தேவதானப்பட்டி அருகே டெங்கு காய்ச்சலுக்கு 3 வயது குழந்தை பலி
தேவதானப்பட்டி:
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே குள்ளப்புரம் ஊராட்சிக் குட்பட்ட சவுந்தர ராஜபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி சாந்தி. இவர்களது குழந்தைகள் நாகவினோதினி (வயது8), சர்வேஸ்பாண்டி (3).
கடந்த சில நாட்களாக பருவநிலை மாற்றம் காரணமாக இப்பகுதியில் மர்ம காய்ச்சல் பரவியது. இதனால் ஏராளமானோர் காய்ச்சல் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளுக்கு படையெடுத்தனர். இந்த நிலையில் சர்வேஸ்பாண்டி மற்றும் நாகவினோதினிக்கு தொடர்ந்து காய்ச்சல் ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோதும் காய்ச்சல் குறையவில்லை.
இந்த நிலையில் தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சர்வேஸ்பாண்டி பரிதாபமாக உயிரிழந்தான்.
சிறுமி நாகவினோதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருவரையும் பரிசோதனை செய்ததில் டெங்கு காய்ச்சல் அறிகுறி இருந்தது தெரியவந்தது. எனவே மருத்துவத்துறையினர் இப்பகுதியில் முகாமிட்டு சிகிச்சை, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.