செய்திகள்

இந்தியாவுக்கு எதிராக ஐ.நா.சபையிடம் பாகிஸ்தான் ஆவணம் தாக்கல்

Published On 2017-01-08 00:32 GMT   |   Update On 2017-01-08 00:32 GMT
இந்தியாவுக்கு எதிராக ஆவணம் ஒன்றை நியூயார்க் நகரில் ஐ.நா.சபையின் புதிய பொதுச்செயலாளரிடம் பாகிஸ்தான் ஒப்படைத்தது.
நியூயார்க்:

இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை கட்டவிழ்த்து விடுவதை வழக்கமாக பாகிஸ்தான் கொண்டுள்ளது. பயங்கரவாதிகளை வளர்த்து விட்ட பாகிஸ்தான், அதற்கே களப்பலியாகவும் ஆகி வருகிறது. ஆனால் அங்கு பலுசிஸ்தான், கராச்சி, பழங்குடியினர் வாழ்கிற தன்னாட்சி பகுதிகளில் நடக்கிற பயங்கரவாத தாக்குதல்களில் இந்தியாவின் தலையீடுகள் இருப்பதாக குற்றம் சாட்டுகிறது.

இந்த நிலையில் இது தொடர்பான ஆவணம் ஒன்றை நியூயார்க் நகரில் ஐ.நா.சபையின் புதிய பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரஸ்சை ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் நிரந்தர பிரதிநிதி மாலீஹா லோதி நேற்று முன்தினம் சந்தித்து ஒப்படைத்தார். அத்துடன் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் வெளியுறவு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் வழங்கிய கடிதமும் ஒப்படைக்கப்பட்டது.

ஐ.நா. சபை பொதுச்செயலாளரின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரீக் இதுபற்றி குறிப்பிடுகையில், “பாகிஸ்தான் தூதரின் வேண்டுகோளுக்கு இணங்க ஐ.நா. பொதுச்செயலாளருடன் சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பின்போது இருவரும் என்ன பேசினார்கள் என்று கேட்டால் தெரியாது என்பதுதான் என் பதில்” என்றார்.

இந்த சந்திப்பு தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம், இஸ்லாமாபாத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், “பலுசிஸ்தான், தன்னாட்சி பகுதிகள், கராச்சி ஆகிய இடங்களில் நடக்கிற பயங்கரவாத செயல்களில் இந்தியாவின் குறிப்பாக ‘ரா’ உளவு அமைப்பின் தலையீடு இருப்பதற்கான கூடுதல் தகவல்கள், ஆதாரம் ஐ.நா. பொதுச்செயலாளரிடம் வழங்கப்பட்டது. ஏற்கனவே ஐ.நா. சபையிடம் இது போன்று 3 ஆவணங்கள் வழங்கப்பட்டதின் தொடர்ச்சியே இது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

Similar News