உள்ளாட்சி தேர்தல் குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை- இளங்கோவன், குஷ்பு பங்கேற்பு
சென்னை:
தமிழக காங்கிரஸ் சார்பில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத், முன்னாள் மாநில தலைவர்கள் இளங்கோவன், கிருஷ்ணசாமி, அகில இந்திய செயலாளர் நடிகை குஷ்பு, எம்.பி.க்கள் திருநாவுக்கரசர், வசந்தகுமார், விஷ்ணு பிரசாத், எம்.எல்.ஏ.க்கள் கே. ஆர்.ராமசாமி, விஜயதரணி, மலேசியா பாண்டியன், காளிமுத்து, மாநில நிர்வாகிகள் நாசே ராமச்சந்திரன், தாமோதரன், செல்வம், சிரஞ்சீவி, ராயபுரம் மனோகர், அருள் பெத்தையா, தமிழ்செல்வன், பொன்.கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது, கூட்டணியில் என்னென்ன இடங்களை கேட்பது என்பது பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
முன்னதாக கேஎஸ் அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக இன்றைய கூட்டத்தில் விவாதிப்போம். தேர்தலை நடத்துவார்களா? முறையாக நடக்குமா? என்பது தெரியவில்லை. கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக இப்போதே அதிகாரிகளை மாற்றி வருகிறார்கள்.
மத்திய மோடி அரசை போலவே தமிழகத்திலும் அ.தி.மு.க. அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்து விட்டது.
ஐ.ஐ.டி. மாணவி சாவு விவகாரத்தில் முறையான விசாரணை நடத்த வேண்டும். இதுவரை 12 மாணவ-மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களின் இந்த மனநிலைக்கு என்ன காரணம் என்பது பற்றி ஆராய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.