செய்திகள்

வெள்ளை மாளிகை பாதுகாப்பு அரண் மீது வேனுடன் மோதிய பெண்

Published On 2018-02-24 08:38 GMT   |   Update On 2018-02-24 08:38 GMT
வெள்ளை மாளிகை அருகே அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு தடுப்பு அரண் மீது வேன் மோதிய சம்பவம் அங்கு பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் வாஷிங்டனில் வெள்ளை மாளிகை உள்ளது. இங்கு அந்நாட்டின் அதிபர் தங்கியிருப்பதால் மாளிகை சுற்றி எப்போதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும்.

இந்த நிலையில் நேற்று வெள்ளை மாளிகை அருகே வெள்ளை நிற மினி வேன் ஒன்று அதிவேகமாக வந்தது. அதனால் அந்த வேனை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர்.

அதற்குள் அந்த வேன் வெள்ளை மாளிகை அருகே அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு தடுப்பு அரண் மீது மோதி நின்றது. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.

உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் துப்பாக்கியுடன் அந்த வேனை சுற்றி நின்றனர். அந்த வேனை 35 வயது மதிக்க தக்க பெண் ஓட்டி வந்தார். அவரை கைது செய்து விசாரணை நடத்தப்பட்டது.

டென்னிசே மாகாணத்தில் உள்ள லா வெர்ஜினே என் இடத்தை சேர்ந்தவர். அவரது பெயர் வெளியிடப்படவில்லை. அவர் மீது மெட்ரே பாலிடன் போலீசார் கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இச்சம்பவம் நடந்த போது அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்தார். அப்போது அவர் ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல்லுடன் பேசிக் கொண்டிருந்தார்.

எனவே தற்காலிகமாக சிறிது நேரம் வெள்ளை மாளிகை பூட்டப்பட்டது. நிலைமை சீரடைந்ததும் மீண்டும் திறக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் உளவுத்துறை சிறப்பாக செயல்பட்டதாக அதிபர் டொனால்டு டிரம்ப் பாராட்டினார்.

இதுகுறித்து டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் உளவுத்துறை சிறப்பாக செயல்பட்டுள்ளது. அதற்காக பணியில் இருந்த ஆண், பெண் போலீசாருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #tamilnews
Tags:    

Similar News