செய்திகள்

ஈராக்: ரஷியாவை சேர்ந்த ஐ.எஸ். தீவிரவாதியை தூக்கிலிட உத்தரவு

Published On 2017-09-12 12:36 GMT   |   Update On 2017-09-12 12:36 GMT
ஈராக் நாட்டின் மோசூல் பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்து சண்டையிட்ட ரஷியா நாட்டவரை தூக்கிலிடுமாறு ஈராக் சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.
பாக்தாத்:

ஈராக் மற்றும் சிரியா நாடுகளுக்கு உட்பட்ட சில பகுதிகளை கைப்பற்றிய ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்கிருந்தவாறு பிறநாடுகளில் தீவிரவாத தாக்குதல்களை நடத்தி வந்தனர்.

ஈராக்கில் உள்ள வரலாற்று சிறப்புவாய்ந்த மோசூல் நகரை கடந்த 2014-ம் ஆண்டில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினர். இவர்களுக்கு துணையாக துருக்கி, தஜிகிஸ்தான், அஜர்பைஜான், ரஷியா ஆகிய நாடுகளை சேர்ந்த சில இளைஞர்களும், பெண்களும் ஆயுதப் போராட்டத்தில் குதித்தனர்.

இந்நிலையில், மோசூல் நகரை சமீபத்தில் ஈராக் அரசுப் படைகள் கைப்பற்றின. அங்கிருந்த ஐ.எஸ். தீவிரவாதிகளின் முகாம்கள் குண்டுவீச்சில் தகர்க்கப்பட்டன. பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். சிலர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் சுமார் 1400 பேர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இவர்கள் மீது வன்முறை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஈராக் நாட்டின் மோசூல் பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்து சண்டையிட்ட ரஷியா நாட்டவரை தூக்கிலிடுமாறு ஈராக் சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. அவரது பெயர் மற்றும் அடையாளம் ஏதும் வெளியிடப்படவில்லை.
Tags:    

Similar News