செய்திகள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி

Published On 2019-02-02 16:39 GMT   |   Update On 2019-02-02 16:39 GMT
நவாஸ் செரீப்பின் உடல்நிலை மோசம் அடைந்துள்ளதால் சிறையில் இருந்து மருத்துவமனைக்கு இன்று மாற்றப்பட்டு உள்ளார். #NawazSharif
இஸ்லாமாபாத்:

அல்-அஜீதா இரும்பாலை முறைகேடு வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்புக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் லாகூரில் உள்ள கோட்லக்பத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எனவே டாக்டர்கள் குழு அவரை பரிசோதனை நடத்தியது. அப்போது அவருக்கு இருதயநோய், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் இருப்பது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து சிறையில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் குணமாகாமல் தொடர்ந்து அவர் அவதிப்பட்டு வருகிறார். எனவே அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்து உயர்தர சிகிச்சை அளிக்க டாக்டர்கள் குழு பரிந்துரை செய்தது.

இதற்கிடையே, நவாஸ் செரீப் சார்பில் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நவாஸ் செரீப்பின் உடல்நிலை மோசம் அடைந்துள்ளதால் சிறையில் இருந்து மருத்துவமனைக்கு இன்று மாற்றப்பட்டு உள்ளார் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #NawazSharif
Tags:    

Similar News