செய்திகள்

நெதர்லாந்து வந்த பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் உற்சாக வரவேற்பு

Published On 2017-06-27 11:45 GMT   |   Update On 2017-06-27 11:45 GMT
மூன்றுநாள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் நிறைவுகட்டமாக இன்று நெதர்லாந்து நாட்டுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு இங்குள்ள இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஆம்ஸ்டர்டாம்:

அரசுமுறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்த பின்னர் வாஷிங்டனில் இருந்து தனிவிமானம் மூலம் இன்று நெதர்லாந்து நாட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஸ்கிப்போல் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி பெர்ட் கோயன்டர்ஸ் வரவேற்றார்.

ஆம்ஸ்டர்டாம் நகரில் வசிக்கும் ஏராளமான இந்தியர்களும், இந்திய வம்சாவளியினரும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களின் வரவேற்பை அன்புடன் ஏற்றுக்கொண்ட மோடி சிலருடன் இணைந்து ‘செல்பி’ எடுக்க ‘போஸ்’ கொடுத்தார்.



நெதர்லாந்து சென்றடைந்ததும் இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட செய்தியில், இன்று உலக நாடுகள் அனைத்தும் ஒன்றோடொன்று இணைந்தும், ஒன்றையொன்று சார்ந்தும் உள்ளன. பிரதமர் மார்க் ருட்டேவுடனான சந்திப்பின்போது உலக விவகாரங்கள் தொடர்பாக இருநாடுகளின் நிலைப்பாடு தொடர்பாக ஆலோசிப்போம் என்று குறிப்பிட்டிருந்தார்.



இந்தியா-நெதர்லாந்து நாடுகளுக்கிடையே நிலவிவரும் 70 ஆண்டுகால பழமைவாய்ந்த நட்புறவை பலப்படுத்தும் வகையில் தற்போது இங்கு வந்துள்ள பிரதமர் மோடி நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே-வை சந்தித்துப் பேசினார். அந்நாட்டின் அரசர் வில்லெம் அலெக்சாண்டர் மற்றும் அரசி மேக்சிமாவை சந்திக்கவுள்ள அவர் மன்னர் அளிக்கும் விருந்தில் பங்கேற்கிறார்.
Tags:    

Similar News