செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்த கென்னடி கொலை தொடர்பான ரகசிய கோப்புகளை வெளியிடுவேன்: டிரம்ப் அறிவிப்பு

Published On 2017-10-21 19:18 GMT   |   Update On 2017-10-21 19:18 GMT
அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்த ஜான்கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான ரகசிய கோப்புகளை பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்போவதாக ஜனாதிபதி டிரம்ப் நேற்று அதிரடியாக அறிவித்தார்.
வாஷிங்டன்:

அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்த ஜான் எப்.கென்னடி, 1963-ம் ஆண்டு நவம்பர் மாதம் 22-ந்தேதி ஆஸ்வால்டு என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனாலும் அவருடைய படுகொலை குறித்து பல்வேறு கருத்துகள், அதன் பின்னணி போன்றவை குறித்த சந்தேகங்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக எழுப்பப்பட்டு வருகிறது. இது தொடர்பான அலுவல் ரீதியான கோப்புகளை அமெரிக்க அரசாங்கம் ரகசியமாக பாதுகாத்து வருகிறது.

இந்த நிலையில் ஜான்கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான ரகசிய கோப்புகளை பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்போவதாக ஜனாதிபதி டிரம்ப் நேற்று அதிரடியாக அறிவித்தார்.



இதுபற்றி அவர் கூறும்போது, “கென்னடி படுகொலை தொடர்பான ரகசிய ஆவணங்கள் பகிரங்கமாக வெளியிடப்படாமல் வெகு காலமாக முடக்கி வைக்கப்பட்டு இருக்கிறது. அலுவல்பூர்வமான அந்த அனைத்து ஆவணங்களையும் விரைவில் பொதுமக்களின் பார்வைக்காக முதல் முறையாக வெளியிடுவதை அனுமதிப்பேன்” என்றார்.

அரசு ரகசியமாக பாதுகாத்து வைத்துள்ள அந்த ஆவணங்களில் என்ன கூறப்பட்டு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள அமெரிக்க மக்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருப்பதாக வாஷிங்டன் நகரில் இருந்து வெளிவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. 
Tags:    

Similar News