செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையுடன் மோதல்: 8 தலீபான் தீவிரவாதிகள் பலி

Published On 2017-12-11 01:37 GMT   |   Update On 2017-12-11 01:37 GMT
ஆப்கானிஸ்தானில் காராபாக் சோதனைச்சாவடியில் தலீபான்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் 8 தலீபான்கள் கொல்லப்பட்டனர்.
ஜலாலாபாத்:

ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆட்சியை அமெரிக்கா முடிவுக்கு கொண்டு வந்து 16 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் அவர்களின் கொட்டத்தை இன்னும் முழுமையாக முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை. அவ்வப்போது அவர்கள், ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் மீதும், அமெரிக்க கூட்டுப்படையினர் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கஜினி மாகாணம், காராபாக்கில் சோதனைச்சாவடி ஒன்றின்மீது, நேற்று முன்தினம் தலீபான்கள் தாக்குதல் நடத்தினர். ஆனால் பாதுகாப்பு படையினர், அவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையின் முடிவில் 8 தலீபான்கள் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினர் 3 பேர் உயிரிழந்தனர்.

இதற்கிடையே நங்கர்ஹார் மாகாணம், ஷெர்ஜாத் மாவட்டத்தில், மார்கிகேல் பகுதியில் தலீபான்கள் தாக்குதல் நடத்தினர். இதில் அப்பாவி மக்கள் 2 பேர் சிக்கி உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல் நடைபெற்றதின் பின்னணி குறித்து எதுவும் தெரிய வரவில்லை. 
Tags:    

Similar News