஷாந்த் "நாங்கள் தீர்க்கமான வெற்றி கிடைக்கும் என உறுதியாக இருந்தோம். ஆனால் இறுதி முடிவு நாங்கள் எதிர்பார்த்ததைவிட மகத்தானது. மிகப்பெரிய வெற்றியை அளித்த பீகார் மக்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். தந்தையின் சாதனைப் பதிவு மற்றும் மாநிலத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதற்கான அவரது தொலைநோக்குப் பார்வையைப் பார்த்த பிறகு மக்கள் எங்களுக்கு மிகப்பெரிய பெரும்பான்மையை வழங்கியுள்ளனர்" என்றார்.

    • சித்தராமையா டெல்லி சென்று ராகுல் காந்தியை சந்தித்து பேசினார்.
    • அமைச்சரவை மாற்றம் குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியானது.

    கர்நாடகாவில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அப்போது முதல்-மந்திரி பதவியை பெற சித்தராமையா, டி.கே. சிவகுமார் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை சித்தராமையாவை முதல்-மந்திரியாகவும், டி.கே. சிவகுமாரை துணை முதல்-மந்திரியாவும் அறிவித்தது.

    இதையடுத்து சித்தராமையா முதல் 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவி வகிப்பார் என்றும் அடுத்த 2½ ஆண்டுகள் டி.கே. சிவகுமார் முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்பார் என்று கூறப்பட்டது. இந்த மாதத்துடன் சித்தராமையாவின் இரண்டரை ஆண்டு முதலமைச்சர் பதவிக்காலம் முடிவடைகிறது.

    இதனால் டி.கே. சிவக்குமார் கர்நாடக முதலமைச்சராவார் என சில காங்கிரஸ் தலைவர்கள் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், தொடர்ந்து நான்தான் முதல்வராக இருப்பேன். மாற்றம் செய்வது குறித்து அகில இந்திய தலைமைதான் முடிவு செய்ய வேண்டும் என சித்தராமையா தெரிவித்தார்.

    நேற்று சித்தராமையா டெல்லி சென்று ராகுல் காந்தியை சந்தித்தார். பீகார் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அதேவேளையில் அமைச்சரவையை மாற்றம் செய்து கொள்ள அனுமதி அளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த நிலையில் மாற்றம் தொடர்பாக கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா கூறியதாவது:-

    அமைச்சரவை மாற்றம் குறித்து சித்தராமையா மற்றும் அகில இந்திய தலைமை முடிவு செய்யும். அகில இந்திய தலைமை அமைச்சரவையை மாற்றி அமைக்க அனுமதி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஊடகங்கள் இதைத்தான் சொல்கின்றன, இந்த விஷயம் இப்போது வெளிப்படையாகி வருகிறது. பொதுவாக, அமைச்சரவை மாற்றம் நடைபெறும் போது தலைமை மாற்றங்கள் ஏற்படாது.

    அமைச்சரவை மாற்றத்திற்கான அனுமதி பெற்ற பிறகு சித்தராமையா மற்றும் உயர்மட்டக்குழு முடிவு செய்யும். இதில் எனக்கு மிகப்பெரிய பிரச்சினை ஏதும் இல்லை.

    இவ்வாறு பரமேஷ்வரா தெரிவித்துள்ளார்.

    • புதிதாக களம் கண்ட அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் எந்த இடத்திலும் வெற்றி பெறாமல் டெபாசிட் இழக்கும் நிலைக்கு ஆளானது.
    • பீகாரின் பொதுக் கடன் தற்போது ரூ.4.06 லட்சம் கோடியாக உள்ளது. தினசரி வட்டி சுமை ரூ.63 கோடியாக உள்ளது.

    நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் 243 இல் 202 தொகுதிகளை கைப்பற்றி பாஜகவின் -ஜேடியுவின் என்டிஏ கூட்டணி பெரு வெற்றி பெற்றுள்ளது. எதிர்த்து போட்டியிட்ட இந்தியா கூட்டணி 35 இடங்கள் மட்டுமே பெற்று படுதோல்வியை சந்தித்தது.

    இதற்கிடையே புதிதாக களம் கண்ட அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் எந்த இடத்திலும் வெற்றி பெறாமல் டெபாசிட் இழக்கும் நிலைக்கு ஆளானது.

    இதற்கிடையே தேர்தலுக்கு முன் என்டிஏ அரசு சுமார் ஒன்றரை கோடி பீகார் பெண்களின் வங்கிக்கணக்கில் தொழில் தொடங்கும் நிதிக்கான முன்பணம் என்ற பெயரில் ரூ.10,000 டெபாசிட் செய்ததே அக்கூட்டணியில் வெற்றிக்கு காரணம் என ஜன் சுராஜ் குற்றம்சாட்டியது.

    இந்நிலையில் இன்று, ஜன் சுராஜ் கட்சியின் தேசியத் செய்தி தொடர்பாளர் உதய் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

    பீகாரின் பொதுக் கடன் தற்போது ரூ.4.06 லட்சம் கோடியாக உள்ளது. தினசரி வட்டி சுமை ரூ.63 கோடியாக உள்ளது. அரசு கஜானா காலியாக இருக்கிறது. பொதுப் பணத்தைப் பயன்படுத்தி, அவர்கள் மக்களின் ஓட்டுக்களை வாங்கினார்கள்.

    ஜூன் மாதம் முதல் தேர்தல் அறிவிப்பு வரையில் மக்களின் வாக்குகளை வாங்குவதற்காக நிதிஷ் குமார் அரசால் ரூ.40 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது. 

    மாநிலத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்ட ரூ.10 ஆயிரம் பணம், உலக வங்கியிலிருந்து வேறு சில திட்டங்களுக்காக வந்த ரூ.21,000 கோடியிலிருந்து வழங்கப்பட்டது.

    தேர்தல் ஒழுக்க நெறிகள் அமலுக்கு வருவதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்பாகத்தான் ரூ. 21,000 கோடியில் ரூ.14,000 கோடி எடுக்கப்பட்டு, 1.25 கோடி பெண்களுக்கு ரூ. 10,000 தொகை விநியோகிக்கப்பட்டது. அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பொது நலனுக்காக செலவிட இப்போது பணம் இல்லை" என்று கூறினார்.  

    ×