செய்திகள்

ஊழல் வழக்கு விசாரணையை எதிர்கொள்ள நாடு திரும்புகிறார் நவாஸ் ஷெரீப்

Published On 2017-09-06 11:06 GMT   |   Update On 2017-09-06 11:06 GMT
ஊழல் வழக்கில் சிக்கியுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இந்த வாரம் லண்டனில் இருந்து நாடு திரும்பியதும் வழக்கு விசாரணையை எதிர்கொள்வார் என தகவல் வெளியாகி உள்ளது.
லாகூர்:

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வெவ்வேறு நாடுகளில் சட்டவிரோதமாக முதலீடு செய்திருப்பது தொடர்பான ஆவணங்கள் ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த பட்டியலில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் (67) அவரது குடும்பத்தினர் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நவாஸ் ஷெரீப் மீதான புகாரில் முகாந்திரம் இருப்பதாகக் கூறி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. மேலும் ஷெரீபை தகுதி நீக்கம் செய்தும் உத்தரவிட்டது. இதனால் அவர் பிரதமர் பதவியை இழந்தார். அவரது பதவி பறிபோனதால் காலியான லாகூர் தொகுதியில் அவரது மனைவி குல்சூம் போட்டியிடுகிறார்.

இந்த சூழ்நிலையில் நவாஸ் ஷெரீப்பின் மனைவி குல்சூமுக்கு ரத்த நோய் பாதிப்பு காரணமாக லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்காக கடந்த மாத இறுதியில் நவாஸ் ஷெரீப் லண்டன் சென்றார்.

இந்நிலையில், நவாஸ் ஷெரீப் வரும் 8-ம் தேதி லண்டனில் இருந்து பாகிஸ்தான் திரும்ப வாய்ப்பு உள்ளதாக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) அரசியல் செயலாளர் ஆசிப் கர்மானி தெரிவித்தார்.

அவர் நாடு திரும்பியதும் தன் மீதான வழக்குகளை எதிர்கொள்வது மட்டுமல்லாமல், கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில் தனது இரண்டாம் கட்ட மக்கள் சந்திப்பு பேரணியை தொடங்க உள்ளார் என்றும் கர்மானி கூறினார்.

ஊழல் மற்றும் பண மோசடி வழக்குகள் இருப்பதால் நவாஸ் ஷெரீப் நாடு திரும்ப மாட்டார் என யூகங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News