செய்திகள்
அமெரிக்க பத்திரிகையாளர் டேனியல் கொலை வழக்கு - பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்
2002-ம் ஆண்டு பாகிஸ்தானின் அமெரிக்க பத்திரிகையாளர் டேனியல் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒமரின் தண்டனையை ரத்து செய்ததற்கு பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்:
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் பணியாற்றி வந்த அமெரிக்க பத்திரிகையாளர் டேனியல் பேர்ல் கடந்த 2002-ம் ஆண்டு கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த இங்கிலாந்து வம்சாவளியான ஓமர் ஷேக்குக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஓமர் ஷேக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சிந்து மாகாண ஐகோர்ட்டு அவரது மரண தண்டனை ரத்து நேற்று முன்தினம் உத்தரவிட்டது. மேலும் அவரது தண்டனை காலத்தை 7 ஆண்டுகளாக குறைத்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் கோர்ட்டின் இந்த முடிவுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க துணை வெளியுறவு மந்திரி ஆலிஸ் வெல்ஸ் கூறுகையில், “டேனியல் பேர்லின் கொலைக்கான தண்டனைகளை ரத்து செய்வது உலகம் முழுவதும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவமரியாதை அளிப்பதாகும்” என கூறினார். மேலும் “நீண்டகாலமாக வேரூன்றிய பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் தன்னை ஈடுபடுத்துவதாக உறுதி அளித்த பாகிஸ்தான் அதனை செயல்படுத்தவில்லை. பயங்கரவாதிகளுக்கு எதிரான சட்டத்தை கடுமையாக்குவதன் மூலம் மட்டுமே பாகிஸ்தான் தனது உறுதிப்பாட்டை நிரூபிக்க முடியும்” எனவும் அவர் தெரிவித்தார்.