செய்திகள்

எதிரி நாட்டு விமானங்களை கண்காணிக்க ரேடாருடன் கூடிய உளவு விமானம் தயாரித்த சீனா

Published On 2018-01-28 07:07 GMT   |   Update On 2018-01-28 07:07 GMT
சீனா எதிரி நாட்டு விமானங்களை கண்காணிக்க ரேடாருடன் கூடிய உளவு விமானத்தை தயாரித்துள்ளது. இந்த விமானத்துக்கு ‘கேஜே-600’ என பெயரிடப்பட்டுள்ளது. #China #Flight
பெய்ஜிங்:

சீனா தனது ராணுவ பலத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது எதிரி நாட்டு விமானங்களை கண்காணிக்க அதிநவீன விமானத்தை தயாரித்துள்ளது.

இந்த விமானத்துடன் ரேடார் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் சீனாவுக்குள் அத்துமீறி நுழையும் விமானங்களை எளிதில் கண்டு பிடிக்க முடியும். இந்த விமானத்துக்கு ‘கேஜே-600’ என பெயரிடப்பட்டுள்ளது.

ஆசிய பசிபிக் கடல் பிராந்தியத்தில் ஜப்பான் உள்ளிட்ட தனது நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா ‘எப்035’ என்ற அதி நவீன போர் விமானங்களை கடந்த ஆண்டு வழங்கியது. அதை சமாளிக்க இந்த விமானம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

‘கேஜே-600’ ரக அதிநவீன விமானத்துடன் தொழில் நுட்பம் வாய்ந்த எலெக்ட்ரானிக்கல் ஸ்கேனர் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜப்பானுக்குள் நுழையும் அமெரிக்காவின் எப்-22எஸ், எப்-35 எஸ் ரக போர் விமானங்களை எளிதில் கண்காணிக்க முடியும் என ராணுவ நிபுணர் லி ஜியி தெரிவித்தார்.

வருகிற 2030-ம் ஆண்டுக்குள் இத்தகைய விமானத்தை ராணுவத்தில் சேர்க்க சீனா முடிவு செய்துள்ளது. அதை பிரச்சினைக்குரிய தென் சீன கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் பறக்க விட திட்டமிட்டுள்ளது. #tamilnews
Tags:    

Similar News