தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பா.ஜனதா உண்ணாவிரதம்
- தமிழகம் முழுவதும் தி.மு.க. அரசை கண்டித்து பாரதிய ஜனதா சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
- வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.
சென்னை:
தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றவில்லை. லஞ்சம், ஊழல் அதிகரித்து விட்டது. சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தவறிவிட்டது என்று பா.ஜனதா குற்றம் சாட்டி வருகிறது. சில முறைகேடுகள் தொடர்பான பட்டியலையும் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.
இதையடுத்து தி.மு.க. அரசை கண்டித்து தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று உண்ணாவிரதம் நடைபெறும் என்று அறிவித்தார். அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
சென்னையில் கட்சி மாவட்டங்கள் 7 உள்ளன. அதன்படி 7 இடங்களில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரப்பட்டது. ஆனால் ஒரு இடத்தில் உண்ணாவிரதம் இருக்கும் படி போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. அதன்படி வள்ளுவர் கோட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
இன்று காலையில் உண்ணாவிரதம் தொடங்கியது. மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் கரு.நாகராஜன், எம்.என்.ராஜா, கராத்தே தியாகராஜன், சக்கரவர்த்தி, வினோஜ் செல்வம், மாவட்ட தலைவர்கள் காளிதாஸ், சாய்சத்யன், தனசேகர், லதா சண்முகம் மற்றும் திருப்புகழ், லலிதா மோகன், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் விஜய ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.