என் மலர்tooltip icon

    இந்தியா

    • கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • மங்கல வாத்தியங்கள் முழங்க கருட பகவான் உருவம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டது.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ராமசாமி கோவில் அமைந்துள்ளது. 'தென்னக அயோத்தி' என அழைக்கப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் ராமநசமி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான ராமநவமி விழா இன்று (சனிக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் சீதா, ராமர், லெட்சுமணன், ஆஞ்சநேய சுவாமிகள் கொடிமரம் முன்பு எழுந்தருளினர்.

    தொடர்ந்து, கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், மங்கல வாத்தியங்கள் முழங்க கருட பகவான் உருவம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, சுவாமிகளுக்கும், கொடிமரத்திற்கும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழா நாட்களில் தினமும் சிறப்பு அலங்காரத்தில் உற்சவ மூர்த்திகள் இந்திர விமானம், சூரியபிரபை, சேஷம், கருடர், அனுமன், யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடைபெறுகிறது.

    முக்கிய நிகழ்வான 4-ம் நாளன்று இரவு ஓலை சப்பரத்தில் கருட சேவையும், 7-ம் நாளன்று இரவு கோரதம் புறப்பாடும், அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை தேரோட்டமும், இரவு கோவில் வளகத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    முடிவில் 7-ந்தேதி சப்தாவர்ணமும், 8-ந்தேதி விடையாற்றி விழாவும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

    • ஆழ்வார்திருநகரி அருகே தென்திருப்பேரையை அடுத்த மாவடிப் பண்ணையில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக காரில் வந்துள்ளனர்.
    • இருவரும் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர்.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள ஒய்யாங்குடி பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ்.

    இவர் கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் பேன்சி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கிளாடிஸ் ரேபேக்கா (வயது 50). இவர்கள் குடும்பத்துடன் மேட்டுப்பாளையத்தில் இருந்து வருகின்றனர்.

    சொந்த ஊரான ஒய்யாங்குடியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் பிரதிஷ்டை நிகழ்ச்சிக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு லாரன்ஸ் தனது குடும்பத்தினருடன் ஊருக்கு வந்துள்ளார்.

    இந்த நிலையில் இன்று காலை ஒய்யாங்குடியில் இருந்து லாரன்ஸ், அவரது மனைவி கிளாடிஸ் ரேபேக்கா மற்றும் கிளாடிஸ் ரேபேக்காவின் தங்கையான சென்னை நியூ பெருங்களத்தூரை சேர்ந்த ஸ்டெபி புஷ்பா செல்வின், அவரது கணவர் சரண், சிறுமி அவினா (5) மற்றும் உறவினர்கள் என மொத்தம் 7 பேர் ஆழ்வார்திருநகரி அருகே தென்திருப்பேரையை அடுத்த மாவடிப் பண்ணையில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக காரில் வந்துள்ளனர்.

    ஆற்றில் குளிப்பதற்காக கிளாடிஸ் இறங்கினார். அவருடன், அவரது தங்கை மகளான அவினாவும் ஆற்றில் இறங்கி குளித்தனர்.

    இருவரும் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். இதில் இருவரும் ஆற்று நீரில் மூழ்கினர்.

    உடனே கரையில் இருந்த உறவினர்கள் ஆற்றுக்குள் இறங்கி இருவரையும் மீட்க முயற்சித்தனர். ஆனால் இருவரும் கிடைக்கவில்லை. சிறிது நேர தேடலுக்கு பிறகு இருவரையும் ஆற்றுக்குள் இருந்து மீட்டு அருகே உள்ள தென்திருப்பேரை அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு அழைத்து சென்றனர்.

    இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டனர் என்று தெரிவித்தனர். இதைக்கேட்ட அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆழ்வார்திருநகரி போலீசார் பிரேத பரிசோதனைக்காக இருவரது உடல்களையும் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மியான்மரில் நிலநடுக்க பலி எண்ணிக்கை 1000-ஐ தாண்டியது.
    • ராணுவ போக்குவரத்து விமானம் மூலம் சுமார் 15 டன் நிவாரணப் பொருட்களை மியான்மருக்கு இந்தியா அனுப்பி வைக்கப்பட்டது.

    மியான்மர்-தாய்லாந்தில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரின் மண்டலே நகரை மையமாக கொண்டு நேற்று காலை 11.50 மணிக்கு ரிக்டர் அளவில் 7.7 ஆக நிலநடுக்கம் உண்டானது.

    பின்னர் 12 நிமிடம் கழித்து மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் (ரிக்டர் அளவு 6.4) ஏற்பட்டது. அதே அளவுக்கு அண்டை நாடான தாய்லாந்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் தொடர்ந்து நிலஅதிர்வுகள் உண்டானது.

    இதனால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதில் ஏராளமான கட்டிடங்கள், வீடுகள் இடிந்து விழுந்தன. குறிப்பாக மியான்மரில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. தலைநகர் நேபிடா, மண்டலாய் உள்பட 6 மாகாணங்களில் பல வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.

    இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 150க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினதாகவும், 700-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    இரவு முழுவதும் தொடர்ந்து நடந்த மீட்புப் பணியில் கட்டிட இடிபாடுகளில் இருந்து மேலும் பலரின் உடல்கள் மீட்கப்பட்டன.

    தற்போது மியான்மரில் நிலநடுக்க பலி எண்ணிக்கை 1000-ஐ தாண்டியது. 1002 பேர் பலியாகி உள்ளதாகவும் 2376 பேர் காயம் அடைந்து உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.

    நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு உதவிகள் வழங்கப்படும் என்று இந்திய பிரதமர் மோடி அறிவித்தார். இதையடுத்து இன்று ராணுவ போக்குவரத்து விமானம் மூலம் சுமார் 15 டன் நிவாரணப் பொருட்களை மியான்மருக்கு இந்தியா அனுப்பி வைக்கப்பட்டது. இதில் கூடாரங்கள், போர்வைகள், உணவுகள், தண்ணீர் சுத்திகரிப்பான்கள், சூரிய விளக்குகள், ஜெனரேட்டர் பெட்டிகள், அத்தியாவசிய மருந்துகள் உள்ளிட்டவைகள் உள்ளன.

    இந்நிலையில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மர் நாட்டின் நிலவரம் குறித்து தொலைபேசியில் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

     

    மியான்மர் ராணுவத்தின் மூத்த ஜெனரல் மின் ஆங் ஹ்லைங்குடன் பேசியது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில்,

    இந்த கடினமான நேரத்தில் மியான்மர் மக்களுக்கு உறுதுணையாக இந்தியா இருக்கும் என உறுதி அளித்துள்ளேன்.

    நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்ட செய்தியை பகிர்ந்த பிரதமர் மோடி, விரைவில் மீட்புக்குழுக்கள் மியான்மருக்கு அனுப்பப்படும் என பதிவிட்டுள்ளார்.

    ஆபரேஷன் பிரம்மா என்ற பெயரில் இந்தியா நிவாரண உதவிகளை மேற்கொண்டுள்ளது.

    • ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து குறைந்து கொண்டே வருகிறது.
    • அருவிகளில் செல்லக்கூடிய தண்ணீரின் வேகமும் சற்று குறைந்து உள்ளது.

    ஒகேனக்கல்:

    தமிழக காவிரி கரையோர பகுதிகளில் மழையின்மையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து குறைந்து கொண்டே வருகிறது.

    இருந்த போதிலும் கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நாளுக்கு நாள் அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வரும் நிலையில் நேற்று காலை வினாடிக்கு 2000 கன அடியாக நீடித்து வந்தன.

    இந்த நிலையில் இந்த நீர்வரத்து சரிந்து தற்போது வினாடிக்கு 1200 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    இந்த நீர்வரத்து குறைந்ததன் காரணமாக ஒகேனக்கல் ஆற்றில் உள்ள மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் செல்லக்கூடிய தண்ணீரின் வேகமும் சற்று குறைந்து உள்ளது.

    • யார் யாரோடு சேர்கிறார்கள் என்ற கவலை இல்லை
    • யார் யாரை சந்தித்தாலும் அது பற்றி எங்களுக்கு கவலை இல்லை.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்கு மத்திய அரசு நிதி வழங்காததை கண்டித்து இன்று தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நடிகர் விஜய் தி.மு.க.வுக்கும் அவரது கட்சிக்கும் தான் போட்டி என கூறியிருக்கிறார். யார், யாருக்கு போட்டி என்பது குறித்து எங்களுக்கு கவலை இல்லை.

    நாங்கள் உழைப்போம், ஜெயிப்போம். யார் யாரோடு சேர்கிறார்கள் என்ற கவலை இல்லை. எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தாலும் சரி யார் யாரை சந்தித்தாலும் அது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. காட்பாடி ரெயில்வே மேம்பாலப் பணிகள் அடுத்த மாதம் தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போராட்டம் காரணமாக ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களும் இயங்கவில்லை.
    • கடையடைப்பு போராட்டம், தேயிலை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் நடந்தாலும், வழக்கம் போல அரசு பஸ்கள் இயங்கின.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்திற்கான வரைவு அறிவிப்பை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்டது.

    இந்த அறிவிப்பு வெளியான தினத்தில் இருந்து 60 நாட்களுக்குள் பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இந்த சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்திற்கான வரைவு அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில மாதங்களாக வால்பாறையில் வணிக நிறுவனங்கள், மளிகை கடைகள், சுற்றுலா வாகன டிரைவர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக சுற்றுச்சூழல் உணர்திறன் அறிவிப்பை ரத்து செய்ய கோரி வால்பாறையில் தேயிலை தோட்ட தொழிற்சங்கங்கள் தரப்பில் இன்று போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி இன்று வால்பாறையில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் தங்கள் பணியை புறக்கணித்து, ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்திற்கு வியாபாரிகள், வணிக நிறுவனங்கள், கார், ஆட்டோ, வேன், லாரி உள்ளிட்ட அனைத்து சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்தனர்.

    இதனால் வால்பாறை நகரில் உள்ள ஜவுளிக்கடைகள், மளிகை கடைகள், டீக்கடைகள் அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தது. நகராட்சி மார்க்கெட்டில் இருந்த அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது.

    இந்த கடையப்பு போராட்டம் காரணமாக வால்பாறையில் உள்ள நகராட்சி மார்க்கெட் மற்றும் கடைவீதி பகுதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது. ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களும் இயங்கவில்லை.

    இதேபோல் வால்பாறை நகரை சுற்றியுள்ள முடீஸ், சோலையார் அணை உள்பட வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் எஸ்டேட்டுகளில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது.

    கடையடைப்பு போராட்டம், தேயிலை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் நடந்தாலும், வழக்கம் போல அரசு பஸ்கள் இயங்கின.

    • தி.மு.க. பட்ஜெட்டை எல்.இ.டி. திரையில் ஒளிபரப்பினார்கள்.
    • இன்றைக்கு விலைவாசி உயர்வு கடுமையாக உயர்ந்துள்ளது.

    மதுரை:

    மதுரையில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

    இன்றைக்கு தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மிகவும் சீர் கெட்டுவிட்டது, மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் காவலரின் உயிர் பறிக்கப்படுகிறது. போதைப்பொருள் குறித்து அறிவுரை சொன்ன உசிலம்பட்டியை சேர்ந்த காவலர் படுகொலை செய்யப்படுகிறார். இது குறித்து நீதி வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறது. இது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கடமையாகும்.

    கேள்வி நேரம் புரிந்து ஜீரோ ஹவரில் தான் கேள்வியை எழுப்பினோம், சபாநாயகரும் அனுமதி தந்தார். ஆனால் முதலமைச்சர் இதற்கு பதில் சொல்லாமல் முறையாக நாங்கள் கேள்வி கேட்கவில்லை என்று கூறுகிறார்.

    நாங்கள் இதை கேள்வி நேரத்தில் கேட்கவில்லை. இது மக்களின் கோரிக்கையாகும். முதலமைச்சர் இதற்கு பதில் பேச மறுக்க காரணம் என்னவென்றால், உதயநிதி பேசும் பொழுது சட்டசபையில் அ.தி.மு.க. இருக்கக் கூடாது என்று காவலர்களை வைத்து எங்களை வெளியே தூக்கிப் போட்டனர். ஜனநாயகம் எங்கே போய்விட்டது? சட்டமன்றத்தில் ஜனநாயகம் செத்துப் போய்விட்டது.

    உதயநிதி சிறப்பாக பேசுகிறார். அழகாக பேசுகிறார் என்று ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை, குற்றம் குறைகளை சுட்டி காட்டும் ஆண்மகனாக எடப்பாடி பழனிசாமி உள்ளார். உதயநிதி மானிய கோரிக்கைக்கு காய்ச்சலால் வரவில்லை என்று கூறுகிறார்கள். டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்த உடன் தி.மு.க. அமைச்சர்களுக்கு எல்லாம் காய்ச்சல் வந்துவிட்டது.

    தமிழக பட்ஜெட்டில் ஒன்றும் இல்லை, நிதி அமைச்சர் அழகு தமிழில் பேசுகிறார். ஆனால் உள்ளே கடன் தான் உள்ளது.

    தி.மு.க. பட்ஜெட்டை எல்.இ.டி. திரையில் ஒளிபரப்பினார்கள். ஆனால் பார்க்க தான் ஆள் இல்லை. இன்றைக்கு விலைவாசி உயர்வு கடுமையாக உயர்ந்துள்ளது. மின்சார கட்டணம் உயர்ந்துவிட்டது, சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது, போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதை கட்டுப்படுத்த அரசுக்கு திராணி இல்லை. இதற்கு தீர்வு காண வேண்டும் என்றால் மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வரவேண்டும். மீண்டும் 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் முதலமைச்சராக வருவார் .

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அனிதா தனது நலம் விரும்பி என்றும், அவர் சரியான ஆலோசனையை வழங்குகிறார் என்றும் சிங் நம்பத் தொடங்கினார்.
    • அனிதாவின் டேட்டிங் செயலியின் சுயவிவரம் போலியானது என்று தெரியவந்துள்ளது.

    இன்றைய காலக்கட்டத்தில் திருமண வாழ்க்கையில் தோல்வி அடைந்தவர்கள் மறுவாழ்க்கைக்கு உதவுவதாக பல ஆன்லைன் நிறுவனங்கள் விளம்பரம் செய்து வருகின்றன. இதனால் சிலருக்கு நன்மை நடந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு தோல்வி தான் கிடைக்கிறது.

    அதே போல் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வலம் வரும் டேட்டிங் செயலில் விவாகரத்து பெற்று தனிமையில் இருந்த வாலிபர் காதலை தேடும் முயற்சியில் தனது வாழ்நாளுக்காக சேமித்து வைத்த பணத்தை இழந்தள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    டேட்டிங் செயலில் சுயவிவரத்தை பதிவு செய்த நெய்டாவைச் சேர்ந்த தல்ஜித் சிங் என்பவருக்கு அனிதா என்ற பெண் அறிமுகமாகி உள்ளார். ஆரம்பத்தில் சாதாரணமாக பேச ஆரம்பித்த இவர்கள் நாளடைவில் இருவருக்கும் இடையேயான பேச்சும், நெருக்கமும் அதிகரித்தது.

    ஒரு கட்டத்தில் தல்ஜித் சிங்கின் நம்பிக்கையை பெற்ற அனிதா, பங்குச்சந்ததை மூலம் பெரும் லாபம் ஈட்டுவது குறித்து தகவல்களை பகிர்ந்து 3 நிறுவனங்களின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து முதலில் ரூ.3.2 லட்சம் முதலீடு செய்து சில மணி நேரங்களுக்குள் ரூ.24,000-ஐ சிங் சம்பாதித்தார். இதனால் அனிதா மீதான நம்பிக்கை சிங்கிற்கு வலுவடைந்து அனிதா தனது நலம் விரும்பி என்றும், அவர் சரியான ஆலோசனையை வழங்குகிறார் என்றும் சிங் நம்பத் தொடங்கினார்.

    இதனை தொடர்ந்து தனது வாழ்நாள் சேமிப்பான சுமார் ரூ.4.5 கோடியை முதலீட்டில் மாற்றினார். மேலும் அனிதாவின் ஆலோசனையின் பேரில், சிங் ரூ.2 கோடி கடனை எடுத்து அதையும் முதலீடு செய்தார். மொத்தம் ரூ.6.5 கோடியை 30 வெவ்வேறு பரிவர்த்தனைகள் மூலம் 25 வங்கிக் கணக்குகளுக்கு மாற்றினார்.

    இதையடுத்து முதலீடு செய்யப்பட்ட தொகையில் 30 சதவீதத்தை திருப்பி தரும்படி அனிதாவிடம் சிங் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து சிங்குடனான தொடர்பை அனிதா துண்டித்துள்ளார். மேலும் அனிதா தெரிவித்ததாகக் கூறப்படும் 3 நிறுவனங்களில் 2 துண்டிக்கப்பட்டது. இதனால் சந்தேகம் அடைந்த சிங் இச்சம்பவம் தொடர்பாக நொய்டா செக்டர் 36-ல் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீசார் நடத்திய விசாரணையில், அனிதாவின் டேட்டிங் செயலியின் சுயவிவரம் போலியானது என்று தெரியவந்துள்ளது. மேலும் பணம் மாற்றப்பட்ட கணக்குகள் குறித்த தகவல்களை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

    • கிராமசபைக் கூட்டம் என்று கூறி பொதுமக்களை வரச் சொல்லி, திமுக நடத்தும் போராட்ட நாடகத்தில் பங்கேற்க வைக்க முயற்சித்திருக்கிறார் திமுக அமைச்சர்.
    • நிதி என்ன ஆனது என்பதைக் கூறாமல் மோசடி நாடகமாடிக் கொண்டிருக்கிறது திமுக.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    இன்றைய தினம், விருதுநகர் மாவட்டத்தில், கிராமசபைக் கூட்டம் என்று கூறி பொதுமக்களை வரச் சொல்லி, திமுக நடத்தும் போராட்ட நாடகத்தில் பங்கேற்க வைக்க முயற்சித்திருக்கிறார் திமுக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன். அங்கிருந்த தமிழக பா.ஜ.க. அருப்புக்கோட்டை வடக்கு ஒன்றிய துணைத் தலைவர் சகோதரி மீனா அவர்கள் இது குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பியதும், உடனடியாக அங்கிருந்து சென்றிருக்கிறார் அமைச்சர்.

    கடந்த நான்கு ஆண்டுகளில், நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ், மத்திய அரசு நாட்டில் அதிகபட்சமாக தமிழகத்திற்கு, 39,339 கோடி ரூபாய் வழங்கியுள்ளதை தமிழக மக்கள் அறிவார்கள். தமிழகத்துக்கு அதிக நிதி வழங்கப்பட்டுள்ள விவரங்களை, திமுக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களிடம், மத்திய அமைச்சர் பாராளுமன்றத்தில் தெளிவாகக் கூறியிருக்கிறார். ஆனால், அந்த நிதி என்ன ஆனது என்பதைக் கூறாமல் மோசடி நாடகமாடிக் கொண்டிருக்கிறது திமுக.

    தமிழகத்தில் நூறு நாள் வேலைத்திட்டத்தில் திமுக ஆதரவோடு நடக்கும் மோசடிகள் குறித்துப் பலமுறை புகார் அளித்தும், தொடர்ந்து மோசடியில் ஈடுபடும் திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என்று கூறியுள்ளார். 



    • த.வெ.க கூட்டணி செய்திகள் வெளியான நேரத்தில் தான் செங்கோட்டையன், இ.பி.எஸ். மோதல் உண்டானது.
    • கூட்டணிக்காக செங்கோட்டையனுக்கு மறைமுகமாக ஆதரவளிக்கிறதா பா.ஜ.க.?

    டெல்லி:

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா-வை கடந்த வாரம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். சந்திப்பிற்கு பின்னர் சென்னை திரும்பிய எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகள் குறித்து மனு அளித்ததாகவும், கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என்றும் கூறினார்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று மதியம் டெல்லி சென்றதாக தகவல் வெளியானது.

    டெல்லி சென்ற செங்கோட்டையன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திப்பதற்கு முன்னதாகவே சந்தித்து பேச செங்கோட்டையன் நேரம் கேட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த சந்திப்பு இந்தியன் வங்கி கெஸ்ட் ஹவுசில் நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு செங்கோட்டையன் குறி வைக்கிறாரா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

    செங்கோட்டையன் ஆதரவாளர்களுக்கு இ.பி.எஸ். பதவி வழங்கவில்லை என புகார் எழுந்தது. இ.பி.எஸ். புறக்கணிப்பதால் பா.ஜ.க. உதவியுடன் தனது இருப்பை தக்க வைக்க செங்கோட்டையன் முயல்கிறாரா?

    த.வெ.க கூட்டணி செய்திகள் வெளியான நேரத்தில் தான் செங்கோட்டையன், இ.பி.எஸ். மோதல் உண்டானது. செங்கோட்டையனுடனான மோதலுக்கு பின்னரே உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இ.பி.எஸ். சந்தித்து பேசினார்.

    இபிஎஸ்-ஐ காலி செய்துவிட்டு அந்த இடத்திற்கு முயற்சிக்கிறாரா செங்கோட்டையன்? தர்மயுத்தம் நடத்தினால் ஆதரவு கிடைக்காது என்பதால் பா.ஜ.க. உதவியை நாடி உள்ளாரா?

    கூட்டணிக்காக செங்கோட்டையனுக்கு மறைமுகமாக ஆதரவளிக்கிறதா பா.ஜ.க.? அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி உருவாகாவிட்டால் ஷிண்டேவாக மாறுகிறாரா செங்கோட்டையன் போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

    எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு இணங்காவிட்டால், செங்கோட்டையனை முன்னிறுத்தி கூட்டணி அமைத்து 2026-ம் ஆண்டு தேர்தலில் களம் காண பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

    • ஏப்ரல் முதல் வாரத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று ஒன்றிய அமைச்சர் உறுதி அளித்தார்.
    • நல்லவர்கள் போல் தமிழர்கள் மீதும், தமிழ்நாடு மீதும் அக்கறை இருப்பவர்கள் போல் வேடமிட்டு வருகின்றனர்.

    கோவில்பட்டி:

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கு நிதி வழங்காமல் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிப்பதாக கூறி மத்திய அரசை கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கம் அருகே கனிமொழி எம்.பி. தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதி , தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் முறையாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கடிதம் மூலமாகவும், பிரதமரை நேரில் சந்திக்கும் போதும் வலியுறுத்தி வருகின்றார். நிதி மந்திரி, விவசாய துறை மந்திரியை நானும், தமிழக நிதித்துறை அமைச்சரும் நேரில் சந்தித்து நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தினோம். ஓரிரு வாரங்களில் நிதி வரும் என்றார்கள். ஆனால் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.

    இதையடுத்து தமிழக முதலமைச்சர் இதுகுறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்ப வேண்டும் என்று கூறினார். அதன்படி பாராளுமன்றத்தில் கேள்வி கேட்கும்போது ரூ.4034 கோடி தர வேண்டிய பணத்தை 5 மாதங்களாக தரவில்லை என்று கேட்டோம். ஆனால் அதற்கும் பதில் இல்லை.

    இதனைத் தொடர்ந்து தி.மு.க. எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். நாங்கள் போராடியதைக் கண்டு எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் கலந்து கொண்டன. இதனால் பாராளுமன்ற அவைகள் ஒத்திவைக்கப்பட்டன.

    போராட்டத்தை கை விடுங்கள். ஏப்ரல் முதல் வாரத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று ஒன்றிய அமைச்சர் உறுதி அளித்தார். ஆனால் பலமுறை இதுபோன்று உறுதியளித்து தரவில்லை என்றபோது எப்படி இவர்கள் கூறுவதை நம்ப முடியும்.

    எனவே தான் மக்களுடன் சேர்ந்து போராட வேண்டும் என்று அமைச்சர்கள், எம்.பி.க்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி, தொடர்ந்து இந்த போராட்டம் நடைபெறுகிறது. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு தொடர்பாக கேள்வி எழுப்பியபோது அதிக மக்கள் தொகை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தை விட தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதாக ஒன்றிய அமைச்சர் ஒருவர் தவறான, பொய்யான தகவலை கூறுகிறார்.

    தி.மு.க., காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்த போது சாதாரண மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக இந்த 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணம் ஒதுக்கீட்டை குறைத்துக் கொண்டே வந்தனர். மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் கல்விக்கு நிதி ஒதுக்கீடு செய்வோம் என்று கூறி ரூ.2 ஆயிரம் கோடி நிதியை வைத்துக் கொண்டு மிரட்டிக் கொண்டிருக்கும் ஆட்சி தான் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி.

    நல்லவர்கள் போல் தமிழர்கள் மீதும், தமிழ்நாடு மீதும் அக்கறை இருப்பவர்கள் போல் வேடமிட்டு வருகின்றனர். கல்வி மற்றும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய பிரதமர் மோடி ஆட்சிக்கு மனம் வரவில்லை. 2024-25 மத்திய பட்ஜெட்டில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு குறைவான நிதியைத்தான் ஒதுக்கீடு செய்தார்கள்.

    ரூ.86 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்த போது இதில் ரூ.10 ஆயிரம் கோடி துண்டு விழுவது குறித்து கேள்வி எழுப்பினோம். தேவைப்பட்டால் ஒதுக்கீடு செய்வோம் என்று ஒன்றிய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறுகிறார். இந்த நிலையில் தான் பா.ஜ.க. அரசின் பட்ஜெட் உள்ளது. அதனால் தான் பொறுத்தது போதும் என்று மக்களுடன் களத்தில் தி.மு.க. இறங்கி போராடி வருகிறது. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் தமிழகத்திற்கு தர வேண்டிய நிதி தரும் வரை பாராளுமன்றத்திலும், மக்களோடு இணைந்து களத்திலும் தி.மு.க. போராடும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தாய்மொழியின் அருமையை உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் உணர்த்த வேண்டும்.
    • தெற்கின் மேல் தொடுக்கப்படும் சமூக, அரசியல், பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்த அடுத்த தலைமுறையையும் நாம் ஆயத்தப்படுத்த வேண்டும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள யுகாதி திருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    திராவிட மொழிக் குடும்பத்தில் தமிழின் உடன்பிறப்பு மொழிகளான தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் புத்தாண்டாகக் கொண்டாடும் யுகாதி திருநாள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

    தமிழ்நாட்டில் உள்ள மொழிச்சிறுபான்மையினரை என்றும் மதித்துப் போற்றி அவர்களின் உற்ற தோழனாய் விளங்குவது கழக அரசு. யுகாதி திருநாளுக்கு அறிவிக்கப்பட்ட அரசு விடுமுறை அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ரத்து செய்யப்பட்டாலும் 2006-ம் ஆண்டு அதனை மீண்டும் நடைமுறைப்படுத்தியவர் அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர் ஆவார்.

    தமிழ் முதலிய திராவிட மொழிகள் பேசும் தென் மாநிலங்கள் அனைத்தும் தொகுதி மறுசீரமைப்பில் தங்கள் குரல் நெரிக்கப்படும், பாராளுமன்றத்தில் வலிமை குறைக்கப்படும் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கும் நிலையில் நமது ஒற்றுமையை மார்ச் 22 அன்று சென்னையில் வெளிப்படுத்தி இருந்தோம். மேலும், அடுத்தடுத்த கூட்டங்கள் நடைபெறவுள்ளன. நாடு முழுவதும் நமது முன்னெடுப்புக்குக் கவனமும் ஆதரவும் பெருகி வருகிறது.

    இன்று தென்மாநிலங்கள் பொருளாதாரரீதியாக அடைந்துள்ள வளர்ச்சிக்கு முதன்மையான காரணங்களில் ஒன்று அரை நூற்றாண்டுக்கு முன்னரே இந்தித் திணிப்பை எதிர்த்து நாம் நடத்திய மொழிப்போர்தான். இப்போது மீண்டும் இந்தித் திணிப்பு மூலம் அந்த வளர்ச்சியையும் நமது மொழி அடையாளத்தையும் அழிக்கத் திட்டமிட்ட முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வேளையில், தாய்மொழியின் அருமையை உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் உணர்த்த வேண்டும். மொழி இருந்தால்தான் இனம் இருக்கும். தெற்கின் மேல் தொடுக்கப்படும் சமூக, அரசியல், பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்த அடுத்த தலைமுறையையும் நாம் ஆயத்தப்படுத்த வேண்டும். இதையே எனது யுகாதி புத்தாண்டுச் செய்தியாக, கோரிக்கையாக உங்கள் முன்வைக்கிறேன்.

    அறுசுவைப் பச்சடி, மாவிலைத் தோரணம், வண்ணக்கோலம் என எழுச்சியோடு புத்தாண்டை வரவேற்கும் தெலுங்கு, கன்னட உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது யுகாதி திருநாள் நல்வாழ்த்துகள். நமது மொழி, அரசியல் உரிமைகளைக் காப்பதற்கான ஊக்கத்தை வழங்குவதாக இந்த உகாதி திருநாள் அமையட்டும்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×