தமிழ்நாடு
போக்குவரத்து நெரிசல்

சுட்டெரிக்கும் கோடை வெயிலை சமாளிக்க கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Published On 2022-05-01 08:36 GMT   |   Update On 2022-05-01 08:36 GMT
சுற்றுலா பயணிகளுக்கு குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி அமைத்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொடைக்கானல்:

கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெயிலை சமாளிக்க பொதுமக்கள் மலை ஸ்தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

இதனால் முக்கிய சுற்றுலா இடங்களான குணாகுகை, மோயர் பாய்ண்ட், பைன் பாரஸ்ட், பில்லர் ராக், பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. மேலும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

நகரின் நுழைவு வாயில் பகுதியில் உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சியில் ஏராளமானோர் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக மலை கிராமங்களுக்கு செல்லக்கூடிய பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் பஸ்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.

மே மாதத்தில் மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. இதனையொட்டி சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிரிக்க கூடும். எனவே போக்குவரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு போதுமான போலீசார் பணியமர்த்த வேண்டும். மேலும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை ஒழுங்குபடுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் சுற்றுலா பயணிகளுக்கு குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி அமைத்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News