செய்திகள்
காபியை மேலே சிந்தியவரை அடித்து கொன்ற வாலிபர்: 20 ஆண்டு சிறைதண்டனை விதித்த நீதிமன்றம்
அமெரிக்காவில் காபி தவறுதலாக மேலே சிந்தியவரை கொடூரமாக தாக்கி கொன்ற வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் நகரை சேர்ந்த 52-வயதானவர் அண்டான்யோ முரல்ஸ். இவர் கடந்த 2015-ம் ஆண்டு அப்பகுதியில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலில் காபி வாங்கி கொண்டு வெளியில் விரைவாக வந்துள்ளார். வெளியில் வரும்பொழுது ஹால் மற்றும் அவரது நண்பர் மீது தவறுதலாக மோதியதில் முரல்ஸின் கையிலிருந்த காபி, ஹால் மீது சிந்தியுள்ளது.
இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த ஹால், முரல்ஸை கொடூரமாக தாக்கியுள்ளார். இத்தாக்குதலில் படுகாயமடைந்த முரல்ஸ் மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து போலீசார், 15-வயதான ஹாலை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹாலின் இந்த செயல் ‘‘மிருகத்தனமான, புத்தியில்லாத மற்றும் முற்றிலும் தேவையற்றது” என கருத்து தெரிவித்த நீதிபதி, ஹாலுக்கு 20 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர் அடுத்த 12 ஆண்டுகள் கழித்துதான் பரோலில் வெளியில் வர முடியும்.