செய்திகள்
கேஎஸ் அழகிரி

திமுக தலைமையிலான கூட்டணி செயலற்று இருக்கிறது என்பதா?- அமைச்சர் ஜெயக்குமாருக்கு, கே.எஸ்.அழகிரி கண்டனம்

Published On 2020-10-21 02:10 GMT   |   Update On 2020-10-21 02:10 GMT
எப்பொழுதும் போல நையாண்டி பேசுவதை அமைச்சர் ஜெயக்குமார் நிறுத்திக்கொள்ள வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘தி.மு.க. தலைமையிலான கூட்டணி வாகன தயாரிப்புத்தொழில் முடங்கியிருப்பதை போல செயலற்று இருக்கிறது’, என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியிருக்கிறார். மேலும் பல கட்சிகள் அந்த கூட்டணியில் இருந்து விலகி அ.தி.மு.க. கூட்டணியில் சேர இருப்பதாகவும் ஆதாரமற்ற அவதூறு கருத்தை கூறியிருக்கிறார்.

தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஒரு கொள்கை கூட்டணி. அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியைப் போல சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இருக்கிறதா? இல்லையா? என்பதே ஒரு கேள்விக்குறியாக உள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் அங்கம் வகிக்கின்றன என்ற பட்டியலை அமைச்சர் ஜெயக்குமாரால் வெளியிட முடியுமா? கடந்த பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட கட்சிகளில் எந்தெந்த கட்சிகள் அ.தி.மு.க.வுடன் தற்போது கூட்டணியில் இருக்கிறது என்பதே சிதம்பர ரகசியமாக இருக்கிறது.

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வை சேர்த்தால் கடந்த மக்களவை தேர்தலைபோல படுதோல்வி அடைய நேரிடும் என்ற அச்சம் அ.தி.மு.க. தலைமைக்கு இருக்கிறது. அ.தி.மு.க. கூட்டணியில் இவ்வளவு குழப்பங்கள் இருக்கிறது. எனவே, எப்பொழுதும் போல நையாண்டி பேசுவதை அமைச்சர் ஜெயக்குமார் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News