செய்திகள்
விருது பெற்ற சுதர்சன் பட்நாயக்

அமெரிக்காவில் மக்களின் தேர்வு விருதை வென்றார் இந்திய மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்

Published On 2019-07-28 08:21 GMT   |   Update On 2019-07-28 08:21 GMT
அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச மணல் சிற்பப் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், அதிக மக்களின் தேர்வுக்குரிய நபர் என்ற சிறப்பையும் பெற்றார்.
நியூயார்க்:

ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி நகரை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் உள்நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி, மக்களின் மனங்களிலும் அந்த பாதிப்பை உண்டாக்கி வருகிறார். இவரது பெரும்பாலான ஓவியங்கள் சமூக விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில் அமைந்திருக்கும்.

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடந்த சர்வதேச மணற்சிற்ப போட்டியில் சுதர்சன் பட்நாயக் தங்கப் பதக்கத்தை வென்று தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.

இதேபோல், சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற சுமார் 60 போட்டிகளில் பங்கேற்ற சிறப்பை பெற்றுள்ள சுதர்சன் பட்நாயக், உலக சாதனைகளை பதிவு செய்யும் கின்னஸ் புத்தகத்தில் கடந்த 2017-ம் ஆண்டில் இடம்பெற்றதுடன் தாய்நாட்டுக்கு பல்வேறு விருதுகளை பெற்றுத் தந்துள்ளார்.
இவரை சிறப்பிக்கும் வகையில் மத்திய அரசு பத்மஸ்ரீ விருதினை அளித்து கவுரவித்துள்ளது.

இந்நிலையில்,  அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் சர்வதேச மணல் சிற்ப சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகின்றது. 15 நாடுகளை சேர்ந்த பிரபல கலைஞர்கள் கலந்துகொள்ளும் இந்த போட்டியில் இந்தியாவின் சார்பில் சுதர்சன் பட்நாயக் பங்கேற்றார்.



பாஸ்டன் நகர கடற்கரையில் ’பிளாஸ்டிக் மாசுபாட்டில் இருந்து பெருங்கடல்களை காப்பாற்றுங்கள்’ (Stop Plastic Pollution, Save Our Ocean) என்ற கருத்து தொணிக்க சுதர்சன் பட்நாயக் உருவாக்கிய மணல் சிற்பம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இதன் மூலம் சர்வதேச மணல் சிற்ப சாம்பியன்ஷிப் போட்டியின் வெற்றியாளராக சுதர்சன் பட்நாயக் அறிவிக்கப்பட்டார்.

மேலும் கடந்த 1975-ம் ஆண்டிலிருந்து அமெரிக்காவில் கலை மற்றும் பொழுதுப்போக்கு கேளிக்கை அம்சங்கள் சார்ந்த துறையில் அளப்பரிய சாதனை செய்த நபர்களில் சிறப்பானவர்களை ஆண்டுதோறும் அந்நாட்டு மக்கள் ‘ஆன்லைன்’ மூலம் தேர்வு செய்து ‘மக்களின் விருப்பத் தேர்வுக்குரிய நபர்’ என்ற சிறப்பு விருது வழங்கப்படுகிறது.

தனது மணல் சிற்பத்தின் மூலம் இந்த கவுரவத்துக்குரிய விருதையும் சுதர்சன் பட்நாயக் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

’இந்த மிகப்பெரிய விருதினை எனக்கு கிடைத்த கவ்புரவமாக கருதுகிறேன். இந்த விருது பிளாஸ்டிக் மாசுப்பாட்டை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுத்துவரும் இந்தியாவுக்கு கிடைத்த விருது. இது எனக்கான விருது மட்டுமல்ல, மக்கள் அனைவருக்குமான விருது. எனது சிற்பத்தை தேர்ந்தெடுப்பதற்காக வாக்களித்த மக்கள் பிளாஸ்டிக் மாசுப்பாட்டை ஒழிக்கும் நடவடிக்கைகளுக்காகவும் வாக்களித்துள்ளனர்’ என சுதர்சன் பட்நாயக் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News