செய்திகள்

ஏமனில் சவூதி கூட்டுப்படையினர் தாக்குதலில் திருமண நிகழ்ச்சியில் இருந்த 20 பேர் பலி

Published On 2018-04-23 10:31 GMT   |   Update On 2018-04-23 10:31 GMT
ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து சவூதி கூட்டுப்படையினர் நடத்திய வான் தாக்குதலில் திருமண நிகழ்ச்சியில் கூடியிருந்த 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
சனா:

ஈரான் அரசின் ஆதரவுடன் ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிபர் அப்ட்-ரப்பு மன்சூர் ஹாதி தலைமையிலான சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசை கடந்த 2015-ம் ஆண்டு நிலைகுலையச் செய்த ஹவுத்தி போராளிகள் தலைநகர் சனா நகரத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக மற்றொரு போட்டி அரசாங்கத்தை நடத்திவரும் இவர்கள்மீது உள்நாட்டுப் படைகளும் அண்டை நாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், வடமேற்கு பகுதியில் இன்று சவூதி கூட்டுப்படையினர் ஹவுத்தி குழுவினரை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தினர். இந்த தாக்குதலில் அங்குள்ள கிராமம் ஒன்றில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 20 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

50-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. #Yeman #TamilNews
Tags:    

Similar News